Friday 31 March 2023

DAP முதலாளிகள் ஒதுக்குகின்றனரா!

 


பொதுவாக அரசியல் தலைமைத்துவம் தனது கட்சியில் உள்ளவர்கள் கொஞ்சம் அதிகம் பேசினால் அவர்களுக்குப் பிடிப்பதில்லை.

ஆனாலும் தனது கட்சியில் உள்ள இந்தியர்கள் வழக்கறிஞர்களாக இருக்க வேண்டும்  என்பதில் அக்கறை காட்டுவது இயல்பாகவே இருக்கும். காரணம் நாடாளுமன்றம், சட்டமன்ற அவைகளில்  பேச வேண்டுமென்றால்  வழக்கறிஞர்கள் சிறப்பாகவே செயல்படுவார்கள்  என்பதில் கருத்து வேறுபாடில்லை.

பினாங்கு துணை முதல்வர்  இராமசாமி கொஞ்சம் மாறுபட்டவர். அவர் வழக்கறிஞர் அல்ல. அவர் பேராசிரியர். எல்லாகாலங்களிலும் மாணவர்களுக்குப் பாடம் எடுத்தவர்.  விரிவுரையாளராக இருந்தவர். தனது கருத்துகளை அன்றும் இன்றும் என்றும் பத்திரிக்கைகளில் எழுதி வருபவர். சுதந்திரமான போக்கு உடையவர்.  அவருடைய கருத்துக்களைச் சொல்ல  எந்த தயக்கமும் இல்லாதவர். அவரை ஒரு கட்சிக்குள் அடக்கிவிட முடியாது என்பது தான்  இங்கு முக்கியமாக  கவனிக்க வேண்டியது.

"நல்லதைச் செய்வேன்! முடிந்ததையும் செய்வேன்!" என்பது தான் அவரது கொள்கையாக இருக்க வேண்டும். அதுவும் தமிழர் சமுதாயத்திற்குத் தன்னாலான அனைத்தும் செய்பவர்.  ஒருவர் நல்லதைச் செய்யும்போது அவரை ஒதுக்குவது என்பது மலேசிய அரசியலில் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. கெட்டவர்களைக் கேட்க ஆளில்லை. நல்லவர்களுக்குச் சோதனைகள் தொடர்ந்து வரும்.

நாம் ஏன் பேராசிரியர் இராமசாமி மீது அக்கறை காட்டுகிறோம் என்றால் பினாங்கு மாநிலத்தில் உள்ள தமிழர் சமுதாயத்திற்கு நல்ல பல சேவைகளை ஆற்றி வருகிறார் என்பதால் தான்.  வேலை வாய்ப்புகள், தமிழ்ப்பள்ளிகள், தமிழர் நலன் போன்றவற்றின் மீது அவர் அக்கறை செலுத்துகிறார். அது தான் நமக்கு வேண்டும். தமிழர்களுக்கான தேவைகள் என்னவென்று தேர்ந்தெடுத்து அதற்குத் தீர்வு காண முயல்கிறார். 

ஆனால் அங்குள்ள உள்ளூர் அரசியல் நமக்குத் தெரியாது.  அங்குள்ள ஒரு சில தமிழர்கள் ஏன் அவர் மீது வெறுப்புணர்ச்சியோடு  கல்லெறிகிறார்கள்  என்பது  நமக்குப் புரியவில்லை.  வெளி மாநிலங்களிலிருந்து  பார்க்கும் போது  நமக்கு இப்படி ஒரு பிரதிநிதி இல்லையே என்பது தான் நமக்கு ஏக்கமாக இருக்கிறது. ஆனால் அங்குள்ளவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியவில்லை.

எப்படியிருந்தாலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பேராசிரியர் இராமசாமி போட்டியிடுவார் என்பதாகத்தான் ஜ.செ.க. கூறுகிறது. அதுவும் நமக்குச் சாதகமாகத்தான் இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்!

Thursday 30 March 2023

பேச்சு வார்த்தையே சிறந்தது!

 

வேலை நிறுத்தம் என்பது நமது நாட்டிற்குப் புதிதல்ல. புதிய வார்த்தையும் அல்ல!

எத்தனையோ வேலை நிறுந்துங்கள் நாட்டில் நடந்திருக்கின்றன. ஏன் நான் வேலை  செய்த காலத்திலுங்கூட  நானே வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டிருக்கிறேன். அது தவறு என்று சொல்லவில்லை.  

ஆனால் ஒரு சில துறைகளில்   வேலை நிறுத்தம் செய்ய முடியாது.  அது நாட்டு நலனுக்கு எதிரானது. பேச்சு வார்த்தை தான் சிறந்த தீர்வு. குறிப்பாக இராணுவம், காவல்துறை  - அவர்களால் வேலை நிறுத்தம் செய்ய இயலாது.  இங்கு மட்டும் அல்ல உலகில் எல்லாநாடுகளிலும் அதே நிலை தான். அதனால் தான் அவர்களுக்குச் சம்பள உயர்வு  அல்லது வேறு வகையான உயர்வாக இருந்தாலும் பேச்சு வார்த்தைகள் மூலமே முடித்துக் கொள்ளுகிறார்கள்.

இப்போது நமது நாட்டிலும்  அடிக்கடி வேலை நிறுத்தம் பற்றி ஒரு துறையினர் பேசுவதை நாம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். அவர்கள் மருத்துவத் துறையினர். அவர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடியாது என்பது ஒருபுறமிருக்க  பயமுறுத்தல் மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த மருத்துவர்கள் அனைவரும் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்பவர்கள்.

நமக்கு அவர்களின் பிரச்சனை என்பது ஏதோ மேலோட்டமாக ஒன்று இரண்டு தெரியுமே தவிர  முழுமையாக இல்லை. அதைத் தெரிந்து  என்ன ஆகப்போகிறது என்கிற அலட்சியம் நமக்கு அதிகம். அவர்கள் என்னவோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதாகத்தான் நாம் நினைக்கிறோம். 

அது அப்படி அல்ல.  வேலை நிறுத்தம் செய்தால் தான் அது நமக்குப் புரிய வரும்! அதுவும் நாம் மருத்துவமனைகளைப் பயன்படுத்துபவர்களாக இருந்தால்  நமது நிலை நாறிவிடும்! பல சிக்கல்கள் உருவாகிவிடும்.  ஆபத்து அவசரம் என்று மருத்துவமனைகளை நாடும் போது  வேலை நிறுத்தம் என்றால் ஒரு  நோயாளி என்ன செய்ய முடியும்? சிகிச்சை பெறுவது எப்படி? நோயாளியின் நிலை தான் என்ன?  ஒரு சிலர் ஆபத்தான, அவசரமான சிகிச்சை பெற வேண்டிய சூழலில் இருப்பார்காள். இவர்களை யார் காப்பாற்றுவது?

இது ஒரு சிக்கலான பிரச்சனை. நம்மால் அதன் கடுமையை உணர முடியாது. அதனால் தான் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தை தவிர்க்க வேண்டும் என்று அனைவரும் சொல்லுகிறார்கள். அரசாங்கமும் அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இழுத்துக் கொண்டே போவதில் புண்ணியமில்லை.

கட்டம் கட்டமாக பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படும். என்பதாக பிரதமர் உறுதி அளித்திருக்கிறார். மருத்துவர்கள் அதனையும் காதில் ஏற்றிக்கொள்ள வேண்டும் என்பது தான் பொதுமக்களின் கோரிக்கையும் கூட.

எது எப்படி இருப்பினும் பேச்சு வார்த்தையே சிறந்த வழி!

Wednesday 29 March 2023

தீர்வு கிடைக்கும் என நம்புவோம்!

 

சுங்கை புலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சுக்கு  விடுத்த கோரிக்கையை நாமும் அதற்கான ஆதரவு கரம் நீட்டுகிறோம்.

இந்தப் பிரச்சனை என்பது புதிது என்று சொல்வதற்கில்லை. பழைய பிரச்சனை  தான். ஆனால் முந்தைய அரசாங்கம் அதற்கு ஆதரவு காட்டவில்லை. காரணம் இந்தப் பிரச்சனையில் முக்கியமாக இந்தியர்களே அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதால்  அவர்கள்  அக்கறை காட்டவில்லை  என்பதிலே ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.  ம.இ.கா.வும் அவர்களோடு சேர்ந்து கொண்டதே தவிர குரல் எழுப்பி தீர்வு காண முயற்சி செய்யவில்லை.

இது யாருக்கும் தெரியாத ஒரு பிரச்சனை அல்ல. அனைவருக்கும் தெரியும்  ஆனால் நம்மால் ஒன்று செய்ய இயலவில்லை. நீல அடையாளக்கார்டு, குடியுரிமை பிரச்சனை தான். அந்தப் பிரச்சனையைத் தான் டத்தோ ரமணன் நாடாளுமன்றத்தில் எழுப்பியிருக்கிறார். இதற்கு முன்னரும் நாடாளுமன்றத்தில் ம.இ.கா. வினரால் எழுப்பப்பட்டிருக்கிறது.  ஒன்றும் ஆகவில்லை.

இந்த முறை ஆளுங்கட்சி உறுப்பினரால் இந்தப் பிரச்சனை எழுப்பப்பட்டிருக்கிறது. அப்படி என்ன  பெரிய வித்தியாசத்தைக் காணப்போகிறோம்? ஒன்றும் தெரியவில்லை! ஆயினும்  'நடக்கும்' என கொஞ்சம் நேர்மறையாகவே சிந்திப்போமே! என்ன கெட்டுவிடப் போகிறது!  ஏனெனில் இப்போது புதிய அரசாங்கம்  தானே. சொல்ல முடியாது. நல்லது நடக்கலாம்! 

குடியுரிமை பிரச்சனை என்பது இந்தியர்களின் நீண்ட நாளைய பிரச்சனை. அதற்கான முடிவு தான் எட்ட முடியவில்லை. ஒரு சில தவறுகளினால் வாழ்நாள் பூராவும் நாட்டில் குடியுரிமை கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். வேலை கிடைக்கவில்லை. தங்களது குடும்பங்களைக் கவனிக்க முடியவில்லை. மேலும் அவர்களின் குழந்தைகளும் அதே பிரச்சனையை எதிர்நோக்குகின்றனர். இது தொடர்கதையாகவே போய்க் கொண்டிருக்கிறது. அதற்கான முடிவை இப்போது எட்டாவிட்டால்  பின்னர் எட்ட வாய்ப்பில்லாமலே போய்விடும்.

அதனால் தான் இந்தப் பிரச்சனையை இப்போது டத்தோ ரமணன் நாடாளுமன்றத்தில பேசியதை முக்கியமாகக் கருதுகிறோம். இப்போது நடக்கும் ஆட்சியில் தான் அதற்கான தீர்வு காணமுடியும் என்பது தான் நமது எண்ணமாக இருக்கிறது. இந்த நேரத்தை விட்டால் பின்னர் என்ன ஆகும் என்று சொல்ல முடியாது.  நம்மிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் இப்போது இந்த ஒற்றுமை அரசாங்கத்தைத்தான் நாம் நம்பியிருக்கிறோம்.

நடப்பு அரசாங்கம் இதற்கு ஒரு முடிவு காணும் என நம்புகிறோம்!

Tuesday 28 March 2023

நல்லதுக்கு காலமில்லே!

                                                                                                                                                                             


                               நன்றி: வணக்கம் மலேசியா

நல்லதுக்குக் காலமில்லே என்பார்கள்! அப்படி ஒரு நிகழ்வு சமீபகாலமாக  நடந்து வந்திருக்கிறது.  ஆனால் நம்மால் தான் புரிந்து கொள்ள முடியவில்லை. வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும் சமூகம் நாம். 

இந்தியாவுக்குப் படிக்க சென்ற தனது  மகளுக்குக் கர்ப்பப்பை புற்று நோய்  என்று கூறி அவர் திருச்சியில் மருத்துமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாகவும்  அந்த சிகிச்சைக்காக  நான்கு இலட்சம் வெள்ளி தேவை  என்பதாகவும் வசூல் வேட்டையில் இறங்கியிருக்கிறார்கள் ஒரு குடும்பத்தினர்!

இந்த வசூல் வேட்டை 2014 ஆண்டு தொடங்கி சமீபகாலம்வரை தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது!  பல பெரிய மனிதர்களும், அரசியல்வாதிகளும், பொது மக்களும்  பலவாறாக உதவிகளும்  செய்திருக்கின்றனர். இதனைத் தவறு என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் பெண்ணின் பெயரைச் சொல்லி இப்படியெல்லாம் வசூல் செய்வது பாவம் என்பது அந்தக் குடும்பத்தினர்  உணரவில்லை. 

உண்மையில் ஒரு  சிலருக்குப் பணம் தேவை என்பது நமக்குத் தெரியும். வெளிநாடுகளில் குறிப்பாக மருத்துவம் படிக்கும் நமது மாணவர்களில் கடைசி நேர வேண்டுகோள் வைப்பதை நாம் பார்க்கிறோம். அவர்களுக்கு அரசாங்கமும் உதவுகிறது. பொது மக்களும் உதவுகிறார்கள். கல்விக்காக மட்டும் அல்ல மருத்துவத்திற்காகவும் பெரும் அளவில் மக்கள் உதவுகிறார்கள். அதுவும் குறிப்பாக இருதயம் சம்பந்தமாக நோய்களுக்குச் சிகிச்சை பெற - ஐ.ஜே.என். போன்ற மருத்துவமனைகள் பெரிய அளவில் கட்டணங்கள் வாங்குகின்றன.  அதையெல்லாம் சதாரண குடும்பத்தினர் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அதற்கெல்லாம் மக்கள் உதவத்தான் செய்கிறார்கள்.

இந்த நேரத்தில் இது போன்ற செய்திகள் வரும்போது நமக்கும் மனக்கஷ்டம் ஏற்படுகிறது. பிறருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணமும் போய்விடுகிறது. இப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்களே என்கிற வருத்தமும் ஏற்படுகிறது.

இப்படி ஒரு செய்தியை இது நாள் வரை நமது நாட்டில் நாம் கேள்விப்பட்டாதில்லை. யாரும் செய்ததில்லை. யாரும் செய்யத் துணியவில்லை. 

இந்தக் குடும்பத்தினரின் பின்னணி நமக்குத் தெரியவில்லை. வெளி நாட்டிலிருந்து வந்து இங்கு இது போன்று செயலில் ஈடுப்பட்டிருக்கிறார்களோ  என்கிற சந்தேகத்தையும் இது எழுப்புகிறது.

எப்படிப் பார்த்தாலும் இது போன்ற செயல்கள் நமக்குப் பின்னடைவே. உண்மையாகவே தேவை  என்று நினைப்பவர்களுக்கும் ஆப்பு அடித்துவிட்டார்கள்! நம் மக்களுக்கு ஏகப்பட்ட துன்பங்கள். அதில் இதுவும் ஒன்று!

Monday 27 March 2023

அரசியல் கிளைகளா!


 பல்கலைக்கழகங்களில்  அரசியல் கிளைகளா? வேண்டவே வேண்டாம்!

