Thursday 30 July 2020

இதோ! கண்முன்னே நடக்கும் ஒரு துரோகம்!

ஒரு துரோகம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது! ஆனால் தமிழ்ப்பள்ளிகளின் காவலன் என்று கூறும் ம.இ.கா. இது வரை வாய் திறக்கவில்லை!

மலாக்கா தமிழப்பள்ளிகளின் அமைப்பாளராக ஒரு சீனப் பெண்மணியை நியமனம் செய்திருப்பது தமிழர்கள் அனைவருக்குமே வலிக்கிறது ஆனால் ம.இ.கா. வினருக்கு மட்டும் இந்த நிமிடம் வரை வலிக்கவில்லை!

இப்போது அவர்கள் அடுத்த தேர்தலில் யார் யார் போட்டியிடுவது, எந்த எந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன என்பதில் தங்களது நேரத்தை மிக மிக ஆக்ககரமாக செலவு செய்து கொண்டிருக்கின்றனர்! கல்வி என்பதை ஒதுக்கி விடலாம் என்று நினைக்கின்றனர்!

பொதுவாகவே ம.இ.கா.வினர்,  இந்தியர்கள் கல்வி கற்ற சமுதாயமாக மாற வேண்டும் என்பதில் அக்கறை இல்லாதவர்கள் என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.

இந்தியர்களின் நலனுக்காக ம.இ.கா.வின் கல்லூரிகள் என்கிற நிலை போய் இப்போது தலைவர்களின் நலனுக்காக கல்லூரிகள் என்கிற நிலைமைக்கு ம.இ.கா. வந்துவிட்டது!

இப்போது தான் நாம் "பக்கத்தான் அரசாங்கம் இல்லாதது நமக்கு எவ்வளவு பெரிய கேவலத்தை உண்டாக்கிவிட்டது!" என்று  நினைக்கத் தோன்றுகிறது!

"நாங்கள் தான் செய்தோம்! நாங்கள் தான் செய்தோம்!" என்று தம்பட்டம் அடித்தவர்கள் இப்போது எங்கே போய் ஒளிந்து கொண்டார்கன்?

ம.இ.கா.வினரின் கைவந்த கலை எதுவென்றால் "கோயிலை உடைத்த பிறகு,  நாங்கள் பேச்சு வார்த்தை நடத்துகிறோம்!" என்று சொல்லுவது தான். மற்றபடி எதுவும் நடப்பதற்கு முன்னே எதையும் செய்வதில்லை!

நம் கண்முன்னே ஒரு துரோகம் நடந்து கொண்டிருக்கிறது. ம.இ.கா. வினர் இதுவரை எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை! அது ஒன்றே போதும் எந்த அளவுக்கு அவர்கள் இந்தியர்கள் மீது பற்றும் பாசமும் வைத்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள!

நண்பர்களே! இது தான் ம.இ.கா.! இது தான் சமுதாயத்தின் மீது அவர்கள் காட்டும் அக்கறை! மொழி மீது அவர்களுக்கு இருக்கும் பிடிப்பு!

இவர்களுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டுமா?

அரசியல்வாதிகளே! உஷார்!

அரசியல்வாதிகளே! நீங்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி,  ஊழல் செய்வதற்குத் தான் அரசியலுக்கு வருகிறீர்கள் என்றால், இப்போது நடந்து முடிந்த நீதிமன்ற வழக்கின்படி முன்னாள் பிரதமர் நஜிப்புக்கு என்ன ஆயிற்று என்பதைப் பற்றி கொஞ்சம் யோசியுங்கள்!

குற்றம் செய்தவன் தண்டனையை அனுபவித்துத் தான் ஆக வேண்டும், வேறு வழியில்லை! யாரும் தப்பிக்க முடியாது! எந்தக் கொம்பனாலும் ஓடி ஒளிந்து கொள்ள முடியாது!

ஆமாம், இது வரை தப்பித்தவன்?  யாரும் தப்பிக்க முடியாது என்பது தான் இறைவனின் நியதி!

நாம் சொல்ல வருவதெல்லாம் ஊழல் செய்து குடும்பத்திற்குச் சொத்து சேர்த்து வைக்காதீர்கள். அது எந்த வகையிலும் உங்கள் குடும்பத்திற்கு நல்லதைக் கொண்டு வராது!

சாபங்கள் ஏழு தலைமுறை தொடரும் என்பார்கள்.  மக்களின் பணம், இரத்தம் சிந்தி சம்பாதித்தப் பணம்,  நெஞ்சொடிய உழைத்துச் சம்பாதித்த பணம் இப்படித்தான் பொது மக்களின் பணம் ஊழலாக அரசியல்வாதிகளுக்குப் போய்ச் சேருகிறது.

இப்படி ஊழல் மூலம் சம்பாதிக்கும் பணம் நல்லதைச் செய்யாது என்பது மட்டும் அல்ல அந்தக் குடும்பத்திற்குச் சாபத்தைக் கொண்டு வரத் தயங்காது என்பதை மட்டும் நம்பலாம்!

ஒரு குடும்பத்தில் ஏற்படுகின்ற வன்முறைகள், கலகங்கள், விபத்துகள், அமைதியின்மை எதுவாக இருந்தாலும் சரி அனைத்துக்கும் ஒரே காரணம் ஊழல்! ஊழல்! தான்!

ஏதோ ஒன்று வரத்தான் செய்யும்! அது நமக்குத் தெரியாவிட்டாலும் அது வந்து தான் ஆகும்!

எனக்குத் தெரிந்த ஒருவன் தற்கொலை செய்து கொண்டான்! ஒருவன் ஒரு கும்பலால் கொல்லப்பட்டான்! ஒருவன் ஒரு நோயாளியாக இளம் வயதிலேயே இறந்து போனான்! ஒருவன் தனது ஒரே ஒரு மகனின் வைத்திய செலவுக்காக எல்லாச் சொத்துக்களையும் இழந்தும் மகனைக் காப்பாற்ற முடியவில்லை! ஒருவன் வெறித்தனமாக நடமாடிக் கொண்டிருக்கிறான்!

 இப்போது அரசியல்வாதிகளாக வருபவர்கள் அனைவரும் படித்தவர்கள். உங்கள் பெற்றோர்கள் உங்களுக்கு நல்ல கல்வியைக் கொடுத்திருக்கிறார்கள். அதனைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறுங்கள். 

ஊழல் செய்து தான் பிழைப்பை நடத்த வேண்டும் என்றால் அப்படி ஒரு பிழைப்பு வேண்டாம்!

நஜிப் குற்றவாளி!

முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் ஒரு குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது!

அவர் மேல் உள்ள குற்றச்சாட்டு: பணம் கையாடல், பதவியைத் தவறாகப் பயன்படுத்தியது என்று சொல்லலாம் சுருக்கமாக! எல்லாம் பொது மக்களுக்குத் தெரிந்த கதையாகி விட்டது! புதிதாக சொல்ல ஒன்றுமில்லை!

ஆனால் ஒரு முன்னாள் பிரதமருக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.  உலகில் வேறு எந்த நாட்டிலும் இப்படி ஒரு தண்டனை எந்த ஒரு முன்னாள் பிரதமருக்காவது கொடுக்கப்பட்டிருக்குமா என்பது தெரியவில்லை!

1) மொத்தம் 72 ஆண்டுகள் சிறைத் தண்டனை. பின்னர் கூட்டிக் கழித்து 12        ஆண்டுகளுக்குக் குறைக்கப்பட்டது. 12 ஆண்டுகள் ஏக காலத்தில்                    அனுபவிக்க வேண்டும்.
2) வெள்ளி 21 கோடி அபராதம்.
3) பிரம்படி - வயது 67 என்பதால் பிரம்படியிலிருந்து விலக்கு.
4) ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதியும், பதினைந்தாம் தேதியும்                       காவல் நிலையத்திற்குச் சென்று கையொப்பமிட வேண்டும்.

இதைத் தவிர நீதிமன்றத்திற்கு வெளியே வேறு சில குற்றச்சாட்டுகளும் உண்டு. அவர் பதவியில் இருந்த காலத்தில், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி,  அவைகள் அனைத்தும் மறைக்கப்பட்டுவிட்டன அல்லது ஆதாரங்கள் அழிக்கப்பட்டு விட்டன!

அதில் குறிப்பாக மங்கோலிய அழகி அல்துன்யா கொலை வழக்கு. அதில் அவர் மனைவி ரோஸ்மாவும் சம்பந்தப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது.

குறிப்பாக ஒன்றைக் கவனிக்க வேண்டும். அவர் தொடர்ந்து பதவியில் இருந்திருந்தால் மேலே குறிப்பிட்ட, அவரைப் பற்றிய நீதிமன்ற வழக்கு,  அனைத்தும் இல்லாமலே போயிருக்கும்! அதற்குள் ஏதாவது வழிகளைக் கண்டு பிடித்திருப்பார்!

ஆனால் ஆட்சி மாற்றம் என்று ஒன்று வந்த காரணத்தால் அவர் தப்பிக்க வழியில்லாமல் போயிற்று!

பக்காத்தான் ஆட்சி என்பது 18 மாதங்களே இருந்திருந்தாலும் அவர்களது ஆட்சியின் முக்கியமான செயல்பாடு என்பது இந்த நீதிமன்ற வழக்கு தான்!

அவர்களால் அதனையாவது செய்ய முடிந்ததே அதற்காக அவர்களைப் பாராட்ட வேண்டும். பாரிசான் ஆட்சியில் எத்தனையோ ஊழல்கள், கையாடல்கள் என்று பல உண்டு.

இப்போதைய அரசாங்கம் இனி அவர்களுக்குச் சாதகமாகாத்தான் செயல்படும் என்று நம்பலாம்!

ஒரு பிரதமரின் நடவடிக்கைகள் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு நஜிப் ஒரு பெரிய உதாரணம். அவர் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிப்பாரா என்பது நமக்குத் தெரியாது. காரணம் சட்டத்தில் ஓட்டைகள் நிறைய உண்டு. அத்தோடு அரசாங்கத்தின் ஆதரவும் உண்டு. எதுவும் நடக்கலாம்.

ஆனால் இப்படி ஓர் அவமானத்தை சந்திக்க நேர்ந்ததே  அதுவே பெரிய தண்டனை! உலகளவில் அவரைப் பற்றி பேசப் படுகிறதே - அதுவும் அதிகாரத் து‌ஷ்பிரயோகத்திற்காக - அது போதும்!

நீதிமன்றம்,  செல்வாக்கு மிக்க ஒரு முன்னாள் பிரதமரை இப்படித் தண்டித்ததே, இதுவே ஒரு மானக்கேடு!

தப்பு செய்தவன் தண்டனை அனுபவித்துத் தான் ஆக வேண்டும்! இது பிரதமர்களுக்கு பொருந்தும்!

Wednesday 29 July 2020

இது ஓரு பொறுப்பற்றத்தனம்!

முன்னாள் பிரதமர் நஜிப்பின் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த போது அவருடைய ஆதரவாளர்கள் எனப்படுவோர் ஆயிரக் கணக்கில் நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்தனர்!

ஒரு வேளை அவர்கள் அவருடைய அதி தீவிர ஆதரவாளர்களாக இருக்கலாம்! அல்லது கூட்டத்தைக் காட்டி நீதிமன்றத்தைப் பயமுறுத்தும் நடவடிக்கையாகவும் இருக்கலாம்!

இதற்கு முன்னரும் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன! அதிசயம் ஒன்றுமில்லை! 

ஆனால் இம்முறை அவர்கள் சார்பான அரசாங்கம் அதனால் வாயைத் திறக்க முடியவில்லை! அதனால் நீதிபதியை டாக்டர் மகாதிரின் உறவு முறை என்று சொன்னதோடு சரி!

ஆனால் அது பற்றி நாம் பேசப் போவதில்லை.

நாட்டில் இப்போது தலையாயப் பிரச்சனை என்ன என்பது அனைவருக்கும் தெரியும். கொரோனா தொற்று நோயினால் ஏகப்பட்ட பாதிப்புக்கள். கடந்த நான்கு மாதங்களாக நான்காயிரம் தொழில்கள் மூடப்பட்டுவிட்டதாக அரசாங்கம் கூறுகிறது.  இது சாதாரணப் பிரச்சனையல்ல. பலர் வேலை இழந்திருக்கின்றனர். குடும்பங்கள் பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றன.

அதனால் அரசாங்கமும் முடிந்த அளவு பிரச்சனைகளைக் குறைக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

அதனால் தான் நாம் இன்னும் சமூக இடைவெளிகளைக் கடைப்பிடித்து வருகின்றோம். அது தான் பொறுப்புள்ள ஒவ்வொரு குடிமகனும் செய்ய வேண்டிய வேலை. அதைத்தான் நாம் செய்கிறோம்.

ஆனால் மேலே சொன்ன நஜிப்பின் ஆதரவாளர்களுக்கு இது பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாதா?  அவர்களுக்குக் குடும்பங்கள் இல்லையா! ஆச்சரியமாக இருக்கிறது!

நஜிப் ஒரு பொறுப்பற்ற மனிதர் என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்தி விட்டது! இப்போது அவரின் ஆதரவாளர்கள் கூட பொறுப்பற்றவர்கள்  என்பதை மெய்ப்பித்து விட்டனர்!

ஆதரவாளர்கள் எக்கேடு கெட்டாலும்  அது பற்றி நமக்குக் கவலை இல்லை! அவர்களுக்கே அது பற்றி கவலை இல்லாத போது நாம் கவலைப்படுவதால்  ஆகப்போவது ஒன்றுமில்லை.

ஆனால் நாம் கவலைப்படுகிறோம்.  சுகாதார இயக்குனர் அது பற்றி கவலைப்பட்டிருக்கிறார். இன்னும் இரண்டு வாரங்களில் அந்தக் கூட்டத்தின் பலன் தெரியவரும்.  எத்தனை பேர் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது தெரியவரும். ஒருவருமே பாதிக்கப்படவில்லை என்றால் இறைவனுக்கு நன்றி!

இது பற்றி நஜிப் கூட தனது ஆதரவாளர்களுக்குச் சொல்லி இருக்கலாம். ஆனால் அவர் சொல்லவில்லை! அது ஒரு பொறுப்பற்றத்தனம் என்பதில் ஐயமில்லை.  அவருக்கே அந்தப் பொறுப்பு வரவில்லை என்றால் ஆதரவாளர்களுக்குப் பொறுப்பு எப்படி வரும்?

வருத்தமாகத்தான் இருக்கிறது. நாட்டில் மீண்டும் கொரோனா பரவினால் மக்கள் பலவித கஷ்டங்களுக்கு உள்ளாவார்கள் என்பது நமக்குத் தெரிகிறது. ஆனால் கொள்ளையடித்தே பழகிவிட்ட  அரசியல்வாதிகளுக்கு?

எது எப்படி இருப்பினும் இறைவன் இந்நாட்டை ஆசிர்வதிப்பாராக!


Tuesday 28 July 2020

அஞ்சா நெஞ்சன்!

தமிழ் நாட்டில் "அஞ்சா நெஞ்சன்!" என்று சொன்னால்  குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.  அது சும்மா ஓர் அடுக்கு மொழிக்காக வைக்கப்படுவதே தவிர மற்றபடி அவருக்கும் அஞ்சா நெஞ்சனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!

அது ஒரு பெரிய வீராதி வீரனுக்குப் போய் சேர வேண்டிய ஒர் அடைமொழி.  ஆனால் என்ன செய்வது? அது போக வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேரவில்லை! இடையிலேயே அரசியல்வாதிகளால் கடத்திச் செல்லப்பட்டு, இப்போது ரௌடிகளுக்குப் போய் சேர்ந்துவிட்டது!

நம் நாட்டில் அஞ்சா நெஞ்சன் என்றால் யாரைச் சொல்லலாம்?  யோசித்துப் பார்த்தால் நமது முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இதற்கு மிகப் பொருத்தமானவர் என்று தோன்றுகிறது!

நமது தானைத் தலைவர் துன் சாமிவேலு இந்தியர்களுக்கு மட்டும் தான் துரோகம் செய்தார்!  ஆனால் நஜிப் அனைத்து மலேசியர்களுக்கும் துரோகம் செய்தவர்!

 இன்னும் சில காலம் பதவியில் இருந்திருந்தால் நாட்டை சீனாவுக்கு அடகு வைத்திருப்பார்! ஒரு பிரதமர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு மிகப் பொருத்தமானவர் நஜிப். 

உலகில் யாரும் செய்யாத அளவுக்கு, பதவியில் இருந்து கொண்டு, பல அநியாயங்களைச் செய்தவர். அவர்,  மனைவியின் தூண்டுதலால் தான் அத்தனையும் செய்தார் என்று மக்கள் பேசிக் கொண்டாலும் சட்டத்தின் முன் அதெல்லாம் எடுபடாது!

ஆனால் எல்லாக் குற்றங்களையும் செய்துவிட்டு "நான் அவனில்லை!" என்று அஞ்சாமல் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நாட்டுக்குள் வலம் வந்து கொண்டிருந்தாரே அதனை யாரால் செய்ய முடியும்! அந்த தைரியம், அந்த துணிவு யாருக்கு வரும்! அதைக் கண்டு நான் வியக்கிறேன்! 

"நான் குற்றவாளி இல்லை!" என்று, அத்தனை குற்றங்களையும் செய்துவிட்டு, யாரால் இப்படிப் பேச முடியும்! மிகவும் நெஞ்சுறுதி மிக்க மனிதர்! வெறும் பண மோசடி மட்டும் தான் அவர் மீது உள்ள குற்றச்சாட்டுக்களா? இல்லை! வேறு குற்றச்சாட்டுகளும் உண்டு! ஆனால் தனது பதவியைப் பயன்படுத்தி அனைத்தையும் மறைத்து விட்டாரே! அது சாதாரண விஷயமா! ஒன்றைத் தொட்டால் இன்னொன்று தொடரும்! முடிவே இல்லை! ஆனால் அனைத்தையும் அவரால் மறைக்க முடிந்ததே!  மற்றவர்களால் முடியுமா?

உண்மையில் அஞ்சா நெஞ்சன் என்றால் அதற்குப் பொருத்தமான மனிதர் முன்னாள் பிரதமர் நஜிப் தான்!  வேறு எவரும் அவரை நெருங்க முடியாது!

