Wednesday 27 February 2019

அட! நஸ்ரியுமா..!

பதவியில் இருக்கும் போது நாட்டின் ஒற்றுமைக்காகப் பேசுவதும்  பதவியில்  இல்லாத போது "நாடாவது! வெண்டைக்காயாவது!" என்று பேசுவதும் ஒரு சில அரசியல்வாதிகளின் இயல்பு.

அந்த ஒரு சில அரசியல்வாதிகளில் இப்போது நமது முன்னாள் அமைச்சர் நஸ்ரியும் சேர்ந்து கொண்டார். அம்னோ கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நஸ்ரி சமீபத்திய தேர்தல் பிரச்சாரத்தின் போது நாடு நாசமாய்ப் போனால் எனக்கென்ன என்னும் போக்கில் பேசியிருக்கிறார்!

அதிலும் அவர் முக்கியமாக சட்டத்துறைத் தலைவர்,  நிதியமைச்சர்,  தேசிய தலைமை நீதிபதி  இவர்களைப் பற்றி பேசும் போது இவர்கள் அனைவரும் மலாய்க்காரர் அல்லதவர்கள் என்று பேசியிருக்கிறார். இவர் ஒன்றுமே அறியாதவர் அல்ல. ஏற்கனவே இந்தப் பதவியில் இருந்தவர்கள் இப்போது பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளனர். அனைத்தும் ஊழல் குற்றச்சாட்டுகள்!  கொள்ளையடிப்பவர்கள் மலாய்க்காரர்களாக இருக்கலாம் , தமக்கு நீதி, நியாயம் தேவை இல்லை என்கிற நஸ்ரியின் கருத்தைப் பற்றி என்ன சொல்லுவது?
படித்தவர், பண்பட்டவர் இப்படிப் பேசினால் பாமரன் என்ன சொல்லுவான்?

கொள்ளையடிப்பது, ஊழல் புரிவது பாவம் என்கிற எண்ணமே தவறு என்கிறார் நஸ்ரி!  ஒரு சத்தியம் செய்வதன் மூலம் அனைத்துப் பாவங்களும் கழுவப்படும் என்னும் நஸ்ரியின் கருத்தைப் பெரும்பாலோர் ஏற்கவில்லை! அதுவே நமது வெற்றி!  

இன்னொன்றையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும்.   பிரச்சனைகள் வரும்போது அதன் முழு விபரங்களையும் அறியாமல் உடனே "மலாய் உரிமைகள் பறி போகின்றன" என்று கத்தி  ஆர்ப்பாடம் செய்வது இப்போது மலேசிய அரசியலில் புதிய பரிணாமம் என்றே சொல்லலாம்.  பறி போக என்ன இருக்கிறது? எல்லாவற்றையும் இறுக்கிக் கை இடுக்கில் வைத்துக் கொண்டு பறி போகிறதே என்றால் யார் நம்புவார்? 

அப்படி என்றால் எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இருக்கிறதா,இல்லையா என்றே தெரியவில்லை! ஒவ்வொரு நாளும் மலாய் உரிமைகளைப் பற்றியே பேசினால் எங்களுக்கென்று எந்த உரிமைகளும் இல்லையா?

நஸ்ரி பதவி போன பிறகு என்னன்னவோ பிதற்றுகிறார்!  இத்தனை ஆண்டுகள் பதவியில் இருந்த பாரிசான் ஆட்சி ஏன் கவிழ்ந்தது என்பதைக் கொஞ்சம் கூட யோசித்துப் பார்க்கமாட்டேன் என்கிறார். எங்களுடைய உரிமை மறுக்கப்பட்டன அதனை நாங்கள் பார்த்துக் கொண்டே தான் இருக்க வேண்டுமா? அது தான் மாற்றத்தின் ஆரம்பம்!

நாட்டின் நலன் முக்கியம். நஸ்ரியின் வழி  முக்கியம் அல்ல!

மகாதிர் நீண்ட நாள் வாழ வேண்டும்!

பிரதமர் மகாதிர்  நீண்ட நாள்  வாழ  வேண்டும் என்பதில் இப்போது துங்கு ரசாலியும் சேர்ந்து கொண்டிருக்கிறார். அதுவே நமது பிரார்த்தனையும் கூட! 

இன்றைய அரசியல் சூழலில் அவர் இருப்பது நாட்டிற்கு நல்லது என்பது தான் அனைத்து மலேசியர்களின் எதிர்பார்ப்பும்! அவர் தான் நாட்டை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதை மக்களறிவர். அவர் சொல்லுகின்ற சொல்லுக்கு மலேசியர் அனவரும் கட்டுப்படுகின்றனர்,  அரசியல்வாதிகள் உட்பட!  அது போது அவர் மக்கள் ஆதரவைப் பெற்றவர் என்பது.

அரசியலில் இரு துருவங்களாக இருப்பவர்கள்  துங்கு ரசாலியும, டாக்டர் மகாதிரும். இருப்பினும்  துங்கு  ரசாலி,   டாக்டர்  மகாதிர் நாட்டின் நலனுக்காக நீண்ட நாள் வாழ  வேண்டும்  என  பிராத்திக்கிறார்.  நமக்கும் மகிழ்ச்சியே! 

ஆனால்  அம்னோவில்  உள்ள  பிற தலைவர்கள் இவர் சொல்லுவதை  ஏற்றுக் கொள்ளுவார்களா?  ஏற்றுக் கொள்ள  மாட்டார்கள் என்பதை  நாம்  அறிவோம்! ஏன்  முன்னாள்  பிரதமர்  நஜிப்  ஏற்றுக் கொள்ளுவாரா?  அம்னோ தலைவர்கள் யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அது தான் உண்மை!

இப்போது  நாட்டில் யாரால்  பிரச்சனைகள்  ஏற்படுகின்றன?  உண்மையைச்  சொன்னால் அம்னோவில்  உள்ள  அரசியல்வாதிகளால் தான் பிரச்சனைகள் ஏற்படுகின்றன!  புதிய அரசாங்கம் எதனைச்  செய்தாலும் அதனை எதிர்க்க வேண்டும்  என்பதாக நஜிப் உத்தரவு  பிறப்பித்திருக்கிறார்!    நாட்டில் ஏற்பட்ட  சமீபகால ஆர்ப்பாட்டங்கள்  அனைத்தும் தேவை இல்லாத  ஆர்ப்பாட்டங்களே! அனைத்தும்  அம்னோ தரப்பில்  இருந்து  ஊதி  ஊதி  பெரிதாக்கப் பட்டவை!

உண்மையைச் சொன்னால்  புதிய  அரசாங்கத்தைச்  செயல்பட விடாமல் இருப்பது  தான்  அவர்கள் நோக்கம். அதனைத் தான்  அவர்கள் வெற்றிகரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்!

ஆக, துங்கு ரசாலி,  டாக்டர் மகாதிர் நீண்ட நாள் வாழ வேண்டும்  என்பதில் யாருக்கும் பிரச்சனை இல்லை. ஆனால் நாட்டை கட்டுப்பாட்டில் வைத்திருக்க  வேண்டும் என்றால் துங்கு ரசாலி அம்னோ அரசியல்வாதிகளிடம் இதனைச் சொல்ல வேண்டும். அவர்கள் அமைதியாக இருந்தாலே நாட்டில் எந்தக் குழப்பமும் ஏற்படாது!

நாட்டில் அமைதி, முன்னேற்றம் இருந்தாலே டாக்டர் மகாதிர் நூறு ஆண்டுகள் பேர் போடுவார்.  சந்தேகமே வேண்டாம்!

காரணம் அவருக்கு வேண்டியது நாட்டின்  முன்னேற்றமே!

Tuesday 26 February 2019

கேள்வி - பதில் (94)

கேள்வி

வருகின்ற இந்திய நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும்?

பதில்

மற்ற மாநிலங்களைப் பற்றி தெரியவில்ல என்றாலும் தமிழ் நாட்டைப் பற்றி ஓரளவு கணிக்கலாம். 

தமிழ் நாட்டில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் தான் இன்னும் நிலவுகிறது. அ.தி.மு.க. வும் தி.மு.க.வும் தான் வெற்றி பெறுவதற்கான முன்னணியில் உள்ள கட்சிகள்.  இந்த முறை அ.தி.மு.க. வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்று தான் சொல்ல வேண்டும் காரணம்  சமீப காலங்களில் பா.ஜ.க. வோடு சேர்ந்து கொண்டு அவர்கள் பல குளறுபடிகளைச் செய்துள்ளனர்.  அனைத்தும்  தமிழர் நலனுக்காக எதிரானவை.

என்ன தான் பதவி வேண்டும், பணம் வேண்டும் என்று அவர்கள் அலைந்தாலும் அ.தி.மு.க. வின் ஒவ்வொரு அடியும் பணத்தையும் பதவியையும் நோக்கித் தான் நகர்ந்தனவே தவிர அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை! தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆர்வமுமில்லை!  காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்! அது தான் அவர்களின் லட்சியம்; உயர்ந்த நோக்கம் அனைத்தும்!

தி.மு.க. வும் கூட முன்பு போல வெற்றி பெற முடியுமா என்னும் ஐயமும் நிலவுகிறது. இது தான் முதன் முதலாக கலைஞர் இல்லாத தேர்தல் திமு.க.விற்கு. அப்படியே வெற்றி பெற்று வந்தாலும் அ.தி.மு.க. வின் வழியைத் தான் இவர்களும் பின் பற்றுவார்கள்.  மற்றபடி தமிழகத்திற்கு இவர்களால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.

ஒரு வகையில் பார்த்தால் இந்தத் தேர்தல் தமிழ் நாட்டின் இரண்டு முக்கிய ஆளுமைகள் இல்லாத தேர்தல்.  கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாத முதல் தேர்தல். கருணாநிதியின் வாரிசாவது கொஞ்சம் கண்ணுக்குத் தெரிகிறார்.   ஜெயலலிதா எந்த வாரிசுகளையும் உருவாக்கவில்லை. அதனால் அங்கு ஒரு வெற்றிடம் தான் தெரிகிறது. அது ஒரு ஹீரோ இல்லாத கட்சி!   இந்த நேரத்தில் மற்ற கட்சிகளும் உள்ளே வர வாய்ப்பிருக்கிறது. ஆனால் எல்லாமே இந்த இரு கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுவதால் இந்த இரு கட்சிகள் தான் முன்னணியில் இருக்கின்றன.

இந்த நேரத்தில் கமல்ஹாசனின் கட்சி எந்தக் கட்சியுடனும் கூட்டுச் சேராமல் தனித்துப்  போட்டியிடப்  போவதாக  அறிவித்திருக்கிறார்.  அதே போல நம் தமிழர் கட்சியும் அனைத்துத்  தொகுதிகளிலும் போட்டியிடுகின்றது.

ஒன்று சொல்லலாம். இந்த  தி.மு.க., அதி.மு.க.  கட்சிகளின்  கூட்டணி  உடைபடும் அபாயத்தில் இருக்கிறது எனலாம். திராவிடக் கட்சிகளின்  கூட்டணி  உடைவது  தான் தமிழகத்திற்கு நல்லது.

பொறுத்திருந்து  பார்ப்போம்!

Sunday 24 February 2019

இனி ஏமாறமாட்டோம்...!

 உலகத் திருக்குறள் மாநாட்டின் நிறைவு விழாவில் பேசும் போது பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி நல்லதொரு கருத்தினைக் கூறியிருக்கிறார். தனது ஆவேசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் எனச் சொல்லலாம்.

"நாம் அறுபது ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டிருக்கிறோம். நான் இனி ஏமாற விடமாட்டேன்."  என்பதாக அவர் கூறியிப்பது நமது இந்திய சமுதாயத்திற்குப் புதிய தெம்பைத் தருகிறது! 

புதிய அரசு பதவி ஏற்ற போது ஒரு சில இந்திய அரசியல்வாதிகள் "எங்களால் எல்லாம் முடியும்!" என்னும் தோரணையில் பேசிய போது  நமக்கும் அவர்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டது. நம்பிக்கைக் கூட்டணி  சாதனை  புரியும் என்றெல்லாம் நம்பினோம். அதே அரசியல்வாதிகள் இப்போது இருக்கும் இடம் தெரியாமல்  இருக்கின்றனர்!  இப்போது நமக்கும் ஒன்று புரிகிறது. அவர்களுக்கும் எஜமானர்கள் இருக்கின்றனர். அவர்களை மீற முடியாது  என்று!

ஆனால் ஒன்றை நாம் ஏற்றுக் கொள்ளுகிறோம்.  புதிய அரசாங்கம் உடனடியாக எந்த மாற்றங்களையும் கொண்டு வந்துவிடமுடியாது. அப்படிக் கொண்டு வந்தால் ஒரு சாராரின் கோபத்திற்கு ஆளாக வேண்டி வரும். 

பினாங்கு மாநிலத்திலேயே  சில பிரச்சனைகள் தீர்க்க முடியாத  நிலையில்  இருக்கின்றன என்பதை பத்திரிக்கை வாயிலாக  அறிகிறோம். குறிப்பாக  இந்தியர்களின் நிலப் பிரச்சனை. அதே போல தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சனை. நிலப் பிரச்சனை  என்பது  நீண்ட காலப்  பிரச்சனை. அதனைக் கலைவது என்பது பல சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தும். தமிழ்ப்பள்ளிகளின்  பிரச்சனை  என்பது  இப்போது தான்   நடப்பு  அரசாங்கப் பார்வையில்  இருப்பதால் இனி மேல் அதற்கு நல்ல காலம் பிறக்கும்.