மாணவர்களுக்கு அரசியல் தெளிவு  வேண்டும் என்பது வேறு. அதற்காக அங்குக் கிளைகளை அமைத்துத்தான் அந்தத் தெளிவைப்பெற வேண்டும் என்பது வேறு.  தினசரி நாளிதழ்களைப் படித்தாலே அரசியல் அறிவைப் பெறலாம். நாட்டு நடப்பைத் தெரிந்து கொள்ளலாம்.

கிளைகள் அமைப்பதின் மூலம் நல்ல காரியங்கள் எதுவும் நடக்கப்போவதில்லை. அதுவும் நம்மிடையே நாட்டுப்பற்றை ஏற்படுத்தும் கட்சிகள் எதுவும் இல்லை. நமது நாடு ஏற்காத சித்தாந்தங்களைப் பேசிக் கொண்டும், புலம்பிக் கொண்டும்  இருக்கின்ற கட்சிகள் தான்  மாணவர்களிடையே  செல்வாக்கைப் பெறுகின்றன. அவர்களில் பலருக்கு உண்மை நிலவரம் தெரிவதில்லை..

சான்றுக்கு ஒரு நாட்டைக் குறிப்பிடலாம்.  ஆப்கானிஸ்தான் என்கிற ஒரு நாடு.  உலகத்தில் இப்படி ஒரு நாடு தேவையா என்பது தான் மக்களிடையே உள்ள ஒரு கருத்து. ஆனால் அந்த நாட்டை ஆகா1 ஓகோ! என்று புகழ்ந்து தள்ளுகிற ஒரு குமபலும் உண்டு.  இவர்களுக்கு அந்த நாட்டின் மீது அப்படி என்ன ஈர்ப்பு? அது தான் தெரியவில்லை!  பெண் பிள்ளைகள் பள்ளிக்கூடம் போகக்கூடாது,  படிக்கக் கூடாது,  மேற்கல்வி பயிலக்கூடாது - இப்படி பெண் பிள்ளைகளை நசுக்குகிற ஒரு நாடு என்றால் அது ஆப்கானிஸ்தான் நாடு தான்! ஆனால் அவர்களையும் ஆதரிக்கிற அந்தக் கும்பல்களுக்கு  நமது நாட்டிலும் ஆதரவு உண்டு!

அந்த நாட்டின் சூழல் தெரியாது. மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பது தெரியாது. பெண்கள் வெளியே நடமாடக்கூடாது என்பது தெரியாது. இப்படியே ஒன்றுமே தெரியாமல் ஏதோ ஒரு காரணத்தை வைத்து ஆதரிப்பவர்களில் மாணவர்களே அதிகம்!

இது போன்ற சூழலில் தீவிரவாத கட்சிகளை உள்ளே கிளைகள் அமைக்க அனுமதிகொடுத்தால் மாணவர்களை அவர்கள் இருக்கிற அறிவையும் இழந்து வன்முறை கலாச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவார்கள்! இது தான் நடக்கும். நல்லது நடக்க வழியில்லை!

அறிவை வளர்க்கக்கூடிய கட்சிகளாக இருந்தால் கிளைகள் அமைக்கலாம். ஆனால் நமது நாட்டில்  அரசியல் என்றால் தீவிர்வாதம், சமயம், இனங்களுக்கிடையே மோதல் - இவைகளைப்பற்றி பேசினால்  அரசியலில் ஆதாயம் பெறலாம் என்று நினைக்கும் கட்சிகள் தான் அதிகம்!

அரசியல் கட்சிகள் பல்கலைக்கழகங்களில் கிளைகள் அமைப்பதை நாம் விரும்பவில்லை. ஒரு வேளை அது பிற்போக்குத்தனம் என்று கூறலாம்.  நல்லது என்று நினைத்துத்தால்   நமக்கு அதில்  ஆட்சேபனையில்லை.

ஆனால் நல்லது நடக்குமா என்பது தான் கேள்வி?

Sunday 26 March 2023

ஏன் இவர்கள் இப்படி?

 

ஓரிரு தினங்களுக்கு முன்னர்  கல்வியாளர் ஒருவரது பேச்சைக் கேட்க நேர்ந்தது. மனதிலே சொல்ல முடியாத துயரம்.

நமது மாணவர்கள் தமிழ்ப்பள்ளிகளில் படிக்கும்வரை அவர்களால் எந்தப் பிரச்சனையும் எழவில்லை. உண்மையைச் சொன்னால் அவர்கள் திறமையான மாணவர்களாகவே இருக்கிறார்கள். உலக அளவில் கூட சிறப்பான பரிசுகளைப் பெறுகின்றனர்.

இடை நிலைப்பள்ளிகளுக்க்குப் போகும் போது ஏனோ அவர்கள் தடம் புரண்டு  விடுகின்றனர். அதனைத்தான் அந்தப் பெண்மணி சொல்லிக் கொண்டிருந்தார்.

இடைநிலைப்பள்ளிகளில் படிக்கும் இந்திய மாணவர்கள் செய்கின்ற வன்முறைகளைப் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.  இந்த மாணவர்கள் மேற்கல்வி பயில தனியார் கல்லூரிகள் இந்திய மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை என்பதாக அவர் கூறினார்.

அரசாங்க கல்லுரிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் தனியார் கல்லுரிகளைத்தான் நாட வேண்டும். வேறு வழியில்லை. அந்தக் கல்லூரிகளும் இந்திய மாணவர்களைப் புறக்கணித்தால் அவர்கள் வேறு எங்குப் போவார்கள் என்பது கேள்விக்குறி தான்.

நமக்கு ஒன்று புரியவில்லை. இடைநிலைப்பள்ளிகளில் அவர்கள் ஒருவேளை தவறாக நடந்து கொள்ளலாம். ஆனால் கல்லூரிகளிலும் அப்படி செய்வார்களா என்பது உண்மையில் நமக்குப் புரியவில்லை. கல்லூரிகள்  என்பது கொஞ்சம் பெரிய படிப்பு. அது அவர்களின் எதிர்காலம். அங்கும் அப்படித்தானா என்பதைக் கேட்கும் போது நமது மனதைக் கலங்கடிக்கிறது. ஒரு வேளை டிப்ளோமா, டிகிரி என்கிற போது அவர்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள் என்பதுதான் நமது மதிப்பீடாக இருக்கின்றது. ஆனால் கல்லூரிகளிலும் வன்முறை தான் என்னும்போது  என்ன சொல்லுவது என்று புரியவில்லை. கல்லூரிகள் வேண்டாம் என்றால் அதற்கான காரணங்கள் இருக்க வேண்டும். ஏற்கனவே அங்கு வன்முறைகள் நடந்திருக்க வேண்டும்.

நமது மாணவர்களின் பிரச்சனை என்னவென்பது நமக்குத் தெரியவில்லை. அவர்கள் இப்படி நடந்து கொள்வதற்குப் பெற்றோர்களைத்தான் நாம் குறை சொல்லி வருகிறோம். இன்றைய நிலையில் பெற்றோர்களே வன்முறையாளர்களாக இருக்கின்றனர். அது தான் பிரச்சனை! 

கொஞ்சம் ஆழமாகப் போனால் ஒழுங்கு என்பது வீட்டிலிருந்து துவங்க வேண்டும். அங்கே ஒழுங்கு இல்லாத போது வேறு எங்கே போய் முட்டிக்கொள்வது? 

நமது கரிசணையெல்லாம் ஒரு சில மாணவர்கள் செய்கின்ற தவறுகளினால்  அனைத்து இந்திய மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இந்த தனியார் கல்லூரிகள் இவர்களைப் புறக்கணித்தால் வேறு வழிதான் என்ன? 

வருங்காலங்களில் இதற்கும் நல்லதொரு தீர்வு பிறக்கும் என நம்புவோம்!

Saturday 25 March 2023

அரசியல் முடிவுக்கு வருகிறதோ?

     பேராசிரியர் இராமசாமி (இடமிருந்து 2-வது)

பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி  அவர்களைப்பற்றி அவருடைய அரசியல் எதிரிகள் வேண்டுமானால் வலிந்து கட்டிக்கொண்டு ஏதாவது குற்றங்குறைகளைச் சொல்லலாம்.

பினாங்கு மாநிலத்தில் பேராசிரியர் சிறப்பாகவே செயல்படுகிறார்  என்பது தான் வெளிமாநிலங்களில் உள்ள தமிழர்கள் நினைக்கின்றனர். பொதுவாக அவரிடம் உள்ள சிறப்பு என்றால்  கல்விக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கிறார். தமிழ்ப்பள்ளிகளுக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கிறார். கோவில்களுக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கிறார். இந்தியர் சம்பந்தப்பட்ட எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும்  உடனடியாக அதற்கானத் தீர்வைக் காண்கிறார்.  இவைகள் எல்லாம் அவர் சிறப்பாகச் செயல்படுகிறார் என்பதைத்தான்  குறிக்கின்றன.

அவர் சிறப்பாக செயல்படுகிறார் என்பதுவே பொதுவான கருத்து. அதற்குள் என்ன  ஆயிற்று என்பது நமக்குப் புரியவில்லை. நம்மிடையே ஒரு சிலர் இருக்கின்றனர். சமூகத்திற்கு ஏதாவது நல்ல காரியங்கள் செய்யும் போது  அவர்களால்  அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்பது தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் பலர் தமிழர் அல்லாதவர்கள் ஆனால் தமிழர் என்று சொல்லிக்கொள்பவர்கள்!

அதனால் தான் ஒரு சில அரசியல்வாதிகள் யாரையும் நம்புவதில்லை! தனக்கு எதிரி என்று யாரை நினைக்கிறார்களோ  அவர்களை உடனடியாக தூக்கி எறிந்து விடுவார்கள்! தன்னை தட்டிக்கேட்க யாரும் இருக்கக் கூடாது என்பது தான் அவர்களின் எண்ணமாக இருக்கும். கடைசியாக அவர்கள் தான் சமுதாயத்தின் எதிரிகளாக  இருப்பார்கள்!  டாக்டர் மகாதீர், துன் சாமிவேலு போன்றவர்கள் இப்படித்தான் சொந்த சமுதாயத்திற்கே எதிரிகளாக மாறினார்கள்!

ஆனால் இராமசாமி அவர்கள் அப்படி ஏதும் சித்து விளையாட்டுகள் விளையாடியவராகத் தெரியவில்லை. சமுதாய நலன் அவரிடம் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அவரது பேச்சில், அவரது எழுத்தில் சமுதாய நலன் தான் தெரிகிறது.

அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம்! ஒருவர் போனால் ஒருவர் அந்த இடத்தை நிரப்பிவிடுவார்.  அது தான் ஜனநாயகத்தின் சிறப்பு. ஆனால் சமுதாய எண்ணம் உள்ளவர் வந்தால்  அது இன்னும் சிறப்பு. அப்படி எல்லாம் நல்ல எண்ணம் கொண்டவர்களைக் கண்டுபிடிப்பது தான் கொஞ்சம் சிரமமான விஷயம்.

பேராசிரியர் தனது பணியைத் தொடர வேண்டும் என்பது தான் மக்களின் எண்ணமாக இருக்கிறது. ஆனால் இது அரசியல். அவருடைய கட்சியின் தலைமைத்துவம் என்ன முடிவு எடுக்கிறதோ அது தான் கடைசி முடிவு. தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு நல்ல சேவையாளரை இழக்கிறோம் என்பது தான் வருத்தத்திற்குரியது.

ஆனாலும் எதுவும் உறுதியாகத் தெரியவில்லை. ஒரு வேளை அவர் இன்னும் ஒரு தவணை கூட தொடரலாம். சாத்தியம் உண்டு. நல்லது நடக்க எதிர்பார்ப்போம்!

Friday 24 March 2023

தூய்மையற்ற உணவகங்கள்!

 

     நன்றி: வணக்கம் மலேசியா

மேலே பாருங்கள்! இது நமது நாட்டில் தான் நடந்து கொண்டிருக்கிறது. நமது நாட்டில் உள்ள ஏதோ ஒரு உணவகத்தில்!

இப்படியெல்லாம் உணவகங்களை நடத்திக்கொண்டு "ஆள் பற்றாக்குறை! வேலை செய்ய வெளிநாட்டினரை அனுமதியுங்கள்"  என்று ஒரு பக்கம் அங்கலாய்ப்பு!

ஆனால் உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.   இவைகள் உணவகங்களா அல்லது மரத்தடிகளில் செய்யப்படுகின்ற வியாபாரங்களா அல்லது வீட்டு ஓரங்களில் இயங்கிவரும் தகரடப்பா உணவகங்களா?  இது எந்த வகையைச் சேர்ந்தது என்பது முதலில் நமக்குத் தெரிய வேண்டும்! பொதுவாக,  பொத்தாம் பொதுவாக உணவகங்கள் என்று சொல்லப்படுவதை  நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது!  உண்மைதான்!

என்னதான் பாதையோர வியாபாரங்களாக இருந்தாலும் கொஞ்சம் சுத்தமாக இருந்தால், கொஞ்சம் மனசாட்சியிருந்தால் இப்படியெல்லாம் வியாபாரம்  செய்ய மனம் வராது. அப்படி மனசாட்சி  இல்லாதவராக இருந்தால் யார் என்ன செய்ய முடியும்?

இங்குப் பிரச்சனை என்னவென்றால் கோலாலம்பூர் மாநகர்  மன்றம் சுமார்  16 கடைகளை மூடும்படி உத்தரவிட்டிருக்கின்றது என்பது நல்ல செய்தி தான். ஆமாம், தூய்மையற்ற உணவகங்கள் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? அவைகள் இழுத்து மூடப்பட வேண்டியவகைகள் தான். 

ஆனால் இங்கு எப்படி இப்படியொரு துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டது என்பது தான்.  மாநகர் மன்றம் ஏன் இத்தனை நாள் செயல்படவில்லை? என்கிற கேள்வி நமக்கு எழத்தான் செய்கிறது.  ஓர் உணவகம் அது சாலையோர உணவகமாக இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் சுத்தம் என்பது கட்டாயம். இது நாள்வரை மாநகர் மன்றத்துக்கு இது தெரியாதா? தெரியாத மாதிரி கண்ணை மூடிக்கொண்டதா? பணத்தை வாங்கிக் கொண்டு செயல்பட அனுமதி கொடுத்ததா? இப்படி பல கேள்விகள் நமக்கு எழுகிறது!

உணவகம் எப்படி இருக்க வேண்டும்  என்பதை முதலில் இந்த மன்றத்தில்  உள்ள அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்!  இவர்களிடம் தான் நமக்குப் பிரச்சனைகள் எழுகின்றன.  இவர்கள் தங்களது பணிகளைச் செய்வதில் ஏதோ சிக்கல்கள் இருப்பதாக நமக்குப்படுகிறது.

மாநகர் மன்றப் பணியாளர்கள் தங்களது பணிகளைச் சரிவர செய்து கொண்டு வந்தால்  இன்று இப்படி ஒரு நிலைமை இந்த உணவகங்களுக்கு ஏற்பட்டிருக்காது. அவர்கள் எப்போதும், எல்லாக்காலங்களிலும் தங்களது உணவகங்களை சுத்தமாகவே வைத்திருப்பார்கள்.

