Sunday 31 March 2024

நமக்கும் பொறுப்பு வேண்டும்!

 

சில இறப்பு வீடுகளில் நம் இளைஞர்கள் செய்யும் வெறித்தனமான செய்கைகள் நம்மைத் தலைகுனிய வைக்கிறது என்பதில் மாற்று கருத்து இல்லை. ஏன் இவர்கள் இப்படி செயல்படுகிறார்கள்  என்று நமக்கும் புரிவதில்லை.

காலம் நேரம் எதுவும் கிடையாது. எந்த நேரம் பார்த்தாலும் குடியும் கும்மாளமும்.  பக்கத்தில் குடியிருப்பவர்களைப் பற்றி  எந்தக் கவலையும் இல்லை.  நான் எதையும் செய்வேன் யார் என்னைக் கேட்பது என்கிற மூர்க்கத்தனம்.

வருங்காலங்களில் இறப்பு வீடுகளுக்குப் போவது கூட குற்றமோ என்கிற நிலைமைக்கு நாம்  தள்ளப்படுகிறோமோ என்று ஐயப்பட வேண்டியுள்ளது. அந்த அளவுக்கு நமது இளைஞர்கள் நடந்து கொள்கின்றனர்.

சாவு வீடு  என்றால் சம்பந்தப்பட்டவர்கள் துக்கத்தோடு இருப்பார்கள்  என்கிற எண்ணமே இருப்பதில்லை.  இறந்தவர் உடலை இடுகாட்டுக்குக் கொண்டு செல்கையில் என்ன ஆர்ப்பாட்டம்.  மோட்டார் சைக்கள் ஊர்வலம், பட்டாஸ் வெடிகளின் வெடிச்சத்தம்  -  சாவு என்கிற துக்கம் போய்  ஏதோ  பிறந்தநாள் கொண்டாட்டம் போல் மாற்றிவிடுகின்றனர்.

கடைசியில் நிலைமை என்னவாகிறது?  காவல்துறை  தலையிட வேண்டியநிலைக்கு ஆளாகிறது.

பொதுவாகவே நமது இளைஞர்கள் நல்லவர்கள். நல்லதைச் செய்வதற்கு எத்தனையோ நல்ல காரியங்கள் உள்ளன.  அவர்களைத் தவறான வழிகளில் கொண்டு செல்லவதற்குத்தான்  வழிகாட்டிகள் உள்ளனர்.  இந்த வழிகாட்டிகள் எல்லாம் பெரிய மனிதர்கள்  போர்வையில் வலம் வருகின்றவர்கள்.  இந்த வழிகாட்டிகள் எது பற்றியும் கவலைப்படாதவர்கள். பணம், பதவி, பட்டம்  இப்படித்தான்  இவர்கள் மூளை  வேலை செய்யும்.

நமது இளைஞர்களுக்கு வேலை இல்லாததும் ஒரு பிரச்சனையே. நமது இளைஞர்களுக்குப் பல தொழிற்திறன் பயிற்சிகள்  அளிக்கப்படுகின்றன. பலர் பயன்பெறத்தான் செய்கின்றனர். பலருக்கு இந்த செய்தியே எட்டுவதில்லை.  காரணம் எஸ்.பி.எம். முடித்த பிறகு என்ன செய்யலாம் என்கிற தேடல் இல்லை.  வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. இவர்கள் தேடிப் போவதில்லை.  பெற்றோர்களும் தடையாக இருக்கின்றனர்.

நம்முடைய குற்றச்சாட்டெல்லாம் நமது பெற்றோர்களின் மீது தான். அவர்களும் கல்வியைப் பெரிதாகக் கருதுவதில்லை. பிள்ளைகளும் அது பற்றி கவலைப்படுவதில்லை. பொறுப்பு பெற்றோரிடமிருந்து தொடங்க வேண்டும்.  அப்போது தான் அது பிள்ளைகளிடம் போய் சேரும்.

Saturday 30 March 2024

ஏன் கண்டு கொள்ளவில்லை?

 

சமயத்தைப் பற்றி பேசுவதை யாரும் விரும்புவதில்லை.  ஆனால் இந்து சமயத்தைக் கேவலப்படுத்தி  சிலர் பேசுவதை  யாராலும் தடுக்க  முடிவதில்லை.  தடுப்பதற்கு யாருக்கு அதிகாரம் உண்டு  என்றும்  புரியவில்லை.  எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

தேவையற்ற ஒரு பிரச்சனையை, தேவையில்லாமல் கிளப்பிவிட்டு, அது பற்றி பேசி,  தேவையற்ற  விவாதங்களைக் கிளப்பி  ஒரு சிலர் பேசிக் கொண்டிருப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  சமயத்தைப் பற்றி பேசி அதனை சர்ச்சையாக்குவதில்  யாருக்கென்ன   இலாபம்?