அத்தனை அட்டூழியங்களையும் செய்து விட்டு தேர்தல் கூட்டங்களில் கலந்து கொள்கிறார், வீர வசனம் பேசுகிறார், மற்றவர்களைக் கிண்டல் அடிக்கிறார் - அடாடா! என்ன சாமர்த்தியம்!  என்ன சாதுரியம்! 

இந்நாட்டு மக்களை மடையர்கள் என்று ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்டார்! அதனால் தான் இப்படியெல்லாம் அவரால் பேச முடிகிறது!

ஆனால் அவர் ஒன்றை மறந்துவிட்டார். இறைவன் ஒருவன் உண்டு என்பதை மறந்து விட்டார்!

நாம் இறைவனை நம்புவோம்!

Monday 27 July 2020

பக்கத்தான் கட்சிக்கு ஒரு சபாஷ்!



பக்காத்தான் ஆட்சி 18 மாதங்களே நீடித்தாலும் ஒரு சில விஷயங்களை அவர்களால் தீர்க்க முடிந்ததற்காக அவர்களைப் பாராட்டலாம்!

சான்றுக்கு ஜொகூர், நியோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் கட்டடம் பல ஆண்டுகளாக இழுபறி நிலையில் இருந்தது என்பது நமக்குத் தெரியும்.

ம.இ.கா. வினரால் அதனை வெவ்வேறு காரணங்களைச் சொல்லி இழுத்துக் கொண்டே போக முடிந்ததே தவிர கட்டடம் ஒரு முடிவுக்கு வந்த பாடில்லை! அவர்களைச் சொல்லியும் குற்றம் இல்லை. 

கல்வி இலாகாவில் உள்ள கடைநிலை ஊழியன் கூட ம.இ.கா.வினரை மதிப்பதில்லை! பாரிசான் ஆட்சியில் என்ன நடந்தது, என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாதா, என்ன? 

அதனால் அவர்கள் என்ன தான் தலை கீழாக குட்டிக்கரணம் போட்டாலும் அவர்கள் விரும்பியதை அவர்களால் செய்ய முடியவில்லை என்பது தான் உண்மை! அதனால் அவர்களுக்குள்ளேயே அனைத்தையும் செய்து கொண்டு சமுதாயத்தை மறந்து போனார்கள்!  சரி. அவர்களாவது பிழைத்துப் போகட்டும் என்று நாமும் விட்டுவிட்டோம்!

ஜொகூரில் இன்னும் ஒரு சில பள்ளிகள் பிரச்சனைகளோடு தான் இருக்கின்றன. ஆனால் என்ன செய்வது? நமது கஷ்ட காலம்! பக்காத்தான் ஆட்சி கவிழ்ந்தது!  அதனால் அந்தப் பள்ளிக்கூடங்களுக்கு இப்போது  எந்த விடிவு காலமும் வரப் போவதில்லை!

அதனால் ம.இ.கா.வினர் என்ன சொல்லுகிறார்களோ அதைத்தான் நாம் கேட்க வேண்டும்! அவர்கள் நிறையவே சொல்லுவார்கள்! எதுவும் கதைக்கு உதவாது!  ஒரு காதில் கேட்டுவிட்டு அந்தக் காதிலேயே விட்டுவிட வேண்டியது தான்! அடுத்தக் காதுவரை கொண்டு போக வேண்டியதில்லை! 

இப்போதைக்கு நியோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியைக் கட்டி முடிக்க உதவியாக இருந்த முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணனைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.

மீண்டும் பக்காத்தான் ஆட்சிக்கு வரும்!  ம.இ.கா. விட்டுவிட்டுப் போன மிச்சம் மீதி வேலைகளைப் பக்காத்தான் அரசு தான் செய்ய வேண்டி வரும்!  வேறு வழியில்லை!

பக்காத்தான் கட்சியினருக்கு ஒரு சபாஷ்! உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்!

இதை நம்பலாம்!

நாம் மீண்டும் சுகுபவித்ரா தம்பதியினரைப் பற்றித்   தான் பேச வேண்டியுள்ளது!

காரணம் 'ஆம்! இல்லை!'  என்கிற பாணியிலேயே பல செய்திகள் வருவதால் எதனையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை! 

கடைசியாகக் கிடைத்த செய்தி நம்பகரமான செய்தியாக இருக்கும் என நம்புகிறேன்.

அத் தம்பதியினர் தொடர்ந்து காணொளியின் மூலம் அவர்களது சமையற்கலை நிகழ்ச்சியினைத் தொடர வேண்டும் என்பதே என்னைப் போன்றோர் விரும்புகின்றனர். அது மக்களின் விருப்பமும் கூட! அதில் சந்தேகம் இல்லை!

பொதுவாக நான் எந்த சமையற்கலை நிகழ்ச்சிகளையும் பார்ப்பதில்லை. அது எனது பாதையல்ல!

ஆனால் ஒரு தமிழ்க் குடும்பத்தின் முன்னேற்றம் என்பது நமது தமிழர்களின் முன்னேற்றம் என்கிற அசையாத நம்பிக்கை உள்ளவன் நான்.  அவர்களது பொருளாதார வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் பொருளாதார வளர்ச்சி. 

ஒவ்வொரு தமிழ்க் குடும்பமும் யாரையும் நம்பாமல் தங்களைத் தாங்களே வளர்த்துக் கொள்ளுவதில் அக்கறைக் காட்டினால் போதும்!  நமது சமுதாயம் பொருளாதார ரீதியில் தலை நிமிர்ந்து விடும்!

அந்த வகையில் சுகுபவித்ரா தம்பதியினரை நான் இரு கரம் கூப்பி வரவேற்கிறேன்! அவர்களின் வளர்ச்சி அசாதாரண வளர்ச்சி!

அது தொடர வேண்டும் என்பதே எனது அவா. அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் பெற வேண்டும் என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை!

அவர்களின் வளர்ச்சி என்பது அவர்களது குடும்பத்தின் வளர்ச்சி. அவர்களது பிள்ளைகளின் வளர்ச்சி. அவர்களது உறவுகளின் வளர்ச்சி. அவர்களது உற்றாரின் வளர்ச்சி.

ஒரு குடும்பம் முன்னேற்றம் அடையும் போது அதனைக் கெடுக்க நாலு குடிகார நாதாரிகள் குறுக்கிடத் தான் செய்வார்கள்! அவர்களை ஒதுக்கிவிட்டு நமது முன்னேற்றத்தைத் தான் நாம் கவனிக்க வேண்டும். 

இந்த சமையற்கலை என்பது ஒரு கூட்டு முயற்சி. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தான் இந்த வெற்றிக்குக் காரணமானவர்கள்.  இதனைத் தனித்து ஓர் ஆளாக செயல்பட முடியாது. 

அதனால் கண்வன் மனைவி இருவரும் சேர்ந்து இக்கூட்டு முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

குரைக்கின்ற நாயகள் குரைக்கட்டும்! 

உங்கள் நலனுக்காக இலட்சக்கணக்கான மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! அவர்களது விருப்பத்தை நிறைவேற்றுங்கள்!

Saturday 25 July 2020

இது சரியான பாதை என்பதை ஒப்புக்கொள்ளலாமா?

ம.இ.கா. தேசியத் தலைவர்  டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சரியான கருத்தைச் சொல்லியிருக்கிறார். .

இனி வருங்காலங்களில் தேர்தலில் போட்டியிடும் போது  இந்தியர்களின் பாரம்பரியத் தொகுதி, இந்தியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி என்று பிரித்துப் பார்க்காமல் "வெற்றி பெறும் சாத்தியம் உண்டா?" என்னும் அடிப்படையில் தான் போட்டியிட முடிவு செய்யப்படும் என்பதாகக் கூறியிருக்கிறார்.

இது சரி தானா என்று கேட்கலாம் என்றாலும் வேறு என்ன தான் வழி என்று கேட்கவும் தோன்றுகிறது! 

இந்தியர்கள் தொகுதி என்றாலே அங்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் என்பது நமக்குத் தெரியும்.  பள்ளிக்கூடப் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவே இல்லை!  அத்தனையும் ம.இ.கா.வால் ஏற்பட்ட பிரச்சனைகள்.  

பள்ளிக்கூடங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்களை ம.இ.கா.தலைவர்கள் எடுத்துக் கொண்டார்கள்! பேராக் மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்ட 2000 ஏக்கர் நிலத்தை ,ம.இ.கா. தலைவர்கள் ஒதுக்கிக் கொண்டார்கள்!

இவைகள் மாதிரிகள் தான். இது ஓரு மேலோட்டம், அவ்வளவு தான். இன்னும் ஆழமாகப் போனால் நாறும்! அது வேண்டாம்!

கேமரன் மலையில் விவசாயிகளின்  ஒரு ஏக்கர் நிலத்திற்கு ரி.ம. 4500.00 வாடகை!  எத்தனையோ ஆண்டுகள் ம.இ.கா. தான் கொடிகட்டிப் பறந்தது! அதற்கு ஒரு தீர்வு காணப்படவில்லை! இப்போது மூன்று கட்சிகளும் வாடகையைப் பங்குப் போட்டுக் கொள்கின்றனர் என்று சொல்லப்படுகின்றது!

இதனையெல்லாம் நம்ப வேண்டாம் என்றாலும், ம.இ.கா. வின் கடந்த கால சம்பவங்களைக் கொஞ்ச திரும்பிப் பார்த்தால் "அவர்கள் அதனை செய்ய எல்லாத் தகுதியும் உள்ளவர்கள்தான்!" என்று தான் நம்ப வேண்டியுள்ளது!

இந்த நிலையில் இந்தியர்கள் தொகுதி என்று சொல்லிப் போட்டிப் போடுவதை விட எங்கு வெற்றி பெற முடியும் என்பதைத் பார்த்து போட்டிப் போடுவதே ம.இ.கா.வின் எதிர்காலத்திற்கு நல்லது என்று தான் சொல்ல வேண்டும்!

நம்மைக் கேட்டால் ம.இ.கா. இனி இந்தியர்களை நம்ப வேண்டாம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது!

ம.இ.கா. தலைவர் செல்வது சரியான பாதை தான்!

 

மீண்டும் உங்கள் பணி தொடர வேண்டும்!

யூடீயுப் பிரபலம், சுகுபவித்ரா தம்பதியினர் தங்களது சமையல் கலையின் திறமைகளைத் தொடர்ந்து ,மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். 

குடும்பத்தில் ஏற்பட்ட சில தடுமாற்றங்களால் தம்பதியினர் தடுமாறிப் போயினர் என்பது தான் உண்மை. 

வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள், எதிர்பாராத திருப்பங்கள், மகிழ்ச்சியானது தான் என்றாலும், அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இன்னும் இவர்களுக்கு வரவில்லை! இது போன்ற திடீர் மாற்றங்கள் வாழ்க்கையில் ஏற்படும் போது யாராக இருந்தாலும் தடுமாறித்தான் போவார்கள்! 

அது தான் இவர்களுக்கும் நடந்திருக்கிறது!

பயப்பட ஒன்றுமில்லை! நடந்தவை ஒரு கனவாகப் போகட்டும்! நடந்தது நடந்தது தான்! நடந்ததைப் பற்றி பேசிப் புண்ணியமில்லை. இனி நடக்கப் போவதில் தான் கவனம் செலுத்து வேண்டும்.

எதிர்காலம் தான் முக்கியம். தொழிலின் எதிர்காலம், குழைந்தைகளின் எதிர்காலம் - இவைகளை நாம் அலட்சியப்படுத்த ,முடியாது.

தெரிந்த ஒரு கலையை சும்மா தூக்கி விசிவிட முடியாது!அந்தக் கலை நம்மை வாழ வைக்கும் கலை. பல்லாயிரம் மக்களைக் கவர்ந்த ஒரு கலை.

எத்தனையோ பேர்  சமையற் கலையை யூடீயுப்பில் முயற்சி செய்தார்கள். அதில் வெற்றி பெற்றவர்கள் ஒரு சிலர் தான். 

ஆனால்  எடுத்த எடுப்பில் மாபெரும் வெற்றி என்றால் அது சுகுபவித்ரா தம்பதியினர் தான்.  காரணம் அவ்ர்களிடம் உண்மை இருந்தது. ஓர் அப்பாவித்தனம் இருந்தது. எந்த முன் தயாரிப்பும் இல்லாத ஓர் எளிமை இருந்தது. அத்தோடு நடைமுறை மலாய்  மொழியிலும் ஒரு திறமை இருந்தது.

இவைகள் எல்லாம் சேர்ந்து தான் அவர்களுக்கு ஏற்பட்ட இந்த மாபெரும் வெற்றி. இவர்களில் யார் பெரியவர் அல்லது சிறியவர் என்கிற பேதம் ஒன்றும் இல்லை. இருவருமே சேர்ந்து தான் இந்த வெற்றியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். 

அவர்கள் மீண்டும் தொழிலுக்கு வருவது நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது  கடந்த காலங்களைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் இனி வருங்காலத்தை எப்படி வெற்றிகரமாக எதிர்கொள்வது என்பதை யோசித்தால் போதும்.

ஒரே தவற்றை இருமுறை செய்வது என்பது தொழிலில் ஏற்றுக்கொள்ள படாது! பழைய தவறுகளைச் செய்ய வேண்டாம்! அதனைச் சுட்டிக்காட்டிப் பேசவும் வேண்டாம்!

எல்லாம் நன்மைக்கே! என நினைத்து வருங்காலத்தை எதிர் கொள்ளுங்கள்!

தொடருங்கள் உங்கள் பணிகளை! வாழ்த்துகள்!

Thursday 23 July 2020

குடித்துச் சீரழியும் சமுதாயம்!

சில சமயங்களில் சில சங்கடங்களை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியுள்ளது!

குடித்துக் கெட்ட சமுதாயம் என்று பெயர் எடுத்தவர்கள் நாம்! அதிலிருந்து நாம் இன்னும் விடுபடவில்லை! 

அது போதாது என்று சட்டைக்குள் அரிவாளை பதுக்கி வைக்கும் ஒரு கலாச்சாரத்தையும் நம் சினிமா கதாநாயகர்கள் நமது இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார்கள்!

அறிமுகப்படுத்திய கதாநாயகர்களுக்குக் கோடிக்கணக்கில் பணம் கொட்டுகிறது!  அவர்களைப் பின்பற்றும் நமது இளைஞர்களுக்கோ காவல்துறையினர் மூலம்  கொட்டு கொட்டு என்று கோடிக்கணக்கில் கொட்டு விழுகிறது! குடும்பம் சிதறுகிறது! பிள்ளைகள் அனாதைகளாகின்றனர்! 

சினிமா  என்பதை சினிமா தியேட்டர்களோடு முடித்துக் கொள்ள வேண்டும். சினிமா நடிகர் என்ன பண்ணுகிறார் என்கிற அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை நமக்குத் தேவை இல்லாதது!

சினிமா நடிகன் குடிகாரனாக இருந்தாலும் அவன் குடும்பம் சீரழிந்து போகும் என்பதற்கு நமக்கு நிறைய எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. நமது நிலை என்ன? அவனை விடப் பொருளாதார ரீதியில் மிகத் தாழ்ந்த நிலையில் இருக்கிறோம்! நாம் குடிகாரன் என்று பெயர் எடுத்தால் நமது குடும்பம் தாங்குமா?

நமது வயதான மூத்தக்குடிமக்கள் குடிகாரர்களாக இருந்ததற்குப் பல காரணங்கள் உண்டு.  அப்போது அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை இப்போது இல்லை. குடித்து நமது அசதிகளைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்கிற அவசியம் இப்போது இல்லை. 

ஆனாலும் நமது குடிப்பழக்கம் ஒழிந்து போனதாகத் தெரியவில்லை! ஏதேதோ காரணங்கள் சொல்லி அதனை உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கிறோம்!

நமது பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்திலேயே குடிக்கிறார்கள் என்கிற உண்மை நமக்குத் தெரியும்  அவர்கள் பெற்றோர்களிடமிருந்து அதனைக் கற்றுக் கொள்கிறார்கள். அதிலும் ஒரு சில மாணவர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு குடிக்கிறார்கள்! இதில் பெண்களின் பங்கும் உண்டு!

குடிகாரன்,  அப்பா அம்மா சொன்னால் கேட்க மாட்டான். சகோதரன் சொன்னால் கேட்க மாட்டான். மனைவி சொன்னால் கேட்க மாட்டான். பெற்ற பிள்ளைகள் சொன்னால் கேட்கமாட்டான்.

சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும். கடுமையான தண்டனைகளைக் கொடுக்க வேண்டும். காவல்துறையினர் 'சாத்து!சாத்து!' என்று சாத்தினால் தான் அவனுக்குப் புத்தி வரும்!

இந்த சமுதாயம் இப்படியே தான் போய்க் கொண்டிருக்குமா என்பது புரியாத புதிராக இருக்கிறது! தலைவன் என்று சொல்லுபவனும் குடிக்கிறான்! தொண்டன் என்று சொல்லுபவனும் குடிக்கிறான்! தொழிலதிபன் என்பவனும் குடிக்கிறான்!  தொழிலாளி என்று சொல்லுபவனும் குடிக்கிறான்!

குடியை என்னால் நிறுத்த முடியாது என்று சொல்லுபவனுக்காக இதனைச் சொல்லுகிறேன். நண்பனே! உன் உழைப்பின் அசதி தீர இரவு நேரத்தில், உன் வீட்டில், அளவாகக் குடித்து உனது அசதியைப் போக்கிக் கொள். அதன் பின் தூங்கிவிடு! உனது நண்பர்களைச் சேர்த்துக் கொள்ளாதே! நீ குடிப்பது உன் பிள்ளைகளுக்குத் தெரிய வேண்டாம்!

அது போதும்! உன்னை யாரும் குடிகாரன் என்று சொல்லப் போவதில்லை! உன் குடுமபத்திற்கு எந்த பாதிப்பும் வரப் போவதில்லை.

அளவோடு குடித்தால் உன் குடும்பம் சீரழியாது. உன்னால் சமுதாயத்திற்கும் எந்த கெட்டப் பெயரும் ஏற்படாது! உனது வேலைகளும் தடைப்படாது.