மேலே படத்தைப் பார்த்தால் உணவகங்கலில் சாப்பிடவே மனம் வராது! தூய்மை உள்ள மாநகர் மன்றம் இல்லையென்றால் இது போன்ற செயல்கள் தொடரத்தான் செய்யும்!

Thursday 23 March 2023

இறந்த வீட்டிலும் வன்செயலா?

 

வன்செயல்களை யாரும் வரவேற்பதில்லை. எல்லாமே பேசி தீர்த்துக் கொள்ள முடியும். ஆனாலும் வன்செயல் என்னவோ எப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. நமது இளைஞர்கள் அதை விடுவதாகவும் தெரியவில்லை. அவர்களை இளைஞர்கள் என்பதைவிட குண்டர் கும்பல் என்றால் தான்  பொருத்தம்!

இந்த குண்டர் கும்பல்  எங்கு தான் சண்டை போட வேண்டும் என்கிற ஏந்த குறிக்கோளையும் அவர்கள்  கொண்டிருப்பதில்லை. எதிரியை எங்குப் பார்க்கிறானோ உடனே வெட்டு குத்து என்று ஆரம்பித்து விடுகின்றனர். இவர்களை யார் என்ன செய்வது? 

பெற்றோர்களால் என்ன செய்ய முடியும்? எல்லாமே அளவு மீறிப் போய்விட்டன. அதுவும் இப்போது இளைஞர்கள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமைகளாய் மாறிவிட்டதால் யாரும் எதையும் செய்ய முடியவில்லை.

சமீபத்தில் ஒரு சம்பவத்தைப் படித்தோம். நமது நாட்டில் தான். கஞ்சாவுக்கு அடிமையாகிவிட்ட இளைஞனுக்குத் தாய் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். அந்த இளைஞன் தாயின் மார்பகத்தை பிளேடு கத்தியால் அறுத்துவிட்டனாம்.  இப்படித்தான் இளைஞர்கள் போய்க் கொண்டிருக்கின்றனர். 

இப்போது இன்னொரு செய்தியும் வந்திருக்கிறது. ஜொகூர் பாருவில்  ஒரு மரண சம்பவம். இறுதி சடங்குகள்  நடந்து கொண்டிருக்கின்றன. சடங்குகள் முடியும்வரை இளைஞர்கள் காத்திருக்கத் தயாராக இல்லை. அதற்குள் அந்த குண்டர் கும்பல்  தங்கள் கைகலப்பை ஆரம்பித்துவிட்டனர். சுமார் 20 பேர் அடங்கிய கும்பல் இந்த கைகலப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். இப்போது காவல்துறையினர் இந்த 20 பேர் அடங்கிய கும்பலை தேடும் பணியில் இருக்கின்றனர்.

நமது இளைஞர்கள்  போகும் போக்கு  நமது இனத்திற்கு மிகவும்  தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. எல்லா இடங்களிலும் சண்டைகளை ஆரம்பித்துவிடுகின்றனர். இறப்பா? பிறப்பா? திருமணமா?  திருவிழாக்களா?  ஒன்றையும் விட்டுவைப்பதில்லை. எல்லா இடங்களிலும் சண்டை! சச்சரவு! இதைத் தவிர வேறு எதுவும் அவர்களிடம் இல்லை.  கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டு கடைசியில் ஜெயில் தான் அவர்களின் இலட்சியம்.

நமது அரசாங்கம் நீண்ட நாள்களாக இந்திய இளைஞர்களின் பிரச்சனைகளைக் கவனிக்கவில்லை.  அவர்களின் கைத்திறன் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவர்களுக்கு வேலை எதுவும் இல்லை. அரசாங்கம் வேலை கொடுப்பதும் இல்லை. தனியார் துறையும் அவர்களைப் புறக்கணிக்கின்றன. இந்த நிலையில் அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம்  அடிதடி, சண்டை சச்சரவு கடைசியில் சிறை. இது தான் அவர்களின் வாழ்க்கை.

இன்றைய அரசாங்கமாவது இவர்களைக் கவனிக்கும் என நம்புவோம்!

Wednesday 22 March 2023

ஏன் நாம் மகிழ்ச்சியற்றவர்கள்?

 

உலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடுகளில் முதல் நாடாக பின்லாந்து நாடு விளங்குகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக பின்லாந்து நாடு தான் முன்னணியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அது சரி நமது நாட்டில் நிலைமை என்ன? மலேசியர்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனரா என்பதைத் தெரிந்து கொள்ள நமக்கும் ஆசையாக இருக்கத்தான் செய்யும்!

உலகப்பட்டியலில் நமது நாடு 79-வது இடத்தில் இருப்பதாகக் காட்டுகிறது அந்தப் பட்டியல். அதே பட்டியலில் நமது அண்டை நாடான சிங்கப்பூர் 32-வது இடத்தை வகிக்கிறது.

நாம் இந்த இரண்டு நாடுகளுக்கிடையே  உள்ள வேறுபாடுகளைப் பார்ப்போம்.  சிங்கப்பூர் நாட்டின் பணம் என்பது நமது நாட்டைவிட உயர்ந்து நிற்கிறது! இப்போது என்று சொல்ல முடியாது. அது எல்லாக் காலங்களிலும் உயர்ந்து தான் நிற்கிறது! அதனால் தான் வேலை என்று வரும்போது  நமது இளசுகள் சிங்கப்பூரைத் தேர்ந்து எடுக்கிறார்கள்.  அங்கு பணம் சம்பாதித்துவிட்டு இங்கு வந்து தொழில்களை ஆரம்பிக்கிறார்கள். நல்லது தானே! தொழில்களுக்கான முதலீடுகளை அவர்களே சம்பாதித்துக் கொள்கிறார்கள்! பின்னே இங்கு உதவ யார் இருக்கிறார்கள்?

நமது இரு நாடுகளுக்கிடையே  நாம் ஒப்பிட வேண்டிய  முக்கிய விஷயம் என்றால் அது ஊழல் என்பது தான்.  ஊழல் இருந்தாலே  எந்த நாடாக இருந்தாலும் மகிழ்ச்சியை இழந்துவிடும். அதாவது அந்த நாட்டு மக்கள்  மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்பில்லை. ஓர் அரசு அலுவலகத்திற்குப் போனால் ஒரு வேலை நடக்க நாலைந்து தடவை  நடையாய் நடக்க வேண்டும் என்றால்  அதுவும் ஊழல் தான்!  அது நமது நாட்டில் தாராளமாய் நடந்து கொண்டிருக்கிறது!

நமது நாட்டில் ஊழல் என்பது டாக்டர் மகாதிர் பிரதமராக இருந்த காலத்திலேயே  ஆரம்பித்துவிட்டது. ஊழலுக்குப் பிள்ளையார் சுழி  போட்டவரே அவர் தான்! அதன் பின்னர் அது செழித்து வளர்ந்து இப்போது ஆலமரமாக  உயர்ந்து  நிற்கிறது! ஊழல் தாராள மயமாக்கப்பட்டப் பிறகு  அனைத்தும் உயர்ந்து நிற்கின்றன.

சமீப காலமாகத்தான் ஊழல் பற்றி நம்மால் அதிகம் தெரிந்து கொள்ள முடிகிறது. அப்படியென்றால் இதுநாள் வரை அனைத்தும் மறைக்கப்பட்டிருக்கின்றன. காரணம் அரசாங்கம் அவர்கள் கையில் இருக்கும் போது அவர்கள் அனைவரும் உத்தமராகவே இருந்திருக்கின்றனர்!

ஆனால் சிங்கப்பூரில் இது போன்ற ஊழல் வழக்குகள்  பொதுவாகவே ஒன்றையும் காணவில்லை! இது ஒன்றே போதும், சாட்சியம் சொல்ல! நமது நாடு ஏன் மகிழ்ச்சியற்ற  நாடாக இருக்கிறது என்பதற்கும் சிங்கப்பூர் ஏன் உயர்ந்து நிற்கிறது என்பதற்கும்  இப்போது நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

நம் நாட்டில் ஊழல் ஒழியும்வரை நாம் மகிழ்ச்சியற்றவர் என்கிற நிலையில் தான் அந்தப்பட்டியல் அமையும்! ஊழலை ஒழிக்கும் போது தான் நாம் முன்னேற்றம் காண முடியும்!

அதுவரை நாம் மகிழ்ச்சியற்றவர்கள் தான்!

Tuesday 21 March 2023

மகிழ்ச்சி நிறைந்த நாடு!

 


மகிழ்ச்சி நிறைந்த நாடென்றாலே ஒரு கேள்வி எழுகின்றது.  'அப்படின்னு ஒரு நாடு இருக்கா' என்கிற ஓர் அதிசயம்  எழாமல் இல்லை!  

நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ அதையெல்லாம் கணக்குப்பண்ணித் தான் இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்! நாம் எதையெல்லாம் விரும்பவில்லையோ அதற்கெல்லாம் ஒரு கணக்கு வைத்து புள்ளி விபரங்களோடு வெளியிடுவார்கள்!  நாம் ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை!

சரி, இந்த உலக நாடுகளில் மகிழ்ச்சியால் ததும்பி  வழிகின்ற நாடு எதுவாக இருக்கும் என்று  பார்த்தால் ஒரு சில ஆண்டுகளாகவே (Finland) பின்லாந்து என்கிற நாடு தான் முன்னணியில் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது.   அவர்கள் தான் சந்தோஷமாக வாழ்கிறார்களாம்! நமக்குத்தான் வக்கில்லை அவர்களையாவது மனமாற வாழ்த்துவோம்!

இந்த மகிழ்ச்சியை  எப்படி அளந்து பார்க்கிறார்கள்   என்று கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.   முக்கியமாக,  தனிநபர் வருமானம்,  சமூக ஒத்துழைப்பு,  ஆரோக்கியமான வாழ்க்கைமுறை,  வாழ்வினைத் தேர்ந்தெடுத்தல்,  பெருந்தன்மையான போக்கு,  ஊழலைப்பற்றியான புரிதல் - இவைகளை எல்லாம் வைத்துத்தான் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா இல்லையா என்று  ஆய்வாளர்கள் ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.  எப்படியோ ஓர் அளவுகோள் வைத்து இந்தப் பிரச்சனையை வெளி உலகிற்குக் கொண்டு வருகிறார்கள். பாராட்டுவோம்!

இந்த மகிழ்ச்சி நிறைந்த முதல் பத்து நாடுகளில் நிச்சயமாக நமது மலேசியா நாடு இல்லை! ஏன் சிங்கப்பூர் கூட இல்லை! நாம் எப்போதுமே சிங்கப்பூரைத் தானே முதலில் பார்ப்பது வழக்கம்! இல்லையென்றாலும்  சிங்கப்பூரியர்கள் நம்மைவிட அதிக மகிழ்ச்சியாகத்தான் வாழ்கிறார்கள்!

இந்த ஆய்வில் ஆகக்கடைசியாக,  மக்கள் மகிழ்ச்சியற்று வாழ்கின்ற  ஒரு நாடு என்றால்  அது தான் ஆப்கானிஸ்த்தான் என்கிற நாடு. இந்த நாட்டின் பெயரைச் சொன்னாலே  பலருக்கு வயிற்றைக் கலக்கிவிடும்! கையில் துப்பாக்கி இல்லாமல் அந்த நாட்டை ஆள வழியில்லை என்று சொல்லப்படுகிறது. கையில் துப்பாக்கியோடு தான் அங்கு ஆட்சி நடக்கிறது. பெண் பிள்ளைகளுக்குக் கல்வி மறுக்கப்படுகிறது. இந்த நாட்டைப் பற்றி மலேசியாவில்  பெருமைப்படுகிறவர்கள் என்றால்  அது இங்குள்ளை இஸ்லாமிய பாஸ் கட்சியினர் தாம்! அவர்களின் நோக்கம் என்னவோ யாருக்குத் தெரியும்?

எப்படியோ  ஒவ்வொரு நாடும் மக்கள் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்கிற  கொள்கையைத்தான் கடைப்பிடிக்கின்றன. மக்கள் மகிழ்ச்சியோடு இல்லையென்றால் அதற்கும் அரசியல்வாதிகள் தான் காரணம். ஊழல் பற்றியான சரியான புரிதல்  மக்களிடையே சென்று சேர முடியாதபடி அரசியல்வாதிகள் தடையாக இருக்கிறார்கள்!

நமது நாடும் முதல் பத்து இடத்துக்குள் வரும் என எதிர்பார்ப்போம்!

Monday 20 March 2023

ஊழியர் சேமநிதி வாரியம்

 

சமீபகாலமாக ஊழியர் சேமநிதியிலிருந்து தனது உறுப்பினர்கள்  கடன் வாங்குவது பற்றியான செய்திகள் நிறையவே பேசப்படுகின்றன.

சட்டம் அதற்கு எதிராக இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் இயற்கையாகவே நமக்கு ஏற்படுகின்ற பயத்தை அவ்வளவு எளிதில் போக்கிவிட முடியாது.

ஆமாம்,  கடைசி காலத்தில் நாம் என்ன செய்வோம் என்கிற எண்ணம் சராசரியாக எல்லா மனிதருக்கும் உண்டு.  சேமிப்பை எடுத்துவிட்டால் கடைசியில் எதுவும் மிஞ்சாது என்பது நமக்குப் புரிகிறது. 

பண நிர்வாகம் தெரிந்தவர்களுக்கு அது ஒரு பிரச்சனை அல்ல. அவர்கள் அதனையே முதலீடாக வைத்து பணம் சம்பாதிக்கும்  திறமை அவர்களிடம்  உண்டு. ஆனால் இங்கு நாம் பெரும்பாலும்  அவர்களைப்பற்றி பேசவில்லை. சராசரி மனிதர்கள், நடுத்தர வர்க்கம், தொழிலாளர்கள்  - இவர்களைப் பற்றி தான் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

இவற்றை எல்லாம் விட வங்கிகளின் நம்பகத்தன்மை திருப்திகரமாக இல்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டியுள்ளது. சட்டங்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றன. ஆனால் அங்கு வேலை செய்யும் ஊழியர்களின் நம்பகத்தன்மை சரியாக இல்லை. எல்லாருக்கும் வங்கிகளின் சட்டதிட்டங்கள் தெரியாது. அதுவே  வங்கி ஊழியர்களுக்கு லாட்டரியில் பரிசு விழுந்த மாதிரி! அவர்களுக்குச் சட்டம் தெரியும். ஆனால் அதனை அவர்கள் தங்களது வாடிக்கையாளரிடம் சொல்லுவதில்லை.  அதனால் வாடிக்கையாளர்  அவர் பாட்டுக்கு எதனையும் கேட்காமல் கடனைக்கட்டிக் கொண்டு வருவார். அவருக்கு வங்கி ஊழியர்கள் சரியான ஆலோசனை அளித்திருந்தால் கடனை எப்போதோ கட்டி முடித்திருப்பார்.  அவர்கள் சொல்லமாட்டார்கள்!  முடிந்தவரை கடைசி காசு வரை பணத்தை வங்கிகள் காலி செய்துவிடும்!