எந்த ஒரு மதத்துக்காரனும் தன்னுடைய மதம் தாழ்ந்தது என்று எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.  முதலில் அதனைப் புரிந்து கொள்ளுங்கள்.  நீங்கள் கரடியாய்க் கத்துங்கள் அதற்காக உங்கள் மதம் உயர்ந்தது  என்று  எந்த கரடியும் ஒத்துக்கப் போவதில்லை.  ஏன்?  எவரஸ்ட் மலை மீது ஏறி  எகிறி எகிறி குதித்து  தலைகீழாக நின்று கத்துங்கள்  அதற்கெல்லாம் யாரும் மசியப்போவதில்லை.

ஒரே காரணம் தான். அவனவனுக்கு ஒரு மதம் உண்டு. அதைத்தான் அவன் காலங்காலமாக வழிபட்டு வருகிறான். அந்த மதத்தின் மூலம் அவனுக்கு எந்தத் தாழ்வும் வந்ததில்லை.   உலகில் சராசரி மனிதன் வாழும் வாழ்க்கையைத் தான்  அவனும் வாழ்கிறான்.  அதனால் உங்கள் மதமோ எங்கள் மதமோ அவனை உயர்த்தி விடவாப் போகிறது?  மதம் உயர்த்தாது உழைப்புத்தான்  உயர்த்தும்.

மனிதன் சாமி கும்புடுகிறானே  அதுவே பெரிய விஷயம்.  சாமியே வேண்டாம் என்று வெறுப்பவர்களும் இருக்கிறார்கள்.  நாத்திகர்கள் அதைத்தானே  செய்கிறார்கள்?  ஆனால் ஒன்றை யோசித்தது உண்டா?  நாத்திகம் பேசுகிறவனால் எந்த  மதப்பிரச்சனையும் வந்ததில்லை.  மதத்துக்காக அடித்துக் கொள்வதில்லை.  எந்த நாட்டிலாவது  நாத்திகனால் வம்புதும்பு  ஏதேனும் வந்ததுண்டா?  அடிதடி வந்ததுண்டா? 

நாம் சொல்ல வருவதெல்லாம் ஒன்று தான். மதத்தை வைத்துக் கொண்டு அரசியல் நாடகம் ஆடாதீர்கள்.  உங்களுக்கு அதனால் இலாபம் வருகிறது என்றால்  தாராளமாக வரட்டும், கொட்டட்டும்! முடிந்தால் மலேசியாவின் ஒரு  கோடிஸ்வரனாக வர முயலுங்கள். உங்களைப் பாராட்டுகிறோம். யாருக்கும் உங்கள் மீது கோபமில்லை.  ஒரு மதத்தைத் தேர்ந்து எடுப்பது, தொழிலை தேர்ந்தெடுப்பது  உங்கள் உரிமை. ஆனால் பிற மதத்தினரின் நம்பிக்கையைச் சிதைப்பது  உங்களுக்கு உரிமையில்லை.     

பிற மதங்களைப் பற்றி பேச யாரும் உங்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்பதை மறக்க வேண்டாம்!

Friday 29 March 2024

நல்ல காலம் பொறக்குது!

 

நாட்டின் பொது எதிரி என்றால் ஊழல் என்பது அனைவருக்கும் தெரியும். தெரிந்து என்ன பயன்?  வாயை மூடிக்கொண்டு தான் இருக்க வேண்டும். காரணம் அது அதிகாரம் படைத்தவர்களின் ஆதிக்கத்தில் இருக்கும் போது  அனைவருமே அடங்கிப் போகத்தான் வேண்டியுள்ளது.

பிரதமர் அனவார் பதவிக்கு வந்த பிறகு ஒரு சில மாற்றங்கள் தெரிந்தன. அவரால் என்ன செய்ய முடியுமோ அதனை அவர் செய்து வருகிறார். கொஞ்சம் கொஞ்சமாக, ஒவ்வொன்றாக, ஒரு சில விஷயங்கள் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்திருக்கின்றன.  ஊழலை அவ்வளவு எளிதில்  வெளிக்கொண்டு வந்துவிட முடியாது. பிரதமர் என்ன தான் முயற்சி செய்தாலும்  அவர் பலரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகத்தான் வேண்டும்.

இந்த நேரத்தில் நல்ல செய்தி ஒன்றும் வெளியாகி இருக்கிறது.  நமது மாமன்னரே களத்தில் இறங்கியிருக்கிறார் என்பது தான் அந்த செய்தி. ஆமாம் அவர் சொந்த மாநிலமே சிங்கப்பூர் அருகில்  இருப்பதால் அங்கு ஊழல்வாதிகளுக்கு என்ன தண்டனை என்பதை அறிந்தவர்.  சிங்கப்பூர் நாடு  ஊழலற்ற நாடு என்பது போல,  அவர் ஆளும் மலேசியா நாடும் ஊழலிருந்து விடுபட வேண்டும் என்று நினைப்பதில்  எந்த குற்றமுமில்லையே!

மாமன்னர் பதவிக்கு வருமுன்னரே பல கருத்துக்களைக் கூறி இருந்தார். அதில் ஊழல், இலஞ்சம்  என்பதில்  அதிகக் கவனம் செலுத்து விரும்புவதாகக் கூறி இருந்தார்.  சொன்னது போலவே  தனது பணியை ஆரம்பித்துவிட்டார்.