நண்பா! எல்லாவற்றையும் சிந்தித்துச் செயல்படு. உன்னால் உன் குடும்பம் பெருமைப்பட வேண்டும். உன் சமுதாயம் பெருமைப்பட வேண்டும். உன் உறவுகள் பெருமைப்பட வேண்டும்.

குடி, சீரழிக்கும்! சிறைக்கம்பிகள் உனக்காகக் காத்திருக்கும்! 

சீரழியாதே!

Wednesday 22 July 2020

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்!

இந்த பழமொழிக்குச் சரியான எடுத்துக்காட்டு நமது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் தான்!

அவர் அரசியலில் புகுந்த போது யார் யாரையோ, எவர் எவரையோ குற்றம் சொன்னார்.  அப்படிக் குற்றம் சொன்னாரே தவிர மற்றபடி யாரும் அவரது குற்றச்சாட்டைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை! 

சுதந்திரத் தந்தை என்று போற்றப்படும் ,  முன்னாள் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான். சிங்கப்பூர் தலைவர்கள் - இவர்களைப் பற்றியெல்லாம் ஏராளமானக் குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக பல குற்றசாட்டுகளை வைத்தவர் இவர். 

ஆனால் என்ன ஆயிற்று? துங்கு நல்ல பெயரோடு தான் போய்ச் சேர்ந்தார். சிங்கப்பூர் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது! 

இவரது ஆட்சியில் என்ன செய்தார்? பல கொள்ளைக்காரர்களை உருவாக்கினார் முன்னாள் பிரதமர் நஜிப் உட்பட!  இன்று நஜிப் என்ன சொல்லுகிறார்? டாகடர் மகாதிரின் பிள்ளைகள் எப்படிக் கோடிசுவரர்கள் ஆனார்கள் என்று கேளவி கேட்கிறார்!

டாக்டர் மகாதிரின் சாதனை என்பது கொள்ளைக்காரர்களை உருவாக்கியது தான். அது மட்டும் அல்லாமல்அன்று முதல் இன்று வரை தன்னோடு பணிபுரிந்தவர்களை யாரையும் நல்லவர் என்று இதுவரை அவர் சொன்னதில்லை!

எப்போது மற்றவர்களைக் கெட்டவர்கள் என்று சொல்ல ஆரம்பித்தாரோ  அன்றிலிருந்து இன்றுவரை அது தொடர்கிறது! அந்த குற்றச்சாட்டை இன்னும் அவர் நிறுத்தவில்லை!

அவருக்குப் பின் பிரதமராக வந்தவர்கள் எல்லாம் அவரால் உருவாக்கப்பட்டவர்கள்.  ஆனால் அவர்கள் யாரையும் நல்லவர்கள் என்று இவர் சொன்னதில்லை! அப்படியென்றால் அவர்கள் சரியானபடி வார்த்து எடுக்கப்படவில்லை என்று தானே சொல்ல வேண்டியுள்ளது! அது யார் குற்றம்?

அப்படி என்ன தான் இவர் சொல்ல வருகிறார்? தன்னைத் தவிர மற்றவர்கள் ஆட்சி செய்ய இயலாது என்று சொல்லுகிறார்!

இதைத்தான் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை  சொல்லி வருகிறார்! அவர் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ஷாஃபியைக் கூட நல்லவர் என்று லிம் குவான் எங் தான் பரிந்துரைத்திருக்கிறார்! இவர் அல்ல!

இந்த 95-வது வயதிலும் இவர் இப்படி நடந்து கொள்ளுவது நமக்கே சங்கடத்தைத் தருகிறது!

சுடுகாடு வரை இப்படித்தான் இருப்பாரோ!

தீடீர் அதிர்ஷ்டம்!

வாழ்க்கையில் ஒவ்வொன்றும் படிப்படியாகத் தான் வர வேண்டும்!

பொருளாதார வெற்றி என்றால் அதுவும் ஒரு வெற்றியின் தொடர்ச்சியாகத் தான் இருக்க வேண்டும்.

எதுவும் ஒரே இரவில் வருகின்ற புகழோ, வெற்றியோ மனிதர்களைத் தடுமாறச் செய்துவிடும். காரணம் அந்தப் புகழுக்கோ, வெற்றிக்கோ அவர்கள் தயாராக இல்லை!  அது அவர்களின் பட்டியலில் இல்லை! எதிர்பார்க்கவும் இல்லை!  அவர்களின் சிந்தனையில் அது எட்டவுமில்லை!

ஒரு பணக்காரனுக்கு லாட்டரிச் சீட்டில் பணம் விழுந்தால் அவனுக்கு அதனால் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. அவன்,   அதனை எப்படிப் பயன் படுத்திக் கொள்ளுவது என்பதைத் தெரிந்து வைத்திருப்பான். 

அதுவே அவன் ஓர் ஏழையாக இருந்தால்....?  அப்படி ஒரு நிலையை எதிர்பார்க்காதவனாக இருந்தால்....?

ஒரு குடும்பத்தை நான் அறிவேன். அவர்களின் மகன் ஒருவன், நடுத்தர வயது,  என்று எடுத்துக் கொள்ளலாம். விபத்து ஒன்றில் அகப்பட்டு நீண்ட நாள்கள் ஒரு வேலையும் செய்ய முடியாமல் இருந்தான்.  ஓரளவு குணமான நிலையில் அவனுடைய காப்புறுதி பணம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.  அது சில இலட்சங்கள் வந்தன.  மகனுக்கு ஒன்றுமே புரியவில்லை! பெற்றோருக்கு ஒரு சல்லிக்காசு கொடுக்கவில்லை.ஒரு மெர்சிடிஸ் கார் வாங்கினான், ஒரு கடையைத் திறந்தான், பெண்கள் அவனைச் சுற்றினார்கள், நண்பர்களோடு குடித்து கும்மாளமிட்டான், தனியே வீடு பார்த்து குடும்பத்தை விட்டுப் பிரிந்தான் - எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு என்பது போல  எல்லாமே ஒரு முடிவுக்கு வந்தன!

மகனின் கனவு மாளிகை சரிந்தன! மீண்டும் பெற்றோருடன்! கையில் காசில்லை! மீண்டும் பழைய நிலை! இப்போது வேலையும் செய்ய முடியாத ஒரு நிலை!

புகழோ, பணமோ எல்லாமே திடீர் திடீர் என்று வருகின்ற போது அதனைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடிவதில்லை! போட்டி, பொறாமை எல்லாமே வரும்! கெடுதலைச் செய்ய நண்பர்கள் இருப்பார்கள்! காட்டிக் கொடுக்க துரோகிகள் இருப்பார்கள்!

அதைத் தான் கவிஞர் வைரமுத்து அழகாகச் சொன்னார். பணமோ, புகழோ எல்லாமே அளவாகத்தான் இருக்க வேண்டும். கழுத்து வரைப் போனால் அது நம்மை அடிமையாக்கி விடும்! அதுவே போதையாகிவிடும்!  நம்மை நிதானம் இல்லாமல் செய்து விடும்!

அதிர்ஷ்டம் என்று ஒன்றுமில்லை! எல்லாமே உழைப்பின் மூலம் வருபவை தான்.  மற்றவர்களின் கண்களுக்கு"ஏதோ அதிர்ஷ்டம்!" என்று நமது உழைப்பை ஏற்றுக் கொள்ளாமல்,  பொறாமைக் கண்களோடு நம்மை நோகச் செய்வார்கள்!

ஆனால் ஒன்று.  நமது திடீர் முன்னேற்றம் அல்லது திடீர் அதிர்ஷ்டம் என்று சொல்லுகிறார்களே அதனைக் கையாள்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  அதனைச் சரியாகக் கையாளாவிட்டால் நமது உழைப்பு அனைத்தும் சரிந்துவிடும்! ஒன்றுமில்லாமல் போய்விடும்! அர்த்தமற்றதாகி விடும்!

அதனால் திடீர் முன்னேற்றமா? கொஞ்சம் ஆற அமர யோசியுங்கள். தெரிந்தவர்களை வைத்து சரியான பாதையை அமைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது நாம் நமது வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டு வந்தால் தான் அடுத்த தலைமுறைக்கு நல்ல வழிகாட்டுதலாக இருக்கும்.

வாழ்த்துகள்!

நல்ல காலம் பொறக்குது! நல்ல காலம் பொறக்குது!

தமிழ்த் திரைப்படங்களில் அவர்களைப் பார்த்திருக்கிறோம்!

"நல்ல காலம் பொறக்குது! நல்ல காலம் பொறக்குது!" என்று குடுகுடுப்பையை வைத்துக் கொண்டு குறி சொல்லுகின்ற வேலையைச் செய்பவர்கள் தான் இந்த குடுகுடுப்பைக்காரர்கள்!

இப்படி எல்லாருக்கும் நல்லதைச் சொல்லும் இவர்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் மட்டும் எந்த நல்லதும் நடப்பதில்லை. தங்குவதற்கு நிரந்தர இடமில்லை. கூட்டமாக வருவார்கள்! கூட்டமாகப் போவார்கள் அவர்கள் தான் நாடோடி வாழ்க்கை வாழும் குடுகுடுப்பைக்கார   சமூகத்தினர்.
 
அந்த குடுகுடுப்பைச் சமூகத்தைச் சார்ந்த, தெய்வானை, என்கிற ஒரு மாணவி 12-ம் வகுப்பு பரிட்சையில் நூறூக்கு நூறு என்று சாதனைப் புரிந்திருக்கிறார் என்பதாக BBCதமிழ் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

அந்த மாணவி சந்தித்த இடர்ப்பாடுகள்

குடுகுடுப்பைகார  குடும்பம் அல்லது நாடோடி குடும்பம்
நிரந்தரமாக ஓர் இடத்தில் தங்கி பிழைப்பை நடத்த முடியாது
வீட்டு வசதிகள் இல்லை; வெறும் கூடாரங்கள் தாம் 
மின்சார வசதிகள் இல்லை; கழிப்பறை வசதிகள் இல்லை
தொழிலில் பெரியவருமானம் இல்லை. எந்நேரமும் பசியும் பட்டினியும் 
 பசியோடு நடந்து ஊர் ஊராக சென்ற அனுபவம் நிறைய

அந்த மாணவியின் சந்தோஷங்கள்

ஊர் ஊராக அலைந்தாலும் படிப்பில் அதிக ஈடுபாடு
கல்வியில் எனது சமூகத்திற்கு ஓரு தொடக்கமாக இருக்க விரும்புகிறேன்
நான் பி.காம். படித்து வங்கியில் வேலை செய்வது என் கனவு
என் சமூக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும்
என் பெற்றோரின் தொழிலை மதிக்கிறேன்
என் பெற்றோரும் என் சொந்தங்களும் எனக்கு உந்துதலாக இருந்தார்கள்
தேர்வுகளில் முதல் மதிப்பெண் வாங்க வேண்டும் எனும் மனவுறுதி 
எங்கு மாறிச் சென்றாலும் கல்வியைத் தொடர்வதில் அக்கறை இருந்தது
பள்ளிப்படிப்பின் செலவுக்காக கூடைகள் முடைவது 
"நேர்மையாக உழைத்து வாழ வேண்டும்" என்பது எங்கள் சமூக நியதி
எனது படிப்பு என்னை முன்னேற்றும் என்னும் நம்பிக்கை.

இப்போது அவர் கல்வியில் உயர திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் முன் வந்திருக்கிறார். இனிஅவருக்கு நல்லது நடக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

ஒரு விஷயம் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. கனவு காண்பவர்கள் தான் வெற்றி பெறுகிறார்கள்  என்கிற இரகசியத்தை  மிகவும் கீழ்த்தட்டு மாணவியான, தெய்வானை உணர்ந்திருக்கிறார். பி.காம்.படித்து வங்கியில் பணி புரிய வேண்டும் என்கிற அவரின் இலட்சியம், அவரின் கனவு   நிச்சயம் நிறைவேறும்.

இன்னொன்று "எனது படிப்பு என்னை முன்னேற்றும்" என்று திடமாக நம்புகிறார். படிப்பின் அருமையை இந்த இளம் வயதிலேயே புரிந்து வைத்திருக்கிறார். 

கல்வி நிச்சயமாக ஒருவரை முன்னேற்றும் என்பதில் சந்தேகமில்லை!

நல்ல காலம்! நமக்கும் நல்ல காலம் தான்!

Tuesday 21 July 2020

அப்படியா! ரொம்ப சந்தோஷம்!

 நெகிரி மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களில் எந்த ஒரு கொரோனா தொற்று நோயும் புதிதாகப் பதிவு செய்யப்படவில்லை என்பதாக சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ்.வீரப்பன் கூறியுள்ளார்.

அதாவது மருத்துவமனையில் இப்போது யாருக்கும் சிகிச்சை அளிக்கப்படவில்லை.  புதிய இறப்புக்கள் இல்லை. புதிய திறப்புக்களும் இல்லை!

நீண்ட நாட்களாக சிவப்பு மண்டலமாக இருந்த ரெம்பாவ் வட்டாரம் கூட பச்சை மண்டலத்திற்குள் வந்துவிட்டது!

அப்படியென்றால் நமக்கு மகிழ்ச்சி தானே!

ஆனாலும் மகிழ்ச்சி அடைய முடியவில்லை. பிரதமர் "நீங்க ஒழுங்கா இல்லேன்னா மீண்டும் ஊரடங்கு வரும்!" என்கிறார்!   "மீண்டும் முகக்கவசத்தை அணியுங்கள்! அது முக்கியம்!" என்கிறார்!

கொஞ்சம் யோசித்தால் ஒன்று புரியும்.  "என்றும் துன்பம் இல்லை சோகம் இல்லை!"  என்று பட்டுக்கோட்டையாரின் பாடலை பாடிக் கொண்டிருக்க வழி இல்லை!

நெகிரி செம்பிலானில் இரண்டு வாரங்களாக கொரொனா 19 இல்லையென்றாலும் மாநிலத்தில் எல்லாக் கதவுகளும் இழுத்து மூடப்பட்டு விட்டன என்று சந்தோஷப்பட வழியில்லை! எல்லைகள் எல்லாம் வருக! வருக! என வரவேற்றுக் கொண்டு தான் இருக்கின்றன!

இங்கிருந்து வெளி மாநிலங்களுக்குப் போவதும் வெளி மாநிலங்கலிலிருந்து இங்கு வருவதற்கும் எந்தத் தடையுமில்லை! தடையுத்தரவும் இல்லை! அப்படிப் போடவும் வழியில்லை!

இந்த நிலையில் கொரோனா வரவே வராது என்று எந்த உத்தரவாதமும் இல்லை! எந்த நேரத்திலும் வரலாம்!  எந்த நேரத்திலும் போகலாம்! 

அதனால் நாம் கட்டுப்பாடோடு தான் இருக்க வேண்டும். அரசாங்கம் சொல்லுகின்ற கட்டுப்பாடுகளை ஏற்க வேண்டும்.

இப்போதைக்கு பிரதமர் சொல்லுவது போல முகக்கவசம் அணிவது அவசியம்.  சிவப்பு மண்டலங்களில் உள்ளவர்கள் இன்னும் அதிகமாக பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும்!

இப்போது, இன்றைய நிலையில், நெகிரி செம்பிலானில் உள்ள நிலவரம் நமக்கு மக்ழ்ச்சி தான்! அது தொடர வேண்டும் என்பதே நமது பிரார்த்தனை!

சந்தோஷம் நீடிக்க வேண்டும்!

Monday 20 July 2020

பொறுத்தவர் பூமி ஆள்வார்!

பொறுத்தவர் பூமி ஆள்வார்! இப்படி ஒரு பழமொழி நம்மிடையே உண்டு. 

கெடாவில் பாஸ் அரசாங்கத்தில் ஒர் இந்து கோயில் உடைபட்டது. எந்த ம.இ.கா. தலகளோ, தளபதிகளோ,  சுப்பர்களோ, சுப்ரீம்களோ எதுவுமே 
 வாய்த் திறக்கவில்லை!

பொதுவாக அவர்களைப் பற்றி நமக்குத் தெரியும். நல்லது நடந்தால் "நாங்கள் தான்!" என்பார்கள்! கெடுதல் நடந்தால் "நாங்களில்லை!" என்பார்கள்!  இந்துப் பெரு மக்களும் "நான் அவனில்லை!" என்று போய் விடுவார்கள்!

ஆனால் ரொம்ப நாளைக்குப் பிறகு இப்போது தான் ஒரு விஷயம் அம்பலத்திற்கு வந்திருக்கிறது! 

அமைதியைக் கடைப்பிடித்தால் அதிர்ஷ்டம் நம் வீட்டைத் தேடிவரும் என்று நமது அரசியல்வாதிகள் அறிந்து வைத்திருக்கிறார்கள்!

பரவாயில்லை! முன்னாள் துணைக் கல்வி அமைச்சருக்கு, அவர் இந்திய சமுதாயத்திற்குச் செய்த சேவைக்கு, காலங்கடந்து, பெரிகாத்தான் அரசாங்கத்தில், அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒன்றை நினைவில் வையுங்கள், பெரிகாத்தான் என்பது பாரிசானின் நிழல்!

ஆனால் நமக்கு வருத்தமில்லை.  உண்மையைச் சொன்னால் யார் யாரோ அந்தப் பதவிக்கு அடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அதனைத் தமிழர் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதே, அதுவரை நமக்கு மகிழ்ச்சி தான். 

இதோடு நிறுத்திக் கொள்ளாமல்  மற்ற தல தளபதிகளுக்கும் வேறு பதவிகள் கிடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறோம். வருத்தப்பட ஒன்றுமில்லை!

சமுதாயத்திற்குத் தான் அவர்களால் எந்தப் பயனுமில்லை! அவர்களது வாழ்க்கையாவது வளமாக இருக்கட்டுமே! 

இனி அவர்களால் ஜனநாயக தேர்தல் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும், நமக்கும் தெரியும்!  இனி இப்படித்தான் அவர்கள் வாழ்க்கையை ஓட்ட வேண்டும்!

எது எப்படி இருந்தாலும் சரி! டத்தோ கமலநாதனுக்கு நமது வாழ்த்துகள்! சபா துறைமுக வாரியத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம்!

வாழ்த்துகள்!