அரசாங்கத்தின் பரிந்துரையைக் குறை சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் வங்கிகளைக் குறைசொல்ல நிறைய உண்டு. அவர்கள் எந்தக் காலத்திலும் நீதி, நேர்மை பற்றி பேச மாட்டார்கள். எந்த அளவுக்கு வாடிக்கையாளரிடம் கசக்கிப்பிழிய முடியுமோ அந்த அளவுக்கு மனசாட்சி இல்லாமல்  கசக்கிப்பிழிவார்கள்!

என்னைக் கேட்டால் கடன்வாங்க ஊழியர் சேமநிதியைப் பயன்படுத்தக் கூடாது என்று தான் சொல்லுவேன். நான் சொல்லுகின்ற காரணம் வங்கிகளின் நேர்மையற்ற போக்கு தான்!

Sunday 19 March 2023

மகாதீரின் சாதனை என்ன?

 

டாக்டர் மகாதீர் சாதனைகள் தான் என்ன? வாய் கிழிய பேசும் அவர் அப்படி என்ன தான் சாதித்து விட்டார்?

கொஞ்சம் அலசிப் பார்த்தால் அவர் செய்ததெல்லாம் சாதனைகள் அல்ல வேதனைகள் தான்!

அவர் மலாய் சமூகத்திற்காக போராடியவர் என்று சொன்னாலும் அதனைக் கூட நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படிப் பார்த்தாலும் கூட அவரே இப்போது மலாய் சமூகம் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கிறது என்று அவரே தான் சொல்லுகிறார்!

அவர் செய்ததெல்லாம் அரசாங்க வேலைகளில் மலாய் சமூகத்தினருக்கு வேலைகளைக் கொடுத்தார்.  ஆனால் அரசாங்க அலுவலகங்களில் நடக்கும் அவலங்கள் மக்களுக்குத் தெரியும். எந்தவொரு வேலையும் குறித்த நேரத்தில் நடப்பதில்லை! அது தான் அவர் செய்த சாதனை!

கலவித்துறையில் மலாய் இளம் தலைமுறையினரிடையே  மாபெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மை என்றாலும் தரம் என்று பார்த்தால் தரமற்ற கல்வியைக் கற்றவர்களாகத்தான் அவர்கள் இருக்கிறார்கள் என்பதும் உண்மையே! இப்படி ஒரு நிலை ஏற்படுவதற்குக் காரணமே டாக்டர் மகாதீர் தான்! மிகவும் தரமற்ற கல்வியைத்தான் அவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது பொய்யல்ல!

இன்று பள்ளியில் கல்வி கற்கும் மாணவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள்?  கல்வியில் தங்களுக்குச் சலுகை வேண்டும் என்று நினைக்கிறார்கள்! மருத்துவமா? சலுகை வேண்டும்!  வழக்காடு மன்றமா? சலுகை வேண்டும்! ஆசிரியர் தொழிலா? சலுகை வேண்டும்! நர்ஸிங் தொழிலா? சலுகை வேண்டும்!  தொழில் தொடங்க வேண்டுமா? சலுகை வேண்டும்!  என்ஜினியரிங் கல்வியா? சலுகை வேண்டும்! வீடு வாங்க வேண்டுமா? சலுகை வேண்டும்! இப்படித்தான் ஒவ்வொன்றிலும் தங்களுக்குச் சலுகை வேண்டும் என்கிற மனநிலையை டாக்டர் மகாதீர் ஏற்படுத்திவிட்டார்!

இப்பொது சலுகை இல்லாமல் தங்களால் வாழ நுடியாது என்கிற மனநிலையில் தான் அவர்கள் இருக்கிறார்கள்! இது எந்த வகையிலும் நாட்டிற்கு நல்லதல்ல! அவர்களின் முன்னேற்றத்திற்கும் நல்லதல்ல! ஆனால் அதைத்தான் அவர் செய்திருக்கிறார்!

தன் கூட இருந்தவர்களைப் பொருளாதார ரீதியில் உயர்த்தியிருக்கிறார். அவர்களுக்குக் குத்தகை என்கிற பெயரில் எதையோ கொடுத்து அவர்களை முன்னேற்றம் அடையச் செய்திருக்கிறார்!மாஸ் விமானம் பொருளாதார ரீதியில் வெற்றிபெற்ற அந்த  நிறுவனத்தை தொழில் தெரியாதவனிடம் கொடுத்து அந்த நிறுவனத்தையே முடக்கி விட்டார்! இன்றுவரை அந்நிறுவனம் முடங்கி போய் தான் கிடக்கின்றது! அந்நிறுவனத்தை வைத்து கோடிக்கணக்கில்  கொள்ளையடித்தது தான் மிச்சம்!

இவர் காலத்தில் இவரால் மலாய் மக்களுக்கு எந்த முன்னேற்றமும் கொண்டுவர முடியவில்லை என்பது தான் நிதர்சனம். முன்னேற இலஞ்சம் வாங்க ஆதரவு கொடுத்தவர் இவர்தான்! சந்தேகம் வேண்டாம்!

டாக்டர் மகாதீர் மலாய் மக்களின்      மாபெரும் அழிவு சக்தி என்பது தான் உண்மை!

Saturday 18 March 2023

போகும் பாதை....!

 

பிரதமர் அன்வார் இப்ராகிம் பதவியேற்று நூறு நாள்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

அவரும் இந்த குறுகிய காலத்தில் பல இடையூறுகளைச் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார். இத்தனை ஆண்டுகள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் இப்போது தான் தூக்கத்திலிருந்து விழித்தவர்கள் போல குறைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்!

அதுவும் டாக்டர் மகாதிர் போன்றவர்கள் பேசும்போது விஷத்தைத் தான் ஒவ்வொரு நிமிடமும் கக்கிக் கொண்டிருக்கிறார்கள்! அவர் 22 ஆண்டுகாலம் பிரதமராக இருந்தவர். என்ன சாதித்தார்?  மலாய் மக்களைப் பற்றி அதிகமாக அக்கறை உள்ளவர் போல காட்டிக் கொண்டாரே தவிர  சொல்கிற அளவுக்கு அப்படி எதனையும் அவர் சாதித்துவிடவில்லை.

பொருளாதாரத்தில்  மலாய் மக்கள் இன்னும் உயரவில்லை என்று இப்பொது சொல்லும் அவர் தனது கால ஆட்சியில் அவர் ஏன் அதனை செய்துகாட்ட முடியவில்லை? அவர்களால் பொருளாதாரத்தில் முன்னேற முடியவில்லை  என்கிற நிலை வந்த போது அவர் என்ன செய்தார்? இலஞ்சம் வாங்கினால் பொருளாதாரத்தில் முன்னேறலாம் என்கிற ஓரு புதிய பாதையை அவர்களுக்குக் காட்டினார்! இது தான் அவர் செய்த மாபெரும்  சாதனை!

அவர் காலத்தில், அவர் சார்ந்த கட்சியினர் இருந்த காலத்தில்,  இலஞ்சம் ஊழலில் ஈடுபட்டவர்கள் நல்ல சௌகரியமான  வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். யார் மீதும் நடவடிக்க எடுக்கத் துணியவில்லை.

ஆனால் இப்போது ஆட்சி மாறிவிட்டது. புதிய பிரதமரோ ஊழல் செய்தால், இலஞ்சம் வாங்கினால் அதற்கு ஊழல் ஒழிப்பு ஆணையம் உண்டு, நீதிமன்றங்கள் உண்டு என்று சொல்லிவிட்டார்! தான் எந்த வழியிலும் உதவக்கூடிய நிலையில் இல்லை என்று கை விரித்துவிட்டார்!

இப்போது பிரதமர் அன்வார் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறார். அது தான் இப்போது திருடர்களுக்குக் கண்ணை உறுத்துகிறது! அப்படி கண் உறுத்துபவர்களில் டாக்டர் மகாதிரும் ஒருவர்.  இப்போது வர்த்தகம் கைமாறிவிட்டது என்கிறார். அது எந்தக் காலத்திலும் கைமாறவில்லை. கைமாறாமல் அது இருந்த இடத்தில் தான் இருக்கிறது!

வர்த்தகம் செய்யுங்கள் என்று கோடி கோடியாக பணத்தை அள்ளிக் கொடுத்தும் கொள்ளையடித்தும் வளர்ந்தவர்கள் தான் பலர். வர்த்தகத்தில் முன்னேற உழைப்பு  வேண்டும். அந்த குறைபாடு ஒன்றினால் தான் இன்று பலரால் வர்த்தகத்தில் முன்னேற முடியவில்லை.

நாம் சொல்ல வருவதெல்லாம்  பிரதமர் அன்வார் சரியான பாதையில் தான் செல்லுகிறார். தீர்க்கப்படாத பல பிரச்சனைகளை இப்போது படிப்படியாக தீர்த்துவைத்துக் கொண்டிருக்கிறார்.  குறை சொல்லுபவர்கள்  பெரும்பாலும் முந்தைய ஆட்சியில் பயன்பெற்றவர்கள். அதனால் அவர்களைப் பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை!

நமக்குத் தேவை நல்லாட்சி. அது இப்போது நடந்து கொண்டிருக்கிறது. தொடரட்டும் அவர்களின் நற்பணி என்பதே நமது பிரார்த்தனை!


Friday 17 March 2023

உணவகங்களில் சண்டை வேண்டாம்!

 

உணவகங்களில் சண்டை போடுவது என்பது மிகவும் அருவருக்க வேண்டிய ஒரு செயல்.

கைகலப்பில் ஈடுபட்டுவிட்ட பிறகு "ஒன்றும் தெரியாத பாப்பா" வைப் போல எந்த ஒரு சலனமுமின்றி தப்பிப் போய்விடலாம். 

 இதனால் அந்த உணவகங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்பு பெரிய பாதிப்பாகவே அமையும்.  இது போன்ற ரகலைகளைச் செய்பவர்கள்  ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி அந்த ரகலைகளில் ஈடுபடுகின்றனர்.

தவறுகள் இரண்டு பக்கமும் இருக்கலாம்.  ஆனால் அதனைச் சகிப்புத்தன்மையோடு  பெரிதுப் படுத்தாமல் அதனை முடித்துக்கொள்ள வேண்டும்.

ஒரு உணவகம் நிறுவ எத்தனையோ சிரமங்களை ஒருவர் எதிர்நோக்குகின்றார். அதற்கான செலவுகள் அதிகம். அங்குத் தேவையான வேலை செய்ய ஆள்கள் தேவை.  அதற்குத் தனியாக ஒரு போராட்டம். வேலைக்கு ஒருவர் வந்தாலும்  அவர் நீண்ட நாள் நீடிப்பதில்லை.  பல போராட்டங்களைக் கடந்து தான் உணவகங்கள் திறக்கப்படுகின்றன.

இப்படியெல்லாம் செலவு செய்து உணவகங்கள் ஆரம்பிக்கும் போது இது போன்ற அடாவடி செயல்களால்  மீண்டும் அவர்களுக்கு இது போன்ற சில்லறை பிரச்சனைகள்.

இது போன்ற அடாவடி செயல்கள் நடைபெறுவதை  எந்த ஓர் உணவகத்தினரும்  விரும்புவதில்லை.  வாடிக்கையாளர்கள் அந்த உணவகங்களுக்கு அடுத்த முறை போவதை விரும்பமாட்டார்கள். போனால் அங்குக் கைகலப்பு ஏற்படும் சாத்தியம் உண்டு என்கிற எண்ணம் ஏற்படத்தான் செய்யும். 

சமீபத்தில் நடந்த அந்த உணவகக் கைகலப்பில் யார் குற்றவாளி என்று நாம் முடிவு செய்ய முடியாது.  தெரியாத ஒன்று பற்றி நாம் தீர்ப்பிட முடியாது.  ஆனால் செய்திகளின்படி குடித்துவிட்டு வந்த இருவர் உணவகத்தில் பணிபுரிவர்களிடம் கைகலப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். காரணம் தெரியவில்லை. ஒரு பக்கத்து நியாயம் தான் நமக்குத் தெரியும்.  அது  இப்போது காவல்துறையின் கையில். அவர்களிடமே விட்டுவிடுவோம்.

உணவகங்களில் நடக்கும் இது போன்ற கைகலப்புகளால்  நட்டம் என்பது உணவகங்களுக்குத்தான்  அதிகம்.  நமது இளசுகளோ, பெரிசுகளோ இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதைவிட வேறு ஒன்றும் சொல்ல இயலவில்லை.

நம்மால் செய்ய முடிந்ததெல்லாம் சண்டை போடுவதற்கு உணவகங்களைப் பயன்படுத்தாதீர்கள் என்று தான் சொல்ல முடியும். . எங்கும் தேவை சமாதானம் தான், சண்டை அல்ல!

Thursday 16 March 2023

நேர விரயம்!

அரசாங்க அலுவலங்கள் இப்போது அதிகமாக மக்கள் எப்படி உடை அணிந்து வருகிறார்கள்  என்பதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டன!

இப்போது நாட்டில் உயிர் போகும் பிரச்சனை என்றால், அரசாங்க ஊழியர்களுக்கு,  வருபவர்கள் எப்படி உடை அணிந்து வருகிறார்கள் என்பது தான்!

ஆனால் அரசாங்க ஊழியர்களுக்கு அதைவிட இன்னும் அதிகமாக அலுவலகத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வேலைகள்  உள்ளன என்பதை மறந்து விடுகின்றனர்.

எப்படி உடை அணிந்து வருகிறார்கள் என்பதில் காட்டும் ஆர்வம் தங்களின் வேலைகளில் காட்டுவதில்லை. இது தான் மிகப்பெரிய பிரச்சனை. நமக்கு ஒரு வேலை ஆக வேண்டும் என்றால் அது ஒரே தடவையில்  நடந்து விடுவதில்லை.  இது தான் மக்கள் எதிர்நோக்கும் பெரிய பிரச்சனை. 

ஒரு சாதாரண நிலையில் வேலை செய்கிறவர் என்றால்  அவரால் ஒரு முறை தான் விடுப்பு எடுக்க முடியும். அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்ப அவர்கள்  விடுப்பு எடுக்க முடியாது. முதலில் இவர்கள்  இந்த மக்களின் பிரச்சனைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் பிரச்சனைகளை அரசாங்க ஊழியர்களால் அறிந்து கொள்ள முடியும்.

நமக்குத் தெரிந்த மலாய் பெண்மணி ஒரு வேலையாகப் போனவர் அந்த வேலையை முடிக்க நான்கு ஐந்து முறை மீண்டும் மீண்டும் அலுவலகத்திற்குப் போக வேண்டி வந்தது.  முதலில் என்னதான் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டால் அவர் புரிந்து கொள்வார். ஆனால் அவர்கள் அப்படி செய்வதில்லை. அவர்கள் சொல்லுவது எல்லாம் தவணை முறையில் தான் சொல்லுவது வழக்கம்!  தவணை முறையில் பொருள்களை வாங்கி வாங்கி ஊழியர்களும் அதே முறையை அலுவலகங்களிலும் கடைப்பிடிக்கின்றனர்!