நமக்கு அதிலே மகிழ்ச்சி தான்.  பூனைக்கு யார் மணி கட்டுவது என்று பேசிக் கொண்டிருந்த நமக்கு  "இதோ நான் இருக்கிறேன்!"  என்று  முழக்கமிட ஆரம்பித்துவிட்டார் மாமன்னர்!  மணி கட்டுவது என்பதெல்லாம்  அதிகாரத்தில் உள்ளவர்களால்தான் முடியும்.

இதில் இந்தியர்களில் நிலைமை என்னவாக இருக்கும்?  சிடேக், மித்ரா என்று சொல்லி எத்தனையோ அரசியல்வாதிகள் கொள்ளயடித்தார்களே அவர்கள் மட்டும்  தப்பிக்க முடியுமா? அவர்களுக்கும் இருக்கிறது  ஆப்பு என நம்பலாம்.

மித்ரா மட்டும் அல்ல இன்னும் எத்தனையோ கொள்ளைகள் நடந்தன.  யாரால் என்ன செய்ய முடிந்தது?  அதிகாரம் அவர்கள் கையில் இருந்தது.  அதனால் யாராலும் எதனையும் செய்வதற்கில்லை.  இப்போது தான்  கொஞ்சம் வெளிச்சம் தெரிகிறது. பார்ப்போம்!

நல்ல காலம் பொறக்குது!

Thursday 28 March 2024

நெருப்போடு விளையாடாதீர்கள்!


 ஒரு சிலரின் தீவிரவாத பேச்சு கடைசியாக பெட்ரோல் குண்டுகளை   வீசுகிற அளவுக்குப் போய் நிற்கிறது.

அதனால் தான் தீவிரவாத பேச்சுக்கள் வேண்டாம் என்று பலர் சொல்லியும் சில தறுதலைகள்  தங்களை வீராதிவீரன் என்று நினைத்துக் கொண்டு  தொடர்ந்து அந்த கே.கே.மார்ட் மீது  தாக்குதலை மேற்கொண்டனர்.

காவல்துறையினர் சொன்னார்கள்' பேரரசர் பேசினார்; மாநில சுல்தான்கள் சூசகமாக எடுத்துரைத்தார்கள்.  சொன்னது யார் காதிலும் விழவில்லை.  தொடர்ந்து அந்த விற்பனையகத்தின் பொருள்களைப் புறக்கணியுங்கள் என்று  பிரச்சாரம் செய்து வந்தார்கள். 

பெட்ரோல் குண்டுகளோ, நாட்டுக் குண்டுகளோ அல்லது உண்மை குண்டுகளோ எதனையும்  சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.  இன்று பெட்ரோல் குண்டுகள் என்றால் நாளை  இந்த பிரபஞ்சத்தையே அழிக்கும் குண்டுகளாகவும் வரலாம்.  அப்படித்தான் பயங்கரவாத வளர்ச்சி அமையும். 

ஆனால் குண்டுகளைப் போட்டு தங்களது எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்கின்ற நிலைமை  நாட்டில் இல்லை.  பிரச்சனைகள் வரும் போது  காவல்துறை நடவடிக்கைகளில் இறங்குகிறது. நடவடிக்கை சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்கப்படுகிறது.  இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.  சட்டதிட்டங்கள் கடுமையாகப் பின்பற்றப்பட்டால்  காவல்துறையின் நடவடிக்கைகளே போதுமானது. காவல்துறை ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை! பயங்கரவாதம் யாருக்கும் நல்லதில்லை.

பெட்ரோல் குண்டுகள் வீசுவது  என்பது பயங்கரவாதத்தின்  ஆரம்பம். இதை நிச்சயமாக எந்த நாடும்  விரும்பாது.  நமது மலேசியா போன்ற நாடுகள் நிச்சயம் அதனை விரும்ப வாய்ப்பில்லை.  பல்லின மக்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில்  பயங்கரவாதம் மிக எளிதில் தீ பிடித்துவிடும்.  அதனால் நம் நாட்டைப் பொறுத்தவரை இது முளையிலேயே  கிள்ளியெறியப்பட  வேண்டிய விஷம்.  அதனால் தான் நம் நாட்டில் அமைதி இன்னும் நிலவுகிறது.

குண்டுகளை வீசுவது நெருப்புடன் விளையாடுவது. அதனைப் பரவ விட்டால் நாட்டுக்கே  ஆபத்து.  அரசாங்கம் எந்த அளவுக்குத் தீவிரமாக  செயல்படுகிறது  என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நிச்சயமாக அது வேடிக்கை விளையாட்டு அல்ல.  ஆபத்தான விளையாட்டு.

பார்ப்போம்!


Wednesday 27 March 2024

இனியும் ஆசிரியர் தொழிலா?

 

                                                        Minister of Education: Fadhlina Sidek

பொதுவாக ஆசிரியர் தொழிலில் இருப்பவர்களுக்கு  சுயமரியாதை, கௌரவம்  என்பது முக்கியம்.  ஆசிரியர் ஆணோ பெண்ணோ  இருபாலருக்கும் பொருந்தும். 