வீட்டுக்கு ஒரு தொழில் முனைவோர்


 சிலாங்கூர் கோலாலம்பூர் இந்திய வர்த்த சங்கத்தினர் நல்லதொரு முடிவை எடுத்திருக்கின்றனர்.

ஆமாம், வீட்டுக்கு ஒரு வர்த்தகரை உருவாக்க வேண்டும் என்கிற குறிக்கோளோடு  களம் இறங்கியிருக்கின்றனர்.

நல்ல குறிக்கோள் என்பதில் ஐயமில்லை,  நம்முடைய இளைஞர்கள் இன்னும் நிறைய தொழிலில் இறங்க வேண்டும். 

முதலில் நமக்குக் கல்வி வேண்டும். கல்வி என்பதே பெரிய மூலதனம். தொழிலில் இறங்கி ஏற்படுகின்ற ஏற்ற இறக்கங்களைக் கலவியின் மூலம் தவிர்த்து விடலாம். அது தான் கல்வியின் மகத்துவம். 

ஆனாலும் படிக்கும் போது  எளிமையாக இருந்தாலும் அனுபவமே சிறந்த ஆசான்.  அனுபவத்திற்கு ஈடு இணை எதுவுமில்லை!

ஒவ்வொரு இளைஞருக்கும் கல்வி அவசியமாகிறது.

கல்வி இல்லாதவருக்குத் தொழில் கைகொடுக்கும். சீனக் குடும்பங்களைக் கவனித்தால் ஒன்று நமக்குப் புலப்படும். கல்வியில் சிறந்து விளங்குபவர்களை சீனக் குடும்பங்கள் எப்பாடுப் பட்டாவது அவர்களைத் துக்கி விடும்.  தோல்வியடைந்தவர்களை ஏதோ ஒரு தொழிலைக் கற்றுக் கொள்ள மற்றவர்களிடம் அனுப்பி விடுவார்கள்! இதைத் தான் அவர்கள் காலங்காலமாக செய்து வருகிறார்கள். 

அதனால் தான் வர்த்தகத் துறையில் சீனர்களை மிஞ்ச ஆளில்லை என்கிற நிலை உருவாகிவிட்டது. படித்தவன் வேலை பார்க்கிறான். படிக்காதவன் படித்தவனுக்கு வேலை கொடுக்கிறான்! பெரும் பெரும் நிறுவனங்கள் எல்லாம் படிக்காதவர்களால் ஆரம்பிக்கப்பட்டது என்பதை மறுப்பதற்கில்லை. 

நாம் நமது குடும்பங்களில்எதிர்ப்பார்ப்பது  என்னவெனில் நமது பிள்ளைகளின் கல்வி முழுமையாக இருக்க வேண்டும்.  அவர்களில் பலர் தொழில் முனைவோராக வர வேண்டும். குறைவான கல்வி கற்றோர் தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொண்டு,  பின்னர் சொந்தத் தொழிலில் ஈடுபட வேண்டும். வீட்டுக்கு ஒருவராவது வர்த்தகராக மாற வேண்டும். 

நமது இனம் வரத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நாம் வர்த்தகம் செய்திருக்கிறோம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இப்போது அதில் தொய்வுகள் ஏற்பட்டிருக்கலாம்.  ஆனால் நமது பழைய மரபை தூக்கி நிறுத்த வேண்டும். அது நமது கடமை. 

வர்த்தக சங்கத்தின் நோக்கம் மிக உயர்வானது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வர்த்தக சங்கங்கள் இதனைச் செய்ய வேண்டும். இளைஞர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

இந்த நாட்டில் இருநூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால் யார் பயன் பெறுகிறார்கள்? முதலாளிகள்! நாம் தொழிலாளியாகவே இருக்கவேண்டும் என்கிற நிர்ப்பந்தம் எதுவும் இல்லையே!

ஊரானுக்கு உழைத்துக் கொடுத்தது போதும்! இனி நமக்காக வாழ முயற்சி செய்வோம்! நமது முன்னேற்றத்துக்காக உழைப்போம்!

வீட்டுக்கு ஒரு தொழில்முனைவோரை உருவாக்குவோம்!                                                                                                            

Sunday 19 July 2020

உணவகங்கள் மூடல்!

உணவகங்கள் மூடல் என்பது வேதனையான செய்தி தான்!

சிலாங்கூரில் சுமார் 25 உணவகங்கள் மூடும்படியான உத்தரவை சுகாதார அமைச்சிடமிருந்து பெற்றிருக்கின்றன.

ஒன்று: அவைகள் சுகாதாரத்தோடு இருக்கவில்லை.  இன்னொன்று: சமுக இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை.

இதில் முதலாவது மிகவும் கண்டிக்கத்தக்கது. நாமெல்லாம் சிறு வயதிலேயே படித்திருக்கிறோம் சுத்தம் சுகம் தரும் என்று. நமது பெரியவர்களும் நமக்குச் சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள். 
அது போதும். வேறு எந்த விளக்கமும் தேவை இல்லை. வீட்டில் சுத்தம் இல்லை என்றால் நமக்குச் சாப்பிடப் பிடிக்குமா?

ஒரு முறை குளுவாங்கில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த கழிவறையில் சிறுநீர் கழிக்க வேண்டிய சூழல். அந்த இடத்தைப் பார்த்ததுமே அங்குச் சாப்பிட வேண்டும் என்கிற எண்ணமே இல்லாமால் போய்விட்டது! உணவகம் என்னும் போது எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். சுத்தம் செய்ய வேலையாள் இல்லையென்றால் முதலாளி தான் பொறுப்பெடுத்து சுத்தம் செய்ய வேண்டும்.  அப்படி செய்பவர்கள் தான் முதலாளி என்கிற பொறுப்புக்குத் தகுதியானவர்கள். 

இதற்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதற்குக் காரணம் கிட்டத்தட்ட மூன்று, நான்கு மாதங்கள் வியாபாரமே இல்லாத சூழல். வருமானம் இல்லாமால் சிரமப்பட்டு, உணவகங்கள் அடைப்பட்டுக் கிடந்தன.  உணவகங்கள் திறக்கும் போது "சுத்தம் இல்லை!" என்று சொல்லி அடைக்கச் சொன்னால் அதனை என்னவென்று சொல்லுவது? இது அக்கறையற்ற போக்கு என்று தானே சொல்ல வேண்டும்!

சமூக இடைவெளி என்பது கொஞ்சம் சிக்கலான பிரச்சனை. குடும்பத்தோடு வருபவர்கள் அதனைக் கடைப்பிடிப்பது சிரமம் தான்! இளைஞர் கூட்டம் வந்தால் அவர்களிடம் எடுத்துச் சொல்லி சமாளிக்கலாம்.  அதுவும் சொல்வதைக் கேட்கக் கூடியவர்களாக இருந்தால்! அதிகப்படியான நாற்காலிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்! சீன உணவகங்களில் அப்படித்தானே செய்கிறார்கள். எப்படியோ அது நமது சாமர்த்தியம்!

ஏதோ காரணங்களைச் சொல்லி இப்படி வியாபாரம் தடைப்படுவது நல்லதல்ல.  நமது பொறுப்புக்களை நாம் சரியாகச் செய்தால் தடைப்படுவதைக் தவிர்த்து விடலாம்!

எப்படியோ இவைகளையெல்லாம் சமாளித்துத் தான் வியாபாரம் செய்ய வேண்டும்.

கொரோனா தொற்று நோயையே சமாளிக்கத் தெரிந்த நமக்கு இது முடியாதா, என்ன?


ஏன் இந்தியத் திரைப்படங்கள் ?

நமது நாட்டில தயாரிக்கப்படும் படங்கள் என்றால் அது தமிழ்த் திரைப்படங்கள் மட்டுமே.

அதனை ஏன் இந்தியத் திரைப்படங்கள் என்கிறோம்? அப்படி இங்கே தெ;லுங்கு,  மலையாளம், கன்னடம் திரைப்படங்கள் தயாரித்தால் இந்தியத் திரைப்படங்கள் என்பதில் எந்தப் பிரச்சனையும் எழ நேரிடாது. அப்படித்தான் நான் நினைக்கிறேன்.

இதனை ஏன் நான் சொல்லுகிறேன் என்றால் தமிழ் நாட்டில் இப்படி ஒரு பிரச்சனை தலை தூக்கியது! ஆனால் இது நாள் வரை அந்தப் பிரச்சனை தீர்ந்த பாடில்லை!

தென்னிந்திய திரைப்படங்களைப் பற்றி குறிப்பிடும் போது: தெலுங்கு திரைப்பட சங்கம், மலையாள திரைப்பட சங்கம், கன்னட திரைப்பட சங்கம்  என்கிறார்கள் ஆனால் தமித் திரைப்படங்கள் என்று வரும் போது அதனை தென்னிந்திய திரைப்பட சங்கம் என்கிறார்கள்! 

ஆனால் இன்றுவரை இந்தப் பிரச்சனை தீர்ந்தபாடில்லை!

இங்கு நமது நாட்டில் அப்படி ஒரு பிரச்சனை இருக்கக் கூடாதே என்கிற நோக்கத்தில் தான்,  நான் இதனை எழுதுகிறேன்.

நடிப்பவர்கள் தெலுங்கர்களாக இருக்கலாம், மலையாளிகளாக இருக்கலாம், கன்னடர்களாக இருக்கலாம்!  திரைப்படங்கள் என்பது அப்படித்தான் இருக்கும்.

இங்குத் தமிழைத் தவிர அனைத்தும் மொழிவாரியாகத் தான் குறிப்பிடப்படுகின்றது. தமிழுக்கு மட்டும் அது ஒத்து வரவில்லை! 

ஆனால் மலேசிய நாட்டில் ஏன் நாம் இந்தியத் திரைப்படங்கள் என்று குறிப்பிட வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை! இங்கு எந்த சிக்கலும் இல்லை. வேறு மொழிப் படங்களும் இங்குத் தயாரிப்பதற்கான அறிகுறியும் இல்லை!

பின்னர் எதற்கு இந்தியத் திரைப்படம் என்கிறோம்?  கொஞ்சம் சிந்திக்கலாமே என்பது தான் நோக்கம். தமிழ்த் திரைப் படங்கள் என்பதில் எந்த குறைபாடும் இல்லையே!

சொல்லுவது எனது கடமை. சொல்லிவிட்டேன்! மணி கட்டுவது என் வேலையல்ல! ஜாம்பவான்கள் தான் செய்ய வேண்டும்!

Saturday 18 July 2020

மலேசியப் பொருட்களை வாங்குவீர்!

கொரோனா தொற்று நோயினால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பு என்பது பெரிய பாதிப்பு என்பதில் ஐயமில்லை.

மலேசிய பொருட்களை வாங்கி ஆதரிப்பீர் என்று பிரதமர் முகைதீன் மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். நாட்டில் செலவு செய்யப்படும் ஒவ்வொரு வெள்ளியும் நாட்டின் பொருளாதார மீட்சிக்கு உதவும் என்பது நமக்குப் புரிகிறது.

ஆனால் எது தான் உள் நாட்டுப் பொருள்?  என்பதில் எனக்கு ஐயமுண்டு. உள்நாட்டுப் பழங்கள் எது என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் டுரியான் பழம் என்றால் கூட அது இந்தோனேசியப் பழம் என்கிறார்கள் அல்லது தாய்லாந்து பழங்கள் என்கிறார்கள்! மற்ற வகைப் பழங்கள் உள் நாட்டுப் பழங்கள் தான், அவைகள் நமக்குத் தெரிந்தவை. 

உள் நாட்டு உணவகங்களில் நாம் சாப்பிடுகிறோம். இவைகளும் உள்நாட்டுப் பொருள்கள் தான் என்று நினைக்கிறேன். சுற்றுலாப் பயணங்ள் என்பது எல்லாருக்கும் அமையப்போவதில்லை.  ஆனால் வெளி நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்கலாம். உள்ளூர் சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வரலாம். அது சாத்தியமே. அதனை நம் மக்களே புரிந்து கொள்ளுவார்கள். 

ஓர் ஐயமுண்டு.  நம் பணத்தை உள்நாட்டில் தான் நாம் செலவு செய்கிறோம். வெளி நாடுகளுக்குப் போவதால் நமது பணம் வெளிநாடுகளுக்குப் போகிறது. அதை மட்டுமே நாம் தவிர்க்க வேண்டும்.  மற்றபடி உள்நாட்டில் செலவு செய்யப்படுகின்ற பணம் பொருளாதார மீட்சிக்கு உதவும் என்பது தான் அரசாங்கம் நமக்குச் சொல்ல வருவது. 

அதைத்தான் இப்போது நாம் செய்கிறோம். அரசாங்கம் சொல்ல வருவது எல்லாம் வெளி நாடுகளுக்குப் போகாதீர்கள் என்பது தான் என்று நான் நினைக்கிறேன்.

அதை நாம் ஏற்றுக் கொள்ளலாம். வெளி நாடுகளுக்குப் போவதை தவிர்க்கலாம். உள்நாட்டு சுற்றுலா பயணங்களுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கலாம்.

வேறு வகையில் நாம் எப்படி உதவ முடியும்?  நமக்குத் தெரிந்த சில எளிய வழிகளை நாம் பின்பற்றலாம். நாம் செய்கின்ற செலவுகள் அனைத்தும் உள்நாட்டில் தான்.  நாம் வாங்குகின்ற பொருட்கள் அனைத்தும் உள்நாட்டில் தான்.  இதன் மூலம் தான் நாம் மீட்சி பெற முடியும் என்று நான் நினைக்கிறேன். 

வெளி நாடுகளுக்குப் போகிறவர் யார்? அரசியல் பின்னணி உள்ளவர்கள் தான் வெளி நாடுகளுக்குச் சென்று 'ஷோப்பிங்' செய்கிறார்கள்! இவர்களை முடக்கி வைத்தாலே போதும் பொருளாதாரம் மீட்சி பெற்றுவிடும்! கொள்ளையடித்த பொருள்களை வெளிநாடுகளில் தானே அவர்கள் செலவு செய்கிறார்கள்!

மலேசியப் பொருட்களை வாங்குவதில் நமக்கு எந்த தயக்கமுமில்லை. ஆனால் அரசியல்வாதிகளுக்கு அந்த தயக்கமுண்டு.

அரசியல்வாதிகள் வீட்டுப் பெண்களுக்குத் தான் இந்த அறிவுரை பொருந்தும்!

ஆனாலும் பொது மக்களாகிய நாம் நமது கடமைகளைச் செய்வோம்! உள்நாட்டுப் பொருள்களை வாங்கி நமது நாட்டின் பொருளாதாரம் உயர நம்மாலானதைச் செய்வோம்!

வாழ்க மலேசியா!
 

இதற்கு யார் பொறுப்பு?

ஒரு விஷயம் எனக்குப் புரியவில்லை!

மாதா மாதம்   Indah Water - க்குப் பணம் கட்டி வருகிறோம்.  எதற்கு? வெறும் குப்பைக் கூளங்களை அள்ளிக் கொண்டு போகிறார்களே,  அதற்காகவா? 

அது சரியாகக் கூட இருக்கலாம்.  ஆனால் அதில் வேறு ஒரு விஷயமும் அடங்கி இருக்கிறது. ஏன், ஒவ்வொரு வீட்டிலும், மலக்குழி தொட்டிகள் (septic-tank) என்று ஒன்று இருப்பது Indah Water-க்குத் தெரியாதா?  அதை அவர்கள் மறந்தே போனார்களா அல்லது நாம் தான் மறந்து போனோமா?

ஒரு காலக் கட்டத்தில் மலக்குழி தொட்டிகளை அவர்கள் தான் சுத்தம் செய்தார்கள்.  எந்தக் கட்டணமும் கட்ட வேண்டிய அவசியமில்லை.
 நாம் அவர்களுக்கு மாதா மாதம் பணம் கட்டுவது அதற்காகத்தான்! ஆனால் இப்போது அவர்களே அந்த நடைமுறையை மாற்றிக் கொண்டார்கள்.  அவர்கள் அப்படி மாற்றிக் கொள்ள அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை! அந்த வேலையை அவர்கள் செய்ய மாட்டார்களாம்! நாமே தான் செய்ய வேண்டுமாம்!

அப்படித்தான் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்!  தனியார் நிறுவனம் மூலம் என் வீட்டில் சில வேலைகளைச் செய்ய நேர்ந்தது. அந்த நண்பரிடம் விசாரித்த போது அவர் தான் இந்தத் தகவலைச் சொன்னார். 

பொது மக்கள் எந்த ஒரு புகாரும் செய்யாததினால் இப்போது அவர்கள் வைத்ததே சட்டம் என்கிற ஒரு சூழல் ஏற்பட்டுவிட்டதாக  அவர் சொன்னார். 

ஒரு வேளை அவர்கள் அதற்குக் கட்டணம் வாங்கலாம்.  ஆனால் அங்கும் அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப கட்டணம் வாங்குகிறார்கள். எல்லா இடத்திலும் இலஞ்சம், ஊழல் - இது தான் வாழ்க்கை முறை என்கிற ஒரு நிலைமை நாட்டில் ஏற்பட்டுவிட்டது! யார் ஏமாறுவார் என்று காத்துக் கிடக்கிறார்கள்!

இப்படிப் பொறுப்பாக செயல்பட வேண்டியவர்கள் எல்லாம் பொறுப்பற்று செயல்படுவதால் எந்த ஒரு அரசு அலுவலகத்திற்குப் போனாலும் எல்லாமே பொறுப்பற்ற முறையில் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன!

இந்த நிறுவனம், ஒவ்வொரு மாதமும்,  கோடிக்கணக்கில் பணம் புரளுகின்ற ஒரு நிறுவனம்.  ஆனால் இவர்களின் சேவை என்பது இப்போதைக்குக் குப்பைகளை அள்ளுகின்ற வேலை மட்டும் தான்!  பயனீட்டாளர்களுக்கு வேறு எந்த சேவையையும் இவர்கள் செய்வதில்லை!

இவர்கள் சேவை என்ன என்பது பயனீட்டாளர்களுக்குத் தெளிவாக விளக்க வேண்டும். மக்களுக்குத் தெரிய வேண்டும். ஆனால் அனைத்தும் ஏதோ மறைமுகமாக நடப்பது போல் நிறுவனத்தின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன!