ஆனால் பொது மக்கள் தனியார் துறைகளில் வேலை செய்பவர்கள். அவர்களுக்கு அரசாங்க சம்பளம் இல்லை என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் அங்கே உட்கார்ந்து சிரித்துக் கொண்டு ஏதோ பொழுதை போக்குபவர்கள் போல நடந்து கொள்ளுகிறார்கள்! அது அரசாங்கத்திற்கு நட்டம்.  ஊழியர்களுக்கு நட்டம் இல்லை! ஆனால் பொது மக்களின் நிலை அதுவல்ல. விடுமுறை எடுப்பதில் சிக்கல்கள் உண்டு. அவர்களுக்குச் சம்பளம் இல்லை.  போக்குவரத்து செலவுகள். இன்னும் பல. அதனால் முடிந்தவரை விடுமுறை கிடைக்கும் அந்த ஒரு  நாளில் அனைத்தையும் செய்து முடித்துவிட வேண்டும் என்று நினைப்பதில்  நியாயம் உண்டு. அரசாங்க ஊழியர்கள் அதுபற்றி எல்லாம் யோசிப்பதில்லை.

அரசாங்க ஊழியர்கள்  இப்படி நடந்து கொள்வதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அங்குள்ளவர்கள் பலருக்கு அவர்களின் வேலைகளில் பெரும்பாலும் அரைகுறை! அவர்கள் அனைவரும் தகுதி உள்ளவர்கள் என்பதாக அவர்களுடைய யூனியன் தான் மெச்சிக்க வேண்டும்! பெரும்பாலும் வேலை தெரியாதவர்கள் தான்! பிரச்சனை என்னவென்றால்  தெரியவில்லை என்றால் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற முனைப்பு  இவர்களிடம் இல்லை! என்ன செய்வது?

நம்முடைய குரல் என்னவென்றால் நேரத்தை வீணடிக்காதீர்கள். அன்றன்றைய வேலையை அன்றே முடித்துவிடுங்கள். நாளை வா என்று இழுத்தடிக்காதீர்கள்!  என்பது தான். உங்கள் சோம்பேறி தனத்தை பொது மக்கள் மீது கடத்தாதீர்கள்!

Wednesday 15 March 2023

உடை அணிவதில் ஒழுங்குமுறை வேண்டும்!

 

மலேசியர்கள் உடை அணிவது இப்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது!

உடை அணிவதில் சில மாற்றங்கள் தேவை என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. 

ஆனால் ஒரு சந்தேகமும் எழுகிறது. அரசாங்க  அலுவலகங்கள்  என்னும் போது எல்லா அரசாங்க அலுவலகங்களிலும் இந்த தீடீர் நடைமுறை பேணப்படுமா அல்லது இங்கும் ஏதாவது விதிவிலக்குகள் உண்டா?

உடை நடைமுறை என்பது நீண்ட காலமாக  புழக்கத்தில் இருக்கின்ற ஒரு நடைமுறை தான். அது ஒன்றும் புதிதல்ல. இத்தனை ஆண்டுகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள்  இப்போது அதனை, எந்த முன்னறிவிப்பும் இல்லாமல்,  அமல் படுத்த நினைப்பது எதனால் என்று புரியவில்லை. 

இதிலும் ஏதும் அரசியல் உண்டா என்பது புரியவில்லை. தேசிய முன்னணி ஆட்சியில் இருக்கும் போது எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. இலஞ்சம் வாங்கலாம்! விருப்பத்திற்கு நடந்து கொள்ளலாம்!  ஆனால் இப்போதைய ஒற்றுமை அரசாங்கத்தில்  கொஞ்சம் பார்த்து நடந்து கொள்ள வேண்டியுள்ளது என்று அரசாங்க ஊழியர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் தான் இந்த கெடுபிடிகள் என நினைக்க வேண்டியுள்ளது. வரவேற்கிறேன்! ஆனால் இந்த கெடுபிடி எப்போது இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டதோ அப்போதிருந்தே இது நடப்பில் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் இப்போது பொது மக்கள் இப்படி ஒரு சூழலை எதிர்நோக்கி இருக்க மாட்டார்கள்.  ஆனால் நமது அரசாங்க ஊழியர்களுக்கு அலட்சியம் அதிகம்.  பணத்தைப் பார்த்தால் நடைமுறைகளைத் தளர்த்திக் கொள்வார்கள்!  அது தான் பிரச்சனை!

இப்போது அரசாங்க அலுவலுகங்கள் தாங்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை மக்களுக்குத் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும். ஒளிவு மறைவு தேவை இல்லை. எது சரி, எது தவறு - அவ்வளவு தான்! முறையாகச் சொல்லிவிட்டால் மக்கள் அதனை மதிப்பார்கள். இப்போது நடப்பதெல்லாம் அவரவர் விருப்பத்திற்கு  ஏற்ப நடந்து கொள்கிறார்கள் என்பது தான் குற்றச்சாட்டு.

இப்போது நாம் சொல்ல வருவதெல்லாம் நமது அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஒரே மாதிரியான நடைமுறைகள் பின்பற்ற வேண்டும். என்றால் மக்களுக்கு அந்த செய்திகள் போய்  சேர வேண்டும். மக்கள் புரிந்து கொள்வார்கள். அதைவிட்டுவிட்டு அதனை ஏதோ ஒரு பெரிய காரியத்தைச் சாதித்துவிட்டது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தக் கூடாது! அப்படியென்றால் இங்கும் ஏதோ ஓர் அரசியல் ஒளிந்து கொண்டிருப்பது போல் தோன்றுகிறது!

உடை அணிவதில் ஓரு நாகரிகம் வேண்டும்! அனைத்து மலேசியரும் அதனை விரும்பத்தான் செய்வார்கள்! 

Tuesday 14 March 2023

திறமையானவர்கள்'ஓரம் போ'!

 

திறமையானவரா நீங்கள்?  போ! போ1 ஒரம்போ!  என்று நாட்டை விட்டே விரட்டுகிற நாடு என்றால் அது நம் நாடு தான்!

"படித்தவர்கள், மெத்த படித்தவர்கள் இங்கு வேண்டாம்! படிக்காத வங்காளதேசிகளை வைத்தே நாட்டை முன்னேற்றுவோம்!" என்று ஒரு நாடு சொல்லும் என்றால் அது நமது மலேசியாவாகத்தான் இருக்க முடியும்!

காரணம் அந்த அளவுக்கு மூளை வடிகால் நாட்டிலிருந்து ஏற்றுமதியாகிக் கொண்டிருக்கிறது!  Brain Drain என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இந்த மூளை வடிகாலுக்கு என்ன காரணமாக இருக்க முடியும்? வேலை வாய்ப்பில்லை, பதவி உயர்வில்லை, தகுதிக்கு ஏற்ற சம்பளம் இல்லை - இப்படி  பல காரணங்கள் உண்டு.  இதில் என்ன விசேஷம் என்றால் இதனை நிவர்த்திக்க இதுவரை அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது தான்!

மூளை வடிகால் என்பது எல்லா நாடுகளிலும் உண்டு. மலேசியா அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் அது நம் நாட்டில் மற்ற நாடுகளைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது என்பது தான் திடுக்கிடும் உண்மை! ஆமாம் உலக அளவில் பார்க்கும் போது மற்ற நாடுகளில் சராசரியாக 3.3 விழுக்காடு தான் வெளி நாடுகளுக்கு வேலைக்காகப் போகின்றனர்.  ஆனால் நமது நாட்டிலோ 5.5  விழுக்காடு என புள்ளி விபரம் கூறுகிறது!

"வெளிநாடுகளில் வேலை செய்யும் மலேசியர்கள் சுமார்  பதினெட்டு  இலட்சம் பேர்.  இவர்களில்  சுமார் பதினோரு இலட்சம் பேர் சிங்கப்பூரில் வேலை செய்கின்றனர். மற்றவர்கள் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமரிக்கா என்று பலவாறு பிரிந்து கிடக்கின்றனர். இப்படி வேலைக்கு என்று போனவர்கள் பலர் அப்படியே அங்கேயே தங்கிவிட்ட கதைகளும் உண்டு. அது தவிர்க்க முடியாதது!

சமீபத்தில் நாம் படித்த ஒரு செய்தியை ஞாபத்திற்குக் கொண்டு வருகிறேன். ஒவ்வொரு ஆண்டும் நமது நாடு மலாயா பல்கலைக்கழகத்தில் பயிலுகின்ற சிறந்த,  வெற்றிகரமான, திறமையான   குறைந்தபட்சம் முப்பது மருத்துவ மாணவர்களை அந்த நாடு வேலைக்கு அமர்த்திக் கொள்ளுகிறதாம்! நாம் அப்போது தான் யோசிக்கிறோம்! சிங்கப்புரோ ஏற்கனவே யோசித்து வைத்துவிட்டார்கள்! அப்புறம் எங்கே நாம் அவர்களை  ஜேய்க்கிறது?

சரியான தலைமைத்துவம் இல்லாத ஒரு நாடு என்னன்ன இழக்கிறது என்பது நம் நாட்டைப் பார்த்துக் கற்றுகொள்ளலாம்! எந்தத் திட்டமும் இல்லை. எந்தத் தூரநோக்கும் இல்லை. கொள்ளையடிப்பதையே கொள்கையாக்கிக் கொண்ட அரசியல்வாதிகளால் நாடு பலவற்றை  இழக்கிறது. அதில் ஒன்று தான் இந்த மூளை வடிகால்!

அனைத்தும் மாறும் என நம்புவோம்!

Monday 13 March 2023

ஆஸ்கார் விருதினை வென்றார்!

 

                                         Tan Sri Michelle Yeoh wins best Actress Oscar!

Everything Everywhere All At Once  என்கிற ஹாலிவூட் திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வழங்கியதன் மூலம் மலேசியாவைச் சேர்ந்த டான்ஸ்ரீ மிஷல் இயோ  சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதினைப் பெற்றிருக்கின்றார்!  வாழ்த்துகள்!

இந்த ஆஸ்கார் விருது என்பது கடந்த 95 ஆண்டுகளில் முதன் முதலாக ஆசியாவைச் சேர்ந்த ஒரு நடிகைக்குக்  கொடுக்கப்பட்டிருக்கிறது  என்பதைச் சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது!  ஆசியாவின் முதல் நடிகை அத்தோடு மலேசியாவின் முதல் நடிகை என்பதும் நமக்குப் பெருமையே!

மிஷல் இயோவுக்குத்  தற்போது வயது 61 ஆகிறது.  ஈப்போ, பேராக் மாநிலத்தைச் சேர்ந்தவர். தந்தை வழக்கறிஞர்.  இயற்கை எய்தி விட்டார். தாயார் கோலாலம்பூரில் வசிக்கிறார் மிஷல் இப்போது  சுவிட்சர்லாந்தில் வசித்துவருகிறார்

இப்படி ஓர் ஆஸ்கார் விருதை இனி வருங்காலங்களில் மலேசியா எதிர்பார்க்க முடியுமா என்பது நிச்சயமில்லை. ஒரு வேளை மிஷலே மீண்டும் ஆஸ்கார் விருதினை வெல்லலாம்!  சாத்தியம் உண்டு. 

இந்த நேரத்தில் ஒன்றைக்  குறிப்பிட்டே ஆக வேண்டும்.  விருதினைப் பெற்ற பிறகு அவர் சொன்ன ஒரு வார்த்தை அனைவருக்குமே பொருந்தும். 

"இது ஓர் நம்பிக்கை ஒளி.  எதுவும் முடியும்  என்கிற சாத்தியங்கள் உண்டு. பெரிதாக எண்ணுங்கள். எண்ணங்கள் கைகூடும்,  சந்தேகமில்லை!" என்று உற்சாக வார்த்தைகளைச் சிறார்களுக்கு அள்ளித்  தெளித்திருக்கிறார் மிஷல்! சந்தேகமில்லை. நம்பிக்கைக்குறிய வார்த்தைகள் தான்!

இதைத்தான் பாரதியும் சொன்னார்: "பெரிதினும் பெரிது கேள்!" நமது இலக்கு சிறிதாக இருந்தால் அது கிணற்றுத் தவளையாகவே இருக்கும்!  உலகமே இலக்கு என்றால் அதுதான் சாதனை!

டான்ஸ்ரீ இயோவை வாழ்த்துகிறோம்.  இவருடைய சாதனைகள் மற்ற மலேசியர்களுக்கும் எடுத்துக்காட்டாக அமையும் என நம்புவோம். நாட்டுக்குப் பெருமை சேர்த்தவரை,   தலைநிமிர வைத்தவரை மீண்டும்  வாழ்த்துகிறோம்!

Sunday 12 March 2023

ஆதரவு அதிகமாகும்!

 

பொதுவாக ஊழல் குற்றச்சாட்டில் அரசியல்வாதிகள் கைது செய்யப்படும் போது அரசியல் ஆய்வாளர்கள் சில கருத்துகளை உதிர்ப்பதுண்டு.  அதுவும் பலரது கருத்துகளை அவர்கள் உள்வாங்கி பின்னர் தங்களது கருத்துகளோடு சேர்த்து  அவர்கள் அதனை வெளியிடுகின்றனர்.

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது செய்யப்பட்டார். நாடே தலைகீழாக உருளப்போகிறது  என்று எதிர்பார்த்தோம். கடைசியில் ஒரு பருப்பும் வேகவில்லை! இப்போதும் அவர் சிறையில் தான் இருக்கிறார்!  முதுகலை படிப்புக்காக ஏற்பாடுகளும்  செய்து கொண்டிருக்கிறார். வெற்றி பெற வாழ்த்துகள்!

இப்போது முன்னாள் பிரதமர் முகைதீனுக்கும்  அதே நிலை தான். மாநிலத் தேர்தல் வரும்வரை "நான் குற்றவாளி அல்ல!" என்று சொல்லி மலாய்க்காரர்களின் வாக்குகளைப் பெற முயற்சி செய்வார். இது எப்போதும் நடப்பது தான்! ஆச்சரியம் ஒன்றுமில்லை!

இவரை வைத்து மலாய் வாக்குகளைப் பெறத்தான் முயற்சிகள் நடக்குமே தவிர மற்றபடி  பெரிதாக எதுவும் நடக்க வாய்ப்பில்லை!

ஆனால் எதுவும் மாறலாம். மலாய் வாக்காளர்களின் படித்தவர்கள் தொகை அதிகம். அவர்கள் அனைவரும் இலஞ்சத்தை, ஊழலை ஆதரிப்பவர்கள் என்று பொதுப்படையாக சொல்லிவிட முடியாது.  ஊழற்ற அரசாங்கமே நாட்டின் நலனுக்கு நல்லது என்பதை அனைவரும் விரும்புகின்றனர். இப்போதே மாற்றங்கள் தெரிகின்றன. இது தொடர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

ஊழல் குற்றச்சாட்டு முகைதீனோடு நின்றுவிடப் போவதில்லை. இன்னும் துணைப் பிரதமர் சைட் ஹமிடியின் வழக்குகளும் உண்டு.  இன்னும் யார் யாரோ! பொறுத்திருப்போம்!