சமீபத்தில் பெண் ஆசிரியை ஒருவர்  ஒரு மாணவனுடன்   ஒழுங்கீனமாக  நடந்து கொண்டதாக வெளியான செய்தி இப்போது காவல்துறை,  கல்வி அமைச்சின் விசாரிப்பில் இருக்கின்றது.  அவர் குற்றவாளியா என்பது  விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும்.  ஒரு வேளை அந்த ஆசிரியை அந்த மாணவனை "நானே திருமணம் செய்து கொள்கிறேன்" என்று சொன்னால்   பிரச்சனையே  திசை மாறிவிடும்!

இங்கு நாம் சொல்ல வருவதெல்லாம் கல்வி அமைச்சு இது போன்ற பிரச்சனைகளில் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்பது தான். பெரும்பாலான பள்ளிகளில் ஆண் மாணவர்களைவிட பெண் மாணவிகளே    அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டு தான் வருகிறோம்.

இது போன்ற பிரச்சனைகளில் சிக்கும் ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றுகிறோம்  என்று கல்வி அமைச்சின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.   ஒரே வழி அவர்கள் ஆசிரியர் பணியிலிருந்து  நீக்கப்படுவது தான்.  அவர்கள் தொடர்ந்து ஆசிரியர் பணியில் இருப்பது  எதிர்காலத்தில் மாணவர்களுக்குப் பாதிப்பைத்தான் ஏற்படுத்தும்.

அவர்கள் ஜாலியாக இருப்பதற்கும் கூத்தடிப்பதற்கும்  அரசாங்கத்தில்  வேறு துறைகளா இல்லை? அங்கே அவர்கள் எக்கேடு கெட்டாலும்  யாருக்கும் கவலையில்லை!   ஆனால் கல்வி என்பது வேறு. அது அறிவு சார்ந்தத்  துறை.  நல்ல ஒழுக்கமான மாணவர்களைத் தயார் பண்ணும் துறை. அறிவில் குறைந்தவர்களை வைத்துக் கொண்டு, அடாவடித்தனம் பண்ணுபவர்களை வைத்துக் கொண்டு,  மாணவர்களின் எதிர்காலத்தை வீணடிப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.  கல்வி அமைச்சு  இதனைக் கொஞ்சம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

இது போன்று  தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். வேலையிலிருந்து நீக்கப்பட வேண்டும். 'அங்கே மாற்றுகிறோம், இங்கே மாற்றுகிறோம்' என்கிற பேச்சுக்கே இடமில்லை!

Tuesday 26 March 2024

கோடரிக் காம்பு!

 

இந்து மதத்தைப் பற்றி  இஸ்லாமிய மதபோதகர் ஸம்ரி வினோத் தனது விபரீதக்  கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.  அதனால் இந்துக்களின் கோபத்திற்கு அவர் ஆளாகியிருக்கிறார்.  இருக்கும் இடம் வலுவான இடம் என்பதால்  வாய் கொஞ்சம் அகலமாகவே  திறக்கும் என்பதில் ஐயமில்லை!

அவரைப் பற்றி நாம் குறை சொல்லுவதில் பயனில்லை. அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலையை அவர் செய்கிறார்.  அவர் ஆட்டுவிக்கப் படுகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.  இந்துக்களைச் சினமூட்டும் வேலையை மீண்டும் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.  இருக்கட்டும். அவர் செய்யவில்லை என்றால் அவர் தொழில் பாதிக்கப்படும்.

இவரைப் போன்ற நபர்களின் செயலினால்  நிச்சயமாக அமைதியின்மை ஏற்படத்தான் செய்யும்.  அதனால் தான் நிறைய கண்டனக் குரல்களை நாம் பார்க்கிறோம்.  வேறு வழியில்லை. சமயத்தை இழிவுபடுத்தினால்  அங்குச்  சமாதானம் நிலவ வாய்ப்பில்லை.

இந்து சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோளை நான் வைக்கிறேன்.  ஆளுக்கு ஆள் வன்மத்தைக் கையில் எடுப்பதைவிட  இந்து சமயத்தின் சார்பில் ஒரு குழுவாக செயல்படுவது அவசியம்.  இந்து சமயத்தினர் மட்டுமல்ல அனைத்து சர்வ சமயத்தினரும் சேர்ந்து  ஒரு குழுவாகச் செயல்பட்டு சம்பந்தப்பட்ட அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.  இந்துக்களையே ஒருவன் குறிவைக்கிறான் என்றாலும் அதற்கும் சர்வ சமயத்தினரும் கூடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

நிச்சயமாக நீங்கள் அதனைத்தான் செய்வீர்கள் என்பது எனக்குப் புரிகிறது.  இருந்தாலும் தெரிவிப்பது எனது கடமை.  இந்தப் பிரச்சனையில் இளைஞர்கள் கோபப்படுவது இயல்பே.  நம்மைப் பொறுத்தவரை இதனைத் தீர்க்க பேச்சுவார்த்தை ஒன்றே வழி.  நாம் ஒரு பலவீனமான சமுதாயம் என்பது  அவனுக்குப் புரிகிறது.  சீன சமுதாயத்தோடு அவர்கள் மோதுவதில்லை.