புதிய அரசாங்கத்தின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளுகிறோம்.  ஆனால் ஒரு சில பிரச்சனைகள்  நமது  கையாலாகத்தனத்தை காட்டுகின்றன. இந்தியர்களின்  குடியுரிமை பிரச்சனை  என்பது  நூறு  நாள்களில் தீர்க்க வேண்டிய பிரச்சனை.  இப்படி இழுத்தடிப்பது  ஏற்றுக் கொள்ள முடியாதது! அடுத்து  உயர் கல்வி நிலையங்களில்  நமது மாணவர்களின் நிலை என்ன என்பது உறுதியாகத்  தெரியவில்லை. அரசாங்க வேலை வாய்ப்புக்கள், தனியா துறைகளில் வேலை வாய்ப்புக்கள், வங்கிகளில் வேலை வாய்ப்புக்கள்  என்று இன்னும் பிரச்சனைகள் தொடரத்தான் செய்கின்றன.

பேராசிரியர் இராமசாமி சொன்னது  போல நாங்கள்  அரசாங்கத்தை நம்புகிறோம். அவர்களால்  இன்னும்  முழுமையாக இயங்க முடியவில்லை என்பதை உணருகிறோம்.  அதனாலேயே நாங்கள் காத்திருக்கிறோம்.

ஆனால் அந்த அறுபது ஆண்டு கால ஏமாற்று வேலையை இனி நடக்க விடமாட்டோம் என்பதையும் நாங்களும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்!

இனி ஏமாறுவதாக  இல்லை!

 

Saturday 23 February 2019

நல்ல செய்தி வரும் என நம்புவோம்..!

நீண்ட நாள்களாக தனது குழந்தை பிரசன்னா டிக்‌ஷாவை காணாமல் தவிக்கும் தாய் இந்திரா காந்திக்குக் கொஞ்சம் நம்பிக்கை தரும் செய்தியாக அமைந்திருக்கிறது "இங்காட் நடவடிக்கை குழு". 

உடனடியாக பல்வேறு நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது  அந்தக் குழு. இப்போது இந்திரா காந்தியின் மதம் மாறிய முன்னாள் கணவர் பத்மநாதன் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டறிய வேண்டும்.  அவர் மலேசியாவில் இல்லை என சொல்லப்பாடுகிறது. தென் தாய்லாந்தில் இருப்பதாக ஒரு சில தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும் டிக்‌ஷா தனது தந்தையுடன் தான் இருக்கிறாரா என்பதும் தெரியவில்லை.

முக்கியமாக அந்தக் குழுவினர் டிக்‌ஷா இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதையே முக்கியமாக  கருதுகின்றனர். நாமும் அதனையே தான் விரும்புகின்றோம். ஓடிப்போன கணவனைப் பற்றி நமக்கும் அக்கறை இல்லை! 

பதினோரு மாத கைக்குழந்தையுடன் ஓடிபோன முகமது ரிட்சுவான் என்கிற பத்மநாதன்அந்தக் குழந்தை டிக்‌ஷாவை என்ன நிலையில் வைத்திருக்கிறார், அவருடனேயே வைத்திருக்கிறாரா அல்லது வேறு யாரிடமோ வளர்க்கும் பொருட்டு ஒப்படைத்திருக்கிறாரா என்கிற விபரமும் தெரியவில்லை!

இப்போது அந்தக் குழந்தைக்கு பதினோறு வயதாகிறது. பதினோறு வயது என்னும் போது  அவள்  பள்ளி செல்ல வேண்டும்.ஆனால் அவள் பள்ளிக்குச் செல்வதாக எந்த ஓர் அடையாளமும் இல்லை.  அவள் பெயர் எந்த ஒரு பள்ளிக்கூடத்திலும் பதிவு செய்யப்படவில்லை என கல்வி அமைச்சு கூறுகிறது!  குழந்தை டிக்‌ஷாவின் மைகிட் எனப்படும் அவளது அடையாள அட்டை தாயார் இந்திரா காந்தியிடமே உள்ளது.  அடையாள அட்டை இல்லாமல் எப்படி பள்ளி செல்ல முடியும் என்று பாரிசான் ஆட்சியில் நம்மால் கேள்வி  கேட்க  முடியவில்லை!  இப்போது கேட்டு புண்ணியமில்லை! அப்போதே  வேறு பெயரில்  பதிவு செய்திருக்கலாம்! அல்லது ஆட்சி மாறிய  பின்னர் செய்திருக்கலாம்! 

இங்காட் குழுவின் தலைவர் அருண் துரைசாமி ஓர் அறிவிப்பையும் செய்திருக்கிறார். குழந்தை டிக்‌ஷாவையோ அல்லது அவரது தந்தை முகமது ரிட்சுவானையோ கண்டு பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ரி.ம. 10,000.00 வெள்ளி  வெகுமதி கொடுக்கப்படும் என  அறிவிப்பு செய்திருக்கிறார்.

ஒரு சாதாரண,  நாட்டின் குடிமகனை 'எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை!'  என்று சொல்லும் காவல்துறையின் இயலாமையை  நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் அது தான் உண்மை என்பதை நாமும் நம்ப வேண்டித்தானே இருக்கிறது!

இந்த முறை காவல்துறையோடு சேர்ந்து மக்களின் ஒத்துழைப்பையும் டிக்‌ஷாவின் தாய் எப்படி எதிர்ப்பார்க்கிறாரோ அதனையே நாமும் எதிர்ப்பார்க்கிறோம்.

நல்ல செய்திக்காக காத்திருக்கிறோம்! நல்லது நடக்கும்!

Friday 22 February 2019

நானும் எஜமானன் தான்..!

முன்னாள் பிரதமர் நஜிப், செமினி தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார்.

"நாட்டின் மக்களே எனது எஜமானர்கள்!" என்பதாக ஒரு செய்தியைக் கூறி வாக்காளர்களை மகிழ்ச்சி படுத்த முயற்சி செய்திருக்கிறார். வாழ்த்துகள்!

நானும்அவரின் ஓர் எஜமானன் என்பதாக எடுத்துக் கொண்டு அவரைப் பற்றியான எனது கருத்துக்களை இங்கு சொல்ல வருகிறேன்.  

முதலில்,  நான் உங்கள் எஜமானன் என்பதைப் புரிந்து கொள்ள ஏன் இத்தனை ஆண்டுகள் ஆயிற்று?  நீங்கள் மட்டும் அல்ல உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள், இப்போது ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகள் அனைவருக்குமே  நாங்கள்  தான்  எஜமானர்கள்.  நீங்கள் மட்டும் அல்ல இப்போது உள்ளவர்களும்  அதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.  அரசியலில் தோற்றுப் போன பிறகு ஞானம் வருவது இயற்கை ஆனால் பதவியில் இருக்கும் போதே போதி மரத்து புத்தனின் ஞானம் வர வேண்டும்!  அப்போது தான் வாழ்க்கை இனிதாக அமையும். இல்லாவிட்டால் விசாரணை, சிறை என்று காலாகாலமும் அலைய வேண்டி வரும்!

நாங்கள் எஜமானர்கள் என்பது சரிதான். அது தான் ஜனநாயகம்.  ஆனால் எஜமானர்களின் பணத்தை யாரும் கொள்ளையடிப்பார்களா?  முடியுமா? முடியும் என்பதை நீங்கள் நிருபித்துக் காட்டியிருக்கிறீர்கள்.அதுவும் கொஞ்சம் நஞ்சம் அல்ல.  இன்றைய நிலையில் நாட்டின் கடன் என்பது ஒரு டிரில்லியன் கோடி என்கிறது நிதியமைச்சு!  இத்தனை கோடி கடன் என்றால் நீங்கள் ஆட்சியில் இருந்த போது  செய்த கில்லாடித்தனங்கள் விக்ரமாதித்தன் கதைகளையும் மிஞ்சி விட்டனவே!

உங்கள் எஜமானர்களுக்கு  நீங்கள் செய்த  துரோகங்கள் கொஞ்சமா, நஞ்சமா! இப்படி எல்லாம்  செய்ய  உங்களுக்கு  எப்படி  மனம்  வந்தது? எஜமானர்களாகிய எங்களை  மனிதர்களாகக்  கூட நீங்கள்  மதிக்கவில்லையே! எஜமான விசுவாசம் என்பது உங்களுக்குக்  கொஞ்சம்  கூட  இல்லையே! 

எங்களை எஜமானர்கள்  என்று  கூறிவிட்டு  எங்களைப் போட்டு மிதி மிதி என்று காலால் மிதித்து  துவம்சம் பண்ணி விட்டீர்களே!  உங்களுக்கு எங்கே அந்த எஜமான விசுவாசம் இருந்தது? இனியும் இருப்பதற்கு!

ஓர் எஜமானனாகக் கூறுகிறேன் கேளுங்கள்.  நீங்கள்  நீதிமன்றத்தில் மிதி மிதி என்று மிதிப்பட வேண்டும்!  கிழி கிழி என்று கிழிப்பட வேண்டும்! மொத்து மொத்து என மொத்துப்பட வேண்டும்! பிழி பிழி என பிழியப்பட வேண்டும்! கடைசியில் சீ சீ என சிறைப்பட  வேண்டும்!

இது தான் இந்த எஜமானனின் ஆசை!

கேள்வி - பதில் (93)

கேள்வி 

நடிகர் கமல்ஹாசன் தி.மு.க. வை குடும்ப நிறுவனம் என்பதாகக் கூறியிருக்கிறாரே!

பதில்

இந்தக் கருத்து ஒன்றே போதும்  அவருடைய அரசியலை  புரிந்து கொள்ள! கலைஞர் இருந்த  போது  இப்படி  ஒரு  கருத்தைச்  சொல்ல  அவரால்  முடியவில்லை! இப்போது  தான்  அவருக்கு நேரம்  வந்திருக்கிறது! இப்படிப் பட்டவர்களை  நாம்  எப்படிப்  புரிந்து கொள்ளுவது?  ஆள்  இருக்கும்  போது  ஒரு  மாதிரி  பேசுவதும்  ஆள் இல்லாத  போது  ஒரு  மாதிரி  பேசுவதும் - இவருடைய அரசியலை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை!

முதலில்  கமல் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தி.மு.க. என்பது ஒரு கட்சி அல்ல! அது ஒரு மாபெரும்  குடும்ப நிறுவனம்!  அந்த நிறுவனத்திற்கான தலைவர்கள்  அனைவரும்  கலைஞரின் வாரிசுகளே1 இப்போது  தான்  முதன்  முதலாக  ஸ்டாலின், கருணாநிதிக்குப் பின்னர் தலைவர் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.

நிறுவனத்தை பலமாகக்  கட்டிக் காத்து வளர்த்தவர் கலைஞர். அவர் இருந்த வரையில்  வாரிசுகள் தங்களது  பகைமையை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. இனி மேல்  அதற்கான வாய்ப்புக்கள்  நிறையவே  உண்டு. அதுவும்  வருகின்ற  தேர்தலில்  ஸ்டாலின்  தனது தலைமையை நிருபித்தே  ஆகவேண்டும்.  வாழ்வா  சாவா போரட்டம்!  தோற்றுப்  போனால்  வாரிசுகள்  வெளிப்படையாகவே  அடித்துக்  கொள்ளுவார்கள்! வெற்றி பெற்றால் ஸ்டாலின் தலைமைத்துவம்  கொஞ்சம் தலை நிமிர்ந்து நிற்கும். 

எது எப்படி இருப்பினும்  எல்லாமே தற்காலிகம்  தான். ஒரு குடும்ப நிறுவனத்தில் என்னன்ன நடக்குமோ அத்துணையும் இந்தக் கட்சியிலும் நடக்கும்! வாரிசுகள் ஒருவர் இருவர் அல்ல. கலைஞரின் குடும்பம் பெரிசு. அது போலவே வாரிசுகளின் சண்டையும் பெரிசாகத் தான் இருக்கும்.

கலைஞர் மிகத் திறமைசாலி. 'தமிழ்! தமிழ்!'   என்று  பேசியும், எழுதியும் தமிழர்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டார்! பின்னர் சாராயத்தையும் ஊற்றிக்கொடுத்து தமிழர்களின் மூளையை மழுஙகடித்தார்! 

கமல் இவைகளையெல்லாம் அறியாதவர் அல்ல. ஆனாலும் அவர் இருக்கும் போது  அவரால் உண்மையைப் பேச முடியவில்லை. அப்படிப் பார்த்தால் கமல் காலம், நேரம்  பார்த்து  பேசுபவர்  என்று தான்  பொருள்படும். ஆனால் இது அரசியல் அல்ல, சந்தர்ப்பவாதம்! அரசியலுக்குத் தேவை உண்மை, நேர்மை - தொண்டுக்குத்தான் முக்கியத்துவம். தொண்டைக் கிழிய பேசுவதல்ல!

Thursday 21 February 2019

ஏன் இந்த தயக்கம்...?

ஏன் இந்தத் தயக்கம் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை!

பேரா மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்ட இரண்டாயிரம்  ஏக்கர் நில விவகாரம்  பற்றி வருகின்ற செய்திகள் நமக்கு ஏற்புடையதாக இல்லை. 