முகைதீனை குற்றவாளி என்பதனால் மலாய் வாக்குகள் சரிந்துவிடும் என்று சொல்லவிட முடியாது. ஏன் அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவும் கூடலாம்.  மலேசியர்கள் நாட்டின் நலனில் அக்கறை கொண்டவர்கள் அனைவருக்கும் நாட்டின் நலன் தான் முக்கியம்.  மலாய் வாக்காளர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. பொதுத் தேர்தலில் மலாய் மக்கள் சுமார் 31 விழுக்காடு நம்பிக்கைக் கூட்டணியை ஆதரித்திருக்கின்றனர். வருகின்ற மாநிலத் தேர்தலில் அந்த எண்ணிக்கை கூடும் என எதிர்பார்க்கலாம். ஒரே காரணம் தான். மக்களின்  பிரச்சனைகளைக் குறைக்க பிரதமர் ஆக்கப்பூர்வமாக செயல்படுகிறார் என்கிற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கிறது.

எப்படி பார்த்தாலும் மக்கள் ஆதரவு வேண்டும் என்பதற்காக கண்மூடித்தனமாக செயல்பட முடியாது. குற்றம் என்றால் குற்றம் தான். அரசியல்வாதி இலஞ்சம் வாங்குகிறான் என்பதற்காக அவனைத் தண்டிக்காமல் இருக்க முடியாது. அரசியல்வாதி மட்டும் என்ன  அந்த அளவுக்கு உயர்ந்தவனா? மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பவன் தண்டனைப் பெற்றே ஆகவேண்டும். அதனால் அநியாயம் பண்ணுகிறவனைப் பார்த்துக் கொண்டிருப்பது ஆட்சியாளனுக்கு அழகல்ல!

ஆதரவு பெருகும் என்பதே நமது கணிப்பு!

Saturday 11 March 2023

குட்டை ஆடைகள் வேண்டாம்!

 

கடந்த சில வாரங்களாக குட்டை ஆடைகள் அணியும் பிரச்சனை தொடர்ந்து மக்களிடையே பேசுபொருளாக மாறியிருக்கிறது!

திடீரென்று ஒரு நாள் போலிஸ்காரர் ஒருவர் போலிஸ் ஸ்டேஷனுக்குள் குட்டை ஆடை அணிந்து கொண்டு வரக்கூடாது என்று உத்தரவு போட்டார். அதுவே இப்போது எல்லா அரசாங்க அலுவலகங்களும் கடைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டன என்றே தோன்றுகிறது.

அது தவறு என்று நான் சொல்லவரவில்லை. மக்களுக்கு அது முன்கூட்டியே சொல்லப்பட்டிருக்க வேண்டும். அரசாங்க ஊழியர்கள்  எப்படி உடைகள் அணிய வேண்டும் என்பதற்குச்  சட்டங்கள் உண்டு.  அதனை அவர்கள் தவறாமல் கடைப்பிடிக்கிறார்கள். 

ஆனால் மக்கள் எப்படி உடைகள் அணீய வேண்டும் - அதாவது அரசாங்க அலுவலகங்களுக்குச் செல்லும் பொது மக்கள் எப்படி உடை அணிய வேண்டும் என்பதற்கு ஏதேனும் வரைமுறைகள் இருக்கின்றனவா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன்  என்கிற நிலைமை தான் இப்போது நிலவி வருகிறது! பல மைல்கள் அப்பாலிலிருந்து  ஒரு வேலையாக அரசாங்க அலுவலகத்திற்கு வருபவர்களை ஆடை சரியாக அணியவில்லை என்று அவர்களைத் துரத்தியடிப்பது நியாயமற்ற செயல். 

மக்கள் முன்னரே அறிந்திருந்தால் சரியான உடைகளை  அணிந்தே வருவார்கள். இத்தனை ஆண்டுகளாக  ஆடாமல் அசையாமல் அப்படியே இருந்து இரசித்துவிட்டு  இப்போது திடீரென "அது தான் சட்டம்! இது தான் சட்டம்!" என்று உத்தரவு போடுவது அறிவில்லாதார் செயலாகவே தோன்றுகிறது.  

சட்டம் அப்படியே தானே இருக்கிறது? இத்தனை ஆண்டுகள் ஏன் அதனை அமலாக்கத்திற்குக் கொண்டு வரவில்லை? யார் தடுத்தது? இத்தனை ஆண்டுகள் உங்கள் தவற்றினை உணரவில்லை. இப்போது என்ன செய்யலாம்? எடுத்த எடுப்பில் உங்கள் புத்தியைக் காட்டாமல் கொஞ்ச விட்டுக் கொடுத்து பிறகு உங்களின் புத்தியைக் காட்டலாம்! முன் கூட்டியே அபாய அறிவிப்பைச்  செய்துதான் ஆகவேண்டும். அதன் பின்னர் யாரும் உங்களைக் குறை சொல்லப் போவதில்லை.

குட்டை ஆடைகளைப் போடுவதை யாரும் விரும்புவதில்லை. அரசாங்க அலுவலகங்கள் அதனை விரும்பினால் மக்களுக்கு அதனை அறிவித்துவிட வேண்டும். ஆமாம் இந்த உத்தரவு பெண்களுக்கு மட்டுமா அல்லது ஆண்களுக்குமா? ஆண்களும் அரை சிலுவாரோடு அலுவலகங்களுக்கு வருகிறார்களே! அவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்துமா? தெளிவாகச் சொல்லி விடுங்கள். மீண்டும் மீண்டும் மக்களைத் துன்பத்திற்கு உள்ளாக்காதீர்கள்.

குட்டை உடைகள், குட்டைப் பாவடைகள் வேண்டாம் என்பதே நம் வேண்டுகோள்!

Friday 10 March 2023

இதற்கு என்ன பதில்?

 

தாய்மொழிப்பள்ளிகள் இனங்களுக்கிடையே வேற்றுமையை வளர்ப்பதாக  22 ஆண்டுகளாக நாட்டின் பிரதமராக இருந்த டாக்டர் மகாதிர் ஒப்பாரி வைத்திருக்கிறார்!  ஏன் அவரது மகனும் கூட அதனையே புலம்பியும் இருக்கிறார்!

இதனை நாம் எதிர்பார்த்தது தான். காரணம் அர்சியல் ஆதரவற்றவர்கள்  இதனையே பிடித்துக்கொண்டு தொங்குவதை நாம் பார்க்கிறோம்! இவர்கள் அரசியல் அனாதைகள்!  இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளலாம். கிறிஸ்துவமதம் நாட்டை  ஆளப்பார்க்கிறது என்று தேர்தல் காலங்களில்  கொஞ்சம் உசுப்பிவிட்டால் மலாய் மக்கள் அதற்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்கிற நம்பிக்கையும் உண்டு.

ஆனால்  மக்கள் தெளிவடைந்து வருகிறார்கள். அன்று எதிர்கட்சியாக இருந்த  நம்பிக்கைக் கூட்டணியை சுமார் 31 விழுக்காடு மலாய்க்காரர்கள் ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்.  அதனால் தான் இன்று நம்பிக்கைக் கூட்டணி முதன்மைக் கட்சியாக இருந்து ஒற்றுமை அரசாங்கத்தை வழி நடத்துகிறது.

தாய்மொழிப் பள்ளிகளைப் பற்றி கேள்வி எழுப்பி இருக்கும் டாக்டர் மகாதிர் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அது அவருக்கே தெரியும் ஆனாலும் தெரிந்தே விஷத்தைக் கக்குகிறார் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி  சொன்னது போல சீனப் பள்ளிகளில் மலாய் மாணவர்கள் சுமார்  20 விழுக்காடு கல்வி பயிலுகிறார்களே அதற்கு மகாதிர் சொல்லுகின்ற பதில் என்ன? ஒரு சில பள்ளிகளில் 30/40 விழுக்காடு கல்வி பயிலுகிறார்களே?அது மட்டும் அல்ல ஒரு சில சீனப்பள்ளிகளில் முழுமையாக  மலாய்க்கார மாணவர்களைக் கொண்டே  பள்ளிகள் நடக்கின்றனவே  அதற்கு அவர் பதில் என்ன? 

டாக்டர் மகாதிருக்கே தெரிந்திருக்கும் காரணங்கள் தான். தேசிய பள்ளிகளில் படிப்பது அனைத்தும் குப்பை என்கிற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டுவிட்டது!  மாணவரிடையே எந்தவொரு ஒழுங்குமுறையும் இல்லை.  கட்டுப்பாடுகள் இல்லை. பெரும்பாலான பள்ளிகளில் கட்டொழுங்குப் பிரச்சனைகள் உண்டு. அதனை நிர்வாகம் கெட்டிக்காரத்தனமாக  அமுக்கிவிடுகிறது! அவ்வளவு தான்!

எல்லாவற்றிலும் பெருங்குப்பை,  குறைவான புள்ளிகள் பெற்று பட்டதாரிகளாகி விடுவது தான். அதில் எல்லாத்தரப்பு பட்டாதாரிகளும் உண்டு. சீனப்பள்ளிகளின் தரம் தான் அதன் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. தேசியப்பள்ளிகளில் தரம் பற்றிப் பேச ஆளில்லை. எதற்கும் இலாயக்கில்லாதவர்களை உருவாக்குகிற வேலையைத்தான் தேசியப் பள்ளிகள் செய்கின்றன!

ஒரு தராதரம் இல்லாத கல்வியைக் கொடுத்துவிட்டு தாய்மொழிப்பள்ளிகள் இன வேற்றுமையை வளர்க்கின்றன என்று சொல்லுவது நியாயமல்ல. இன்று நாட்டில் பல்துறை நிபுணர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் தாய்மொழிப்பள்ளிகள் என்று அடித்துச் சொல்லலாம்!

பேராசிரியர் சொன்னது சரிதான்!

Thursday 9 March 2023

ஊழல் வேண்டாம்!

 

நாட்டில் இலஞ்ச, ஊழல் பெருகிவிட்டது என்பது தெரிந்ததுதான்!

ஆனால் பதவியில் உள்ளவர்கள் இலஞ்சம் இல்லாமல் வாழ முடியாது  என்கிற நிலைக்கு வந்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது!

இலஞ்சம் வாங்குவதற்குப் பதவியில் உள்ளவர்கள்,  அமைச்சர்கள் , சாதாரண சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்படி அனைவருமே இலஞ்சம் இல்லாமல் தாங்கள் வாழ முடியாது என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டதாகவே இன்றைய நிலைமைகள் சுட்டிக்காட்டுகின்றன.

முன்பெல்லாம் இலஞ்சம் என்றால் போலீஸ்காரர்கள்  பெயர்கள் தான் முன்னுக்கு வரும். அது கூட அவர்களைக் குறை சொல்ல முடியாது. உரிமம் இல்லாமல் கார் ஓட்டுபவன்,  மோட்டார் சைக்கிள் ஓட்டுபவன், அதிவேகத்தில் பறப்பவன் - இவர்கள் தான்  போலீஸ்காரர்களுக்கு இலஞ்சத்தைக் கொடுத்துப் பழக்கியவர்கள்! அப்போது அது சிறிய அளவில் இருந்தது. இப்போதும் இருக்கிறது.

ஆனால் அரசியல்வாதிகளின் அட்டூழியங்களைத் தான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு அவர்களின் செயல்பாடுகள் தொடர்கின்றன.

பள்ளி சென்று எதற்குப் படிக்கிறோம்?  சமயப்பாடங்களை எதற்காக கற்கின்றோம்?  எதற்காக இறைவழிபாட்டுத் தலங்களுக்குச் செல்கிறோம்? ஆனால் மக்கள் பணத்தை அரசிய்ல்வாதிகள்  சூறைவாடுவதைப் பார்க்கும் போது  நாம் படித்தது வீண்! சமயப்பாடங்கள் வீண்!  இறைவழிபாடு வீண்! அரசியலில் உள்ளவர்கள் அததனை விதிகளையும் மீறுபவர்களாகத் தான்  இருக்கிறார்கள். 

"பிச்சை புகினும் கற்கை நன்றே" என்கிறாள் ஒளவை. அந்த அளவுக்கு கல்வி உயர்வானது. கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று அதற்காகத்தானே சொன்னார்கள் நம் முன்னோர்.

ஆனால் நடைமுறையில் நடப்பது என்ன?  படித்தவன் தான் கொஞ்சமும் கூசாமல் பஞ்சமா பாதகங்களைச் செய்கிறான். நாட்டை கொள்ளையடிப்பவன் யார்? அரசியல்வாதி! மக்களின் பணத்தைச் சுரண்டுபவன் யார்? அரசியல்வாதி! சாப்பாட்டுப் பொருள்களைக்கூட வாங்குவதற்கு மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். ஆனால் அரசியல்வாதி வெளி நாடுகளில் தனது சாப்பாட்டு பொருள்களை வாங்குகிறான்! ஏன்? நாட்டின் நிலைமை அரசியல்வாதிகளை மட்டும் பாதிக்கவில்லையா?

கற்ற் கல்வி வீணோ என்று தான் நினைக்க வேண்டியுள்லது! ஆன்மீகங்கள் அனைத்தும் வீணோ என்று தான் புலம்ப வேண்டியுள்ளது! சமய வழிபாடு என்பது வீணோ என்று தான் வசைபாட வேண்டியுள்ளது!

அரசியல்வாதிகள் திருந்தாதவரை மக்களின் வாழ்க்கைத்தரம் உயராது!

Wednesday 8 March 2023

ஊழல் குற்றச்சாட்டு!

 

முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின், ஊழல் குற்றச்சாட்டின் பேரில், கைது செய்யப்படுவார் என்கிற ஆருடம் வலுத்து வருகிறது!

அந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியவில்லை. காரணம் இதனை எப்படி ஏற்றுக்கொள்வது  என்பது நமக்குப் புரியவில்லை. 

முகைதீன் நாட்டின் முன்னாள் பிரதமர், ஜொகூர் மாநிலத்தின்  முன்னாள் முதலமைச்சர் - இவர் வகித்த பதவிகளை வைத்துப் பார்க்கும் போது  அவர் மீது உள்ள குற்றச்சாட்டுக்களை எப்படி ஏற்றுக்கொள்வது?

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது குற்றச்சாட்டுகள் வந்தன. அவரின் மனைவி பற்றிய செய்திகள், அவரைவிட,  நீண்ட நாள்கள் ஊடகங்கள் வெளியிட்டுக் கொண்டு வந்தன.   அதனால் நஜிப் மீதான குற்றச்சாட்டு மக்களுக்குப் பழகிப்போன ஒன்றாகிவிட்டது! அதனை ஏற்றுக் கொள்ளும்படியாகவும் ஆகிவிட்டது!

ஆனால் முகைதீன் எந்த குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகதவர். அதாவது பொது மக்களின் பார்வைக்கு அவர் ஒரு வில்லனாகத் தெரிந்தாரே தவிர ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகதவர் என்பது பொது மக்களின் கருத்தாக இன்னும் இருக்கிறது.

