Saturday 27 August 2016

ரஜினியின் ரகசியம் என்ன?



பொதுவாகவே ரஜினியை அறிந்தவர்கள், தெரிந்தவர்கள்  அனைவரும் அவர் பழகுவதற்கு ஓர் அற்புதமான  மனிதர் என்று சொல்லுகிறார்கள். அவரைப் புகழ்ந்து தள்ளுகிறார்ககள் என்றே சொல்லலாம்!

ஏன்? எதற்காக? இவர்கள் இப்படிப்  பேசுகிறார்கள் என்று பார்க்கும் போது ஒரே ஒரு விஷயம் தான் நமது கவனத்திற்கு வருகிறது.

மற்றவர்கள் அவரைப்பற்றித் திரும்ப திரும்ப  சொல்லுகின்ற ஒரே விஷயம் ஒன்றே ஒன்று தான். அது தான் "பராட்டு" என்கின்ற ஒரே சொல்.

நல்லதைப் பாராட்டுகின்ற ஒரு தன்மை அவருக்கு உண்டு, மனிதன் எந்த நிமிடத்திலும் மனம் மாறலாம்! அதனால் உடனிருப்பவர்கள் செய்கின்ற நல்ல செயல்களை உடனே பாராட்டுகின்ற நல்ல குணம் அவரிடம் உண்டு!

அவருடன் வேலை செய்கின்ற ஒவ்வொருவரையும் அவர் பாராட்டுகிறார். சிறப்பாக நடிக்கிறார்களா உடனே பாராட்டு! சிறியவர், பெரியவர் என்று பார்ப்பதில்லை! புதியவர் பழையவர் என்று பேதமில்லை! சிறப்பான நடிப்பைக் கொடுத்தால், சிறப்பானப் பாடலைக் கொடுத்தால், சிறப்பான இசையைக் கொடுத்தால் உடனே அவர்களைப் பாராட்டு மழையில்  நினைத்து விடுவார்!

அது தான் ரஜினி!

பாராட்டு என்பது ஒரு பெரிய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது! அனைவராலும் விரும்பப்படுவது! பாராட்டை விரும்பாதவர் யாருமில்லை. நாம் அனைவருமே மற்றவரின் பாராட்டுதல்களுக்காகக் காத்துக் கிடக்கிறோம்.

நாம் வேலை செய்கின்ற இடத்தில் கிடைக்கின்ற சம்பளத்தில் மட்டும் நாம் திருப்தி அடைந்து விடுவதில்லை. அங்கும் ஒரு பாராட்டுத் தேவைப்படுகிறது. நமது மேலதிகாரியின் பாராட்டுதல் நமக்குத் தேவையாய் இருக்கின்றது! ஒரு சிலரைப் பற்றி நாம் பேசும்போது "தட்டிக்கொடுத்தே வேலை வாங்குவார்" என்கிறோமே! அது என்ன தட்டிக்கொடுத்து? அது தான் அந்தப் பாராட்டுதல்!

பராட்டுதலுகளுக்காக ஒவ்வொவரும் ஏங்குகிறோம்! நமது வீட்டில்,  சுற்றுப்புறத்தில, வேலை  செய்யுமிடத்தில, நண்பர்கள்  வட்டாரத்தில் இப்படி எல்லா  இடங்களிலும் நமக்குப் பாராட்டுதல்கள்  தேவைப்படுகின்றன!

ரஜினி அதனைப் பிரமாதமாக செய்கிறார். அவர் செய்ய வேண்டிய அவசியமே இல்லை! ஆனாலும் செய்கிறார்! அவர் ஒரு சுப்பர் ஸ்டார்! கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர். அது அவருக்குத் தேவை தானா என்று பலர் நினைக்கலாம். அவர் செய்யத்தான் வேண்டும். மற்றவர்களை மட்டும் அவர் உற்சாகப்படுத்தவில்லை. அப்படிப் பாராட்டுவதன் மூலம் அவரும் உற்சாமடைகிறார்! பணம் மட்டும் உற்சாகத்தைக் கொண்டு வந்து விட முடியாது! சக மனிதனுடான நமது உறவுகளும் உற்சாகத்தைக் கொண்டு வர வேண்டும்.

ரஜினியின் அந்த ரகசியத்தை நாமும் பின்பற்றுவோம்! உங்களுக்கு எனது பாராட்டுக்கள்!

No comments:

Post a Comment