பொதுவாக இவர்களின் சேவை பற்றி யாரும் கண்டு கொள்வதில்லை, வீட்டில் மலக்குழி தொட்டிகளில் அடைப்பு ஏற்படும் வரை!  அப்போது தான் இவர்களின் சேவையை நாம் நாடுகிறோம்! அந்த அடைப்புக்கள் கூட எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஏற்படுகிறது! அதனால் தான் இவர்கள் பொறுப்பிலிருந்து இவர்கள் தப்பித்து விடுகிறார்கள்!

இதற்கான நடவடிக்கைகளைப் பயனீட்டாளர்கள் சங்கம் தான் எடுக்க வேண்டும். அவர்கள் தான் பயனீட்டாளர்களின் குரல்.

இதற்கு அந்த Indah Water நிறுவனமே பொறுப்பு!

Friday 17 July 2020

முயற்சிகளை முடக்கி விடாதீர்கள்!


வாழ்க்கையில் நமக்குத் தெரிந்ததெல்லாம் கடைப்பிடிக்க வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.

அது தான் முயற்சி. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, எதனைச் சாதிக்க வேண்டும் என்று ஒரே கொள்கையோடு இருக்கிறீர்களோ அந்த முயற்சியை மட்டும் கைவிட்டு விடாதீர்கள்.

ஒரு வேளை,  குறிப்பிட்ட வேலை தேடலாம். கல்வியில் முனைவர் பட்டத்தைப் பெற முயன்று கொண்டிருக்கலாம்.  இசைத் துறையில் உலகப் புகழ் பெற நோக்கம் கொண்டிருக்கலாம். பெரிய எழுத்தாளனாக ஆர்வம் கொண்டிருக்கலாம். 

இப்படிப் பலப் பல ஆசைகள். தவறு ஏதுமில்லை. ஆனால் அவைகள் வெறும் ஆசைகளாக மட்டும் போய்விடக் கூடாது.  நமது ஆசைகளை முடக்கி விடக் கூடாது என்பது தான் முக்கியம்.

முயற்சிகளில் மட்டும் முடக்கம் வேண்டாம். 

முயற்சிகளுக்கு வயது கட்டுப்பாடில்லை. இந்தியா, கேரள மாநிலத்தில் ஒரு செய்தியைப் படித்தேன். 90 வயதுக்கு மேல் உள்ள ஒரு பாட்டி ஒரு சாதனைப் புரிந்திருக்கிறார்.  அது நமக்கு 'ஜுஜுபி' என்று தள்ளிவிடலாம். ஆனால் பாட்டிக்கு அது ஒரு வாழ்நாள் இலட்சியம். அவர்,  90 வயதுக்கு மேல், அரசாங்கப் பரிட்சை எழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார்! ஏன் இந்த வயதில்?  ஏழைகள் என்பதால் இளம் வயதில் பள்ளிக்கூடம் போய் அவரால் படிக்க முடியவில்லை. சாகும் காலத்தில் தான் படித்த ஒரு பெண்ணாக சாக வேண்டும் என்கிற ஒரு வெறி அவரிடமிருந்தது! பேரன், பேத்தி என்று வந்த பிறகு கூட அவரால் அந்த ஆசையை அடக்க முடியவில்லை.  படித்துத் தேர்ச்சி பெற வேண்டும் என்கிற முயற்சியை மட்டும் அவர் கைவிடவில்லை. அதன் பலன் தான் அவர் படித்த ஒர் பெண்மணியாக தனது வயதான காலத்தில் அந்த ஆசையை அவர் நிறைவு செய்தார்.

அதைத்தான் முயற்சி என்கிறோம். எந்தக் காரணத்தைக் கொண்டும் உங்கள் முயற்சிகளை முடக்கி விடாதீர்கள்.

நமது தமிழ்ப்பள்ளிகள் இப்போது நிறைய மாணவர்கள் விஞ்ஞானிகளாக மாறி வருகின்றனர். எல்லாமே 12 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள்.  அதன் காரணம் என்ன? விஞ்ஞானத்தின் மேல் உள்ள ஆர்வம். விஞ்ஞானிகளாக மாற வேண்டும் என்கிற ஆர்வம். பல கண்டுப்பிடிப்புக்களை அவர்கள் கண்டுப்பிடித்து உலகளவில் அவர்கள் தங்கப்பதக்கங்களைப் பெறுகின்றனர்.

எல்லாமே முயற்சிகள் தாம்.   அவர்கள் மாணவர்கள் என்பதால் அந்த முயற்சிகளுக்குத் தூண்டுகோளாக இருப்பவர்கள் ஆசிரியர்கள். ஆனால் உலகளவில் பரிசுகள் பெற வேண்டும் என்கிற முனைப்பு அந்த முயற்சி அந்த மாணவர்களுக்கு உண்டு.  அதனால் தான் அவர்கள் இளம் விஞ்ஞானிகளாகப் போற்றபடுகின்றனர்!

அதனால் சொல்லுகிறேன். எந்தக் காரணத்தைக் கொண்டும் உங்கள் முயற்சிகளை வெற்றி பெறும் வரை கைவிடாதீர்கள்! 

முயற்சிகள் முடக்குவதற்கு அல்ல! முயன்று வெற்றி பெறுவதற்கே!

கட்சி தாவல் சட்டம் ...!

கட்சி தாவல்,  சட்டத்துக்குப் புறம்பானது, என்று சட்டம் இயற்றும்படி இப்போது நாம் ஆங்காங்கே கேட்டு வருகிறோம்!

சிலாங்கூர் சட்டசபையும் இப்படி ஒரு தீர்மானத்தை இயற்றி நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும்படி கேட்டுக் கொண்டிருக்கிறது!

இந்த நேரத்தில் இப்படி ஒரு தீர்மானம் தேவை என்று நினைத்திருந்தால் அதனைப் பக்காத்தான் கட்சி ஆட்சியில் இருக்கும் போதே செய்திருக்க வேண்டும்.  அவர்கள் செய்யவில்லை! 

இப்படி ஒரு தீர்மானத்தை அவர்கள் ஆட்சியில் இருக்கும் போதே செய்திருந்தால் இன்று அவர்கள் ஆட்சியை இழந்திருக்க மாட்டார்கள்! இப்படி ஒரு நிலைமை டாக்டர் மகாதீருக்கு ஏற்பட்டிருக்காது!

செய்யவேண்டிய நேரத்தில் அவர்கள் செய்யாததால் அன்று கொள்ளையர்களாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்று கோமாதாக்களாகப் போற்றப்படுகிறார்கள்!

ஜனநாயகத்தில் எதுவும் நடக்கலாம். எதுவும் நடப்பது தான் ஜனநாயகம்! கேடு கெட்டவர்களுக்கெல்லாம் அடைக்கலம் தருவது ஜனநாயகம்!

ஆனால் இன்று இது பற்றிப் பேசுவது கேலிக் கூத்து என்று சொல்லலாம்! இன்றைய ஆளுங்கட்சி ஒரு சில மாநிலங்களைத் தங்கள் கைவசம் கொண்டு வந்தது இந்தக் கட்சி தாவல் மூலம் தான்!  இன்றைய ஆட்சி இன்னும் நீடிக்கிறது என்றால் கொரோனா மட்டும் காரணம் அல்ல, கட்சி தாவல் தான் தலையாய்க் காரணம்!

எதிர்க்கட்சிகள் எல்லாக் காலங்களிலும் கட்சி தாவல் பற்றி பேசுவார்கள். அதற்குக் காரணம் அவர்கள் பலவீனமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். அவர்களே ஆளுங்கட்சியாக மாறினால் அப்போதுங் கூட அவர்கள் கட்சி தாவலைப் பற்றி வாய்த் திறக்கமாட்டார்கள்!  அப்போதும் அவர்கள் பலவீனம் எங்கோ இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியும்.

ஒன்று மட்டும் நிச்சயம். அப்படி ஒரு சட்டம் எந்தக் காலத்திலும் வராது என்பதை உறுதியாக நம்பலாம்! காரணம் கட்சி தாவல் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் தேவையான ஒன்று. தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளுவார்கள்!

இந்தக் கட்சித் தாவலை,  வாக்களித்தவர்கள் மட்டும் தான் எதிர்ப்பாளர்கள்! உண்மையான எதிர்ப்பு என்பது பொது மக்களிடமிருந்து தான் வரவேண்டும். அரசியல்வாதிகள் பக்கமிருந்து வராது.  காரணம், இந்தக் கட்சித் தாவல்கள் மூலம் கோடிக்கான வெள்ளிகள் கைமாறுகின்றன.  இந்த ஐந்து வருடங்களில் பார்க்காத பணத்தை அந்த ஒரு தாவலின் மூலம் ஓர் அரசியல்வாதி பார்த்து விடுகிறான்! ஒரு தாவலின் மூலம் பல தலைமுறைக்கு அவன் பணம் சம்பாதித்து விடுகிறான்!

இப்போது சொல்லுங்கள்,இந்த நிலையில், எந்த அரசியல்வாதி எதிர்ப்பான்?  கட்சிக்குக் கொள்கை இருக்கிறது. எந்த அரசியல்வாதிக்குக் கொள்கை இருக்கிறது? அவன் கட்சியின் கொள்கையே அவனுக்குத் தெரியாது!

அரசியல் என்பதே பணம் கொட்டும் ஓர் அமுதசுரபி. நேர்மை, நீதி என்பதெல்லாம் பாடப் புத்தகங்களில் உள்ள ஒரு பாடம்! தேவை என்றால் இதில் சமய நூல்களையும் சேர்த்துக் கொள்ளலாம்! அவ்வளவு தான்!

கட்சி தாவலாம்! சட்டம் தாவலாம்! கட்சி தாவல் சட்டமும் தாவலாம்!

Thursday 16 July 2020

இங்கேயும் இலஞ்சமா?

"அம்மாடியாவ்! இங்கேயும் இலஞ்சமா?"   என்று கேட்கும் அளவுக்கு இலஞ்சம் எல்லை மீறிவிட்டது என்று தான் நினைக்கத் தோன்றுகிறது!

ஒரு சில தினங்களுக்கு முன்னர் தான் காவல் துறைத் தலைவர், டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் பாடோர்,  நாட்டின் எல்லைப் புறங்களிலே இலஞ்சம் தண்ணீராய் ஓடுகிறது என்று கொந்தளித்துப் பேசியிருந்தார்!

இப்போது இன்னொரு அடி! தங்களுக்குப் பதவி உயர்வு வேண்டும் என்பதற்காக காவல்துறையைச் சேர்ந்தவர்கள். போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற,  இலஞ்சம் கொடுத்து காரியத்தைச் சாதிக்க நினைக்கிறார்களாம்!

இப்போது காவல் துறை எப்படி இயங்குகிறது என்பது நமக்குப் புரிகிறது!ஒரு இடத்தில் கொடுத்தால் இன்னொரு இடத்தில் வாங்க வேண்டும்! அதைத்தான் காவல் துறை செய்கிறதோ!

இலஞ்சம் கொடுத்து தேர்ச்சி பெற வேண்டும், இலஞ்சம் கொடுத்து பதவி உயர்வு பெற வேண்டும்  என்று நினைக்கும் அதிகாரிகள் எப்படி தங்களது தொழிலில் பற்றுறுதியோடு இருப்பார்கள் என்கிற கேள்வி எழுகிறது!

இலஞ்சம் கொடுக்கிறார்கள் என்றால் அவர்கள் நேர்மையற்றவர்கள், நீதி நேர்மையற்றவர்கள், நாட்டுப்பற்றற்ற துரோகிகள், சுயநலவாதிகள் - இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்!  நாட்டுப்பற்றுள்ளவர்கள் இலஞ்சம் பக்கமே தலை வைத்தே படுக்க மாட்டார்கள்!

ஆனால் காவல் துறைத் தலைவரே நெஞ்சம் வெதும்பி பேசியிருக்கிறார். அதனை அவர் கடுமையாகவே கருதுகிறார் என்பது அவர் பேச்சில் தெரிகிறது.  இலஞ்சம் கொடுப்பவர் மீதும் குற்றம், இலஞ்சம் வாங்குபவர் மீதும் குற்றம்.  ஆனால் இது பொதுவான சட்டம். ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

அதனை காவல் துறையில் உள்ளவர்கள் செய்வார்களானால் அது மிகவும் கடுமையானது. இலஞ்சத்தைக் கொடுத்து சோம்பேறிகள்  மிக எளிதாக பதவி உயர்வு பெறுவார்களானால் அவர்களால் நாட்டுக்கு எந்த விதப் பயனுமில்லை. அவர்கள் எளிதாகவே அனைத்தையும் சாதிக்கப் பார்ப்பார்கள்! கடுமையான உழைப்பு இருக்காது! பொது மக்களை ஆழம் பார்ப்பவர்களாக இருப்பார்கள்!

எது எப்படி இருப்பினும் காவல் துறைத் தலைவரின் இந்தக் குற்றச்சாட்டை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது!  அவரே  கூறியிருப்பது போல இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

பதவி உயர்வுக்காக இலஞ்சம் கொடுப்பது என்பது மிக மிக மட்டமான செயல். அப்படி என்றால் கடும் உழப்பாளிகள் அடி மட்டத்திலேயே இருக்க வேண்டுமா? பதவி உயர்வுக்குத் தகுதியானவர்கள் கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்க வேண்டுமா? பல கேள்விகள் உண்டு.

காவல் துறைத் தலைவர் சொல்லுவது போல இது போன்ற நடவடிக்கைகளை அவர் இனிச் சகித்துக் கொள்ள மாட்டார் என நம்பலாம்.

இவர்கள் மீது நடவடிக்கை, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்னும் உத்தரவாதமே போதும்!

இலஞ்சம் ஒழியும் என நம்புவோம்!

Wednesday 15 July 2020

ஆதரவு கரம் நீட்டுங்கள்!

கோரோனா தொற்று நோயினால் "நேரம் நல்ல நேரம்!" என்று பாடுகின்ற சூழலில் நாம் யாரும் இல்லை!

பலர் வேலை இழந்திருக்கின்றனர்.  குடும்பங்கள் நிலை குலைந்திருக்கின்றன.   இப்படித்தான் தினசரி திணறல்கள் மக்களிடையே.  

ஆனால் என்ன செய்வது? ஏற்றம் இறக்கம் தான் வாழ்க்கை.  யாரும் தப்பிக்க வழியில்லை! நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். எதிர்த்துத் தான் போராட வேண்டும்!

வேலை இழந்த ஒரு பெண்மணி தனது மோட்டார் சைக்கிளில் ஒரு சிறு வியாபாரம் செய்து கொண்டிருந்தார். பத்தாய் காய் வியாபாரம்.  வேறு என்ன அவர் வைத்திருந்தார் என்று தெரியவில்லை. ஆனால் பத்தாய் காய் தான் வேளியே தெரிந்தது.  வீடு வீடாக சென்று கொண்டிருந்தார். 

என் வீடு வந்த போது என் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தார்.  "வேலை இல்லை! தொழிற்சாலை மூடிவிட்டார்கள்!" என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

நான் ஏற்கனவே சொல்லி வைத்திருந்தேன். நம் ஆள்கள் யாரும் சிறு சிறு வியாபாரங்கள் செய்து வந்தால் அவர்களுக்கு ஆதரவு தர வேண்டியது நமது கடமை என்று. ஆமாம் வேலை இழந்த அவர்களுக்கு வேறு வகையில் நாம் என்ன செய்து விட முடியும்? 

முதலில் அந்தப் பெண்மணியைப் பாராட்ட வேண்டும். நமது பெண்கள் இப்படித் துணிவாக வெளியே வந்து தங்களுக்குத் தெரிந்ததை செய்ய ஆரம்பித்திருக்கிறார்களே, அதற்கே பெரிய தைரியம் வேண்டும். 

வேலை கிடைக்கும் போது வேலை கிடைக்கட்டும். அது வரை குடும்பத்தைப் பட்டினி போட முடியுமா? துணிந்து செயல் பட வேண்டும். அதைத்தான் நமது பெண்களிடமிருந்து நாம் எதிர்ப்பார்க்கிறோம். 

ஆமாம் இந்த நிலையில் நமது கடமை என்ன?  அவர்களுக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டும். அவர்களும் தங்களது குடும்பத்தைக் காப்பாற்ற நாலு காசு சம்பாதிக்கட்டும்.  அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதால் நாம் எந்த வகையிலும் குறைந்து விடப் போவதில்லை. 

இன்றைய அவர்களது நிலை,  நாளைக்கு நமக்கும் வரலாம்! எதுவும் நிரந்தரமில்லை! 

அதனால் அனைத்தையும் குறுகிய கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டாம்.

இப்படிச் சிறு சிறு வியாபாரம் செய்கிறவர்களுக்கு நமது ஆதரவு கரம் நீட்டுவோம்!

மீண்டும் கூட்டணி தானே?

திடீர் தேர்தல் வந்தால் டாக்டர் மகாதிரும் அவரது ஆதரவாளர்களும் என்ன செய்வார்கள்?

அவர்கள் புதிய கட்சி தொடங்க வேண்டும். அந்தக் கட்சியின் சார்பில் அவர்கள் போட்டியிட வேண்டும்.

புதிய கட்சி தொடங்குவது கூட நடக்குமா என்றும் சொல்ல முடியாது! காரணம் ஆளுங்கட்சி அதற்குத் தடையாகக் கூட இருக்கலாம்! இன்றைய ஆளுங்கட்சி எந்த அளவுக்கு டாக்டர் மகாதிருக்கு முட்டுக்கட்டையாக இருக்குமோ அந்த அளவுக்கு அவர்கள் புதிய கட்சி தொடங்க தடையாக இருக்கலாம்!

இது அரசியல். நீதி, நியாயம் என்கிற வார்த்தைகளெல்லாம் இங்கு எடுபடாது! காரணம் அப்படித்தான் டாக்டர் மகாதிர் தனது ஆட்சி காலத்தில் இருந்தார்!  அவரின் சிஷ்யர்கள் மட்டும் வேறு மாதிரியாகவா இருக்கப் போகிறார்கள்!

