Friday 17 November 2017

மீன் பிடிக்க இனி இந்தி தெரிந்திருக்க வேண்டும்..!


தமிழக மீனவர்கள் இது நாள் வரை சிங்களக் கடல்படையினரின் அனைத்து  அராஜகத்திற்கும் பொறுமை காத்தனர். இன்னும் காத்துக் கொண்டு தான் இருக்கின்றனர். மீனவர்கள் சுடப்பட்டனர்.  மீனவர்களின்  படகுகள் வலுக்கட்டயமாக அபகரிக்கப்பட்டன. மீனவர்கள்  சிறைவைக்கப்பட்டனர். ஒரு பக்கம் கைது செய்வதும்,  இன்னொரு பக்கம் ஓரிருவரை விடுதலை  செய்து நல்ல  பெயர்  வாங்க  நினைப்பதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்தத்  தொடர் நடவடிக்கைக்கு தமிழக  அரசும் இந்திய  அரசும் துணைப் போவதும்  பொதுவாக நாம் அறிந்த செய்தி தான். 

ஆனல்  சிங்களக் கடல்படையினர்  தமிழக  மீனவர்களை  "உங்களுக்கு ஏன்  சிங்களம்  தெரியவில்லை"  என்னும்  கேள்வியை மட்டும்  அவர்கள்  இது நாள் வரை கேட்கவில்லை!  இனி  அதையும்  கேட்கும் நிலை  வந்துவிட்டதாகத்  தோன்றுகிறது!  ஆமாம்!  அவர்கள்  எல்லையில்  மீன் பிடிப்பதாகத்தான்  சிங்களப் படையினரின் குற்றச்சாட்டு.  அவர்கள்  எல்லையில்  திருட்டுத்தனமாக மீன்  பிடிப்பதற்கும்  சிங்களம் தெரிந்திருக்க  வேண்டும்  என்று  இனி  மீனவர்கள்  குற்றம்  சாட்டப்படலாம்!  தெரியாவிட்டால்  அவர்களுக்கு  ஓரிரு  மாதங்கள் சிறைதண்டனை அதிகரிக்கப்படலாம்!  ஒரு  கோமளித்தனமான  அரசு  என்றால்  எதுவும்  நடக்கும்.  நீதி,  நியாயம்  பற்றியெல்லாம்  அவர்களிடம்  எதிர்பார்ப்பது  என்பது  கோமாளித்தனம்!

இனி  இது போன்ற  பிரச்சனைகள்  வரலாம்  என்று  ஏன் எதிர்பார்க்கிறோம்? எல்லாம்  இந்திய  கடலோரக்  காவல்படையினர்  செய்த  அடாவடித்தனம். சொந்த  நாட்டு  மீனவர்களைச்  சுட்டுத்தள்ளியிருக்கின்றனர். ஒருவேளை இவர்கள்  சிங்கள  மீனவர்கள் என்று  அவர்கள்  சுடப்பட்டிருக்கலாம்!  காரணம்  இவர்கள்  காவல் காக்கும்  பணியில்  உள்ளவர்கள்.  அவர்களுக்கு யார் அத்து மீறினாலும் அவர்கள்  சுடப்பட  வேண்டும்  என்பது  அவர்களுக்குக்  கொடுக்கப்பட்ட  கட்டளை. இந்த  மீனவர்கள்  இந்திய கடலோரப் பகுதிகளில்  அத்து  மீறி  இருக்கலாம்! அந்தப்பக்கம்  போனால்  சிங்களம் இராணுவம் அத்து  மீறல் என்கிறது!  இந்தப்பக்கம் வந்தால்  இந்திய  இராணுவம்  அத்து மீறல்  என்கிறது! இது  தான்  தமிழக  மீனவனின்  நிலை.  அப்படியென்றால்  அவன்  எங்கு தான்  மீன்  பிடிப்பது?  அதிலும்  இந்திய  இராணுவம் "உனக்கு ஏன்  ஆங்கிலம்  தெரியவில்லை! உனக்கு  ஏன்  இந்தி  தெரியவில்லை?"  என்பது  போன்ற  கேள்விகள்  வேறு!  அவன்  மேல்  தாக்குதல் நடத்திவிட்டு மேலும் இதுபோன்ற  கேள்விகள்!

தமிழக  மீனவனாக இருந்தாலும்  அவனுக்கு  இந்தி  தெரியவேண்டும்,   என்பது  மத்திய  அரசாங்கத்தின்  கொள்கையாக  இருக்க  வேண்டும்!  அவர்களின்  கொள்கையை  இப்போது  இராணுவத்தின்  மூலம்  நிறைவேற்ற  முயற்சி  செய்கிறார்கள்  என்றே  தோன்றுகிறது!

இப்போது  மத்திய  அரசாங்கம்  தெளிவாக  இருக்கிறது. கடலில்  மீன்  பிடிக்கும் மீனவனாக  இருந்தாலும் சரி அவனுக்கு இந்தி  தெரிந்திருக்க  வேண்டும் என்பது  தான்! இந்த  மீனவர்களை இப்படியே  விட்டால் அவன் இந்தக்  கடல் பகுதியையே  தமிழ்  மயமாக்கி விடுவான் என்கிற ஒரு  பயம்! இது  ஒன்றும்  புதிது  இல்லையே. இது தமிழர் சார்ந்த  பகுதி.  அனைத்தும்  தமிழ்  தானே! இங்குள்ள  மீனும் தமிழ்  மீன்கள்  தானே! அவைகளும்  தமிழ் தானே  பேசுகின்றன!

பயம்  வேண்டாம்!  ஆளப்போகிறான்  தமிழன் என்பது விரைவில் தெரியும்!


No comments:

Post a Comment