சுமுகமாக நடந்து கொண்டிருந்த ஆட்சியைக் கவிழ்த்தார் என்கிற கெட்ட பெயர் அவருக்கு உண்டு. அவரும் நாட்டின் பிரதமர் ஆனார். ஒரு பிரதமராக அவரால் வெற்றி பெற முடியவில்லை! தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஏகப்பபட்ட பேர்களுக்குப் பதவிகளைக் கொடுத்தார்! ஆயினும் அது நீண்ட நாள் நீடிக்கவில்லை. பிரதமர் பதவி பறிபோயிற்று. இப்போதும் முன்பு செய்த அதே கவிழ்ப்பு வேலையில் ஈடுபட்டிருக்கிறார்  என்று நம்மால் ஊகிக்க முடிகிறது! ஆனாலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறமுடியாதபடி சட்டம் கடுமையாக இருப்பதால் இதுவரை அவரால் ஆட்சியை அசைக்க முடியவில்லை!  ஆனால் முயற்சிகளை அவர் கைவிடவில்லை என்பதை அவரின் சகா ஹடி அவாங் நடவடிக்கைகளின் மூலம் நமக்குத் தெரிய வருகிறது.

இப்போதுள்ள இந்த ஊழல் குற்றச்சாட்டு எந்த அளவுக்கு உண்மை என்பது சீக்கிரம் தெரியவரும். ஆனானப்பட்ட முன்னாள் பிரதமர் நஜிப் ஊழல் குற்றச்சாட்டை வைத்து உள்ளே தள்ளப்பட்டிருக்கும் போது இனி யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்கிற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

குற்றம் என்றால் குற்றம் தான். அதுவும் பொது மக்களின் பணத்தின் மீது கைவைப்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

எது எப்படியிருப்பினும் ஒருவர் குற்றம் சாட்டப்படும்வரை நம்மால் எந்த முடிவுக்கும் வரமுடியாது. இலஞ்ச ஊழல் ஆணையம் உறுதிப்படுத்தும் வரை பொறுத்திருப்போம். அது மட்டும் அல்ல.  நீதிமன்றமும் உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் அவர் குற்றவாளி என்பது உறுதியாகும். அதுவரை அவர் நிரபராதி தான்!

Tuesday 7 March 2023

இயக்கங்கள் கூறுவது சரியே!

       நன்றி: வணக்கம் மலேசியா  

முப்பத்தாறு இந்திய இயக்கங்கள் ஒன்று கூடி அரசாங்கத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கின்றன.

ஆம், தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் குறித்து விவாதங்கள் நடைப்பெற்று  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இந்த விவாதத்தில் கலந்து கொண்டவர்கள்  அனைவரும் தமிழ்ப்பள்ளிகளில் பணியாற்றியவர்கள்.  தமிழ்த்துறை சார்ந்த நிபுணர்கள்.

அதில் முக்கியமான தீர்மானம் என்பது  எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்ப்பள்ளிகள் மூடப்படக் கூடாது. அத்தோடு  அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைக்கப்படவும் கூடாது என்பது ஒரு முக்கியமான தீர்மானமாகும்.

பள்ளிகள் மூடப்படக் கூடாது என்னும் போது,  நான் புரிந்து கொள்வது என்னவெனில்,  அந்தப் பள்ளிகளின் உரிமம் இந்தியர்கள் வாழும் இடங்களில் தமிழ்ப்பள்ளிகள் கட்டுவதற்கு  அந்த உரிமத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் அதனால்   எந்தவொரு பிரச்சனையும் எழாது என்பது தான்.   காரணம் புதிய உரிமம் கிடைப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. அதனைத் தவிர்க்கவே பள்ளிகள் மூடப்படக் கூடாது  என்னும் கோரிக்கை என நான் நம்புகிறேன்.

அதே போல  தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் தமிழ் தெரிந்த, தமிழ் அறிந்த ஒருவர்  நியமிக்கப்பட வேண்டும் என்பது பலரது கோரிக்கை. துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி  அவர்களின் சமீபத்திய பேட்டி ஒன்றில் இது உடனடியாக நடக்கும் என்று உறுதி அளித்திருக்கிறார்.  இது எப்படி நடந்தது என்பது நமக்கும் புரியாத புதிர். நடக்கும் என நம்புவோம்.

கல்வி அமைச்சிலும் தமிழ் அறிந்த ஒருவர் இருக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. இதனை ஏன் அவர்கள் புறக்கணிக்கிறார்கள் என்பது நமக்குப் புரியவில்லை. அப்படியே புரிந்தாலும் அந்தப் பதவிக்கு ஏன் தமிழறியாத  ஒருவரை நியமிக்கிறார்கள் என்பதும் புரியவில்லை. ஆனால் இந்த நிலை இப்படியே நீடிக்கக் கூடாது என்பது தான் நமது விருப்பம்.

ஆக, மேலே உள்ள இயக்கங்கள் ஒன்று கூடி தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சில கோரிக்கைகளை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த கோரிக்கைகள் நிறைவேறும் என்னும் நம்பிக்கை நமக்கு உண்டு.

நல்லதே நடக்கும் என எதிர்பார்ப்போம்!

Monday 6 March 2023

தாய்மொழிப்பள்ளிகள்!

 

தாய்மொழி பள்ளிகளைப்பற்றி மீண்டும்  ஒரு விதண்டாவாதத்தை கிளப்பியிருக்கிறார் முக்ரிஸ் மகாதீர்!

நமக்குத் தெரிந்ததெல்லாம் அரசியலில் மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெற வேண்டுமானால் முதலில் தாய்மொழிப்பள்ளிகள்  இன்னொன்று நாட்டின் பொருளாதாரம்.  அதனை அடுத்து மதம். அப்பனும் மகனும் இதைத் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்!

இத்தனை ஆண்டுகள் அரசியலில் கொடிகட்டிப் பறந்தவர் முக்ரிஸ். அப்போதெல்லாம் அவர் இதுபற்றி வாய்த்திறக்கவில்லை.  ஏன்? அவர்களுக்கான ஆதரவு நிரந்தரம் என்று நினைத்தார்கள். ஆனால் கடந்த தேர்தலில்  வைப்புத்தொகையை இழக்கும் அளவுக்கு இருவருக்கும் அடி விழுந்தது! இப்போது பழையபடி பழைய பல்லவியை ஆரம்பித்துவிட்டார்கள்!

டாக்டர் மகாதிர் எப்படி அரசியலுக்கு வந்தார்?  இனங்களுக்கிடையே ஒரு பிரிவினையை ஏற்படுத்தி தான் அவர் அரசியலுக்கு  வந்தவர்.  பொருளதார ஏற்றத் தாழ்வுகளுக்கு மற்ற இனத்தவர்களைக் குற்றம் சாட்டினார்.  தாய்மொழிப்பள்ளிகள்  வேற்றுமையை ஏற்படுத்துகின்றன என்று குற்றம் சாட்டினார். இப்படியெல்லாம் குற்றம்சாட்டித் தான் அவர் அரசியலுக்கு வந்தவர். பொருளாதார முன்னேற்றமடைய  இலஞ்சம் வாங்கியாவது  முன்னேற்றம் அடையுங்கள் என்று இலஞ்சத்தை ஊக்குவித்தவர் அவர்.

சரி இப்போது அவர் மகன் என்ன சொல்லுகிறார்? அப்பா என்ன சொன்னாரோ அதையே தான் இப்போது மகன் சொல்லுகிறார்!  அப்படி என்றால் அப்பா இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது மலாய் மக்களுக்கு எதுவும் செய்யவில்லையா? இப்போது மகன் சொல்லுகின்ற குறைகளைப் பார்த்தால் அவரது அப்பா தான் குற்றம் சாட்டப்பட வேண்டியவர். ஆட்சியில் இருந்த போது குடும்பமே இலஞ்சத்தைத் தவிர வேறு எதையும் பார்க்கவில்லை என்று  தான் தோன்றுகிறது.

இப்போது இவர்கள் என்ன தான் சொல்லுகிறார்கள்? பழைய பல்லவியையே பாடுகிறார்கள்! அதே பொருளாதாரம், அதே மொழிப்பிரச்சனை -  இவைகள் தான் இவர்களது ஆயுதம்! ஆனால் முன்னாள் பிரதமரே, முன்னால் மந்திரி பெசாரே!  இந்த ஆயுதங்கள் இனி எடுபடாது! வேறு எதையாவது புதிதாகக் கண்டுபிடித்து அரசியல் பேசுங்கள். எத்தனை நாளைக்கு இதனையே பேசிக்கொண்டிருக்கப் போகிறீர்கள்? வருங்காலங்களில் இந்தப் பேச்சுக்கள் எடுபடாது!

தாய் மொழிப்பள்ளிகளைப் பற்றிப் பேசி இனி அரசியல் பேச முடியாது. அதே போல பொருளாதாரம் மலாய் மக்களின் கையில் பெரும் அளவில் போய்விட்டது. வணிக நிலையங்கள் பல அவர்களுடையது தான்.

அரசியல் பேசினால் நாட்டு நலனை முன்னிறுத்துப் பேசுங்கள்.  எல்லாத் தவறுகளையும் செய்துவிட்டு இப்போது மீண்டும் பழைய காலத்து அரசியலுக்குப் போகிறீர்கள்! அந்தப் பழைய காலம் மலையேறிவிட்டது! புதிதாக சிந்தியுங்கள்! செயல்படுங்கள்!

Sunday 5 March 2023

இதற்குத் தண்டனை கிடையாதா?

 

        நன்றி: வணக்கம் மலேசியா

இறந்த ஒருவரின் உடலை இறக்காத ஒருவரின் குடும்பத்தில்  ஒப்படைத்து  ஆள்-மாறாட்டம் செய்த சிறைச்சாலை துறையினர் மீது  அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது அல்லது எடுக்கப் போகிறது  என்று  பொது மக்கள் கேள்வி எழுப்புவதில் ஏந்த தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்தியக் குடும்பங்கள் என்றால் அவ்வளவு அலட்சியமா என்று இயல்பாகவே நமக்குத்  தோன்றுகிறது. இது ஒர் எதிர்பாராத சம்பவம் என்று சொன்னாலும் அந்த எதிர்பாராத சம்பவம்  ஏன் இந்திய குடும்பங்களில் மட்டும் தேர்ந்தெடுத்து நடைபெறுகிறது என்பதைத்தான் நாம் கேட்கிறோம்.

தவறுகள் நடப்பது இயல்புதான். ஒரு சில இடங்களில் விதிவிலக்குகள் உண்டு. ஆனால் இது போன்ற இடாங்களில் விதிவிலக்குகளை ஏற்றுக்கொள்ள முடியாது.

இப்போது ஒன்று மட்டும் நமக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. சிறைத்துறை சரியான வழியில் செல்லவில்லை  என்பதுதான்.  சிறையில்  இறப்பு நடந்தால் அது இந்தியராக இருக்கிறார். இது போன்ற ஆள்-மாறாட்டம் நடந்தாலும் அதுவும் ஒர் இந்தியராக இருக்கிறார். அது ஏன் இந்தியர்களுக்கு மட்டும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது? மற்ற இனத்தவர்களைப்பற்றி நாம் கேள்விப்ப்டுவதில்லையே?

சரி, இப்போது இந்தப் பிரச்சனையைப் பற்றியே பேசுவோம்.  இறந்து போன அந்த  இளைஞனை   இன்னொரு  வீட்டார் அவனைக் கொண்டு போய் மின்னியல் சாதனத்தில் தகனம் செய்திருந்தால்  அல்லது சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்தால் கூட  சிறைத்துறை என்ன பதிலைச் சொல்லும்? அதை எப்படி ஒரு சாதாரண விஷயமாக நாம்  எடுத்துக்கொள்ள முடியும்?  எல்லா மதத்தினருக்கும் இறந்த பிறகு செய்கின்ற சடங்குகள் மிக முக்கியமானவை.  இந்து  மதம் கிறிஸ்துவ மதம், இஸ்லாமிய மதம், புத்த மதம் என்றெல்லாம் வேறுபாடுகள் இல்லை. எல்லாம் சடங்குகளும் முக்கியத்துவம் வாய்ந்தவைகள் தாம். அப்படி நடந்திருந்தால் இவர்கள் என்ன பதிலைச் சொல்லப் போகிறார்கள்.

இது போன்ற தவறுகள் நடந்திருக்கக் கூடாது ஆனால் நடந்துவிட்டது.  நடந்துவிட்டதற்கு இப்போது சிறைத்தரப்பிலிருந்து அல்லது காவல்துறையிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்று தெரியவில்லை. பொறுத்திருப்போம்.

சம்பந்தப்பட்டவர்களுக்கு இதற்கான தண்டனை என்னவென்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

Saturday 4 March 2023

நூறு நாள்கள் ஓடிவிட்டன!

 

 டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பிரதமர்  பதவியேற்று நூறு நாள்கள் ஓடிவிட்டன!

இந்த நூறு நாள்களில்  அவர் சாதனை என்ன என்கிற கேள்விகள் எழுவது இயல்பானது தான். தமிழ் நாட்டில் திரைப்படங்கள் நூறு நாள்கள் ஓடினால் அது மாபெரும் வெற்றி என்பார்கள். 

ஆனால் திரைப்படங்கள் போல இந்த நூறு நாளை வெற்றியாகக் கொண்டாட முடியாது! என்ன சாதித்தீர்கள் என்பதைத் தவிர வேறு கேள்விகள் எழாது.

பிரதமர் பதவியை அன்வார் ஏற்றதும்  அவரால் முழுமையாக செயல்பட முடியவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். செயல்பட முடியாதபடி பெரிகாத்தான் நேஷனல் முட்டுக்கட்டைகளைப் போட்டுக் கொண்டிருந்தது. அதனால் தனது ஒற்றுமை அரசாங்கம் தடை ஏதும் இல்லாமல்  செல்ல சில ஆரம்பக்கட்ட வேலைகளை அவர் செய்து  கொண்டிருந்தார். ஆரம்பத்தில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை என்பது உண்மை தான். ஏன் பார்ப்பவர்களுக்கும் ஒரு சந்தேகம் இருக்கத்தான் செய்தது. காரணம் அவருடைய எதிரிகள் பணபலம் வாய்ந்தவர்கள்! எதனையும் செய்யக்கூடிய  துர்க்குணம்  படைத்த தீய சக்திகள். . அவர்களைக் குறைத்து மதிப்பிட முடியாது!

எப்படியிருப்பினும்  இந்த நூறு நாள்களில் ஒரு சில வேலைகள் நடந்திருக்கின்றன.  ஐந்து வெள்ளிக்கென ஓர் உணவுத்திட்டத்தைக் கொண்டுவந்து, குறைவான விலையில்,  பலரது பசியைப் போக்குவது வரவேற்கக் கூடிய திட்டமே. வெளிநாடுகளில் மலேசிய பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இயல்பான குடியுரிமை - இப்படி ஒரு சில வரவேற்கக் கூடியவை.

நாம் பெரும்பாலும் இந்தியர்களின் நலனையே விரும்புவதால் அதுபற்றி நம்மால்  பேசாமல் இருக்க முடியவில்லை.  இந்த நூறு நாள்களைப்பற்றி பேசும் போது நம் இனத்தவருக்கு அது திருப்திகரமாக அமையவிலலை. துணை அமைச்சர் பதவி முதன் முதலாக ஒரு தமிழ்ப்பெண்ணுக்குக் கொடுக்கப்பட்டிருப்பது  எதிர்பாராதது. பிரதமருக்கு நமது வாழ்த்துகள்! மற்றபடி நமது எதிர்பார்ப்புகள் எதுவும் இந்த நூறு நாள்களில் நிறைவேறவில்லை. ஒரு வேளை அடுத்த நூறு நாள்களில் நிறைவேறலாம். சாத்தியம் உண்டு.