சரி அப்படியே தனி கட்சி அமைத்து போட்டி இடுகிறார் என்றே வைத்துக் கொள்வோம். அந்தக் கட்சியை அவரால் மலேசிய அளவில் கொண்டு செல்ல முடியாது! அந்த அளவுக்கு அவருக்குப் படை பலம் இல்லை!

எப்படியோ தனித்து, தனிக்கட்சியாக அவரால் போட்டிப் போட முடியாது. வேறு கட்சிகளுடன் சேர்ந்து தான் அவர் போட்டியிட வேண்டும்.  அதற்கு அவருக்கு ஒரு கூட்டணியுடன் சேர வேண்டும் என்கிற ஒரே வாய்ப்பைத் தவிர வேறு தேர்வு இல்லை!

அதே சமயத்தில் மூன்றாவது அணி என்பதெல்லாம் நமது நாட்டில் சாத்தியமில்லை. அந்த அளவுக்கு நமக்கு அரசியல் அறிவு போதாது. நமது அரசியல் என்பது சமயமும், இனமும் கலந்த குறுகிய அரசியல்!  இந்த அரசியலில் கொள்ளையடிப்பது கூட நேர்மை தான் என்று போதிக்கப்படுகின்ற அரசியல்!

அதனால் டாக்டர் மகாதிர் எந்தக்கட்சியுடன் கூட்டணி வைப்பார்? மீண்டும் அவர் நம்பிக்கை கூட்டணியுடன் தான் கூட்டணி வைக்க வேண்டிய சூழல் வரும்.

அப்போதும் அவர்களுக்கு இதே பிரச்சனை மீண்டும் தலை தூக்கும்! அவர்கள் அன்வார் பிரதமராக வருவதை ஆதரிக்காமாட்டார்கள்!

ஏதோ ஒரு நம்பிக்கை. இந்த முறை அதிகப் பெரும்பான்மையுடன் நம்பிக்கை கூட்டணி வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை அதிகமாகவே உள்ளது!

எப்படிப் பார்த்தாலும் டாக்டர் மகாதிருக்கு நம்பிக்கை கூட்டணி தான் மீண்டும் கை கொடுக்க வேண்டும்!

Tuesday 14 July 2020

முகைதீன் யாசின் சரித்திரம் படைத்துவிட்டார்!


நாட்டின் முன்னாள் பிரதமர், டாக்டர் மகாதிர் உலக சரித்திரத்தில்  யாரும் செய்ய முடியாததை செய்து காட்டியவர்.

எந்த ஒரு நாட்டிலும் பிரதமர் பதவியிலிருந்து விலகியப் பின்னர், இரண்டாம் முறையாக 22 ஆண்டு காலம் தான் சார்ந்திருந்த கட்சியையே எதிர்த்து, போட்டிப் போட்டு மீண்டும் பிரதமராக வந்தவர் யாருமில்லை. உலக சரித்திரத்தில் அப்படி யாரும் இல்லை. அது தான் டாக்டர் மகாதிரின் சிறப்பு.  அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பது தான் உண்மை!

இன்றைய பிரதமர் முகைதீன் யாசின் பிரதமராக கொல்லைப்புற வழியாகப் பதவிக்கு வந்த பின்னர் என்ன நடந்தது என்று பார்ப்போம். 

அவர் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். மாற்றங்கள் என்றால்?  தனது எதிரிகள் யார், யார் தன்னை எந்த நேரத்திலும் குறி வைப்பவர்கள் என்பதையெல்லாம் கணித்து அவர்களை எல்லாம் களை எடுத்தார்!  

இவைகள் எல்லாம் இது போன்ற கொல்லைப்புற ஆட்சியில் நடக்கின்றவை தாம்! ஆச்சரியப்பட ஒன்றுமில்லை! ஆனால் இவரது  களையெடுப்பில் அம்னோ கட்சி அதிகமாக சம்பந்தப்பட்டிருக்கிறது! அம்னோ தான் பல களையெடுப்புக்களுக்குக் காரணமாக இருப்பவர்கள்; இருந்தவர்கள்! அம்னோவுக்கு அந்த அதிகாரம் கொடுத்திராவிட்டால் இந்நேரம் ஆட்சி கவிழ்க்கப்பட்டிருக்கும்!

இப்போதைய பிரதமர் முகைதீன் காலத்தில் எத்தனையோ களையெடுப்புக்கள் நடந்தாலும் முக்கியாமான இரண்டைக் குறிப்பிட வேண்டும்.  ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் இலத்திஃபா கோயா தான் முதல் பலி. அவரைக் கண்டால் அம்னோவுக்கு அடிவயிற்றில் புளி கரைத்தது போல! அது உடனடியாக நடந்தது! 

அடுத்தது முகைதீனின் முக்கிய பலி நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஆவார்.  டான்ஸ்ரீ முகம்மது அரிஃப். இவரைப்பற்றி நாம் சந்தேகப்பட ஒன்றுமில்லை.  நேர்மையான மனிதர் என்று பெயர் எடுத்தவர். அம்னோவோ அல்லது பிரதமரோ நேர்மை என்றாலோ எட்டி நிற்பவர்கள்! அதனால் இவரையும் துணை சபாநாயகரையும் கழட்டி விட்டார்கள்!

இது பற்றி முன்னாள் சபாநாயகர் முகம்மது அரிஃப் பேசும் போது இப்படி ஒரு சம்பவம் 800 ஆண்டுகளாக எங்கேயும் நடந்ததில்லை என்கிறார்! அவருக்குத் தெரிந்த உண்மையை அவர் சொல்லுகிறார்! யாராலும் இதனை மறுக்க முடியாது!

இந்த வகையில் பார்க்கும் போது நஜிப்பைப் போல இன்றைய பிரதமரும் சரித்திரம் படைத்துவிட்டார்! முன்னாள் பிரதமர் ஊழலக்கு எப்படிப் பெயர் பெற்றாரோ அதே போல 800 ஆண்டுகாலம் நடக்காத ஒரு சம்பவத்தின் மூலம் நடக்க வைத்த பெருமையை அவர் பெறுகிறார்!

இன்னும் என்ன என்ன பெருமைகளை அவர் பெறப் போகிறாரோ என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

அரசியல்வாதிகள் தங்களது பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ள எந்த எல்லைக்கும் போவார்கள் என்பதை இந்த நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றன!

இன்னும் பல சரித்திர நிகழ்வுகளை எதிர்ப்பார்க்கலாம்!

இந்தியர்கள் என்ன இருட்டா?

ஆளுங்கட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாக் காலங்களிலும் நாடாளுமன்றத்தில் இந்தியர்களைக் கேவலப்படுத்துவது என்பது தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது!

அது ஏன் என்பது நமக்குப் புரியவில்லை!   நாடாளுமன்றம் கூடிய முதல் நாளே அந்தத் தாக்குதல் அரங்கேயிருக்கிறது.

இத்தனைக்கும் எத்தனை நாளைக்கு இந்த அரசாங்கம் தாக்குப் பிடிக்கும் என்பதே இன்னும் யாரும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை! எந்த நேரத்திலும் கவிழலாம் என்று மக்கள் நாள்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்! 

இந்த நேரத்தில்,  அம்னோ,  பாலிங்,  நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அசீஸ் அப்துல் ரகீம்,   பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரிராணி பட்டுவை தரக்குறைவாகப் பேசி இருப்பது அவர் மனதில் உள்ளது என்ன என்பது ஓரளவு நமக்குப் புரிகிறது. "இருட்டாக இருப்பதால் கண்ணுக்குத் தெரியவில்லை" என்கிற பொருளில் அவர் பேசியிருப்பது இந்தியர்களை இழிவுபடுத்துவது தான் அவரின் நோக்கம் என்று எடுத்துக் கொள்ளலாம்.

முதல் நாள் நாடாளுமன்ற கூட்டத்தில் இப்படி அவர் பேச வேண்டிய அவசியம் என்ன? இவர் அம்னோவைச் சேர்ந்தவர் என்கிற முறையில் இன்றைய அரசாங்கம் தொடர்வதை அவர் விரும்பவில்லை. அம்னோவைப் பொறுத்தவரை இப்போதைய அவர்களது "மந்திரம்" எல்லாம் எப்போது தேர்தல்? என்பது மட்டும் தான்!

அவரது நோக்கம் எல்லாம் பிரதமர் முகைதீன் யாசின், அவரது தரப்பினர், பொதுத் தேர்தலில் வெற்றி பெறக் கூடாது என்பது தான் அம்னோவின் நோக்கம்.  முடிந்தவரை நடப்பில் உள்ள அரசாங்கத்தின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்பது தான் அம்னோவின் நோக்கமாக உள்ளது!

அதனை அவர் வெற்றிகரமாகச் செய்து விட்டார், இந்த "இருட்டு" என்பதன் மூலம்!

எப்படியோ அம்னோ தரப்பினர் தொடர்ந்து இந்தியர்களைக் கேவலப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றனர்.

சென்ற பொதுத் தேர்தலில் நாம் எப்படி நமது எதிர்ப்பைக் காட்டினோமோ அதனையே தான் இப்போதும் செய்ய வேண்டும்.  திமிர் பிடித்தவர்களுக்கு திமிர் தான்  பதிலாக இருக்க வேண்டும்!

நம்மை மதிக்காதவனை நாம் ஏன் மதிக்க வேண்டும்?

Monday 13 July 2020

டாக்டர் மகாதிருக்கு இப்படி ஒரு நிலையா!



முன்னாள் பிரதமர், டாக்டர் மகாதிர், இப்போது எதிர்க்கட்சி வரிசையில்,  அதுவும் எந்த எதிர்க்கட்சியையும் சேராத,  சுயேச்சையாக தனது ஐந்து ஆதரவாளர்களுடன் தனியாக நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கிறார்!

சில  சமயங்களில் சில விஷயங்கள் நடப்பதைப் பார்க்கும் போது இதைப் பற்றி என்ன சொல்லுவது, நல்லதா கெட்டதா, ஊழ்வினையா என்று எதனையும் தீர்மானிக்க முடியவில்லை!

மலேசியாவின் நீண்டகாலப் பிரதமர், 22 ஆண்டு காலம்  பதவி வகித்தவர். அதன் பின்னர் பதவியிலிருந்து விலகினார். பின்னர்  முந்தைய அரசாங்கத்தைப் பொதுத் தேர்தலில் தோற்கடித்து தனது 93-வது வயதில் மீண்டும் பிரதமர் ஆனவர். 

அவர் இன்னும் பிரதமர் பதவியில் இருக்க வேண்டியவர் அல்லது அதற்கு ஈடாக வேறு ஏதேனும் பதவியில் இருக்க வேண்டியவர். மிகக் கௌரவமாக இருக்க வேண்டிய ஒரு மனிதர். 

ஆனாலும் இன்று அவர் நிலைமை யாரும் எதிர்பாராத ஒன்று என்று தான் சொல்ல வேண்டும்.  அவருடைய வயதில் அவர் சொந்தமாக முடிவெடுத்துச் செயல் பட்டிருந்தால் அவர் பாராட்டப்பட்டிருப்பார். ஆனால் சுயநலவாதிகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு அவர் செயல்பட்டதால் அனைத்தும் சரிந்துவிட்டன. 

கடந்தகால ஊழல் ஆட்சியைக் கவிழ்த்தது என்பது, வாராத வந்த மாமணி என்பது போல நம் கைக்கு வந்தது! ஆனால் அவரே ஆட்சியை அமைத்து,  பின்னர் அவரே அந்த ஆட்சியைக் கவிழ்த்தது, அவர் இந்தப் புதிய ஊழலற்ற ஆட்சியை விரும்பவில்லை என்பதைத்தான் அவரது செயல் சுட்டுகிறது என்பது தான் நமது குற்றச்சாட்டு.

எப்படி இருப்பினும் அனைத்தும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன. ஊழல் புரிந்தோர் இப்போது புனிதர் ஆகிவிட்டனர்! அவர்களுக்குச் சொர்க்கம் இப்போதே கண்களுக்குத் தெரிய ஆரம்பித்துவிட்டது!  தேர்தல் எப்போது என்று இப்போதே கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிட்டனர்! 


நம்முடைய ஆதங்கம் எல்லாம் இந்த வயதான டாக்டர் மகாதிர் தனது கடைசி காலத்தில் நாட்டுக்கு நல்லது செய்தாரா அல்லது கெடுதல் செய்தாரா என்று தான் கேட்கத் தோன்றுகிறது!

அவரது இன்றைய நிலைமையைப் பார்க்கும் போது நமக்கு வருத்தம் தான்!

Sunday 12 July 2020

மீண்டுமா,,,,,,,,,,?


மீண்டும் இந்த அதிர்ச்சி தரும் நிகழ்ச்சி நடந்திருக்கிறது.

மலேசியர்கள் இந்த அளவுக்குக் கொடூரமானவர்களா என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை.

ஏற்கனவே இது போன்ற நிகழ்ச்சி ஒன்று நடந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அதற்கான தண்டனையும் கொடுத்தாகிவிட்டது.

பூனை, நாய்  இவைகளெல்லாம் நம்மோடு எல்லாக் காலங்களிலும் சேர்ந்து வாழுகின்ற மிருகங்கள்.  சில சமயங்களில் அவைகள் செய்கின்ற சேட்டைகள் எல்லை மீறுவது உண்டு என்பது உண்மை தான். 

அதற்காக  மூன்று பூனைகளையும் மூன்று சலவை இயந்திரங்களில் போட்டு அதனைக் கொலை செய்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. 

இது நடந்தது கெப்போங், தாமான் டேசா அமான் பூரியில் உள்ள ஓர் சலவை நிலையத்தில். 

ஆனால் இப்படிக் கொலை செய்த அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வரும் போது யார் என்ன செய்ய முடியும்?  இவர் ஆபத்தானவர் என்பது தெரிகிறது. காரணம் இவர் கையில் எது கிடைத்தாலும் இப்படி அவர் தொடர்ந்து செய்யக் கூடும் அல்லவா!

அதனால் அதிகாரிகள் அந்த இளைஞர் வெளியே சுற்றிக் கொண்டு இரூப்பதை விட தேவையான சிகிச்சையைக் கொடுத்து அவர் நல்ல மன நிலைக்கு வர ஆவன செய்ய வேண்டும்.  

இது போன்ற நிகழ்ச்சிகள் தொடராமல் பார்த்துக் கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை நாம் உணர வேண்டும்.

காரணம் இன்று பூனை என்றால் நாளை நாயாக இருக்கலாம் அல்லது குழந்தையாகக் கூட இருக்கலாம்.  யார் கண்டார்?

இவர்கள் மட்டும் தான் துரோகிகளா!

இலஞ்சம் வாங்குவது என்பது குற்றம், குற்றமே தான்!

யார் வாங்க வேண்டும் யார் வாங்கக் கூடாது என்கிற பேதம் எதுவும் கிடையாது!  இலஞ்சம் நாட்டிலிருந்து ஒழிக்கப்பட வேண்டிய விஷக்கிருமி. அதில் ஒன்றும் சந்தேகமில்லை.

நமது நாட்டின் காவல்துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமீட் படோர், தனது சமீபத்திய செய்தியாளர் கூட்டத்தில் நாட்டின் எல்லைகளில் பணிபுரியும் அதிகாரிகள் இலஞ்சம் வாங்குவதை வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.

இந்த அதிகாரிகளின் செயல்களினால் ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேறிகள் மிகஎளிதாக நாட்டிற்குள் புகுந்து விடுவதாக அவர் கூறியிருக்கிறார்.  இப்படி இலஞ்சம் வாங்கிக் கொண்டுச் செயல்படும் அதிகாரிகளைத் துரோகிகள் என்பதாக அவர் வர்ணித்திருக்கிறார்.

காவல்துறையின் தலைவர் கூறுவதில் நியாயமிருக்கிறது என்பதில் சந்தேகிக்க ஒன்றுமில்லை.  காரணம் சட்டவிரோதக் குடியறிகளைக் கட்டுப்படுத்துவது அப்படி ஒன்றும் எளிதானச் செயல்களாகத் தெரியவில்லை! அவர்கள் நாடெங்கிலும் மலேசியர்களோடு ஒன்றரக் கலந்து விட்டார்கள்! இப்போது நாம் என்ன செய்ய? காலங்கடந்து புலம்புகிறோமோ?

நாம் இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான செய்தி ஒன்று உண்டு. எல்லைகளில் பணிபுரியும் காவல்துறையினரோ அல்லது காவல்துறை அதிகாரிகளோ மாதத்திற்கு ஒரு முறை மாற்றப்பட்டாலும் இலஞ்சம் ஒழிந்தபாடில்லை என்பது தான் மிகவும் வேதனைக்குரிய விஷயம்! அது வழக்கம் போல,  பொழுதொரு வண்ணம் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது! 

எல்லையில் பணிபுரிவோருக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை அல்லது தலைக்கு ஒரு தொகை என்று வசூல் வேட்டை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது! இலஞ்சம் நின்றபாடில்லை!

காவல்துறைத் தலைவர் இந்த எல்லை அதிகாரிகளை மட்டும் துரோகிகள் என்று கூறுவதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எல்லையில் இல்லாத காவல்துறையினரின் இலஞ்சத்தை அவர்கள் தியாகிகள் என்று சொல்ல வருகிறாரா?

எல்லாமே இலஞ்சம் தான். இங்கு ஒழிக்க முடியாவிட்டால் அங்கும் ஒழிக்க முடியாது! அது தான் உண்மை!  இன்றைய நிலவரப்படி மேலிருந்து கீழ் வரை இலஞ்சம் தண்ணீராகப் பாய்ந்து கொண்டிருக்கிறது!

இலஞ்சத்தை யார் ஒழிப்பது?  கொடுப்பவர் கொடுக்கவில்லை என்றால் இலஞ்சம் தானாகவே ஒழிந்துவிடும்! ஆனால் காரியம் நடக்காது!  அதனால் காரியம் நடக்கும்படி பார்த்துக் கொண்டால் இலஞ்சத்திற்கு வேலை இல்லை!

அதனால் இன்று அதிகாரத்தில் உள்ளவர்கள் இலஞ்சத்தை ஒழிப்பதற்கு ஆவன செய்ய வேண்டும். ஒழிக! ஒழிக! என்று அதிகாரமே இல்லா தவனும் கத்துகிறான் அதிகாரம் உள்ளவனும் கத்துகிறான்!