ஒரு சிறிய குழுவினர்  அரசாங்கத்திற்கே  சவால் விடுகின்றனர்  என்று நினைக்கும்  போது  அது நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கின்றது! அந்த அளவுக்கு அவர்கள் பெரிய மனிதர்களா?   அனைவரும் முன்னாள் ம.இ.கா.வினர்.  ம.இ.கா. வினர் என்றாலே நமக்குத் தெரியும். பெரும்பாலும் இந்திய மக்களிடமிருந்து நிறைய சாபத்தை விலைக்கு வாங்கியவர்கள்!  இவர்கள் வாங்கிய சாபங்களுக்கு முடிவே இல்லை! இன்னும் வாங்கிக் கொண்டே இருக்கிறார்களே அது தான் வலியைத் தருகிறது. அந்த அளவுக்கு அவர்களின் மனம் மரத்துப் போய்விட்டதா!  சாபங்கள் ஏழு தலைமுறைக்குத் தொடரும் என்கிறார்கள். முதல் தலைமுறையிலேயே நமக்குத் தெரிய ஆரம்பிக்கும்!

இருக்கட்டும்.  இப்போது  சிவநேசன் குழுவினர் எதற்கு  யாருக்குப் பயப்படுகிறார்கள் என்பது தான் நமக்குப் புரியவில்லை.  பதவியில் இல்லாதவன் பகமையைக் காட்டுகிறான்!  அந்த அளவுக்கு அவனுக்கு என்ன செல்வாக்கு? 

நமக்கு,  என்ன நடக்கிறது என்பது பற்றி சரியான தகவல்கள் இல்லை. இந்த அளவுக்கு சிவநேசன் விட்டுக் கொடுக்கிறார் என்றால் ஏமாற்றுக்காரன் மிகவும் பலசாலியாகத் தெரிகிறான்! பொதுவாக திருடர்கள் தங்களைத் தற்காத்துக்  கொள்ள பல வழிகளை வைத்திருப்பார்கள். ஏதோ ஒன்று இவர்கள் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க முடியாமல் தடுமாறுகின்றனர் என்றே தோன்றுகிறது.

வெளியே இருந்து பார்க்கும் நமக்கு என்ன தோன்றுகிறது? ஏன் இவர்கள் மேல் ஊழல் தடுப்பு ஆணையத்திடம் இன்னும் பிரச்சனையைக்  கொண்டு போகாமல் இருக்கிறார்கள் என்னும் சந்தேகம் தான். ஊழல் தடுப்பு ஆணையம் தான் இவர்கள் மேல் சரியான நடவடிக்கை எடுக்க முடியும்.

எது எப்படி இருந்தாலும் இவர்கள்  மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாக சிவநேசன் அறிவித்திருக்கிறார். இந்த நில விவகாரம் மட்டும் அல்ல இவர்கள் மேல் இன்னும் பல குற்றச்சாட்டுக்கள் உண்டு. காரணம் இவர்கள் மா.இ.கா.வினர். அது ஒன்றே போதும்.  இவர்கள் கொள்ளைக்காரர்கள் என்பது இந்த உலகமே அறியும்! அவர்களின் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் வெளிக் கொணர வேண்டும்.

ஒரு சமூகத்திற்குக் கிடைக்க வேண்டிய - பள்ளிச் சிறார்களுக்குக் கிடைக்க வேண்டிய - உதவிகளைத் தடுத்து நிறுத்தும் இந்தச் சமூகத் துரோகிகளுக்குச் சரியான பாடம் கற்பிக்கப்பட வேண்டும்.

இவர்கள் சமூகத் துரோகிகள். எந்தவொரு தயவு தாட்சண்யம் பார்க்காமல் இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தயக்கம் வேண்டாம்! உங்கள் பின்னாள்  இந்தச் சமுதாயம் நிற்கிறது என்பதை மறக்க வேண்டாம்!

உணவில் போதைப் பொருளா..?

 உணவில் போதைப் பொருள் என்பதாக ஒரு செய்தி!

என்னன்னவோ செய்திகள் எல்லாம் வந்தன. எப்படியோ நாம் பொறுத்துக் கொண்டோம்.  ஆனால் இது  சாதாரணமான செய்தி அல்ல. மனிதனைக் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லுகின்ற ஒரு செய்தி.  

இதிலும் ஒரு அதிசயம்.  மூன்று சமையல் பணியாளர்கள்  காவல் துறையினரால்  கைது செய்யப்பட்டிருக்கிறார்களாம்! . அப்படியானால் உணவகத்தை நடத்தும்   நடத்துனர் இது பற்றி ஒன்றும் அறியாதவரா?  

அந்தப்  பணியாளர்களுக்கு உணவகத்தின் மீது அப்படி என்ன கரிசனை?  இப்படிப் போதைப் பொருளைக் கலந்து  வியாபாரத்தைப்  பெருக்க  வேண்டும்  என்பது  அவர்களுக்கு  என்ன  தலையெழுத்தா? 

சரி, அது  ஒரு பக்கம்  இருக்கட்டும்.  இப்போது  உணவகங்களில் மேலேயே நமக்கு ஒரு சந்தேகம்  ஏற்பட்டுவிட்டது. எந்த  உணவகங்களின் கூட்டம் அதிகமாக  நிரம்பி  வழிகிறதோ  குறிப்பாக  அந்த  உணவகங்களின் 'தரத்தை'ப்  பற்றி  ஐயம் எழத்தான் செய்கிறது! அது இயற்கை தானே!

ஓர் இந்திய நண்பரின்  உணவகம் எந்த நேரமும்  நிரம்பி வழிகிறது. அது நல்லது தான். அது அவர்களின் அயரா உழைப்பைக் காட்டுகிறதே தவிர வேறு எந்தக் காரணமும் எழவில்லை. வெறும் உழைப்பு மட்டும் அல்ல, உணவகத்தின் சுத்தம், தரம், பணியாளர்களின் பண்பு, தூய்மை எல்லாவற்றுக்கும் மேலாக உணவின் சுவை - இவை அனைத்துமே உணவகங்களின் உயர்வுக்குக் காரணமாக அமைகிறதே தவிர வேறு எந்தக் காரணங்களும் இல்லை. 

ஆனால் சுவைக்கு இப்படியும் ஒரு வழியுண்டு என்பதை இப்போது அனைவருக்கும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்பட்டுவிட்டதே என்பதை அறியும் போது கொஞ்சம் வேதனை தான்.  இனி எந்த உணவகத்திற்குப்  போனாலும்  அந்த சந்தேகம்  வரத்தான்  செய்யும். அதுவும் கூட்டம் அதிகமாக இருந்தால் சந்தேகமும் அதிகமாகவே இருக்கும்!

சரி, அதுவும் ஒரு பக்கம் இருக்கட்டும். உணவில் போதைப் பொருளைக் கலந்த அந்த உணவகத்திற்கு அல்லது அந்தப் பணியாளர்களுக்கு என்ன தான் நடக்கப் போகிறது என்பது தான் இப்போதைய மில்லியன் டாலர்  கேள்வி!  போதைப் பொருள் என்றால் அது மரண தண்டனை வரைப் போகும். பணத்தைக் கொடுத்து உடல் நலனையும் கெடுத்து வாடிக்கையாளர்களை இப்படி மரண பாதைக்குக் கொண்டு செல்லும் நபர்களுக்கு என்ன தண்டனை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த விஷயத்தில் பணியாளர்களுக்குச்  சரியான நீதி கிடைக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.  இன்று உணவகங்களில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள். அவர்களைக் குற்றவாளி   கூண்டிலே  நிறுத்திவிட்டு இங்குள்ளவர்கள்  தப்பிக்க நினைத்தால்  அவர்களைத்  தப்ப விடக் கூடாது என்பதும்   முக்கியம்.

போதைப் பொருள்  என்பது விளையாட்டுககு உரிய விஷயம் அல்ல.  உரிய  தண்டனைக் கொடுக்கப்பட  வேண்டும். நீதி  நிலைநிறுத்தப்படும் என நம்புவோம்!
 

Saturday 16 February 2019

வாழ்த்துக்கள் சக்கரவர்த்தி சார்!

முன்னாள் தலைமையாசிரியர், வி.சக்கரவர்த்தி, வயது 76, பணி ஓய்வு பெற்றவர்.  அவருடைய ஆணித்தரமான கருத்தை முன் வைத்திருக்கிறார்.

நாம் இத்தனை ஆண்டுகளாக நமக்குச் சொல்லி ஊட்டிவிடப்பட்ட கருத்தை மறுத்திருக்கிறார். 

ஆமாம்!  படிப்பில் நகர்ப்புற மாணவர்கள் திறைமைசாலிகள் கிராமப்புற மாணவர்கள் பலவீனமானவர்கள் என்னும் கருத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தேவை எல்லாம் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு.  மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வே முக்கியம் என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

ஆசிரியர் சக்கரவர்த்தி அதனைச் சொல்ல எல்லாத் தகுதியும் உடையவர். 1990 களில் ஸதாப்பாக் பள்ளி ஒன்றிற்கு தலைமையாசிரியராக அனுப்பபட்டவர். அதுவும் குண்டர் கும்பலுக்குப் பேர் போன ஒரு பள்ளிக்குத்  தலைமையாசிரியராக தலைமை ஏற்றவர்! பிற்காலத்தில் அந்தப் பள்ளியை நாட்டில் சிறந்ததொரு பள்ளியாக மாற்றிக் காட்டியவர்!

அவர் என்ன சொல்ல வருகிறார்?  நமக்குச் சொல்லப்பட்ட கருத்தை அவர் மறுத்திருக்கிறார். குறிப்பாக கிராமப்புற மலாய் மாணவர்கள் எந்த விதத்திலும் நகர்ப்புற மாணவர்களை விட தரம் தாழ்ந்தவர்கள் அல்ல.  அவர்கள் நாம் நினைப்பது போல  படிப்பில் மந்தமான மாணவர்களும் அல்ல. ஆசிரியர்களின் ஆர்வம், அர்ப்பணிப்பு, அரவணைப்பு இருந்தால் அவர்களும் நகர்ப்புற மாணவர்கள் போல சாதித்துக் காட்டுவார்கள். அப்படி அவர்கள் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள் தனது பள்ளியில் என்கிறார் சக்கரவர்த்தி! 

தோட்டப்புற பள்ளிகளில் பயிலுகின்ற மாணவர்கள் எந்த விதத்தில் தாழ்ந்து  போயிருக்கிறார்கள்?  இன்று உலக ரீதியில் அறிவியில் கண்டுப்பிடிப்புக்களுக்காக பல பரிசுகளை அள்ளிக் குவித்திருக்கிறார்கள்! தங்கப்பதக்கங்களைப் பெற்றிருக்கிறார்கள். காரணம் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல?

அதே மாணவர்கள் இடை நிலைப் பள்ளிகளுக்குச் செல்லும் போது ஏன் தடுமாற்றம் அடைகிறார்கள்? தோல்வி அடைகிறார்கள்? காரணம் அங்கு ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு இல்லை. அரவணைப்பு இல்லை. அரசியலும் சமயமும், இன ரீதியான சிந்தனையும் ஆதிக்கம் செலுத்துகின்றன! 

ஆனாலும் அனைத்தும் மாறி வருகின்றன.  சக்கரவர்த்தி போன்ற ஆசிரியர்கள் அதிகரித்து வருகின்றனர். அந்தக் காலத்தைப் போல இன்றும் அர்ப்பணிப்பும், ஆர்வமும் உள்ள ஆசிரியர்களின் வருகை நம்பிக்கைத் தருகிறது.

ஆசிரியர்களின் அர்ப்பணிப்புகளுக்காக வாழ்த்துகிறோம்!

இது ஒரு கடுமையான குற்றச்சாட்டு..!

ஜனநாயக செயல் கட்சியில் உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மிகக் கடுமையான  ஒரு குற்றச்சாட்டு!

நம்பலமா, நம்பக்கூடாதா என்று யோசிக்க ஒன்றுமில்லை!  நம்பலாம்! ஏனெனில் இதையெல்லாம் செய்வதற்கு நமது தலைவர்களுக்கு எல்லாத் தகுதிகளும் உண்டு! ஆச்சரியப் பட ஒன்றுமில்லை!

 "புந்தோங் வீட்டுமனை விவகாரத்தில் நமது தலைவர்களே துரோகம் செய்வதா?"  என்பதாக தமிழ் மலர் நாளேட்டில் ஒரு செய்தி. 133 இந்திய குடும்பங்களுக்குக் கிடைக்க வேண்டிய வீட்டுமனைகள் இப்போது சீனர்கள் பக்கம் திருப்பி விடப்பட்டிருப்பதாக அந்தச் செய்தி கூறுகிறது! இதற்கு  உடந்தையாக இருப்பவர்கள் நமது இன சட்டமன்ற உறுப்பினரும் இன்னொரு நமது இன நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவர்!

ஏற்கனவே பாரிசான் கட்சி ஆட்சியில் இருந்த போது இந்தத் திட்டம் இந்தியர்களுக்கென ஏற்றுக்கொள்ளப்பட்ட  திட்டம் ஆகும். அதுவும் அல்லாமல் பக்கத்தான் கட்சி ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகும் இந்த 133 இந்திய குடும்பங்களுக்கு வீட்டுமனை கொடுக்கப்படும் என்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் இப்போது தலைகீழாக மாற்றப்பட்டு இந்த வீட்டுமனைகள் சீனருக்கே என்று சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சொல்லுகிறார். எதற்கும் சம்பந்தமில்லாத ஒரு சீனர் இதனைச் சொல்லுகிறார். மந்திரி பெசார் எந்த ஆட்சேபனையும் சொல்லவில்லை. நமது இன சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ ஒன்றும் கண்டு கொள்ளவில்லை!

