Tuesday 28 November 2017

பள்ளிக்கால நண்பர்...!


ஓரிரு நாள்களுக்கு முன்னர் எனது பள்ளிக்கால நண்பர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சந்தித்து நீ.....ண்....ட  காலம் ஆயிற்று. அதிகம் பேச முடியவில்லை. நான் வேலையில் மூழ்கி இருந்தேன். ஆனாலும் ஏதோ முடிந்த வரையில் இருவரும் பழைய ஞாபங்களைப் பகிர்ந்து கொண்டோம்.

அவரை எனது பள்ளிகால நண்பர் என்று சொன்னேன். என்னோடு அவர் பள்ளியில் படிக்கவில்லை. அப்போது அவர் அச்சகம் ஒன்றில் அச்சுக்கோப்பாளராக வேலை செய்து கொண்டிருந்தார்.  என்னோடு படித்தவர்களும் அவருக்கு  நண்பர்கள் தான்.  ஆனால் இதில் என்ன எனக்கொரு ஆச்சரியம் என்றால் அவரோடு எந்த வகையிலும் சம்பந்தப்படாத என்னோடு படித்த மற்றவர்களைப் பற்றியும்  அவர் தெரிந்து வைத்திருந்தார்! அது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. எங்களுடைய தலைமை ஆசிரியரின் பெயரைத் தெரிந்து வைத்திருந்தார். என்னோடு படித்த சில பெண்களின் பெயரைத் தெரிந்து வைத்திருந்தார்! இதெல்லாம் "எப்படி?" என்று எனக்குப் புரியவில்லை! ஆனாலும் இந்தச் செய்திகள் எல்லாம் எங்கள் பக்கம் இருந்து தான் அவருக்குப் போயிருக்க வேண்டும்! இல்லாவிட்டால் எப்படி? இப்போது எனக்கு ஞாபத்திற்குக் கொண்டு வர முடியவில்லை. 

நான் இன்னும் முக்கிய செய்திக்கு வரவில்லை.  ஆமாம்!    எங்களைப் போன்ற மாணவர்களுக்கு வெளியே அச்சகத்தில் வேலை செய்யும் ஒருவருடன் எப்படி தொடர்பு எப்படி ஏற்பட்டது? அந்தக் காலக்கட்டத்தில் சிங்கப்பூர் வானொலியும், மலாக்கா வானொலியும் "நேயர் விருப்பம்" நிகழ்ச்சிக்கு மிகவும் பிரபலமானவை. (சிங்கப்புர் என்றால் கோலலம்பூர் என்று நினைத்துக் கொள்ளுங்கள்),  அப்போது மலாக்கா நேயர் விருப்பம் தெரசா அவர்களால் நடத்தப்பட்டது. சிங்கப்பூர் நிகழ்ச்சி கமலாதுரை, செசிலியா போன்றவர்களால் நடத்தப்பட்டது. இந்த நேயர் விருப்ப நிகழ்ச்சியில் எங்களோடு படித்த குப்புசாமி என்னும் மாணவரின் பெயர் மிகவும் பிரபலம். எல்லா நேயர்விருப்ப நிகழ்ச்சியிலும் அவர் பெயர் ஒலிக்கும்! அப்படியென்றால் நாடுபூராவும் அவர் பெயர் நேயர்விருப்ப நிகழ்ச்சியில் ஒலிக்கும். ஆகா! அது ஏதோ சினிமா நடிகர் மாதிரி ஒரு கர்வம்!  இதில் எங்களுக்கும் பங்கு உண்டு!  

இந்த நண்பர் மூலம் தான் இந்த அச்சக நண்பர் அறிமுகமானர். அப்போது அவருடைய அச்சகத்தில் புதிதாக நேயர்விருப்ப கார்டுகள் அறிமுகப் படுத்தியிருந்தார்கள். அதனை எங்களுக்கெல்லாம் காட்டி, அதில் கொஞ்சம் சிக்கனம் இருப்பாதாகக் கூறி, எங்களையெல்லாம் வாங்க வைத்தார்! இப்படித்தான் அந்த அச்சக நண்பர் அறிமுகமானார். இப்படித்தான் அவருடைய அறிமுகம் ஏற்பட்டது!

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அவரைச் சந்தித்ததில் என்ன மாற்றத்தைக் கண்டேன்? இப்போது அவர் பேசுகின்ற தமிழ் ஏதோ தமிழ்ப் பண்டிதர் பேசுவது போல் இருந்தது. அழுத்தம், திருத்தமாக தமிழைப் பேசுகிறார். தமிழாசிரியர்கள் கூட இப்படிப் பேசுவதை நான் பார்த்ததில்லை! அப்படி ஒரு தூய தமிழில் பேசுகிறார். வார்த்தைகள் தெளிவாக வந்து விழுந்தன. அழுத்தமாக இருந்தன. 

இன்றைய நிலையில் இப்படித் தமிழ் பேசுவது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனாலும் கேலி செய்ய ஒன்றுமில்லை. அந்தத் தமிழ்ப்பற்று, இனப்பற்று அவரிடமிருந்தது. அன்றைய இளைஞர்களிடையே இருந்த அந்த மொழிப்பற்று இன்னும் அவரிடம் அப்படியே இருக்கிறது.

ஒரு வேளை நாங்கள் தான் மாறிவிட்டோமோ!


No comments:

Post a Comment