அப்படி என்றால் இந்தத் துரோகிகளைத் துரத்துவது எப்படி? இது முற்றிலுமாக அரசாங்கத்தின் பொறுப்பு.  பொறுப்புள்ளவர்கள் பதவியில் இருந்தால் எல்லாமே சரியாக இருக்கும். பொறுப்பற்ற ஊழல்வாதிகள் பதவியில் இருந்தால் துரோகிகளைத் தான் நாம் வளர்த்துக் கொண்டிருப்போம்!

இலஞ்சம் வாங்கும் அனைவருமே துரோகிகள் தாம்!

Saturday 11 July 2020

மகிழ்ச்சி தரும் வெற்றிகள்!


சமீப காலங்களில் நடந்த இரண்டு விஷயங்கள் எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன!

அதில் ஒன்று,  விஜய் தொலைக்காட்சியில் நடந்த சுப்பர் சிங்கர் பாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற செந்தில் கணேஷ்- ராஜலெட்சுமி தம்பதியினர்.
 இவர்கள் வெற்றியை என்னால் சதாரண வெற்றியாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

அவர்கள் பாடியதெல்லாம் கிராமியப் பாடல்கள் மட்டுமே. எந்த சங்கீதப் பின்னணியும் இல்லாதவர்கள்.  எந்தப் பக்கபலமோ, பண பலமோ இல்லாதவர்கள். தங்களுக்கு என்ன இசை தெரியுமோ அதை மட்டுமே அவர்கள் பாடினார்கள். 

அதிலும் குறிப்பாக செந்தில் இளம் வயதிலிருந்தே கிராமிய இசையைப் பாடியே, அந்தத் துறையில் மட்டுமே, தனது திறமையை வளர்த்துக் கொண்டவர். அவர் பாடிய பாடல்களுக்கு ஈடு இணையே இல்லை.

இத் தம்பதியினர் பாடிய பாடல்களைக் காணொளியில் கண்டு களித்தவர்கள் இரண்டு கோடிகளுக்கு வந்துவிட்டது!

இவர்கள் ஓர் அதிசயம் என்று தான் சொல்லுவேன். தான் சார்ந்த துறையிலேயே நிலைத்து நின்று, அந்தத் துறையிலேயே வெற்றி பெற வேண்டும் என்கிற இலட்சியத்தோடு உழைத்து, அவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர். இவர்களின் உழைப்பையும், நம்பிக்கையையும் வேறு யாரிடத்திலும் நான் பார்த்ததில்லை!


அதே போல சுகு பவித்ரா தம்பதியினரையும் கணடு நான் வியக்கிறேன்.  தோட்டப்புறத்தில் வேலை செய்யும் மிகச் சாதாரண தோட்டப் பாட்டாளிகள்.  பண பலமோ, பொருளாதார பலமோ, ஆள் பலமோ எதுவும் இல்லை/

ஆனால் பவித்ராவிடம் ஒரு தேடல் இருந்தது. கணவர் மட்டுமே வேலை செய்து வரும் நிலையில்,  குடும்பத்தை நடத்த முடியாத சூழலில், குழந்தைகளைப் பார்க்க ஆளில்லாத நேரத்தில்,  வீட்டிலிருந்து கொண்டே ஏதாவது செய்ய வேண்டும் என்கிற தேடல், நெருடல் தொடர்ந்து அவரிடம் இருந்து வந்திருக்கிறது. 

தொழிற்சாலையில் வேலை செய்ய இயலாத நிலையில் வீட்டிலிருந்து ஏதாவது செய்ய வேண்டும் என்கிற தேடல் தான் அவரை உயர்த்தியிருக்கிறது! நம்மிடம் தேடல் இருந்தால் நமக்கு உதவிட நாலு பேரை இறைவன் அனுப்பி வைப்பார். அப்படித்தான் அவருடைய நண்பரான ஓர் இந்தோனேசியப் பெண் அவருக்கு உதவ முன் வந்திருக்கிறார். அவர் மூலம் தான் பவித்ராவின் புதிய முயற்சி வெற்றிகரமாக அரங்கேறியிருக்கிறது!

இந்த இரண்டு இளம் தலைமுறையினரின் வெற்றி நமக்கு, இந்தத் தமிழ்ச் சமுதாயத்தின் மேல், அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. 

வெற்றி பெற பணம் வேண்டும், பதவி வேண்டும், ஆள் பலம் வேண்டும் என்கிற அனைத்தையும் தகர்த்தெறிந்திருக்கிறார்கள் இந்தத் தம்பதியினர்!

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள்.  உண்மை தான். நமக்கு மனம் இல்லை என்றால் எதுவும் நடக்காது! மனம் இருந்தால் தான் நாம் நினைத்தவை நடக்கும்!

இவர்களை நினைத்து நாமும் பெருமைப்படுவோம்! நம்மில் ஒருவர் வெற்றி அடைந்தால் பெருந்தன்மையாக பாராட்டுவோம்!

வாழ்த்துவோம்!


Friday 10 July 2020

இப்படி ஒரு நல்ல மனிதர்!

நல்ல மனிதர்களைப் பார்ப்பது என்பது மிகுவும் குறைவு தான்!

அதற்காக நல்ல மனிதர்களே இல்லை என்று சொல்ல முடியுமா? முடியாது! நல்லவர்கள் இருப்பதால் தான் நாட்டில் மழை பெய்கிறது என்பது உண்மையிலும் உண்மை.  நம்பலாம்!

நேற்றிரவு ஒரு காணொளியை காண நேர்ந்தது.  என்னால் அதனைச் சேமிக்க முடியவில்லை.  அதனால் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை என்னால் குறிப்பிட முடியவில்லை. மன்னிக்க வேண்டுகிறேன்!

இஸ்லாமிய நண்பர் ஒருவர் ஒர் இஸ்லாமியைப் பெண்ணைப் பற்றி விமர்சித்துக் கொண்டிருந்தார்.

அந்தப் பெண் செய்த தவறு என்ன?  அந்தப் பெண்ணுக்குக் கொஞ்சம் வாய் நீளம்! கொஞ்சம் பொறாமை குணம்! அது தான் பிரச்சனை!

சுகு பவித்ரா தம்பதியரைப் பற்றி நாம் அறிவோம். காணொளி சமையல் மூலம் பிரபலம் அடைந்தவர்கள். மேலே குறிப்பிட்ட அந்தப் பெண்மணி தொடர்ந்து அந்தத் தம்பதியரை முகநூலில் தாக்குதலை மேற் கொண்டிருந்தார்! தொடர் தாக்குதல், இழிவானப் பேச்சுக்கள்!

இதனைப் பார்த்த அந்தப் பெரியவர் "ஓர் இஸ்லாமியப் பெண்ணா இப்படி நடந்து கொள்ளுவது?" என்கிற கோபம் அவருக்கு.

அந்த சுகு பவித்ரா தம்பதியர் அப்படி ஒரு இடத்திற்கு வர உழைத்திருக்கிறார்கள். வசதி வாய்ப்புக்கள் குறைவாக இருந்தாலும் இருப்பதைக் கொண்டு கிடைத்த வாய்ப்புக்களைச் சரியாகப் பயன்படுத்தி தங்களை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். 

தங்களின் சுய முயற்சியால் உயர்ந்த அந்தத் தம்பதியரை அந்தப் பெண்மணி கேவலமாகப் பேசுவதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!  அது ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்க வேண்டிய கோபம்! அது அவருக்கும் இருக்கிறது. 

இந்தப் பொறாமை குணத்தைத் தான் அவர் கண்டித்திருந்தார். இன்னொருவரின் முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப்பட யாருக்கும் உரிமையில்லை! பொறாமைப்படாதே! முடிந்தால் நீயும் உன் உழைப்பைப் போட்டு முன்னுக்கு வா! அதைத்தான் இஸ்லாம் சொல்லுகிறது என்பது தான் அவரது பேச்சின் சுருக்கம்.

இந்தப் பேச்சின்  போது இன்னொரு விஷயத்தையும் அவர் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பெண்மணி ஓர் இந்துவாக இருந்து இஸ்லாத்தை தழுவியவர்! இதில் தான் சிக்கல்! அவர் சொன்ன தகவல்களின் படி இந்துவாக இருந்து இஸ்லாத்தை தழுவியர்களால் தான் அதிகமான பிரச்சனைகள் வருகின்றன என்பது தான்! 

இப்போது நம் கண்முன்னே நிற்பவர்கள்:  ஸம்ரி வினோத் - இவரால் என்ன நல்லது நடந்திருக்கிறது? அவர் இஸ்லாமியர் ஆனது அவரது விருப்பம். நமக்கு அதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் அவர் இந்து மதத்தினரைத் தாக்கித் தான் பிழைப்பு நடத்த வேண்டும் என்கிற அவசியமில்லை.  அதைத்தான் அவர் செய்கிறார்!

இன்னொருவர்: முகமது ரிதுவான் அப்துல்லா, இந்திராகாந்தியின் முன்னாள் கணவர். மேலே சொன்னது தான். மதமாற்றம் அவரது சொந்தப் பிரச்சனை. ஆனால் தாயிடமிருந்து ஒரு குழந்தையைப் பிரிப்பது எவ்வளவு பெரிய பாவம் என்பதை அவருக்குச் சொல்லித்தர ஆளில்லை! இதை வைத்தே அவர் பிழைப்பு நடத்தி வருகிறார்!

மேலே குறிப்பிட்ட அந்த நண்பர் புதிதாக மதம் மாறியவர்களால் தான் பிரச்சனைகள் எழுகின்றன என்கிறார்.  அதுவும் தினசரி தாம் சந்திக்கும் பிரச்சனைகள் அனைத்தும் இவர்களிடமிருந்து தான் வருகின்றன என்பது தான் அவர் எதிர்நோக்கும் பிரச்சனை!

எப்படியிருந்தாலும் நண்பரே! உங்களின் மனம் திறந்த பேச்சுக்காக தலை வணங்குகிறேன்!

பிரதமர் தேர்வு சரிதானா?

இப்போது பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் தேர்வாக வாரிசான் கட்சியின் தலைவரும், சாபா முதலைமைச்சருமான ஷாஃபி அப்டால் பெயர் அடிப்பட்டுக் கொண்டிருக்கிறது! 

இது எதிர்க்கட்சியின் பரிந்துரை என்பதை விட டாக்டர் மகாதிரின்  பரிந்துரை என்பதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். 

இதனை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது அவருக்கே தெரியும்! மேற்கு மலேசியர்கள் ஒரு கிழக்கு மலேசியரை ஏற்றுக்கொள்ளுவது அப்படி ஒன்றும் எளிதல்ல!  ஏன் அதனை டாக்டர் மகாதிரே ஏற்றுக்கொள்ள மாட்டார்!  இப்போது அவருடைய நேரம் சரியில்லை! ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் பேசுகிறார்!  மேற்கில் உள்ள மலாய்க்காரர்கள் கிழக்கிலுள்ள மலாய்க்காரரை ஏற்றுக் கொள்ளுவார்களா?  முதலில் அவர் மலாய்க்காரர் என்பதையே அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!

இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும்.  டாக்டர் மகாதிர் அவரோடு பணி புரிந்தவர்களை யாரையும் நல்லவர் என்று சான்றிதழ் கொடுத்ததில்லை! அத்தனை பேரையும் கெட்டவர்கள் என்றே முத்திரை குத்தியிருக்கிறார்!  ஒருவரைக் கூட நல்லவர், நல்ல துணைப்பிரதமர்,  நல்ல பிரதமர் என்று அவர் சொன்னதில்லை! தன்னை தவிர மற்றவர்கள் அறிவில்லாதவர்கள் என்பதாகவே அவர் சொல்லி வந்திருக்கிறார்!

அப்படியே ஷாஃபி பிரதமர் ஆகிவிட்டார் என்றே வைத்துக் கொள்ளுவோம்!  அது நடக்கப் போவதில்லை என்பது அவருக்கும் தெரியும்! அது நமக்கும் தெரியும்! ஏன்? ஷாஃபிக்கே அது தெரிந்திருக்கும்! இரகசியம் ஒன்றுமில்லை! அவர் இப்போது இது எனக்குத் தேவைதானா என்று தான் நினைப்பார்!

இப்போது அவர் வகிக்கும் பதவியே அவருக்குப் போதும். அவர் நல்ல மனிதர் என்று டாக்டர் மகாதிர் நினைத்தால் அந்த மாநிலத்தை வழி நடுத்துவது ஒன்றே போதுமானது. காரணம் அங்கும் நம்பும்படியான தலைவர் யாருமில்லை! அவரின் மாநிலத்தை முன்னேற்றுவது என்பது சாதாரண விஷயமல்ல!  அந்த மாநிலத்தை எப்படி முன்னுக்குக் கொண்டு வரலாம் என்று திட்டமிட்டு அதனை வளமிக்க மாநிலமாக மாற்றினாலே போதும்.  அவரைப் பிரதமராக வாருங்கள் என்று கூறி வரவேற்பதும் பிறகு அவரைக் கவிழ்ப்பதும் இங்குள்ளவர்களுக்குக் கைவந்த கலை!

டாக்டர் மகாதிரின் பிரதமர் தேர்வு ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை! இது ஒரு ஏமாற்று வேலை என்பது நமக்குப் புரியும். 

இங்கு, மேற்கு மலேசியாவில், பிரதமருக்கான தகுதி உள்ளவர்கள் யாரும் இல்லை என்பதே வெட்கக் கேடான விஷயம்!  அப்படியென்றால் தனது 22  ஆண்டு கால ஆட்சியின் போது இவர் எதனையும் கிழிக்கவில்லை என்று தான் நினைக்க வேண்டியுள்ளது!

பிரதமர் தேர்வு சரியில்லை!

மறக்க முடியாத ஒரு நாள்!

காணொளிகளிகளில் தங்களது சமையலின் மூலம் பிரபலமடைந்த சுகு பவித்ரா தம்பதிகளுக்கு மீண்டும் மறக்க முடியாத ஓர் அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. 

அவர்கள் முதன் முறையாக பிரதமர் முகைதீன் யாசினைச் சந்தித்திருக்கின்றனர். வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு சந்திப்பு. 

அவர்கள் நாட்டில் சராசரியான ஒரு தம்பதியினர். அதாவது B40 எனப்படும் அடித்தட்டு மக்கள். அரசியல்வாதிகளோ வேறு எந்த வகையிலும் பிரபலமானவர்களோ அல்ல.

தங்களது சமையல் மூலம், அதுவும் யாரும் இதுவரை முயன்று பார்க்காத  மலாய் மொழியில்,  மலாய் மக்களுக்கு இந்திய சமையலை அறிமுகப்படுத்தி ஒரே இரவில் பிரபலம் அடைந்தவர்கள்! குறிப்பாக பவித்ராவின் மலாய் மொழி ஆற்றலைக் கண்டு மலாய் மக்களே வியந்து பாராட்டினர். 

அவர்களுக்குப் பிரதமரைச் சந்திக்க ஒரு வாய்ப்புக் கொடுக்கப்பட்டது.  புத்ரா ஜெயாவில் நடைப்பெற்ற ருக்குன் நெகரா கோட்பாட்டின் ஐம்பதாம் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள கிடைத்த அழைப்பை ஏற்று அவர்கள் சென்ற போது தான் வாழ்நாளில் மறக்க முடியாத இந்த சந்திப்பு நிகழ்ந்தது!

நமக்கும் இதிலிருந்து ஒரு பாடம் கிடைக்கிறது.  வாய்ப்புக்கள் எப்போது,  எந்த நேரத்தில், எப்படி வரும் என்று நாம் சிந்திக்க முடியாத ஒரு நேரத்தில் அது வரும்.  அதனைக் கைப்பற்றிக் கொண்டு அடுத்தக் கட்டத்துக்கு நம்மை நாமே உயர்த்திக் கொள்ள வேண்டும். அது தான் பாடம்.

சுகு பவித்ரா தம்பதியினரை வாழ்த்துவோம்! வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் உயர வேண்டும்!  நாம் நமக்கான ஒரு வழியைத் தேர்ந்தெடுத்து உயர முயல்வோம்!

சுகு பவித்ரா தம்பதியினருக்கு இது ஒரு மறக்க முடியாத அனுபவம்; மறக்க முடியாத நாள்!

வாழ்த்துகள்!

Thursday 9 July 2020

அதிகாலை தான் நல்ல நேரமா?

அலோர்ஸ்டார் - கெடா மாநில அரசாங்கத்திற்கு யார் நல்ல நேரம் குறித்துக் கொடுத்தார்களோ தெரியவில்லை!


 ஆமாம், ஒரு பழமை வாய்ந்த ஸ்ரீ மதுரை வீரன் ஆலயம் காலை ஒரு மணி அளவில்  அரசாங்க அதிகாரிகளால் உடைத்து நொறுக்கப்பட்டது என்கிற செய்தி வெளியாகியிருக்கிறது.

நூறு ஆண்டு காலம் பழமையான ஓர் ஆலயம் - யாரும் கேட்பாரற்ற  நிலையில் - உடைக்கப்பட்டிருக்கிறது.

பாஸ் அரசாங்கம் மாநில ஆட்சியைக் கையிலெடுத்ததும் செய்த முதல் வேலை!  அவர்கள் முதல் வேலையே வழிபாட்டுத் தலங்களை உடைப்பது தான் என்று அவர்கள் காட்டி விட்டார்கள்!

மாநில அரசாங்கம் மட்டும் அல்ல மத்திய அரசாங்கமாக இருந்தாலும் சரி வழிபாட்டுத் தலங்களை உடைப்பதிலா முனைப்புக் காட்ட வேண்டும்?

மக்களின் தேவை எல்லாம் ஊழற்ற ஓர் அரசாங்கம் அமைய வேண்டும். அரசாங்கத்தில் பணி புரிவோர் தங்களது கடமைகளை ஒழுங்கான முறையில் செய்ய வேண்டும். விலைவாசிகள் குறைய வேண்டும். மக்கள் எதிர்பார்க்கும் தேவைகள் இவைகள் தாம். 

ஆனால் நடப்பது என்ன?  நாம் சாமி கும்பிடக் கூடாது என்று சொல்ல இவர்கள் யார்? 