என்னடா இது! ம.இ.கா. காரனும் இதைத் தான் செய்தான்! அவனுக்கு மலாய் எம்.பி. க்களின் உதவி தேவை. அப்போது தான் அவனுக்குப் பதவி கிடைக்கும். அதனால் அவன் அன்று வாய் திறக்கவில்லை! இன்று இவனும் இதைத் தான் செய்கிறான்!  இவனுக்குச் சீனனின் தயவு தேவை. இவனும் வாய் திறக்கமாட்டேன் என்கிறான்!

என்னடா சாபம் இந்த சமூகத்திற்கு!  ம.இ.கா.காரனாவது அரைகுறை படிப்பு படித்தவன் என்று சொன்னோம்! இவன்  எல்லாம் பெரிய  படிப்பு  படித்தவன் என்று  நாம்  நினைத்துக்  கொண்டிருக்கும்  வேளையில்  இப்படி ஒரு  குண்டைத்  தூக்கிப்  போடுகிறார்கள் புந்தோங் வட்டார மக்கள்!

ஆக, படிப்புக்கும் படிப்பறிவு இல்லாதவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை! சொந்த சமுதாயத்திற்குச் சேவை செய்ய இயலாதவனுக்கு பெரிய பெரிய பட்டம் பெற்றவனெல்லாம் எதற்கு? 

ஏற்கனவே ம.இ.கா. காரனை  எவ்வளவோதீட்டித் தீர்த்திருக்கிறோம்! இனி இவர்களையும் அப்படித்தான் திட்ட வேண்டுமா? 

பொறுப்போம்!  இனி இவர்களுக்குப் பாடம் கற்பிப்போம்!

Friday 15 February 2019

தமிழ் நேசன் மீண்டும் வருமா..?

தமிழ் நேசன் நாளிதழ் மீண்டும் வெளி வர வேண்டும் என்பதாக ஒரு சிலர் குரல் எழுப்புகின்றனர். 

ஒரு தமிழ் பத்திரிக்கை நிறுத்தப்படுவதை தமிழ் மீது பற்றுள்ளவன் எவனும் விரும்பமாட்டான். அது அவனது உயிர்.  தமிழ் எங்கள் உயிர். தமிழ்ப் பத்திரிக்கையும் எங்களது  உயிர். அப்படி யோசிப்பவன் தான் தமிழன்.

தமிழ் நேசன் ஒர் நீண்ட, நெடிய சரித்திரத்தை உடையது.  இந்திய சுதந்திரப் போராட்டம், மலேசிய இந்தியர்களின் உரிமைகளுக்காகப் போராட்டம் என்று நீண்ட அரசியல் பின்னணியை உடைய பத்திரிக்கை.

அதன் கடைசி காலம் முற்றிலுமாக மலேசிய ஆளும் கட்சியைச் சார்ந்துவிட்ட ஒரு பத்திரிக்கை. அதனை நாம் குறை சொல்ல முடியாது. அது அவர்களின் வசதி. ஆளுங்கட்சி பத்திரிக்கை என்பதால் அது அரசாங்கத்தின் உதவி பெற்ற பத்திரிக்கையாக வலம் வந்து கொண்டிருந்தது. 

ஏற்கனவே கென்னெத் ஈஸ்வரன்  ஒரு தமிழ்  நாளிதழை  நடத்தி வந்தார் என்பதை  நாம் அறிவோம். அதுவும்  குறைவான  விலையில்!  அது அரசாங்கத்தின்  குரலாக  வெளி வந்து  கொண்டிருந்தது.  பணம்  நிறைய  கொட்டப்பட்டது.  ஆனாலும்  வாசகர்களை அவர்களால்  கவர முடியவில்லை. 

இதற்கெல்லாம்  என்ன  காரணம்?  மக்கள்  அரசியலைத் தெரிந்து கொள்ள  ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால்  எது உண்மை எது பொய் என்பதை மக்கள் அறிந்திருக்கிறார்கள். பொய்யான விளம்பரங்களினால் பொய் உண்மையாகி விட முடியாது.  மீண்டும் மீண்டும்  பொய்யைச் சொல்லி மக்களை ஏமாற்ற  முடியாது!

தமிழ் நேசனின் வாசகர் வட்டம் அதிகமில்லை என்றாலும் பாரிசான்  அரசாங்கத்தின்  ஆதரவினால்   அது  தொடர்ந்து பேர் போட்டுக் கொண்டிருந்தது. அரசாங்க  மாற்றத்தினால்  அந்த ஆதரவும் கை விட்டுப் போனதால் அவர்களால்  தாக்குப்பிடிக்க முடியவில்லை!

நிச்சயமாக கை மாறுவதற்கான வாய்ப்பையும் அவர்கள்  இழந்து விட்டார்கள்!   மக்களிடையே  அறவே செல்வாக்கு இல்லாத ஒரு பத்திரிக்கையை  யாரும் வாங்குவதற்குத்  தயாராக இல்லை என்பது உண்மை. அதன் பெயர் அந்த அளவுக்குக் கெடுக்கப்பட்டு விட்டது!

தமிழ் நேசன் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு இல்லை. அதனை  வாங்கி  பழைய நிலைக்குக் கொண்டு வர பணத்தைக் கொட்டோ கொட்டென்று கொட்ட வேண்டும்! அப்படியும் அதன் பாதிப்பிலிருந்து  அது மீளுமா என்பது  ஐயமே! 

வராது..........!

Wednesday 13 February 2019

மீண்டும் சர்ச்சையில் பெர்சத்து

மீண்டும்  பிரதமர் மகாதிர் சர்ச்சையில் சிக்கிக் கொண்டியிருக்கிறார்!  ஆனால் அது பற்றி அவர் கவலைப்படுவதாகத் தெரியவில்லை! வருத்தப்படுவதாகவும் தெரியவில்லை!  தனக்கு எது நல்லது என்று தோன்றுகிறதோ அதனைச் செய்ய அவர் தயங்குவதில்லை! 

அம்னோவைச் சேர்ந்த ஏழு அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களை தனது வலைக்குள் கொண்டு வந்திருக்கிறார். அதாவது பெர்சத்து கட்சிக்குள் கொண்டு வந்திருக்கிறார். அது சரியா என்று நாம் கேட்டால் அது சரிதான் என்று தான் அவர் பதில் சொல்லுவார்.  அவருடைய பதில்  அப்படித்தான் அமையும்.

பொதுவாக டாக்டர் மகாதிர் எதனைச் செய்தாலும் அங்கு மலாய்க்காரர் நலன் என்று ஒன்று ஒளிந்திருக்கும்! இங்கு அம்னோ  நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு வருவதன் மூலம் அவர் அம்னோவைப் பலவீனமடையச் செய்கிறார் என்பது ஒன்று. அதன் மூலம் அவர்களின் தொகுதியைச் சேர்ந்த அம்னோ உறுப்பினர்களைப் பெர்சத்துவின் பக்கம் இழுக்கலாம். அம்னோவை முழுவதுமாக அழித்துவிட்டு பெர்சத்துவை அனைத்துத் தொகுதியிலும் மலாய்க்கரர்களின் ஆதரவு கட்சியாக நிலை நிறுத்தலாம். 

இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போது பக்கத்தான் அரசாங்கம் எந்தவொரு திட்டத்தைக் கொண்டு வந்தாலும் அதனை எதிர்க்க/போர்க்குரல் எழுப்ப அம்னோவைச் சேர்ந்தவர்கள் அடவாடித்தனம் செய்ய எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறார்கள். அதனால் அம்னோவைப் பலவீனப்படுத்துவது என்பது தான் டாக்டர் மகாதிருக்கு முதல் வேலை. அதன் காரணமாகத்தான் இந்தக் கடத்தல் வேலைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என நம்பலாம்!

ஆனாலும் இந்தக் கடத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த அளவுக்கு பக்கத்தான் கட்சிக்கு ஆதரவாக இருப்பார்கள் எனும் கேள்வியும் எழத்தான் செய்கிறது. அம்னோ என்றாலே திருடர்கள் என மக்கள் மத்தியிலே ஓர் அபிப்பிராயம் ஏற்பட்டுவிட்டது! இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரிய திருடர்களாக இல்லாவிட்டாலும் அவ்வப்போது கை நீட்டியிருப்பார்கள் என்பது ஆச்சரியப்பட ஒன்றுமில்லை!

சர்ச்சை என்பது மகாதிருக்குப் புதிதல்ல! ஆனால் அந்த சர்ச்சையின் மூலம் நாட்டுக்கு நல்லது நடந்தால் நாம் மகிழ்வோம்! நல்லது நடக்கும் என நம்புவோம்!

மாணவர்கள் ஏன் வெளியேறுகிறார்கள்..?

மனிதவள அமைச்சர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

தனது அமைச்சின் கீழ் இயங்கும் தொழிற்திறன் பயிற்சி நிலையங்களில் போதுமான இந்திய மாணவர்கள் விண்ணப்பம் செய்வதில்லை. அப்படி செய்து இடம் கிடைத்தாலும் அவர்கள் குறிப்பிட்ட காலம் வரை பயிற்சியில் நீடிப்பதில்லை. இடையிலேயே புட்டுக் கொள்கின்றனர்! கடைசியாக அவர்கள் தனியார் கல்விக்கூடங்களின் பயில விரும்புகின்றனர்.

"பிரேக்டிக்கலுக்" காக  வரும் ஒரு சிலரிடம் பேசியிருக்கிறேன். கடைசியாக வந்த ஒரு மாணவியிடம் கேட்ட போது அவர் சொன்னது நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காது.

அந்த மாணவி சொன்னது "நான் கல்லூரியில் சேரும் போது என்னோடு சேர்த்து சுமார் 15 இந்திய மாணவர்கள் இருந்தோம்.  இப்போது நான் பயிற்சியை முடித்து வெளியாகும் போது 3 பேர்கள் மீதம் இருக்கிறோம்!  வந்தவர்களில் ஒரு சிலர் வந்த சில நாட்களிலேயே போய்விட்டனர்! இன்னும் சிலர் ஐந்து, ஆறு மாதங்கள் கழித்துப் போய் விட்டனர்! அவர்கள் சொல்லுகின்ற காரணம் இந்தக் கல்லூரி வாழ்க்கை ஏதோ ஜெயிலில் இருப்பது போல இருக்கிறதாம்! சுதந்திரமாக போக முடியவில்லை, வர முடியவில்லை!   நேரத்தோடு வர வேண்டும் போக வேண்டும் என்பதெல்லாம் எங்களுக்கு ஒத்து வராது! பேசாமல் நாங்கள் போய் "பிரைவட்" டில் படித்துக் கொள்ளுகிறோம்!" 

இங்கு நாம் யாரைக் குறை சொல்லுவது?   இந்த மாணவர்கள்  பெற்றோர்களின் பணத்தை வீணடிக்க தயாராய் இருக்கிறார்கள்!  அரசாங்கம் கொடுக்கிற வாய்ப்பைப் பயன்படுத்தாமல் தனியார் கல்லுரிகளுக்குப் போகத் தயாராக இருக்கிறார்கள்!  தனியார் கல்லுரிகளுக்குப் போனால் அவர்களுடைய பள்ளிக்கூட்டம் அப்படியே சேர்ந்து கொள்ளும்! கல்வித் தரமானதா என்பது பற்றியெல்லாம் கவலை இல்லை. கூட்டாளிகளோடு சேர்ந்து கும்மாளம் போடலாம்! தரமற்ற கல்வியைக் கொடுத்து கடைசியில் அந்த மாணவர்களைக் கடன்காரர்களாக ஆக்குவது தான் தனியார் கல்லூரிகள்!  அதனைத் தான் அவர்கள் விரும்புகிறார்கள்! 

நமது மாணவர்கள் பொறுப்பற்றவர்களாக இருக்கிறார்கள்.  அந்தப் பொறுப்பு என்பது பெற்றோர்களிடமிருந்து வர வேண்டும்.  அந்தக் கல்லுரியிலிருந்து 12 மாணவர்கள் வெளியாகி விட்டார்கள் என்றால் அது சமுதாயத்திற்கு நட்டம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.  இவர்களால் படிக்க முடியவில்லை என்றால் வேறு மாணவர்களுக்கு அந்த இடங்கள் கொடுக்கப் பட்டிருக்கலாம். 12 மாணவர்கள் என்பது சாதாரணமாக விஷயம் இல்லை.

இடம் கிடைக்கவில்லை என்கிற புலம்பல் ஒரு பக்கம். கிடைத்தும் அதனைப் பயன்படுத்த மறுக்கிறார்களே என்கிற விசும்பல் இன்னொரு பக்கம்.

இதனை சரி செய்ய வேண்டும். மனிதவள அமைச்சு இன்னும் நமது அரசு சாரா இயக்கங்கள் மும்மரம் காட்ட வேண்டும்.

நல்லதே நடக்கும் என எதிர்ப்பார்ப்போம்!

Tuesday 12 February 2019

அரசாங்கப் பணியாளர்களுக்கு பணி தான் முக்கியம்...!

மலேசியப் பிரதமர், டாக்டர் மகாதிர், தனது  அமைச்சின் மாதாதிந்திர கூட்டத்தில் அரசாங்கப் பணியாளர்களுக்கு மிகவும் முக்கியமான கருத்தினைக் கூறியிருக்கிறார்.