அதனால் நமக்குத் தெரிந்ததெல்லாம்  பேச்சுவார்த்தை மட்டும் தான்.  மற்றபடி நியாயங்கள் எல்லாம் எடுபடுவதில்லை.  என்ன செய்வது?  நமக்குத் தகுதி இல்லாதவர்களோடு  உட்கார்ந்து பேசுவதைத் தவிர  வேறு என்ன தான் செய்ய முடியும்?

வருங்காலங்களில்  இது போன்ற பிரச்சனைகள் எழாது என நம்பலாம். படித்த சமுதாயம் புரிந்துணர்வோடு  செயல்படும். அந்நாள் சீக்கிரமே வரும்.  அதுவரை பொறுமை காப்போம்!

Monday 25 March 2024

வாங்கோ! பிரியாணி சாப்பிடலாம்!

நமக்குப் பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ இன்றைய , நிலையில் பிரியாணி கூவி கூவி விறகப்படுகிறது!  மூலை முடுக்குகளில்லாம், முச்சந்திகளில்லாம் விற்கப்படுகின்றது!

அட! அன்று ஒரு மலாய் உணவகத்திற்குப் போனால்  அங்கேயும் பிரியாணி!  ஒன்று மட்டும் நிச்சயம். இப்போது இங்கு விற்கப்படும் பிரியாணிகளைச் சாப்பிட்டால்  அதன்மீது உள்ள  ஆசையே போய்விடும்!

பிரியாணி என்பது ஒரு விசேஷமான  தயாரிப்பு.  யார் வேண்டுமானாலும் அந்த உணவைத் தயாரித்து விடலாம் என்று நினைப்பது பெரிய கற்பனை! அதற்கென்று பல படிநிலைகள் உண்டு.  அதனை வரிசையாகக் கடைப்பிடித்து ஒவ்வொரு படியாகச் செய்யும் போது தான்  அது பிரியாணியாக இருக்கும். 

நினைத்தால் உடனடியாகப் பிரியாணி செய்துவிட முடியும் என்பதெல்லாம் வீண்.  எந்த ராணி  செய்தாலும் அது பிரியாணியாக இருக்காது.  நமது நாட்டைப் பொறுத்தவரை நல்ல பிரியாணிக்கு வாய்ப்பில்லை.  நான் பிரியாணி விரும்பி அல்ல. ஆனால் நான் இது நாள் சாப்பிட்டவரை  எனக்குத் திருப்தி இல்லை.  பெரும்பாலோரைப் பொறுத்தவரை தமிழ் நாட்டுப் பிரியாணிக்கு ஈடில்லை என்பது தான். அதுவும், பிரியாணியைப் பொறுத்தவரை,  இஸ்லாமிய சகோதரர்களுக்குத் தான் முதலிடம்.  முற்றிலுமாக பிரியாணி நூறு விழுக்காடு அவர்களின் தயாரிப்பு தான்.

சமீப காலங்களில் ஏகப்பட்ட தமிழக உணவகங்கள்  இங்கு கிளைகளைத் திறந்து வருகின்றன.  ஆனால் அங்கும் கூட பிரியாணி  தயாரிக்கும் நல்ல  சமையலர் இல்லை  என்பது தான் சோகம்.  அங்குப் போகிறவர் எல்லாம் "நல்லா இல்லே"  என்று தான் சொல்லுகிறார்கள். நல்லா இருக்கு என்று  யாரேனும் சொன்னால்  அந்த உணவகத்தின்  சமையல்காரர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்று பொருள்.  அல்லது இன்னொரு குற்றச்சாட்டையும் சொல்லலாம்.  உணவில் சேர்க்க வேண்டிய பொருள்களைக் குறைத்தோ அல்லது தவிர்த்தோ  அவர்கள் சமைக்கலாம்.  எதைக் குறைத்தாலும் கூட்டினாலும் விலையில் எந்த மாற்றமுமில்லை!  விலை குறையும் என்று கனவு காண்பதோடு சரி!

நமக்கு ஒரு வருத்தம் உண்டு. மலேசியாவைப்  பொறுத்தவரை  எல்லா உணவகங்களுமே  பிரியாணி செய்கிறார்கள். பழையவர்களோ, புதியவர்களோ  எல்லா உணவகங்களுமே பிரியாணி உணவைத் தயாரிக்கத்தான் செய்கிறார்கள்.  ஆனால் தரமான பிரியாணிகள் கிடைப்பதில்லை.  கிடைக்க வழியில்லை!  செய்யத் தெரியாதவர்களிடம்  பிரியாணி எப்படி இருக்கும்?

நம்முடைய உணவகங்கள் முறையாகக்  கற்றுக்கொண்டவர்களை  வைத்து  பிரியாணி செய்ய  வேண்டும். இல்லாவிட்டால் இங்கு எந்தக் காலத்திலும்  நல்ல பிரியாணி கிடைக்க வழியில்லை!