பொதுவாக இந்தியர்களின் புறக்கணிப்பு  என்பது இன்னும் தொடர்கிறது.  மாற்றம் வரும் என்று நம்பினாலும் அது எப்போது என்பது தான் கேள்வி. பொறுத்திருப்போம். அறுபது ஆண்டுகள் பொறுத்திருந்தவர்கள் நாம். அந்த அளவுக்கு அடி வாங்கிய நாம் அறுபது மாதங்கள் பொறுத்திருக்க முடியாதா?

இந்த ஆட்சியில்  நமக்கு நல்லது நடக்கும் என்னும் நம்பிக்கை உண்டு. சீக்கிரமாக நடந்தால் சீக்கிரம் மகிழ்ச்சியடைவோம்.  தாமதமானால் கொஞ்சம் தாமதித்து மகிழ்ச்சியடைவோம்! அவ்வளவு தான்!

நாட்டு நலன் என்று எடுத்துக் கொண்டால் நிலைமை சீரடைகிறது என்று சொல்லலாம்.  இலஞ்சம் முன்பு போல் இல்லை. தயக்கத்துடனேயே தலை காட்டுகிறது! அரசாங்க நிறுவனங்கள் தங்களது கடமையைச் செய்கின்றன. வேலைகள் நடக்கின்றன.

பொதுவாக இந்த நூறு நாள்கள் பாராட்டுக்குரியவையே!

Friday 3 March 2023

ஹாடி உங்களுக்கு இது தான் பொழப்பா!

 


நாட்டில் ஒற்றுமை அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறது. நமக்குப் பிடிக்காத தேசிய முன்னணியும் அந்த ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிறது. அதனால் நாம் கோபித்துக் கொள்ளவா முடியும்? வேறு வழியில்லை!  அரசாங்கம் நடக்க வேண்டும். அதற்கான ஒரே வழி எதிரிகளையும் இணைத்துக் கொண்டு முடிந்த வரையில் நல்லதைச் செய்து நல்லதொரு அரசாங்கத்தை நடத்த வேண்டும். அப்படி உருவானது தான் நடப்பில் இருக்கும் ஒற்றுமை அரசாங்கம்.

ஆனால் இப்படி ஒரு அரசாங்கம் நடப்பதையே வெறுக்கிறார் பாஸ் கட்சியின் தலைவர் ஹாஜி அடி அவாங்.  இந்த அரசாங்கத்தைக் கவிழ்ப்போம் என்கிறார்!  ஒழிப்போம் என்கிறார்!  ஒன்றுமில்லாமல் ஆக்குவோம் என்கிறார்! வீண் பழி போடுகிறார்!

பதினான்காம் பொதுத் தேர்தலுக்குப்பின் என்ன நடந்தது என்பதை நாம் அறிவோம். எத்தனையோ பிரச்சனைகள். எங்குப்  பார்த்தாலும் லஞ்ச லாவண்யம். கேட்க ஆளில்லை. கேட்டாலும் அதையும் கேட்க ஆளில்லை! அப்படி ஓர் அரசாங்கம். ஊழல்! ஊழல்! ஊழல்! மக்களுக்கு எதுவும் தெரியாமல் இல்லை. ஆனால் அரசாங்கம் எதனையும் இலட்சியம் செய்யவில்லை. அவர்கள் ஆட்சி நடத்த வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த ஒரு கொள்கையும் அவர்களிடம் இல்லை!  இந்த அரசாங்கத்தில்  மிகவும் பயனடைந்தோர் என்றால் அது பாஸ் கட்சியினர் தான். நிறைய பதவிகள்! அமைச்சர்களுக்குள்ள சம்பளம்! 

கடந்தகால அரசாங்கத்தில் இப்படி குறுக்கு வழியில் சம்பாதித்தவர்கள் பாஸ் கட்சியினர்! அப்படியிருக்க இப்போது நடப்பு அரசாங்கத்தைக் கேவலமாகப் பேசுகிறார் ஹாடி அவாங்! எப்படி ஏற்றுக்கொள்வது?  அரசாங்கம் தவறு செய்தால் அதனைக் கண்டிக்கலாம். குறை சொல்லலாம். ஆனால் ஹாடி, அப்படி எதுவும் நடக்கவில்லையே! அப்புறம் உங்களுக்கு என்ன மனக்குறை என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

ஹாடி ஒன்றும் தெரியாதவரோ, அறியாதவரோ அல்ல. அவர் வெறும் அரசியல்வாதி மட்டும் அல்ல. ஆன்மீகவாதி. ஆன்மீகம் அறிந்தவர். பொய் சொல்லுவதும் அரசாங்கத்தைக் கவிழக்க நினைப்பதும் பெரும் பாவம் என்பதை அவர் அறிவார்.

நீங்கள் ஆளுகின்ற மாநிலங்களிலேயே பல குறைபாடுகள். ஏன்? இப்போது இந்த நேரத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறதே அந்த வெள்ளம் உங்கள் மாநிலத்தையும் விட்டுவைக்கவில்லையே! ஒவ்வொரு ஆண்டும் இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.  உங்கள் அரசாங்கம் அதனை "கடவுள் செயல்" என்று கூறுவதைத் தவிர வேறு என்ன செய்திருக்கிறது? கடலில் மண்ணைப்போட்டு நிரப்பி வீடுகளைக் கட்டுகிறார்கள்.  அது முடியும் போது நீங்கள் ஏன் ஒன்றும் செய்வதில்லை? மக்களைச் சுரண்டுவதில்  காட்டும் அக்கறை அவர்களின் முன்னேற்றத்தில் மட்டும் ஏன் கட்டுவதில்லை?

ஹாடி! உங்கள் வேலையைச் சரியாக செய்யுங்கள்.  கவிழ்ப்போம்! ஒழிப்போம்! என்று உங்கள் வாயிலிருந்து வருவது என்பது உங்களின் தகுதிக்கு ஏற்புடையதல்ல! அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம்! அதுவே நமது எதிர்காலம்!

Thursday 2 March 2023

ஏன் இந்த இழிநிலை?

 

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் பற்றி பேசும் போது அவர் எல்லாகாலங்களிலும் மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே ஒன்று பேசுபவர்!

பதவிக்காக எதனையும் செய்பவர்  என்பது தான் அவரைப்பற்றிய நமது பொதுவான அபிப்பிராயம். எப்போதும் இனங்களுக்கிடையே   பகைமையை உருவாக்குபவர். இனத்துவேஷத்தை  வளர்ப்பவர். அதன் மூலம் தனது பதவியைத் தற்காத்துக் கொண்டவர்.

தன்னை மலாய்க்காரர் என்று சொல்லி சொல்லியே தன்னை வளர்த்துக் கொண்டவர். அவர் ஓர் இந்திய வம்சாவளி இஸ்லாமியர் என்பது தான் அவரின் உண்மைச் சரித்திரம்.  சிங்கப்பூர் பலகலைக்கழகத்தில் அவர் மருத்துவம் பயிலும் போது தன்னை இந்தியர் என்றே அடையாளப்படுத்தியிருக்கிறார்.  அவரது அடையாளக்கார்டும் அதைத்தான் சொல்லுகிறது. ஆனால் அந்த சரித்திரத்தை,  அவரின் பதவியைப் பயன்படுத்தி,  பின்னர் மாற்றிக் கொண்டவர். அவரிடம் உண்மை இல்லை. நேர்மை இல்லை என்பதை உறுதிப்படுத்த இது ஒன்றே போதும்!

அவர் தான் இந்த நாட்டை நீண்ட காலம் ஆட்சி செய்தவர். ஆனால் மலாய்க்காரர்கள் முன்னேறவில்லை என்கிறார்.  இன்னும் பொருளாதாரத்தில் முன்னேற்றமடையவில்லை என்கிறார். ஆட்சியில் இருக்கும் போது என்ன செய்தார்?   பொருளாதாரம் வேண்டுமென்றால் உழைக்க வேண்டும். ஆனால் அவர் உழைக்கச் சொல்லவில்லை. இலஞ்சம்  வாங்கினால் முன்னேறலாம் என்கிற வழியைக் காட்டிக்கொடுத்தவர் அவர் தான்.  அவரும் அதனை நிருபித்துக் காட்டினார்.  அவர் குடும்பமும் அதைத்தான் செய்தது!

இந்தியர்களின் மீது தீராப்பகைக் கொண்டிருந்தார். அந்நாள் இந்தியத் தலைவரை வைத்தே இந்தியர்களின் பொருளாதாரத்தை நொறுக்கினார்! இந்நாள்வரை இந்தியர்களின்  முன்னேற்றம் சொல்லும்படியாக இல்லை.

அவரின் அந்திமகாலம் எப்படியிருக்கிறது? நொந்து நூலாகியிருக்கிறார். பல ஆண்டுகாலம் கட்டிக்காத்த அவரது தொகுதியிலேயே, கடந்த தேர்தலில் வைப்புத்தொகையை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது! அவரது கட்சியினர் அனைவருமே தேர்தலில்   வைப்புத்தொகையை இழந்திருக்கின்றனர். 

தான் தொடங்கிய கட்சியையே வேண்டாமென்று  'தவளை' என்று அழைக்கப்படும் இப்ராகிம் அலி தலைமையில் இயங்கும் கட்சியான புத்ரா கட்சியில் அவர்  இப்போது இணைந்திருப்பது தான் ஆகக்கடைசியான அவரது அரசியல் நிலைப்பாடு!  கட்சியில் இணைந்தவுடனேயே தனது புலம்பலை ஆரம்பித்துவிட்டார்! மலாய்க்காரர்கள் முன்னேறவில்லை! பொருளாதாரத்தை வந்தேறிகள் கைப்பற்றிக் கொண்டனர் என்பதாக தனது புலம்பலை ஆரம்பித்துவிட்டார்!

இவரது கூற்றுப்படி மலாய்க்கரர் பொருளாதார முன்னேற்றம் என்றால் இலஞ்சம் என்கிற சொல் தான்  நம் முன் நிற்கிறது!  இலஞ்சம் வாங்கியாவது நீங்கள் முன்னேறுங்கள் என்பது தான் அவரது ஆசை. ஆனால் அது அதிககாலம் நீடிக்காது என்று யாரும் அவருக்கு எடுத்துச் சொல்லவில்லை.

கடைசி காலம் அவருக்கு மிக அவலமான ஒரு நிலைக்குக் கொண்டு சென்றுவிட்டது. அவரே தான் அவரைத் திருத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இன்னும் சரிவுகள் தான் ஏற்படும்!

Wednesday 1 March 2023

அலட்சியம் வேண்டாம்!

 

தமிழர்களில் இரு பிரிவினர் தான் இருக்கிறார்கள். ஒன்று குடிகாரர் கூட்டம் இன்னொன்று குடிகாரர் அல்லாத கூட்டம்!

குடிகாரன் அல்லாதவனால் பிரச்சனை இல்லை. இந்த குடிகாரர் கூட்டம் தான் நமது சமூகத்தில் பிரச்சனையான கூட்டம்.  அவனிடம் நாம் பேச முடியாது. அவன் "உங்க அப்பன் ஊட்டு காசா?" என்று  நம்மைப் பார்த்துக் கேள்வி கேட்பான்!  "என்னோடு காசு நான் குடிப்பேன்!  உனக்கு எங்கே வலிக்குது?" என்று கேட்கும் போது நாம் முகத்தை எங்கே போய் வைத்துக் கொள்வது?

சரி! இதையெல்லாம் பொறுத்துக் கொண்டாலும் இவனுக்குப் பெண்டாட்டி, பிள்ளைகள் எதுவும் ஞாபகத்திற்கு வருவதில்லை! குடித்து குடித்து இளம் வயதிலேயே வியாதிகள் வந்து, கையிழந்து, காலிழந்து கடைசியில் வீட்டில் நிரந்தரமாக உட்கார்ந்து விடுவான்! பெண்டாட்டி தான் வேலை செய்து காப்பாற்ற வேண்டும். பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்புவதில் கூட பிரச்சனைகள் வரும். மிகவும் கடினமான சூழல் வரும் போது ஊடகங்களை நாட வேண்டி வரும். ஏதோ நாட்டுக்குத் தியாகம் செய்தது போல வெளியே காட்டிக்கொள்வார்கள்!

நாம் கேட்பதெல்லாம் பணத்தின் மீது உனக்கு என்ன அவ்வளவு அலட்சியமா என்பது தான். குடிக்கும் போது பணத்தின் அருமை தெரியவில்லை. குடித்துக் கும்மாளம் அடித்து கடைசியில் படுத்து விட்டால் பின்னர் யார் காப்பாற்றுவது? குடித்து வேறு வழியில்லாமல் போகும் போது இந்த சமுதாயம் இவர்களுக்கு, இந்த குடிகாரர்களுக்கு, உதவி செய்ய வேண்டுமாம்!

சமீபத்தில் ஒரு பத்திரிக்கைச் செய்தியைப் படித்தோம்    பிச்சை எடுக்கும் ஒருவர் இறந்து போனார். அவர் வாழ்ந்த இடத்தைச் சோதித்துப் பார்த்ததில் சில ஆயிரம் வெள்ளிகள் இருந்தனவாம்! ஒரு பிச்சைக்காரர் கூட தனது கடைசி காலத்தில் பணம் வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறார்.  ஆனால் ஒரு குடும்பத்தைக் கட்டிக்காக்க வேண்டியவன் குடித்து  ஓட்டாண்டியாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறான்! என்ன சொல்ல?

இந்த குடிகார கூட்டத்தை நினைக்கும் போது வெறுப்பு ஏற்படுகிறது. ஆனால் யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. பணம் இருக்கும் போது குடித்துக் கும்மாளம் போடுவதும் அனைத்தையும் இழந்த பிறகு "சமுதாயமே உதவு" என்று கெஞ்சுவதும் - இப்படி ஒரு வேடிக்கையான வாழ்க்கை இவர்களுடையது.

நண்பர்களே!  பணம் ஒவ்வொருடைய வாழ்க்கைக்கும் மிகவும் தேவையானது.  பணத்தின் மீது அலட்சியம் காட்ட வேண்டாம். பணத்தின் மீது அலட்சியம் காட்டினால் பணமும் உங்கள் மீது அலட்சியம் காட்டிவிடும். நீங்கள் பெரிய கோடிசுவரனாக ஆக முடியாவிட்டாலும் உங்களின் தேவைக்கு ஏற்ப கையில் பணம் இருக்க வேண்டும். வீடு வாசல் சொந்தமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் அனைவரையும் படிக்கவைக்க வேண்டும். அடிப்படை வசதிகள் நமக்குத் தேவை என்பதை நமது சமுதாயம் உணர வேண்டும்.

அலட்சியம் வேண்டாம்! பணம் நமக்கு வேண்டும்! நலமாக வாழ பணம் வேண்டும்! நம்பிக்கையோடு வாழ பணம் வேண்டும்!