அரசாங்கப் பணியாளர்கள் தங்களது பணிகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர நாட்டின் தலைவர்களுக்கோ, நாட்டை ஆளும் கட்சிக்கோ பணிய வேண்டும் என்னும் அவசியம் அல்ல.

அரசு ஊழியர்கள் அவர்கள் செய்கின்ற வேலை மக்கள் பணத்தில் தான் செய்யப்படுகின்ற தேவிர அவர்களுக்கான பணம் வேறு எங்கிருந்தும் வருவதில்லை.

இன்று அரசாங்க அலுவலகங்களில் பணி புரிபவர்கள் கடந்த கால அரசாங்கத்துடனான உறவுகளையோ அல்லது முன்னாள் பிரதமருடனான உறவையோ அல்லது அவரின் அமைச்சர்களின் உறவையோ  இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர் என்பது மிகவும் வருந்தத்தக்கது.

அரசுப் பணியாளர்கள் சிந்திக்க வேண்டியது ஒன்று தான். அரசாங்கம் மாறும். அமைச்சர்கள் மாறுவர்.  பிரதமர் மாறுவார்.  ஆனால் அரசாங்கப் பணியாளர்கள் மாறப் போவதில்லை.  மக்கள் மாறப் போவதில்லை. அதனால் அரசுப் பணியாளர்கள் தங்களது கடமைகளைச் செய்வதில் எந்தச் சுணக்கமும் ஏற்படக்கூடாது என்பது முக்கியம்.

இதற்கு முன்பு - முந்தைய அரசாங்கத்தில் நடந்தது என்ன? அரசாங்கப் பணியாளர்கள் எப்படி பணி புரிந்தனர்?  பெருமைப் படுவதற்கு ஒன்றுமில்லை. அரசாங்க மாற்றத்திற்கு அவர்களும் ஒரு காரணம்! அது தான் உண்மை!  அரசாங்க அலுவலகங்களில் இலஞ்சம், ஊழல் எல்லாம் மக்களுக்கு மிகவும் பரிச்சையமாகப் போய்விட்டது! சோம்பேறித்தனத்தின் மொத்த உருவமாக அரசு அலுவலகங்கள் செயல்பட்டதை நாம் பார்த்தோம்!

அப்போது அது சோம்பேறித்தனம்! இப்போது அதே பாணி ஆனால் அரசாங்கத்தை எதிர்ப்பதாக மாறிவிட்டது! அதனால் வேலையில் இன்னும் சுணக்கம். மக்களுடனான உறவுகள் சுமூகமாக இல்லை! இப்போது அது முன்னாள் அரசாங்கத்திற்கு ஆதரவு என்னும் நிலைக்குப் போய்விட்டது!

அரசாங்கப் பணியாளர்கள் தங்களது கடமைகளைச் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். யார் ஆட்சியில் இருக்கிறார் என்பது பற்றி கவலைப்படாமல் நமது வேலை என்ன, அதை மட்டும் செய்வோம் என்கிற நாணயம் இருக்க வேண்டும்!

பணியைப் புறக்கணித்தால் நீங்களும் புறக்கணிக்கப் படுவிர்கள்! நம்புக!

Monday 11 February 2019

கேள்வி - பதில் (92)

கேள்வி

வருகின்ற தமிழக நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் கமலஹாசனின் "மய்யம்" கட்சி அனைத்துத் தோகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவித்திருக்கிறாரே!

பதில்

"அனைத்துத் தொகுதிகளிலும்" என்பது அவரின் பலம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு முன்னோட்டமாகத்தான் அவர் அதனை எடுத்துக் கொள்ளுவார் என்று நான் நினைக்கிறேன்.

அத்தோடு "நாம் தமிழர் கட்சி"  யும் இந்தத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும்  போட்டியிடுகின்றது.  வழக்கம் போல. 

பொதுவாக இந்த இரு கட்சிகளுமே எந்த அளவுக்கு மக்களின் செல்வாக்கைப்[ பெற்றிருக்கின்றன என்பது கேள்விக் குறியே. கமலஹாசன் சமீபத்தில் அரசியலுக்கு வந்தவர், நாம் தமிழர் கட்சி நீண்ட காலமாக அரசியலில் உள்ள கட்சி. ஆனால் மக்களிடையே செல்வாக்கு உள்ள ஒரு கட்சி என்றால் அது தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளும் தான்.

பொதுவாக தமிழக ஊடகங்கள் திராவிடக் கட்சிகளுக்குத் தான் பக்கபலமாக இருக்கின்றன. பொது மக்களிடம் அவர்கள் கேட்கும் கேள்விகள் கூட  "உங்கள் வாக்கு தி.மு.கா. வா, அண்ணா தி.மு.கா. வா" என்னும் பாணியில் தான் இருக்கும். திராவிடம் என்ற சொல் இல்லாத கட்சிகளை அவர்கள் புறக்கணிக்கிறார்கள். விஜயகாந்த் கட்சி கூட திராவிடம் என்னும் சொல்லைத் தான் பயன்படுத்துகிறது.

ஆக, ஊடகங்களே திராவிடக் கட்சிகளைத் தான் ஊக்குவிக்கின்றன. தமிழ் தேசியம் என்பதெல்லாம் அவர்களுக்கு வேண்டாதவை.  கமலஹாசனின் மைய்யம் "திராவிடம்" இல்லாத கட்சியாக வருவதால் ஊடகங்களின் புறக்கணிப்பும் இருக்கத்தான் செய்யும்.

அப்படி கமலஹாசனின் கட்சி ஊடகங்களின் ஆதரவு இல்லாத நிலையில் மக்களின் ஆதரவு மட்டும் இருந்து அவர் ஒரு சில இடங்களிலாவது வெற்றி பெற்றால் நிச்சயமாக அது வருங்கால தமிழகத்திற்கு நல்லதொரு அறிகுறியாக இருக்கும்.

இப்போது மக்கள் எந்த அளவுக்கு விழிப்படைந்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. காஜா புயல் சமீபத்தில் மக்களுக்கு ஏற்பட்ட பெரிய பாதிப்பு. ஆனால் இது எந்த அளவுக்கு அவர்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் தெரியவில்லை. அவர்களுக்குக் கையூட்டு பெரிய அளவில் கிடைத்தால் அனைத்தையும் மறந்து விடுவார்கள்!

அனைத்துத் தொகுதிகளிலும் சரி அவர் ஒரு சில தொகுதிகளிலாவது வெற்றி பெற்றால் நான் மகிழ்வேன்!

Sunday 10 February 2019

இது தான் தமிழன்....!

பிரதமர் துறை துணை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி  மீது அம்புகள் எல்லாம் பாய ஆரம்பித்துவிட்டன!

அவரோடு சேர்ந்து போராடியவர்கள் மீதெல்லாம் வேதமூர்த்தி வழக்குப் போட்டு இழுத்தடிக்கிறார் என்பதாக குற்றச்சாட்டுக்கள் எழ ஆரம்பித்துவிட்டன! 

இங்கு யார் நியாயத்தின் பக்கம் நிற்கிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் பேசப் போவதில்லை. ஒரே காரணம் நான் அவர்களோடு சேர்ந்து போராடவில்லை. அந்தப் போராளிகளெல்லாம் யார் என்று கூட சரியாகத் தெரியாத நிலையில் யார் சரி யார் தவறு என்றெல்லாம் பேச முடியாது. பத்திரிக்கை வழியாக ஒரு சில போராளிகளின் பெயர்கள் தெரியுமே தவிர மற்றபடி அவர்களின் வாழ்க்கை வரலாறு எல்லாம் தெரிய வாய்ப்பில்லை.

நாம் இங்கு பொதுப்படையாகவே பேசுவோம். நமக்குத் தெரிந்தவரை  ஆரம்பத்திலிருந்து இப்போது வரை ஹின்ராஃ  இயக்கத்தில் அதிகமாக அடிப்பட்ட பெயரென்றால் அது வேதமூர்த்தியும் உதயகுமாரும்  தான். ஆனால் இடையே உதயகுமார் காணாமல் போனார். வேதமூர்த்தி தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தார், பதிமூன்றாவது பொதுத் தேர்தலில் முன்னாள் பிரதமர் நஜிப்பிடம் இந்தியர்களின் பிரச்சனையை அவரிடம் கொண்டு சென்றார்.  ஒரு சில காலம் அமைச்சராகவும் இருந்தார். அந்தப் பதவியின் மூலம் அவரால் எதனையும் செய்யமுடியவில்லை. அங்கு ம.இ.கா.வின் குறுக்கீடு இருந்தது. அதனால் பதவியை ராஜினாமா செய்தார். 

பதினான்காவது பொதுத் தேர்தலில் மீண்டும் பிரதமர் மகாதிரிடம் இந்தியர்களின் நிறைவேறாத் திட்டங்களைக் கொண்டு சென்றார். மீண்டும் மகாதிரின் அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகிக்கிறார். இது தான் சுறுக்கம்.

ஒன்று சொல்ல வேண்டும்.  வேதமூர்த்தியிடம் தொடர் முயற்சி இருந்தது. இந்தியர்களின் பிரச்சனை அரசாங்கத்திற்கு எட்ட வேண்டும் என்று தொடர்ந்தாற் போல முயற்சிகள் செய்திருக்கிறார். அதை நாம் பாராட்ட வேண்டும்.

சரி! இந்தப் பதவியின் மூலம் வேதமூர்த்தி அப்படி என்ன சாதித்திருக்கிறார்?  அப்படி எதுவும் தெரியவில்லை.  ஏதோ போகிறார் வருகிறார் என்பது போலத் தான் தெரிகிறதே தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை.  ஆனால் மகாதிரின் அமச்சரவையே அப்படித்தானே நகர்ந்து கொண்டிருக்கிறது! அவரைக் குறை சொல்லுவதில் என்ன பயன்! மற்ற இந்திய அமைச்சர்களும் அப்படித்தானே இருக்கிறார்கள்!  அது நடைமுறைச் சிக்கலே தவிர அமைச்சர்களைக் குறை சொல்லுவதில் பயன் இல்லை. புதிய அரசாங்கம், பழைய அதிகாரிகள் ஒத்துழையாமை என்னும் போது இது சரிபண்ண சில காலம் ஆகும். அது வரை பொறுமை காக்க!

வேதமூர்த்தி இந்தியர்களுக்கு நிறைய செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கான முயற்சிகள் எடுக்கிறார். முடிந்தவரை செய்கிறார். அதற்குள்ளாகவே அவரைப் பற்றியான குறைகள், குற்றங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தால் அவரால் எப்படி தனது வேலைகளைச் செய்ய முடியும்? அதுவும் அவரோடு இருந்து, சேர்ந்து தோளோடு தோள் கொடுத்தவர்கள் இப்போது காலோடு கால் சேர்ந்து எட்டி உதைத்தால் நம்மால் என்ன செய்ய முடியும்? வெளியில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? அவரைப் பதவி விலகச் சொல்லுவது தான் அவர்கள் நோக்கமா? 

இது சரியான அணுகுமுறை அல்ல. அவர் எந்தக் கட்சியையும் பிரதிநிதிக்கவில்லை. அதனால் அவரைப் பந்தாடலாம் என்று நினைப்பது தவறு. பிரதமர் அவரைத் தேர்ந்தெடுத்து ஒரு பொறுப்பைக் கொடுத்திருக்கிறார். அவர் வேலையை அவர் செய்யட்டும். குறைந்தபட்சம் இந்த ஐந்து ஆண்டு காலத்தை அவர் நிறைவு செய்யட்டும். அது வரை பொறுமை காப்பது நமது கடமை. 

அதற்கிடையிலே நாம் புகுந்தால் அந்த நண்டு கதை தான் நமக்கு ஞாபகத்திற்கு வருகிறது! அது  தமிழன் நண்டு என்று சொல்லுகிறோம் ஆனால் அதன் பின்னால் வேறு நண்டுகள் தூண்டி விடுகிறதோ!

Saturday 9 February 2019

பதாகையில் தமிழ்க் கொலை!

சீனர்கள்,  அவர்கள் பயன்படுத்தும் பதாகைகளில் சீன மொழிக்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பது நாம் அறிந்தது தான். அவர்கள் மொழியை அவர்கள் பின் தள்ளமாட்டார்கள்.

நமக்கு அது போன்ற பிரச்சனைகளெல்லாம் இல்லை. யாரும் கண்டு கொள்ளப் போவதில்லை என்பது தான் முக்கியம். அதனால் தான் நாம் பல இடங்களில் நமது மொழியை இழக்கிறோம். அதைப் பற்றி ஓரிரு முறை பேசுவோம் பின்னர் சகஜ நிலைக்கு வந்து விடுவோம்! நம்மிடையே மலையாளிகள், தெலுங்கர்கள், சீக்கியர்கள் என்று பல பிரிவினர்கள் உண்டு என்றாலும் அவர்களுக்குத் தேவையானால் மட்டும் அவர்கள் தமிழைப் பயன்படுத்துவார்கள் - ஏதோ தேவை கருதி - இல்லாவிட்டால் பயன்படுத்த மாட்டார்கள்.

சீனர்கள்,  வாழ்த்துகள் - குறிப்பாக சீனப் புத்தாண்டு வாழ்த்துகள் - தங்களது பதாகைகளில் வெளியிடுவது என்பது எப்போதும் உண்டு. ஆனால் அவர்கள் தமிழ் அறிந்தவர்களிடம் கேட்டு பிழையற்ற தமிழை எழுத வேண்டும் என்பதை அறியாதவர்கள். அதனால் தான் அவர்களின் பதாகைகளில் பிழையுள்ள தமிழையே நாம் கண்டு கொண்டிருக்கிறோம்.