Sunday 24 March 2024

ஒற்றுமைத் துறையா? பிரதமர் துறையா?





பொது மக்களிடையே இல்லாத ஒரு குழப்பத்தை  இப்போது நமது இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்  எதிர்நோக்குகின்றனர்.

மித்ரா அமைப்பை பிரதமர் அன்வார் பிரதமர் துறையிலிருந்து ஒற்றுமைத்துறைக்கு மாற்றினார்.  அவருக்கு அந்த அதிகாரம் இருந்தது அதனால் , என்ன காரணத்தினாலோ,   அதனை அவர் செய்தார்.

இப்போது ஒரு சிலர் சேர்ந்து கொண்டு  'மீண்டும் பிரதமர் துறைக்கே மாற்றுங்கள்' என்று கோஷம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்!   அப்போதும் அவர் தான் மாற்றினார்  இப்போதும் அவர் தான் மாற்றினார். அது பிரதமரின் உரிமை.  ஏன் மாற்றினார்? ஏதோ  கிசுகிசு  அவருடைய காதுகளுக்கு எட்டியிருக்கலாம்! 

சென்ற ஆண்டு அது முழுமையாக, பிரதமர் துறையில்,  டத்தோ ரமணன்  கீழ் இயங்கியது. அதன் பின்னர் தான்  ஒற்றுமைத்துறை  அமைச்சுக்கு மாற்றப்பட்டது. 

இந்த ஓர் ஆண்டில்  டத்தோ ரமணின் சாதனைகள் என்ன?  மித்ராவுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை  முற்றிலுமாகப் பயன்படுத்தினார். அது அவரின் சாதனை.  ஏற்பட்ட வேதனைகள் என்ன?     தமிழ் பள்ளி மாணவர்களுக்குப்  பயன்படுத்தப்பட்ட கணினிகளைத்  தள்ளிவிட்டார்  என்கிற குற்றச்சாட்டு  இரண்டாவது,  நாடாளுமன்ற உறுப்பினர்களின் கைச்செலவுக்காக  ஒவ்வொருக்கும்  ஐந்து இலட்சம் அள்ளிவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

நாம் சொல்ல வருவதெல்லாம்  தமிழ் பள்ளி மாணவர்களின் மீது  உங்களுக்கு  ஏன் அந்த அளவுக்கு வெறுப்பு என்பது மட்டும் தான். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின்  தொகுதி மேம்பாட்டுக்காக  அவர்களுக்கும் பணம் ஒதுக்கப்படுகிறது. மித்ராவுக்கும் அவர்களுக்கும்  என்ன சம்பந்தம்?

மித்ராவின் பணம் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றால் கல்விக்காக இன்னும் செலவு செய்யலாம்.  நாம் குற்றம் சொல்ல மாட்டோம். ஆனால் பழைய கணினிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உதவித் தொகை - இவைகளை எல்லாம் எப்படி ஏற்றுக்கொள்வது?  

இது  ஊழலா என்பது நமக்குத் தெரியாது.  ஆனால் பிரதமர் என்ன நினைத்திருப்பார்?  மித்ரா,  பிரதமர் துறைக்கு மாற்றினால் ஊழல் தான் அதிகம் ஆகும் என்று அவர் நினைத்திருக்கலாம்.  ஏற்கனவே அது தான் நடந்தது. 'செடிக்' கிலிருந்து பார்த்தால் அப்படித்தான் வரலாறு கூறுகிறது!

அதனால் அவர் மீண்டும் ஒற்றுமைத்துறைக்கே  மாற்றி இருக்கலாம்.  மித்ராவுக்காக அவர் நியமித்த முதல் நபரே நம்பிக்கைக்குரியவராக இல்லையே  என்று மனம் நொந்து போயிருக்கலாம்.

இனி மேலும் வாய் சவடால் வேண்டாம்.  இந்த மாற்றத்தினால்  பொது மக்களுக்கு எந்த நட்டமும் இல்லை.  நம்முடைய தேவை எல்லாம் ஒற்றுமைத்துறை ஒட்டுமா என்பது மட்டும் தான்!  இல்லாவிட்டால் அவர்களையும்  ஓட்டத்தயார்!

Saturday 23 March 2024

எதிர்கட்சிக்கு வாய்ப்பு?

 

வருகின்ற இடைத் தேர்தலில் ஒரு சோதனை. அந்த இடைத் தேர்தலில் இந்தியர்கள் தங்களது  ஒற்றுமையைக் காட்டுவார்களா என்று பரிசோதிக்கும் களம்.

இந்தியர்களை எல்லாகாலங்களிலும் ஏமாற்றலாம்  என்று  நினைப்பவர்களுக்கு  ஒரு பாடம் கற்பித்துக் கொடுக்க  வேண்டிய நேரம். அதனை நாம் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறோம். என்பதைப்  பொறுத்துத்தான்  அது எச்சரிக்கை மணியா என்ன  என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

கோலகுபுபாரு, சிலாங்கூர், மாநில சட்டமன்ற தொகுதி காலியானதை ஒட்டி இன்னும் மூன்று மாதங்களுக்குள்  இடைத்தேர்தல் நடத்தப் பெற வேண்டும். அங்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜ.செ.கட்சியின் திருமதி லீ,   மார்ச்-21-ம் தேதி புற்று நோய் காரணமாக மரணமடைந்தார்.

