Pages

Monday, 2 October 2017

ஒரு கறுப்பு சீனரின் சோகக்கதை...!


நம்மைச் சுற்றி என்னன்னவோ நடந்து கொண்டிருக்கிறது. சில "என்னன்னவோக்கள்" கேலியும் கிண்டலுமாகக் கூட நமக்குத் தோன்றுகிறன்றன.  சம்பந்தப்பட்டவர்களுக்கு அது எந்த அளவு பாதிப்பை  ஏற்படுத்துகிறது என்பதை நினைக்கும் போது நமக்கும் வருத்தமே.


                                                                                                                                                                                                                                                                                                                                        மேலே  படத்தில்  உள்ளவரின் பெயர் நமக்குப் பரிச்சையமான பெயர் அல்ல. நிறத்திற்கும் அவருக்கும் சம்பந்தமில்லாத பெயர்.டாங் வூன் செங் என்பது அவர் பெயர். அது சீனப் பெயர். இந்தியராகத்தான் அவர் பிறந்தார். சீனப் பெற்றோர்களால் அவர் தத்து எடுக்கப்பட்டார். மற்ற ஆறு பிள்ளைகளுடன் இவரும் அவர்களோடு சேர்த்து வளர்க்கப்பட்டார். அவருக்குத் தமிழ் பேசத் தெரியாது.  சீன மொழி தான் தெரியும்.  இப்போது அவருக்கு வயது 34.

இங்கு என்ன தவறு நேர்ந்தது? அந்தச் சீனப் பெற்றோர் அவருக்குப் பிறப்பு சான்றிதழ் எடுக்கும் போது அவர்கள் அவரைத் தங்களது வளர்ப்புப் பிள்ளை என்று எடுக்காமல் தங்களது சொந்தப்பிள்ளை என்று சான்றிதழை எடுத்து விட்டார்கள்.  அதனால் ஏற்பட்ட குளறுபடி தான் இப்போது அவரை ஒரு நாடற்றவர் என்னும் நிலைக்குத் தள்ளிவிட்டது.

இவர் ஏற்கனவே 12 வயதில் தனது அடையாளக்கார்டை எடுத்திருக்கிறார். அப்போது அவர் வெள்ளையாக இருந்தாரோ, தெரியவில்லை. எந்தவிதப் பிரச்சனையும் இல்லாமல் அடையாளக்கார்டு கிடைத்து விட்டது!   பின்னர் அவர் திருமணம் செய்து கொள்ளும் போது தான் இவர் கறுப்பர் என்று அடையாளங் கண்டு விட்டனர்.  உடனடியாக அவரது அடயாளைகார்டு  கபளீகரம் செய்யப்பட்டு நாடற்றவர் என்று பிரகடனப் படுத்தி விட்டனர்!

இதுவும் நாம் வழக்கம் போல் என்ன சொல்லுவோமோ அதைத்தான் இங்கு நாம் சொல்ல வேண்டியிருக்கிறது. நேற்று வந்த வங்காளதேசி பிரஜையாக தலைநிமிர்ந்து நடக்கிறான்! ஆனால்  இங்குப் பிறந்தவன்....?

நாடற்றவர் நிலை என்ன? அவருடைய அத்தனை உரிமைகளும் பறிபோகின்றன. எங்கும் வேலை செய்ய முடியாது. எந்த உரிமையும் இல்லை.

நாம் சொல்ல வருவது இது தான்: பிறப்பு சான்றிதழில் ஒரு தவறு நடந்திருக்கிறது. அதற்காக வீறு கொண்டு எழ வேண்டியதில்லை. அந்தக் குழந்தை இங்கு தான் பிறந்தது என்பதற்கான அடையாளம் தான் பிறப்புப் பத்திரம்.  வேறு நாட்டில் பிறக்கவில்லை. அதற்கும் வாய்ப்பில்லை. ஒரே தவறு:   பெற்றோர் பெயர் தவறுதலாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவ்வளவு தான். இதனைக் கண்டு பிடித்து தவற்றை நிவர்த்திச் செய்ய வேண்டும். அது தான் தேசியப் பதிவிலாகாவின் வேலை. அதற்குக் கொஞ்சம் அவகாசம் தேவை. இதையெல்லாம் விட்டுவிட்டு உடனடியாக நாடற்றவர்கள் பட்டியலில் சேர்ப்பது ஒரு மடத்தனமான செயல் என்பதைத்தான் இது காட்டுகிறது. அப்படி இல்லாவிட்டாலும் அவருடைய உரிமைகளைப் பறிக்காமல் செயல்பட வேண்டும்.

கடைசியாக, ஒரு பொறுப்புள்ள  அரசாங்கத்தின் வேலையாக நாம் இதனைக் கருதவில்லை. பொறுப்பு என்றால் என்ன வேன்று தெரியாத பொறுப்பற்றவர்களை வேலைக்கு வைத்திருந்தால் இது போன்ற செயல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

வருந்துகிறோம்!



                                                                                                                                                                                                                                         

No comments:

Post a Comment