இப்போது ஒரு புதிய நடைமுறையை நாம் காண்கிறோம். மொழிபெயர்ப்பு என்றால் உடனே கூகலுகுப் போ என்கிற நிலை ஏற்பாட்டுவிட்டது! கூகலின் மொழிபெயர்ப்பு  எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியும். அதனை நாம் ஒரு மொழிபெயர்ப்பாக ஏற்றுக் கொண்டோம் என்பதால் தான் இப்போது பலர் அந்த மொழிபெயர்ப்பை தேடி படித்துக் கொண்டிருக்கிறார்கள்! இது பெரிய சோகம்!

நமக்குத் தெரிந்தது எல்லாம் ஒன்று தான். அந்த மொழி பெயர்ப்பு தரமாக இல்லை என்பதை நாம் கூகலுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அது எப்படி என்பது நமக்குப் புரியவில்லை.  தெரிந்தவர்கள் அந்த முயற்சியை எடுக்கலாம்.

நம்மைப் பொறுத்தவரை மலாக்கா முத்துகிருஷ்ணன் தான் இந்தத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவராக இருக்கிறார், அவரால் முடியும் என்று நினைக்கிறேன்.  மற்றபடி யாரையும் சொல்ல முடியவில்லை.

பதாகைகளில் தமிழ்க் கொலை என்றால் கூகலில் தமிழ்க்கொலை என்று அர்த்தம். விபரம் தெரிந்தவர்கள் முயற்சி எடுக்கட்டும். வரவேற்கிறோம்!

பாஸ் கட்சியும் இப்படித் தானா..!

நம்ப முடியவில்லை!  பாஸ் கட்சியும் இப்படித் தானா  என்று யோசிக்க வேண்டியுள்ளது.

"பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும்"  என்று அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்துகின்ற பழமொழி. எல்லாரும் அப்படியெல்லாம் வாய் பிளப்பதில்லை.  விதிவிலக்குகள் உண்டு.

விதிவிலக்கு என்று நாம் நினைத்த பாஸ் கட்சி இப்போது ஊழலில் சிக்கிக் கொண்டு அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறது. நாங்கள் அப்படி இல்லை என்று அவர்கள் மார்தட்டினாலும் அவர்களுக்கும்  உள்ளுற  நடுக்கம் இருக்கத்தான் செய்யும்!

பாஸ் கட்சி எந்தக் காலத்திலும் இந்த அளவுக்கு  பேரும்  புகழும்  கிடைக்கவில்லை!  முன்னாள்  தலைவர் நிக் அப்துல் அஸிஸ் தலைவராக இருந்த காலத்தில் இது போன்ற செய்திகள் எல்லாம் நம் காதில் விழ வாய்ப்பு இருந்ததில்லை. ஊழல் என்பது அவர் காலத்தில் முழுமையாக புறக்கணிக்கப்பட்ட ஒன்று.

பாஸ் கட்சியின் தலைவர்களால் ஹராம் என்று சொல்லப்பட்டது அன்று. ஆனால் இன்றோ அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது. இப்போது உள்ள தலைவர்களால் ஹே! ஹே1 என்று ஹராமுக்கு ஹாய்! சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்! 

பாஸ் கட்சி எப்படிப் பார்க்கப்பட்டது?  ஊழல் இல்லாத கட்சி. தனது கட்சியோடு இஸ்லாமையும் சேர்த்துக் கொண்டு நாங்கள் தூய்மையானவர்கள் என்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்ட கட்சி. ஓரளவு அவர்களிடம்  அந்த நேர்மை இருந்தது. நல்லவர்கள் என்கிற பெயரை எடுத்திருந்தார்கள்.  கிளந்தானைப் பொறுத்தவரை இந்தியர்களுக்கோ, இந்துக்களுக்கோ, கிறிஸ்துவர்களுக்கோ  அவர்கள் மூலம் எந்தத் தீங்கும்  நேர்ந்ததில்லை. எந்த மதத்தினரையும் அவர்கள் எதிரிகளாகப் பார்க்கவில்லை. 

ஆனால் இவைகள் எல்லாம் இப்போது மாறிவிட்டன.  எப்போது அவர்கள் அம்னோ கட்சியுடன் ஒட்டு உறவு கொண்டாட ஆரம்பித்தார்களோ அப்போதே அவர்கள் மீது விழுந்தது சனிப் பார்வை! 

முன்பு அம்னோ மீது மட்டும் தான் ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருந்தன.  ஆட்சியில் அவர்கள் அமர்ந்திருந்ததால் அனைத்தும் மறைக்கப்பட்டன.  இப்போது அவைகளெல்லாம் ஒன்றொன்றாக வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. இந்த  நிலையில் அம்னோ,  பாஸ்  கட்சியினரையும்  தனது ஊழல்   வலைக்குள்  இழுத்துக் கொண்டு விட்டது என்று சொல்லலாம்! ஆக, மலாய்க்காரர்களுக்காக நாங்கள்  போராடுகிறோம். இஸ்லாத்திற்காக நாங்கள்  போராடுகிறோம்  என்று  பேசுவதைத்  தவிர  இந்த இரு கட்சிகளுக்குமே  வேறு வழி இருப்பதாகத்  தெரியவில்லை! அதனால்  தான்  இப்போது  முன்பை விட கொஞ்சம் அதிகமான சத்தம் அவர்களிடமிருந்து  கேட்கிறது!  ஊழல் புரிபவனுக்கு அந்தச் சத்தம் தேவையாயிருக்கிறது!

என்ன செய்வது? பணம் பாதாளம் வரையும் பாயும் என்பார்கள்! இப்போது அதனை பாஸ் கட்சியினர மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றனர்.

நீங்களும் இப்படித்தானா? என்று கேட்பதைத் தவிர வேறு என்ன சொல்ல!

சரியா தவறா..?

வெளியுறவு துணையமைச்சர்  டத்தோ மர்சூக்கி  யாஹ்யா சிக்கலில் மாட்டியுள்ளார். 

அவருடைய கல்வித் தகுதி பற்றி இப்போது கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அவர் முறையான சான்றிதழை பெற்றிருக்கவில்லை என்பதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.  குறிப்பாக அம்னோ, பாஸ் தரப்பினர் இன்னும் அதிகமாகக் குற்றம் சாட்டுகின்றனர். இது அவர்களுக்கு அரசியல் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை!

மர்சூக்கி அசியலுக்கு வருமுன் வர்த்தகத் துறையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் வேலை செய்து பிழைக்க வேண்டும் என்னும் நிர்ப்பந்தத்தில் இருந்திருந்தால்  அவர் ஏதோ ஒரு மாரா கல்லூரியில் சேர்ந்து ஏதோ ஒரு பட்டத்தை பெற்று பட்டதாரியாக ஆகி இருக்கலாம். அப்படி ஒரு நிர்ப்பந்தம் இல்லாத நிலையில் அவர் தனது தேவைக்கு எது தேவையோ அதனைத் தொலைதூரக் கல்வியின் மூலம் அந்தப் பட்டத்தைப் பெற்றிருக்கிறார். அது அங்கீகரிக்கப்படாத கல்வி என்பதெல்லாம் தேவையில்லாதது.    அவருக்கு எது தேவையோ அது அவருக்குப் போதும்.  அவ்வளவு  தான்!

இன்று நாட்டில்  பலர் இது போன்ற கல்விச் சான்றிதழ்களை வைத்திருக்கின்றனர்.  தங்களின்  சுய திருப்திக்கா, தங்களது அறிவு வளர்சிக்காக பலவிதமான பட்டங்களைப்  பெற்றிருக்கின்றனர். குறிப்பாக தமிழாசிரியர்கள் பலர் தமிழில் புலவர் பட்டம், ,முனைவர் பட்டம் கூட பெற்றிருக்கின்றனர். ஏன், அவர்கள் அரசியலுக்கு  வந்தால்  என்ன  கெட்டுப்  போய்விடும்?  உண்மையைச் சொன்னால்  அவர்கள்  ஏதோ ஒரு துறையில் தங்களது  அறிவை  வளர்த்துக்  கொண்டிருக்கின்றனர். அது எந்த வகையிலும்  நாட்டுக்குக்  கெடுதலை   விளைவிக்கப்  போவதில்லை. 

முன்பு கூட துணைக் கல்வி அமைச்சர் கமலநாதனைப் பற்றி - அவருடைய கல்வி தகுதிப் பற்றி பற்பல கேள்விகள் எழுந்தன.ஆனாலும் பாரிசான் அரசாங்கத்தில் அது  மூடி  மறைக்கப்பட்டது.  இப்போது  அனைத்தும்  வெளிப்படையாக  இருப்பதால் இந்த விவகாரத்தைப்  பற்றி அதிகமாகப் பேசுகிறோம்.

நாட்டை வழி நடுத்துபவர்களுக்கு நல்ல  கல்வி  தகுதி  இருக்க  வேண்டும் என நான் விரும்புகிறேன். ஆனால் அதைவிட நாணயம, நேர்மை  மிக மிக முக்கியம். தொண்டுசெய்வது அதைவிட முக்கியம்.

முன்னாள்  பிரதமர்  நஜிப்  இங்கிலாந்தில்  படித்தவர். பொருளாதாரம் படித்தவர்.  அவர் படித்த கல்வி அவருக்கே உதவவில்லை! பின்னே நாட்டுக்கு எப்படி உதவும்? 

நாட்டுக்கு நல்லது நடந்தால் அது சரி தான்!

Thursday 7 February 2019

சிறப்புக் கழிவை வரவேற்கிறோம்..!

 சுகாதார துணை அமைச்சர் டாக்டர் வீ  பூன் சாய் அவர்களின் அறிவிப்பை மனப்பூர்வாக  வரவேற்கிறோம்.

குறிப்பாக அரசாங்க மருத்துவமனையில் புற்று நோயால் துன்புறும் நோயாளிகளுக்கு அரசாங்கம் சிறப்புக் கழிவுகளைக் கொடுப்பதாக அறிவித்திருக்கிறார். அதுவும் 95 (தொண்ணூற்று ஐந்து) விழுக்காடு அவர்களின் செலவுகளை அரசாங்க ஏற்றுக் கொள்ளுகிறது என்பது  சாதாரண விஷயம் அல்ல.

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ செய்த பரிந்துரையின் பேரிலேயே இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். அவரை வாழ்த்துகிறோம்.  இன்றைய நிலையில் பெரும்பாலான புற்று நோயால் வாடும் நோயாளிகள் அரசாங்க மருத்துவமனைகளை   நம்பித்தான் இருக்கின்றனர்.

புற்று நோய் நமது நாட்டில் இரண்டாவது பெரிய ஆட்கொல்லியாக இருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.  புற்று நோய் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் போது அதற்கான அறிகுறிகள் எதுவும் தெரிவதில்லை. பெரும்பாலும் மிகவும் முற்றிய நிலையிலேயே நோயாளிகளுக்குத் தெரிய வருகின்றது என்பது வருத்தத்திற்குறிய விஷயம் தான்.

இந்த நேரத்தில் வேறு ஒரு மிக அபாயகரமான நோயையும் குறிப்பிடுவது அவசியம் எனக் கருதுகிறேன். 

இருதய நோய் நமது நாட்டின் அனைத்து நோய்களையும் பின் தள்ளிவிட்டு முதலாவது இடத்தில் இருப்பதாக அண்மையில் வெளியான செய்தி ஒன்று கூறுகின்றது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் அவஸ்தைக்கு ஆளாவதை நாம் பார்க்கிறோம். சாதாரண நிலையில் இருந்தால் ஏதோ மாத்திரை, மருந்துகளைக் கொண்டு சமாளிக்கலாம். ஆனால் அறுவை சிகிச்சை என்கிற போது அதற்கான செலவுகளை நடுத்தர குடும்பங்களால் கூட சமாளிக்க இயலாது என்பதை நடைமுறையில் நாம் பார்க்கிறோம். அதனால் தான் உதவி செய்யுங்கள் என்பதாகப் பத்திரிக்கைகளில் செய்திகள் வருகின்றன.

இதனையும் சுகாதார அமைச்சு கவனத்தில் கொள்ள வேண்டும்  என்று  கேட்டுக் கொள்ளுகிறோம். இன்றைய  நிலையில் இருதய அறுவை சிகிச்சை என்பது பணக்காரர்களால் மட்டுமே செய்யக்  கூடிய  ஒன்றாகவே   தோன்றுகிறது. பொது மக்களுக்கும்  அனைத்து  நன்மைகளும்  போய்ச்  சேர  வேண்டும் என்பதே  நமது  வேண்டுகோள்.  அது அரசாங்கத்தின்  கடமையும்  கூட.  ஒரு சாரார் அனைத்து நன்மைகளையும் பெறுவதும் இன்னொரு  சாரார் பணம் இல்லாமல் சிரமப்படுவதும் - இது போன்ற  ஏற்றத் தாழ்வுகள் இருப்பது நல்லதல்ல.

புற்று நோயாளிகளுக்கு  -  தக்க கழிவுகளைக் கொடுத்து அவர்களின் சிரமத்தைக் குறைப்பது வரவேற்கக் கூடிய ஒன்று.  அதற்காக அரசாங்கத்தைப் பாராட்டுகிறோம்!

Tuesday 5 February 2019

அடாடா1 என்னா கரிசனை..!