கோலகுபுபாரு தொகுதியில் மலாய்க்காரரே அதிகமாக இருந்தாலும் சீனர்களும் இந்தியர்களும் சேரும்போது  சிறிய அளவில் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர்.  அதனால் 18 விழுக்காடு உள்ள இந்தியர்களின் வாக்கு  முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இங்கு ஆளுங்கட்சி வெற்றி பெறுகிறதோ அல்லது எதிர்க்கட்சி  வெற்றி பெறுகிறதோ அதனால் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படப்போவதில்லை. ஆனால் நம்மைப் பொறுத்தவரை  இந்தியர்களின் வாக்கு எண்ணிக்கை எந்தப்பக்கம் சாய்கிறது  என்பது  தான் முக்கியம்.

புதிய அரசாங்கம் பதவி ஏற்றதிலிருந்து நமது தரம் கீழ்நோக்கிப் போகின்றதே தவிர எதுவும் மேல் நோக்கிப் போவதாகத் தெரியவில்லை.  கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு - இப்படி எந்த ஒரு பிரச்சனையும் தீர்க்கப்படும் என்கிற உத்தரவாதம் இல்லை. அதுவே பெரிய சிக்கல்.

நமது அதிருப்தியைப் பலவகைகளில் தெரிவித்துக் கொண்டுதான் வருகிறோம். அவைகள் எல்லாம் ஊடகங்களில் எதிரொலிக்கத்தான் செய்கின்றன.  ஆனால் தேர்தலில் எதிரொலிப்பது என்பது வேறு.  அது கொஞ்சம் ஆழமாகவே எதிரொலிக்கும்!  படபட வைக்கும்!

பார்ப்போமே! ஆதரவு  ஒற்றுமை அரசாங்கத்திற்கு  அதிகம் என்றால்  நாம் பிரதமர் அன்வாரின் தலைமைத்துவத்தில் திருப்தி அடைகிறோம் என்பது பொருள். அதுவே எதிரணிக்கு ஆதரவு என்றால் அது ஆளுங்கட்சிக்குப் பயமுறுத்தலாக அமையும் என்று எடுத்துக் கொள்ளலாம்!

முன்பெல்லாம்  அரசாங்கத்தின் மீதான நமது அதிருப்தியைக் காண்பிக்க ஐம்பது அறுபது ஆண்டுகள் பிடித்தன. இனி அப்படியெல்லாம் இருக்க முடியாது.  தருணம் வரும்போது அதனை உடனடியாகக் காட்ட வேண்டும். யாரும் நமக்குக் கை கொடுக்கப்போவதில்லை. 

நமது கையே நமக்கு உதவி!

Friday 22 March 2024

முன்னேற்றத்துக்குத் தடை: இலஞ்சம்!

 

பொதுவாக  பல  நாடுகளின் முன்னேற்றத்திற்குத்   தடையாக இருப்பது இலஞ்சம் தான்!  நமது அருகில் இருக்கும் சிங்கப்பூர் நாட்டை ஒதுக்கிவிடுவோம்.  நம் நாட்டுக்கும் அந்த நாட்டுக்கும் எந்த வகையிலும் ஒத்துப் போக வழியில்லை!  இரு நாடுகளுமே இருவேறு துருவங்கள்!  மாதிரிக்கு ஒன்றைச் சொல்லலாம். ஒரு பிரச்சனை வந்தால் சிங்கப்பூர் அரசாங்கம் அதனை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து  சரி பண்ணுவதில் முனைப்புக் காட்டும்.  இங்குள்ள நிலைமை வேறு.  நிதியைப் பெற்றுக் கொள்ளுவார்கள். பிரச்சனையைப் பேசினால் சாமி கண்ணைக்  குத்தம் என்பார்கள்! ஆக ஒன்றும்  ஆகாது!

ஒரு சில நாடுகளில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஊழல்.  புதிதாக பாலம் ஒன்றைக் கட்டினார்கள். திறப்புவிழா நடத்தி பாலத்தைக் கோலாகலமாக  திறந்து வைத்தார்கள்.    பாலத்தின் ஆயுசு கம்மி. ஐந்தாறு நாட்களிலேயே பாலம் 'ஐயகோ'  என்று கவிழ்ந்து போனது. 

மழை, வெள்ளம், புயல், காற்று  என்று  வந்துவிட்டால் அதைப்பார்த்து மகிழ்ச்சி அடைபவர்கள் அரசியல்வாதிகள் தான்.  இங்கிருந்து பல கோடிகளைத் தங்களுக்கு ஒதுக்கிவிட்டு  அப்புறம் மிச்சம் மீதி உள்ள பணத்தில்  தான் நிவாரண வேலைகள் நடக்கும்! அரசியல்வாதிகள் விசேஷமான ஜந்துக்கள்!  