நூறு ஆண்டுகள் ஓர் ஆலயம் அங்கு இருந்து வருகிறது. ஒரு வேளை அந்த இடம் கொஞ்சம் இடைஞ்சலாகக் கூட இருக்கலாம்.  இத்தனை ஆண்டுகள் அந்த இடஞ்சலை ஓர் இடைஞ்சலாக யாரும் பாரக்கவில்லையே!  இடைஞ்சலாக இருந்தால் அதற்கான மாற்று இடம் மட்டும் அல்ல அங்கு ஒரு ஆலயத்தையும் கட்டிக் கொடுத்திருக்க வேண்டும் இப்போது குறை சொல்லுவோர்!

மாநில அரசாங்கத்தின் இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரி குமரேசன் என்ன சொல்லுகிறார்? வழக்கம் போல மக்களைத் தான் குறை சொல்லுகிறார்.  கடைசியில் இதனை மதப் பிரச்சனையாக்க வேண்டாம், அரசியல் பிரச்சனையாக்க வேண்டாம் என்கிறார்! அதனால் வாக்கை மட்டும் எங்களுக்குப் போட்டு விடுங்கள்! எங்களுக்கு வேறு எதுவும் உங்களிடமிருந்து வேண்டாம் என்கிறார்!

இதிலிருந்து நாம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்.  நாம் சொல்லுவது அவர்கள் காதுக்கு எட்டப் போவதில்லை. இந்தியர் சிறப்பு அதிகாரியோ, ம.இ.கா.வோ அரசாங்கம் சொல்லுவதைத்தான் கேட்பார்கள். நம்மைத் தான் இவர்கள் குறை சொல்லுவார்கள். அதைத்தான் சிறப்பதிகாரி குமரேசன் செய்திருக்கிறார்.

மாற்று இடம் கிடைக்கும் வரை,  அங்கு ஆலயம் கட்டி முடிக்கும் வரை, இந்த ஆலயம் உடைப்பட்டிருக்கக் கூடாது என்பது தான் மக்களின் விருப்பம்.

இந்த அதிகாலை உடைப்பில் முக்கியப் பங்கு குமரேசனுக்குத் தான் போய்ச் சேரும். ஆக நேரத்தையும் அவர் தான் குறித்து தந்திருக்க வேண்டும். 

என்னவோ கடிதம் போட்டிருக்கிறார்களாம் அது வரை பொறுத்திருப்போம்!

தனித்துப் போட்டியிடுமா?


 வேதமூர்த்தியின் அரசியல் கட்சியான மலேசிய முன்னேற்றக் கட்சி வருகின்ற 15-வது பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதாக ஆலோசனைக் கூறப்பட்டிருக்கிறது! 

ஒன்று இரண்டல்ல!  சுமார் 36 தொகுதிகளில் அதுவும் சுயேச்சையாக!  அந்த அளவுக்கு அவரது கட்சி பலம் வாய்ந்ததா என்பது நமக்குச் சந்தேகம் இருந்தாலும் அப்படி ஒரு ஆலோசனைக் கூறப்பட்டிருப்பது சரி தானா?

சரியில்லை என்பதே எனது கருத்து.  மன்னிக்கவும் அந்த அளவுக்கு வேதமூர்த்தி இந்தியர்களிடையே வரவேற்பைப் பெற்றிருப்பதாக நான் நினைக்கவில்லை.

இந்த முறை அவருக்குக் கொடுத்த வாய்ப்பைக் கூட அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதாகத்தான் நான் சொல்லுவேன்!

இந்தியர்களின் மேம்பாட்டுக்காக அவரிடம் ஒப்படைக்கப்பட்ட "மித்ரா" அமைப்பின் மூலம் அவர் பெயர் இன்னும் கெட்டுப் போனதே தவிர அவருக்கு எந்த நல்ல பெயரையும் கொண்டு வரவில்லை என்பது தான் உண்மை!

அந்த அமைப்பின் மூலம் யாருக்குக் கடன் வசதிகள் கிடைக்க வேண்டுமோ அது யாருக்கும் கிடைக்கவில்லை என்பது தான் பொதுவாக மக்களின் குரல் அமைந்திருக்கிறது! பெரிய தொழிலில் உள்ளவர்கள் மொத்தமாக அள்ளிக் கொள்ளுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு மீண்டும் மீண்டும் எழுந்து கொண்டு தான் இருக்கிறது!

அதற்கு முன்னர் என்ன நடந்ததோ அதே தான் இவரது தலைமையிலும் நடந்திருக்கிறது.  புதிதாக இவர் எதையும் சாதித்து  விடவில்லை! சிறு வியாபாரிகளுக்குச் சேர வேண்டிய எதுவும் அவர்களுக்குப் போய்ச் சேரவில்லை!

இந்த நிலையில், அவருக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டும், அதனைச் சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று தான் அவரைப் பற்றி நாம் சொல்ல வேண்டி இருக்கிறதே தவிர "அவர்களைப் போலத்தான் இவரும்!" என்கிற கருத்தை இவரும் உருவாக்கி விட்டார்!

கொடுக்கப்பட்ட பொறுப்பை உதவியாளர்களிடம் தள்ளிவிட்டு இந்தியரிடையே நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று நினைத்தால் அதெல்லாம் சரிபட்டு வராது என்பதை வேதமூர்த்திஅவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எல்லாரையும் போல இவரும் ஓர் அமைச்சர் போலவே நடந்து கொள்ளும் அளவுக்கு அவர் இந்தியர்களிடையே புகழ் பெறவில்லை என்பதை முதலில் அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியர்களுக்காக, இந்து கோவில்களுக்காக, அவர் நடத்திய போராட்டங்களை நாம் மறக்கவில்லை.  ஆனால் "மித்ரா" என்பது இந்தியர்களின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் கொடுத்த நல்லதொரு வாய்ப்பு. அதனை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

அதாவது "கோயில்களுக்கு மட்டும் தான் நான் போராடுவேன் அவர்கள் முன்னேற்றத்திற்காக நான் போராட மாட்டேன்" என்பது போல அமைந்து விட்டது அவரது போக்கு!

அவருக்கு ஆலோசனை கூற எல்லாருக்கும் உரிமை உண்டு. அவர் ஓரு பொது மனிதர். நமக்கும் அவரைப் பற்றியான ஒரு விமர்சனம் உண்டு. அவருடைய பலம் அவருக்குத் தெரியும்!

மற்றபடி அவரே முடிவு செய்யட்டும்! யாருடனும் கூட்டணி சேர அவருக்கு வாய்ப்புக்கள் குறைவு. தனித்து என்றாலும் கூட்டணி என்றாலும் எத்தனை என்பதை அவர் தாம் முடிவு செய்ய வேண்டும்!

அமைச்சராக இருந்த போது அவரது பலம் நமக்குத் தெரிந்து விட்டது! அது போதும்!

Monday 6 July 2020

Covaxin கொரோனா தடுப்பு மருந்து

 டாக்டர் கிருஷ்ணா எல்லா - கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தவர்


 கொரானோ என்றாலும் சரி அல்லது கோவிட் 19 என்றாலும் சரி - அதனைத் தடுப்பதற்கான மருந்தை கண்டு பிடித்திருக்கிறார் ஒரு தமிழர். 
  
  டாக்டர் கிருஷ்ணா,  தமிழ் நாடு, திருவள்ளுர், திருத்தணியைப் பூர்விகமாகக் கொண்டவர். நடுத்தரமான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தமிழகத்தில் விவசாயத்துறையில் பட்டம் பெற்றவுடன் அமெரிக்கா சென்று தனது கல்வியைத் தொடர்ந்தவர். 

தனது பட்டப்படிப்பு முடிந்த பின்னர், தனது தாயாரின் வற்புறுத்தலின் பேரில்,  இந்தியா திரும்பினார்.

ஆமாம், அவரது தாயார் "எதைச் செய்தாலும் அதை நம் நாட்டில் வந்து செய்" என்று அன்பு கட்டளையிட்டதால் வேறு வழியில்லாமல் நாடு திரும்பினார்.

ஏற்கனவே "பேயர்" மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவத்தைக் கொண்டு அவரது ஆர்வம் தொடர்ந்து மருந்துகள் தயாரிக்கும் துறையில்  இருந்ததால் ஆய்வு கூடம் ஒன்றை ஐதராபாத்தில் நிறுவினார்.

அவருடைய நிறுவனத்தின் பெயர் பாரத் பயோடெக். இந்த நிறுவனம் பல மருந்துகளைத் தயார் பண்ணி சந்தைக்குக் கொண்டு வந்திருக்கிறது. இப்போது அதன் கடைசி தயாரிப்பாக -கொரோனா தடுப்பு மருந்தான "கோவேக்சின்" வெளியாகியிருக்கிறது.




 டாக்டர் கிருஷ்ணா உலக -இந்திய அளவிலும் பல விருதுகளை வென்றவர்.  கடந்த 2008-ம் ஆண்டு இந்திய பிரதமரிடமிருந்து சிறந்த தொழில் நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புக்கான விருதினையும் பெற்றவர்.

இந்தப் புதிய கண்டுபிடிப்பான கோவெக்சின் எப்போது சந்தையில் எதிர்பார்க்கலாம்? இந்த ஆணடு கடைசியில் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் எதிர்ப்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்தக் கண்டுபிடிப்புக்கு மூல காரணமான டாக்டர் கிருஷ்ணா அவர்களை வாழ்த்துகிறோம்!

Sunday 5 July 2020

டாக்டர் மகாதிரை இனி நாம் நம்பலமா?

முன்னாள் பிரதமர் மகாதிரை மக்கள் இன்னும் நம்புகிறார்களா?

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவரின் செல்வாக்கு என்பது இன்னும் ஓரிரு சிறிய அளவிலான வயதானவர்களிடம் இருக்கத்தான் செய்கிறது என்பதில் சந்தேகமில்லை. 

அவருடைய 22 ஆண்டு கால ஆட்சியின் போது தகுதி இல்லாதவர்களை எல்லால் தூக்கிவிட்டவர்களில் பலர் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுடைய ஆதரவு இருக்கத்தான் செய்யும்.

ஆனால் இந்தியர்களைப் பொறுத்தவரை இந்திய சமுதாயம் எந்தப் பயனையும் பெறவில்லை. அவருக்கு ம.இ.கா. தலைவர்கள் உடந்தையாக இருந்து தங்களைத் தாங்களே வளர்த்துக் கொண்டார்கள்!

14-வது பொதுத் தேர்தல் நடந்த போது, முன்னாள் பிரதமர் என்னும் வகையில்,  டாக்டர் மகாதிருக்குப் பெரும் அளவில் அவருக்கு ஆதரவுக் கொடுத்தார்கள் என்பது உண்மை தான். காரணம் நஜிப் பிரதமராக இருந்த காலத்தில் நாட்டில் ஊழல் என்பது கட்டுக்கு அடங்கமால் போனது அனைத்து மக்களும், ஒவ்வொரு மலேசியனும். அறிந்த உண்மை!

அந்த நேரத்தில் தான் டாக்டர் மகாதிரின் ஆதரவு எதிர்கட்சியினருக்குத் தேவையாக இருந்தது. அவர் வயதானவர், ஆற்றலுள்ளவர், பேச்சுத் திறன் மிக்கவர் என்கிற வகையில் தான் அவரை எதிர்க்கட்சியினர் பயன்படுத்திக் கொண்டனர். அவர் திறமைசாலி என்பது அனைவரும் அறிந்தது தான்.

ஆனால் பதவிக்கு வந்த பின்னர், மீண்டும் பிரதமராக வந்த பின்னர், அவர் தனது பழைய பாணி அரசியலையே பின்பற்றத் தொடங்கினார் என்பது தான் சோகம்.  அதனால் யாருக்கும் பயன் இல்லாமல் போய்விட்டது. அவர்கள் சாதிக்க வேண்டும் என்று நினைத்த எதனையும் அவர்களால் சாதிக்க இயலவில்லை! 

கடைசியில் அனைத்தையும் பாழாக்கிவிட்டர் டாகடர் மகாதிர். இப்போது இதனை வயது கோளாறு என்று சொல்லலாமா? அது மட்டும் அல்ல. இனி அவருக்கு அரசியல் இலாயக்கில்லை என்கிற நிலைமையும் ஏற்பட்டு விட்டது!  இனி அவரை நம்புகிற மாதிரி ஒன்றும் இல்லை. 

இப்போது மக்களிடையே ஏதோ கோமாளி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார்! இனி அவர் அரசியல் கோமாளி என்று தாரளாமாகச் சொல்லலாம்!

டாக்டர் மகாதிர் அவர்களுக்கு இனி அரசியலில் எதிர்காலமில்லை. கிடைத்த வாய்ப்பையும் இழந்து விட்டார். 

இனி மலேசிய அரசியலில் அவரால் பேச முடிந்ததெல்லாம் இனப் பிரச்சனை மட்டும் தான்.  சீனர்கள் பணக்காரர்கள் என்று சொல்லலாம். அதைத் தவிர பேச அவருக்கு ஒன்றுமில்லை!

டாக்டர் மகாதிருக்கு வயதாகி விட்டது. நாம் நம்பும்படியாக அவர் என்றுமே நடந்து கொண்டதும் இல்ல! இனி நம்ப அவரிடம் ஒன்றுமில்லை!

Saturday 4 July 2020

எனது இரங்கல்கள்


நான் கலைத்துறையைச் சேர்ந்தவன் அல்ல என்பதை முதலிலேயே  சொல்லிவிடுகிறேன்.

  நமது நாட்டில் கலையை வளர்த்தவர்கள் பலர் உண்டு. அவர்கள் மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் எப்போதும் உண்டு.

காரணம் நமது கலைகளை வளர்ப்பதில் அவர்கள் தான் தூணாக விளங்குகின்றனர். 

கடைசியாக நமது கலைஞர்கள் வரிசையில் நடிகர் காந்திநாதன் தனது 72-ம் வயதில் இயற்கை எய்தினார் என அறிந்து வருத்தமடைகிறேன். அவர் உடல் நலக் குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக "வணக்கம் மலேசியா" இணையதளம் கூறுகிறது.

அவர் நடித்த ஓரிரு படங்களை பார்த்திருக்கிறேன் என்பதைத் தவிர மற்றபடி அவரைப் பற்றி நான் எதுவும் அறிந்திருக்கவில்லை.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார்?


இன்றைய பிரதமர் முகைதீன் யாசின்,  கூட்டணிக் கட்சிகளிடையே ஏற்பட்ட குளறுபடியில் பிரதமராக வந்தவர்!

அவர் பிரதமராக வருவார் என்று யாரும் நினைத்துப் பார்த்ததுக் கூட இல்லை! எல்லாக் காலங்களிலும் அவர்  - பிரதமர் பதவிக்கு வர முடியாதபடி - ஒதுக்கியே வைக்கப்பட்டிருந்தவர்.  அப்போதெல்லாம் சொல்லப்பட்ட காரணங்கள அவருக்கு ஆங்கிலம் சரளமாக வராது என்பது தான்!  ஏதோ உள் நோக்கம் இருந்திருக்கலாம்.  அவர் ஓரு பட்டதாரி. அது எப்படி ஆங்கிலம் வராமல் போகும்? 

ஆனாலும் அவர் பிரதமர் ஆனார். அவர் அடுத்த தேர்தல் வரை பிரதமராகத் தொடர்வதற்கு வாய்ப்புக்கள் நன்றாகவே இருக்கின்றது. எதிர்ப்பவர்கள் இப்போதைக்கு யாருமில்லை!

அது சரி. அடுத்த 15-வது பொதுத் தேர்தல் வரும்போது அவர் நிலை என்னவாகும்? 

இப்போதைக்கு அவரைப் பிரதமர் வேட்பாளாராக அம்னோவும், பாஸ் கட்சியும் ஆதரவு தெரிவிக்கின்றன. 

இதனைக் கூட ஒரு தற்காலிக ஏற்பாடு என்று சொல்லலாம்.  அது ஒரு சரியான ஏற்பாடு என்று சொல்லுவதற்கில்லை. அவரைப் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லி அம்னோவும் பாஸ் கட்சியும் கூடி கும்மியடிப்பார்களே தவிர, மற்றபடி இந்த ஏற்பாடு எந்த நன்மையும் முகைதீனுக்குக் கொண்டு வரப் போவதில்லை! 

பாஸ் கட்சி அமைச்சரைவையில் தனது நிலையை மேம்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்களே தவிர  அவர்கள் கீழே இறங்கி வர மாட்டார்கள்! மத்திய ஆட்சியில் தங்களது பங்கு அதிகமாகவே இருக்க வேண்டும் என்பது தான் அவர்களது குறிக்கோளாகவே இருக்கும்!

அம்னோ கட்சியினரோ பிரதமர் பதவிக்குத் தான் வரிந்து கட்டிக்கொண்டு நிற்பார்களே தவிர அதனை விட்டுக் கொடுப்பதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்!  தனது நீண்ட பாரம்பரியத்தை அம்னோவால் விட்டுக் கொடுக்க முடியாது.  மற்றவர்களுக்கு விட்டுக் கொடுப்பதை அவர்கள் அவமானமாகக் கருதக் கூடியவர்கள்!

இப்போது, உடனடியாக,  ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என்பது தான் அம்னோவின் திட்டம்.   அதற்காக ஒரு தற்காலிக ஏற்பாடாக "அதை ஏற்றுக் கொள்ளுகிறோம்! இதை ஏற்றுக் கொள்ளுகிறோம்!" என்பதையெல்லாம் அவர்கள் பேசி வருகிறார்கள். 

ஆட்சி கலைந்த பின்னர், அடுத்த தேர்தல் வரும் என்று உறுதிப்படுத்திவிட்டால், இந்தக் கூட்டம் முற்றிலுமாக தன்னை மாற்றிக்  கொள்ளும்!  அதில் சந்தேகமில்லை!

அடுத்த பொதுத் தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளாராக இருக்கக் கூடும்?  ஒரு பக்கம் அன்வார் இப்ராகிம் அதில் எந்த மாற்றமும் இல்லை.  ஆனால் ஆளுங்கட்சி சார்பில்? 

ஆளுங்கட்சி அரசியலில் இன்னும் தெளிவில்லை! இன்னும் குழப்பம் நீடிக்கிறது!