அடாடா! நமது தேசிய பதிவு இலாகாவிற்கு  என்னா ஒரு  கரிசனை! பாட்டி ஒருவருக்கு குடியுரிமை கொடுத்திருக்கிறார்கள். பாட்டிக்கு இப்போது வயது 99...!

பாட்டி குடியுரிமைக்காக 11 முறை விண்ணப்பத்திருக்கிறாராம். இப்போது தான் அவருக்கு ஒரு விடிவு காலம் பிறந்திருக்கிறது. பாட்டி எந்த விபரமும் தெரியாதவர் அல்ல. படித்தவர். தற்காலிக ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளாராம். 

படித்தவருக்கே இந்த நிலைமை என்றால் படிப்பு வாசனை இல்லாதவர் நிலைமை என்னாவது!

ஆனால் நாம் சொல்ல வருவது அதுவல்ல.  இப்படி வயதான ஒருவருக்கு அதுவும் இந்தியர் ஒருவருக்கு தொண்ணுற்றொன்பது வயதில் குடியுரிமை கொடுப்பதை என்னவென்று சொல்லுவது?  இப்படி எல்லாம் வயாதானவர்களாகப் பார்த்து பார்த்து உள்துறை அமைச்சு குடியுரிமை கொடுப்பதை பார்க்கும் போது இவர்களிடம் குடியுரிமை கொடுக்க வேண்டும் என்கிற எண்ணமே இல்லை என்றே தோன்றுகிறது.

பாரிசான்  அரசாங்கத்தில் என்ன நடந்ததோஅதே தான் இப்போதும்  நடந்து  கொண்டிருக்கிறது.  அவர்கள்  எப்படி  நத்தை  வேகத்தில்  நகர்ந்து கொண்டிருந்தார்களோ இப்போதும் இவர்களும்  அதே நத்தை வேகத்தில் தான் நகர்ந்து  கொண்டு   இருக்கிறார்கள்!

அரசாங்கம் மாறினாலும் அதிகாரிகள்  மாறவில்லை என்பது  தெளிவாகத்  தெரிகிறது.  இன்றைய அரசாங்கம்  என்ன செய்ய வேண்டும்? அதிகாரிகளை மாற்ற வேண்டும். வேலையில் சுறுசுறுப்பு இல்லாதவர்களைக் களையெடுக்க  வேண்டும். அல்லது  வேண்டுமென்றே தாமதம் செய்பவர்களை  பதவி இறக்கம் செய்ய வேண்டும்.  

இப்படி தாமதங்கள் செய்பவர்களின்  நோக்கம் என்ன?  பக்கத்தான் அரசுக்கு  அவப்பெயரை  ஏற்படுத்த  வேண்டும்  என்பதே அவர்களின் நோக்கம். பக்கத்தான் அரசை  ஆதரித்தவர்கள் இந்தியர்கள். ஆதரவு கொடுத்தவர்களைப் பழி வாங்க வேண்டும் என்பதே அந்த அதிகாரிகளின் நோக்கம்.  அவர்கள் அரசாங்கத்தில் ஆற்றல் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். 

இப்போது நம்மைப் பொறுத்தவரை உள்துறை அமைச்சர்  டான்ஸ்ரீ முகைதீன் தான் நமக்கு வில்லனாகத் தோன்றுகிறார்!   அவருடைய அமைச்சு தான் குடியுரிமை பிரச்சனைகளுக்குத்  தீர்வு  காண வேண்டும். அவர் பக்கத்தான் அரசாங்கத்தில் முக்கிய பங்கு வகிப்பவர். நம்முடைய குறை கூறல்கள் அனைத்தும் அவரைத் தான் போய்ச் சேரும்.

இப்படி 99 வயது பாட்டிக்குக் குடிவுரிமை கொடுப்பது என்பது இந்தியர்களைக் கேலி செய்வதாகவே தோன்றுகிறது.  இதை நாம் வரவேற்கவில்லை. வேலை செய்ய இயலாமல் காத்துக் கிடப்பவர்கள் எண்ணிக்கை இன்னும் பல நூறாயிரம். 

இவர்களுக்கெல்லாம் ஒரு விடிவு காலம் பிறக்கும் என எதிர்ப்பார்க்கிறோம்.

சீனப் புத்தாண்டு வாழ்த்துகள்.!

மலேசியர்  அனைவருக்கும் சீனப் புத்தாண்டு வாழ்த்துகள்!

புத்தாண்டு, தீபாவளி, ஹரிராயா, சீனப் புத்தாண்டு, கிறிஸ்துமஸ்  - எதுவாக இருந்தாலும் சரி மலேசியர் அனைவருக்குமே ஏதோ ஒரு வகையில் குதூகலம், கொண்டாட்டம் தான்.

விடுமுறை காலங்களில் ஊரைச் சுற்றிப் பார்ப்பது என்பது நம்மிடையே ஒரு கலாச்சாரமாகி விட்டது. இப்போதெல்லாம்  பலர்  வெளி நாடுகளுக்கும்  கூட சென்று வருகிறோம்.

அனைவரும் மகிழ்ச்சியாக இருங்கள். அதுவே நமது கலாச்சாரமாக இருக்கட்டும். 

சீனர்களைப் பற்றி பேசும் போதே நமக்கு வியப்பு ஏற்படுகிறது.அதெப்படி உலகெங்கும் அவர்களால்  வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்க முடிகிறது? எந்த நாடுகளை எடுத்துக் கொண்டாலும் அவர்களின் வர்த்தக ஆதிக்கம் குறைந்த பாடில்லை. இன்னும் அதிகரித்துக் கொண்டே போகிறது. சீனாவுக்கு வெளியே இருக்கும் இந்த சீனர்களின் வர்த்தக ஆதிக்கம் சீனாவுக்கு இன்னும் கூடுதல் பலம்!

நம் நாட்டிலும் அதே நிலைமை தான்.  அவர்களை யார் என்ன செய்ய முடியும்?  பணத்தை வைத்தே யாரையும் வாங்கக் கூடிய சக்தி அவர்களிடம் இருக்கிறது!

இந்தியர்கள் எப்போது இந்த நாட்டில் அடி எடுத்து வைத்தார்களோ ஏறக்குறைய  அந்தக் காலக் கட்டத்தில் தான் அவர்களும் காலடி எடுத்து வைத்தார்கள். ஆனால் இரு இனங்களுக்கிடையே உள்ள பொருளாதார பலம் என்பது கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை!

நாம் முன்னேற உலகெங்கும் சுற்றி வர வேண்டாம். நமது அக்கம் பக்கம் உள்ள சீன நண்பர்களைக் கொஞ்சம்  கவனித்தாலே போதும். அவர்களுடைய வாழ்க்கை முறை, பிள்ளைகளின் கல்விக்கு அவர்கள் தரும் முக்கியத்துவம் - இவைகளெல்லாம் நமக்கு நல்ல பாடம்.

இந்த சீனப் புத்தாண்டில் நாம் சீனர்களைப் படிப்போம்.  அவர்களின் முன்னேற்றத்தைப் படிப்போம். அவர்களிடமிருந்து படிக்க  வேண்டியவை நிறையவே உண்டு. நமது முன்னேற்றத்திற்கு அவர்களின் வாழ்க்கை முறையைப் பயன்படுத்திக் கொள்வோம்.

மீண்டும் புத்தாண்டு வாழ்த்துகள்!

Sunday 3 February 2019

மீண்டும் கேமரன்மலைக்கு வருவோம்...!

ஆமாம்! நாங்கள் மீண்டும் கேமரன்மலைக்கு வருவோம்! அது எங்கள் தொகுதி, நாங்கள் ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்! என்கிறார் ம.இ.கா. வின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்.

"இப்போது அத்தொகுதி இரவலாகத்தான் அம்னோவுக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது. அதனை மீண்டும் நாங்கள் பெறுவோம். வெற்றி பெற்றவர் தகுதியான வேட்பாளர். அதனால் வெற்றி உறுதிசெய்யப்பட்டது" என்கிறார் அவர்.

ஆக அவர் ஒன்றை ஒப்புக் கொள்ளுகிறார். தகுதியான வேட்பாளரை நிறுத்தினால் தான் வெற்றி பெற முடியும் - இலஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதை!  அது தான் நம்முடைய நிலைமையும் கூட!

அடுத்த பொதுத் தேர்தலில் ம.இ.கா. வின் வேட்பாளர் தான் அங்குப் போட்டி  இடுவார் என்பது நல்ல செய்தி.  ஆனால் அடுத்த தேர்தல் வரை யார் இருப்பார், யார் இருக்கமாட்டார்  என்பதெல்லாம்  நமக்குத் தெரியாத செய்தி! அரசியலில் எதுவும் நடக்கலாம். ஒன்றும் அதிசயம் அல்ல!

 பூர்வக்குடியினர் எந்த ஓர் அரசியல் கட்சியிலும் சாராதவர்கள். இப்போது தான் முதன் முதலாக அரசியலுக்கு காலடி எடுத்து வைத்திருக்கிறர்கள்.  அவர்களுக்கு வேறு இடம் தேசிய முன்னணி ஒதுக்கப் போவதில்லை. காரணம் அவர்கள் மலாய்க்காரர்கள் அல்லர்.  எந்த ஒரு மலாய்க்காரர் தொகுதிலும் அவர்கள் வரவேற்கப்பட மாட்டார்கள். அதனால் கேமரன்மலை தவிர்த்து அவர்களுக்கு வேறு போக்கிடம் கிடையாது.  அதனால் அவர்கள் அந்தத் தொகுதியில் தான் போட்டியிட வேண்டும்.  இனி பூர்வக்குடியினர் அந்தத் தொகுதியை விட்டுக் கொடுப்பார்கள் என்று யாரும் கனவு காண முடியாது!  இருக்கின்ற ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துவிட்டு  பூர்வக்குடிகள் எங்கே போவார்கள்?  இப்படி ஒரு தொகுதி அவர்களுக்குக் கிடைக்கும் என்று அவர்கள்  நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்!   அவர்கள் தொடர்ந்தாற் போல வஞ்சிக்கப்பட்ட மக்கள்.    தேசிய நீரோட்டத்தில் அவர்களின் பங்கு இல்லை. வாராத வந்த மாமணி - விட்டுக் கொடுப்பார்களா பூர்வக்குடிகள்?       

எப்படி இருப்பினும் ம.இ.கா. தலைவரின் நம்பிக்கையை நாம் பாராட்டுகிறோம். ஏதாவது ஒரு வழி கிடைக்காமலா போய்விடும்?  அவர்களிடையே ஒரு ம.இ.கா. கிளை உருவாகலாம்!  அங்கிருந்து ஒரு வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படலாம்! அரசியலில் எதுவும் நடக்கும். 

மீண்டும் வருவோம் என்பது நம்பிக்கை. வர வேண்டும் என்பதே எங்களது  கோரிக்கை! வருக! வருக!    

Saturday 2 February 2019

வாக்குறுதிகள் போதும்...!

இப்போது எல்லாருமே பேச ஆரம்பித்து விட்டார்கள்! ஆமாம்! போதும்'டா சாமி! வாக்குறுதிகள் போதும்! போதும்! வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்! அது தான் இப்போதைய தேவை1

கடைசியாக,  நெகிரி மாநில பெர்சத்து தலைவர் டாக்டர் ரைஸ் யாத்திம் பக்காத்தான் தலைவர்களுக்கு இந்த அறிவுரையை வழங்கியிருக்கிறார்.

"வெறும் வாக்குறுதிகளை மட்டு அள்ளி வீசுவதால் எந்தப் பயனும் இல்லை. கடந்த கால அரசின் வெற்று வாக்குறுதிகளை நம்பி மக்கள் மோசம் போனார்கள். அதனால் வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள். நம்மை ஆதரிக்கவும் மாட்டார்கள்!"  என்பதாக அவர் கூறியிருக்கிறார்.

அதில் குறிப்பாக ஒன்றை அவர் நினைவு படுத்தியிருக்கிறார்.  தேர்தலின் போது (மே மாதம் 2018)  தோட்டப்புற மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றுங்கள்"  என்று பக்கத்தான் அரசாங்கத்தை அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். ஜ.செ.க. (DAP),  பி.கே.ஆர். கட்சிகளில் உள்ள நமது தலைகள் மறந்து போன ஒன்றை பெர்சத்து தலைவர் ஞாபகப் படுத்தியிருக்கிறார்! 

குறிப்பாக ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். நூறு நாள்களில் முடிப்போம் என்று வாக்களிக்கப்பட்ட நீலநிற அடையாள அட்டை,  குடியுரிமை தீர்த்து வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியர்களைப் பொறுத்தவரை இது மிகவும் தலையாயப் பிரச்சனை.  முவாயிரம் பேருக்குக் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. கொடுக்கப்பட்டிருக்கலாம்.  ஆனால் மற்றவர்களுடைய குடியுரிமை எப்போது தீர்க்கப்படும் என்று தெரியவில்லை. அந்த முவாயிரம் பேர் என்பது அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள்.

இப்போது பக்கத்தான் அரசாங்கத்தின்  கொள்கை என்ன? இதுவரை குடியுரிமை கொடுக்கப்படாதவர்கள் குடியுரிமை பெற அறுபது வயது ஆக வேண்டும் என்று பொறுமையோடு காத்திருக்கிறார்களா? அப்படித்தான் நமக்குத் தோன்றுகிறது!  பொறுமையாக  அறுபது வயது வரை காத்திருந்து அதற்குப் பிறகு குடியுரிமை கொடுப்பதால் யாருக்கு  என்ன இலாபம்! அவர்கள் வேலை செய்ய வேண்டமா! அவர்களின் குடும்பங்களைக் கவனிக்க வேண்டாமா!  

அரசாங்கம் என்ன தான் நினைக்கிறது? பாரிசான் அரசாங்கம் தான் இழுத்தடித்தது தான் என்றால் பக்கத்தான் அரசாங்கமும் அதே தான் செய்து கொண்டிருக்கிறது! நூறு நாள் கனவு எல்லாம் தகர்ந்து விட்டது!

அதைத் தான் ரைஸ் யாத்திம் நினைவுறுத்தியிருக்கிறார். வாக்குறுதிகள் போதும்! தோட்டப்புற மக்கள் என்று அவர் குறிப்பிட்டாலும் அது இந்தியர்களைத் தான் குறிக்கும்! 

இனி புதிதாக எந்த  வாக்குறுதிகளும் வேண்டாம்.  தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளே போதும்! அவைகளை நிறைவேற்றுங்கள், அது போதும்!

கொடுத்த வாக்கை காப்பாற்றுங்கள்!

Friday 1 February 2019

உதயா கொஞ்சம் யோசியுங்கள்..!

THR ராகா, உதயா செய்தது சரியில்லை தான். அதற்காக அவர் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். 

ஆனால் நாம் சொல்லுவதை உதயா காது கொடுத்துக் கேட்க வேண்டும். யாரோ ஓர் உருப்படாதவன் - தமிழன் அல்லாதவன் - ஒரு கருத்தைச் சொல்லுகிறான் அதுவும் தமிழ்ப் பத்திரிக்கைகளுக்கு எதிரான ஒரு கருத்தைச் சொல்லுகிறான். அதனை மக்கள் மத்தியில் சொல்லுவதும், கிண்டல் அடிப்பதும் - எப்படிப் பார்த்தாலும் - அது தமிழர்களை அவமதிப்பது தான். சொன்னவன் யார் என்று தெரியவில்லை ஆனால் உதயா மாட்டிக் கொண்டார்.

உதயா ஊடகத் துறையில் உள்ளவர்.  அதுவும் தமிழ் சார்ந்த ஊடகத் துறையில் உள்ளவர்.  அவர் பத்திரிக்கை உலகில் இல்லை என்பதைத் தவிர அவர் சார்ந்த வானொலித் துறையும் தமிழர் சார்ந்தது தான். 

தமிழ்ப் பத்திரிக்கைகளை  வேறு மொழி பத்திரிக்கைகளோடு ஒப்பிடுவது சரியில்லை முதலில் உதயா அதனைப் புரிந்துகொள்ள வேண்டும். மிக முக்கியமாக நமது பிரச்சனைகளை - தமிழர் சார்ந்த பிரச்சனைகளை - தமிழ்ப் பத்திரிக்கைகள் தான் வெளியிடும். கேள்வி எழுப்பும்.  வேறு மொழி பத்திரிக்கைகளுக்கு அது அக்கறை இல்லாத செய்தி; தேவை இல்லாத செய்தி.

நான் வாங்கும் ஒரு தமிழ் நாளிதழ் பற்றி பெரிதாகச் சொல்ல ஒன்றுமில்லை.   ஆனால் அங்கு தான் தமிழர் சார்ந்த விஷயங்கள் கிடைக்கின்றன.  தமிழர் - இந்தியர் சார்ந்த பிரச்சனைகளில் எனக்கு எந்தவித  அக்கறையும் இல்லாதவனாக இருந்தால் நானும் ஒர் ஆங்கில பத்திரிக்கையின் வாசகனாகி விடுவேன். ஆனால் தமிழர்களுக்கு, இந்தியர்களுக்கு என்ன அநீதிகள் இழைக்கப்படுகின்றன என்பதைத் தெரியாதவனாக இருப்பேன். அதனால் தான் தமிழ்ப் பத்திரிக்கையே எனது தேர்வு.

இன்றைய நிலையில் தமிழர்களுக்கு எதிராக, தமிழ்ப் பத்திரிக்கைகளுக்கு எதிராக  சொல்லப்படுகிற கருத்துக்கள் பெரும்பாலும் தமிழர்களிடமிருந்து வருவதில்லை. நம்முடன் இருக்கும், நம்முடனேயே பழகும்,  நம் மொழியே பேசும் தமிழர் அல்லாதவரிடமிருந்தே  வருகின்றன என்பதை உதயா புரிந்து கொள்ள வேண்டும்.

கடைசியாக, உதயா நீங்கள் ஊடகத் துறையைச் சேர்ந்தவர்.  அதுவும் தமிழ் ஊடகத் துறையைச் சேர்ந்தவர். இன்னொரு தமிழ் ஊடகத் துறையைக் குறை கூறுவது  சரியானது அல்ல. நீங்கள் பணி புரியும் ஊடகத்தைப் பற்றி எங்களுக்கும் சில அல்ல பல குறைபாடுகள் உண்டு. இளைஞர்களைச் சினிமா பைத்தியமாக ஆக்குகிறீர்கள் என்று நாங்கள் குற்றம் சாட்டுகிறோம். அது மட்டும் அல்ல. ஆங்கிலம், மலாய், சீனம் வானொலித் துறையை விட நீங்கள் உயர்ந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்று சொல்ல முடியாது. மின்னல் வானொலியோடு தான் உங்களை ஒப்பிட முடியும். ஆனால் மின்னல் உங்களை விட தரமான ஒலிபரப்பு என்பதை மறவாதீர்கள்.

உதயா, தமிழ் உங்களுக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ நீங்கள் தமிழோடு தான் இணைந்திருக்கிறீர்கள்!

தமிழுக்கு இடம் வேண்டும்...!

பெர்னாமா இணையதள செய்தி பிரிவில் தமிழுக்கும் இடம் வேண்டும் என்பதாக ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது.  ஆங்கிலம், மலாய், சீனம், அரபு அத்தோடு ஸ்பெயின் மொழியிலும் அந்தச் செய்திகள் வெளியிடப்படுகின்றன.

இதில் என்ன அதிசயம் என்றால் உள்நாட்டில் தமிழ் என்கிற ஒரு மொழி இருக்கிறது என்பதை பெர்னாமா அறிந்திராதது நமக்கு வியப்பை அளிக்கிறது.  அதாவது பெர்னாமா அதிகாரிகள் அறிந்திருக்கவில்லை!  ஒரு காரணத்தை நாம் அறிந்திருக்கிறோம்.  இந்த அதிகாரிகள் வெளி நாடுகளில் படித்தவர்களாக இருக்கலாம். அதனால் உள்நாட்டில் எத்தனை மொழிகள் இருக்கின்றன என்பதை அவர்கள் அறியவில்லை! வெளிநாடுகள் என்று சொல்லுவதற்குக் காரணம் ஸ்பெயின் மொழியை அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்பதனால் மட்டுமே!

ஒரு செய்தியை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். முன்பு பாரிசான் அரசாங்கம் ஆட்சி செய்து கொண்டிருந்தது. அப்போது வாயில்லா ஜீவன்கள்   நம்மைப் பிரதிநிதித்துக் கொண்டிருக்கின்றன என்பதாக நாம் சொல்லிக் கொண்டிருந்தோம்!.  அதில்  பல  ஜீவன்கள்  படிக்காத அரைகுறைகள். ஆனால் இப்போது  நிலைமை  அப்படி இல்லை. எல்லாம் படித்த மேதைகள்.  இப்போது என்ன கேடு வந்தது?

ஒன்று புரியவில்லை. அன்று பாரிசான் அரசாங்கம். இந்தியர்களைப் பொறுத்தவரை எந்த ஒரு நன்மையையும்  கொண்டு வரவில்லை. அதில் மொழி புறக்கணிப்பும் ஒன்று.  அதனால் ஏற்பட்ட விளைவு  தான் அரசியல் மாற்றம். ஆனாலும் இப்போதும்  அதே பிரச்சனை. 

முன்னாளில் என்ன நடந்ததோ இபோதும்  அதே நடக்கிறது! அதே வேண்டுகோள்.  பக்கத்தான் அரசாங்கத்திலும் அதே கூக்குரல். சும்மா இருக்கும் இயக்கங்களும் "தமிழுக்கு இடம் கொடுங்கள்" என்று அறிக்கை விட ஆராம்பித்து விட்டார்கள். முன்பும் இதே தான் அவர்கள் பணியாக இருந்தது. இப்போதும் அதே தான் அவர்கள் பணியாக இருக்கிறது!

பெர்னாமா செய்தித்தளம் தொடர்புத் துறை அமைச்சின் கீழ் வருகின்றது. அதன் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ. இப்போது பிரதமர் துறை  அமைச்சர் வேதமூர்த்தியிடம் இந்தப் பிரச்சனை கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அதனாலென்ன எங்கு வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்குக் கொண்டு செல்வது தவறில்லை. 

வேதமூர்த்தி அவர்கள் கோபிந்த் சிங்கிடம் நேரடி பேச்சு வார்த்தை நடத்தி இந்தப் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும். இந்த ஒரு பிரச்சனை அல்ல. இனி அவருடைய அமைச்சிலிருந்து வெளியாகின்ற அது இணயத்தளமோ அல்லது வேறு எதுவோ அங்குத் தமிழ் வேண்டும் என்பதாக ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும்.

ஒரு நிரந்தரத் தீர்வு தான் முக்கியமே தவிர எப்போதும் நாங்கள் "இது வேண்டும்! அது வேண்டும்!" என்று கூக்குரலிட்டுக் கொண்டிருக்க முடியாது!  

இன்றைய அரசாங்கமும் முந்தைய அரசாங்கத்தை நினைவுபடுத்திக் கொண்டே இருப்பது பக்கத்தான் அரசாங்கத்திற்கு நல்லதல்ல! 

தீர்வு உங்கள் கையில்!

கேள்வி - பதில் (91)

கேள்வி 

ரஜினியின் "பேட்ட" பார்த்தீர்களா? 

பதில்

ரஜினியின் அரசியல் தான் எனக்குப் பிடிக்காது! மற்றபடி அவருடைய படங்கள் எனக்குப் பிடிக்கும்.

பேட்ட படம் ரஜினியின் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்து. ரஜினியின் ரசிகர்கள் எதனை விரும்புவார்கள் என்று ஆய்ந்து, அறிந்து படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர்.

ஆனால் இயக்குனர் என்ன சொல்லு வருகிறார் அவரது நோக்கம் என்ன என்று பார்த்தால் அப்படி ஒன்றுமில்லை. "அப்படி நான் எதையும் சொல்லவும் வரவில்லை!" என்கிறார் இயக்குனர்.

ஒரு வகையில் பார்த்தால் படம் பா.ஜ.க. வின் ஆதரவு படமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.  ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்தால் என்ன நடக்கும் என்று ஊகித்து அறியலாம். அவர் பா.ஜ.க. ஆதராவாளர்.  படத்தில் வன்முறை அதிகம். சென்சார் போர்டில் உள்ளவர்கள் பா.ஜ.க. சொல்லுவதைத் தான் கேட்க வேண்டும். அதனால் வன்முறைக் காட்சிகளை அவர்களால் வெட்ட முடியவில்லை. இதுவே வேறு நடிகர் நடித்த படமாக இருந்தால் வன்முறைக் காட்சிகளை வெட்டித் தள்ளியிருப்பார்கள்!

இந்த வன்முறைக் காட்சிகளோடு இந்தியாவில் நடக்கும் - மோடியின் ஆட்சியில் நடக்கும் - கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மதக் கலவரங்களை  ஒப்பிட்டுப் பாருங்கள். அத்தோடு ஒரு பெண்மனி காந்தி சிலையை சுடுவதும் இனிப்பு வழங்குவதும் பாருங்கள்.  இதனைச் செய்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான் நாம் கவனிக்க வேண்டியது.

பேட்ட படத்தில் வரும் கொலை, கொள்ளைகளுக்கு காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்ல, எடுக்க முடியாது என்பதாகத்தான் காட்டுகிறார்கள்!  ரஜினி ஆட்சிக்கு வந்தால் பா.ஜ.க. என்ன செய்கிறதோ அதைத்தான் நானும் செய்வேன் என்கிற அவருடைய அரசியல் முன்னோட்டத்தை இந்தப் படம் காண்பிப்பதாகவே தோன்றுகிறது!

ரஜினியின் கபாலி படம் ஒரு நோக்கம் இருந்தது.  பா.ரஞ்சித் என்ன சொல்ல வேண்டுமென்று நினைத்தாரோ அதனை அவர் சொல்லியிருக்கிறார். பேட்ட இயக்குனர் ரஜினியின் அரசியல் இப்படித்தான் இருக்கும் என்று சொல்ல வருகிறாரோ! அப்படித்தான் அவரது அரசியல் இருக்கும் என்றால் அவ்ருடைய அரசியலே வேண்டாம்!

படத்தின் கதையைத் தான் நான் விமர்சித்தேன். படத்தில் சுறுசுறுப்புக்கு பஞ்சமில்லை. ரஜினியின் இளமை, துள்ளல் அனைத்தும் உண்டு. அனிருத்தின் பின்னணி இசை பிரமாதப்படுத்துகிறது. பாடல்கள் சுமார்.

ரஜினி ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்தைப் படைத்திருக்கிறார் இயக்குனர். படத்தைப்; பார்க்கலாம். வன்முறையை தியேட்டரிலேயே விட்டுவிட்டுச் செல்லுங்கள்!  அதுவே எனது பணிவான வேண்டுகோள்!