முதலில் கையில் இலஞ்சம்  வாங்கிவிட்டு,   அதன் பின்னர் மக்களுக்குத் தொண்டு செய்பவர்கள் தான் அரசியல்வாதிகள்! உலகில் எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் அவர்களின் அடிப்படைக் கொள்கை என்பது ஒன்று தான்.  'கையில காசு வாயில தோச'  இது தான் அவர்களின் கொள்கை.   தொண்டு என்கிற சொல்லின் பொருளையே மாற்றிவிட்டார்கள்!   

பெரும்பாலான நாடுகளில் உள்ள அரசியல்வாதிகளின் சொத்துக்களைக் கணக்கிலெடுத்தால், அதுவும் அரசியலுக்கு முன் அதற்குப் பின்  - என்று ஒரு கணக்கெடுப்பு நடத்தினால்  முன்: பிச்சைக்காரன், பின்: கோடிஸ்வரன் - என்று தான் புள்ளி விபரங்கள் சொல்லும். ஒரு சில நாடுகளில் இலட்சக்கணக்கிலான  கோடிகள்!  அப்பாடா! எப்படிடா சாத்தியம்? என்று நம்மைக் கேட்க வைக்கும்!    காஞ்ச  மாடு கம்புல பாஞ்ச மாதிரி என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான்!

நம் நாட்டில் அரசியலுக்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் சாதாரணமாகத்தான் வந்தார்கள்.  அவர்கள் போகும் போது  பெரிய செல்வந்தர்களாகப்  போனார்கள்!   நம் ஜாதிக்காரனைப் பணக்காரன் ஆக்குவது நமது கடமை என்று  சில தலைவர்கள் நினைத்தார்கள்.  கடமை சரிதான். ஆனால் கடமை மக்களை ஓட்டாண்டியாக்கிவிட்டது என்பதும் உண்மை!

இலஞ்சம், ஊழலில் சிக்கிய நாடுகளின் வளர்ச்சி நிச்சயமாகத் தடைபடும். நாம் ஏன் முன்னேறவில்ல என்றால் சிங்கப்பூரைத்தான் படிக்க வேண்டும். அதைப்படிக்க அசியல்வாதிக்கு எங்கே நேரம்?

Thursday 21 March 2024

மெட்ரிகுலேஷன் கல்வி!

 

மெட் ரிகுலேஷன் கல்வி என்றாலே ஒவ்வொரு ஆண்டும்  இந்திய மாணவர்களுக்குப்  பிரச்சனைக்குரியதாகவே  தொடர்கிறது.

அதுவும் பிரதமர் அன்வார் வந்த பிறகு பிரச்சனை இன்னும் மோசமடைந்துவிட்டது.  ஒவ்வொரு முறையும் போராட்டம் செய்ய வேண்டிய சூழலே ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

பொதுவாக எல்லாவற்றிலும் பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் பிரச்சனையாகவே தொடர்வது எந்த வகையிலும் நியாயமில்லை. முற்றுப்புள்ளியே வைக்க முடியாத அளவுக்கு அப்படி எதுவும் இல்லை.

முன்னாள் பிரதமர் நஜிப் அவர்களின் காலத்தில் 2,500 இடங்கள் ஒதுக்கப்பட்டன என்று கூறப்படுகிறது.  சென்ற ஆண்டு அதுவும் பிரதமர் அன்வார் காலத்தில், 1,000 த்திற்கும் மேற்பட்ட இடங்களே ஒதுக்கப்பட்டன.

ஒரு விஷயம் நமக்குப் புரியவில்லை.  கல்வி அமைச்சின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது ஒவ்வொரு ஆண்டும் இந்திய மாணவர்கள்  மெட்ரிகுலேஷன் கல்விக்காக போராட வேண்டும்  என்கிற சூழலை ஏற்படுத்துகிறதோ  என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.

நம்மைக் கேட்டால் மிக எளிதாக  இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும்.  ஏற்கனவே முன்னாள் பிரதமர் நஜிப் காட்டிய பாதை. - அதுவே சிறந்தது.  ஒவ்வொரு ஆண்டும் 2,500 இந்திய மாணவர்கள் மெட் ரிகுலேஷன்  கல்விக்காக அனுமதிக்க வேண்டும்.  அப்படி ஒரு எண்ணிக்கையை ஒவ்வொரு ஆண்டும் கொடுத்துவிட்டால்  அதன் பிறகு யாரும் எந்தக் கேள்வியும் கேட்கப்போவதில்லை. 

நமக்குள்ள தலைவலி எல்லாம் எத்தனை ஆண்டுகளாக இந்தப் பிரச்சனைக்காக  நாம் பேச்சுவார்த்தைகள், ஆர்ப்பாட்டங்கள் என்று போய்க்கொண்டே இருப்பது, என்பது தான்.  ஒரு சிறிய பிரச்சனையைக் கூட பிரதமர் அன்வார் அரசாங்கம்  தீர்வு  காண முடியவில்லையே! மெட் ரிகுலேஷன் கல்வியைப் பொறுத்தவரை இந்திய மாணவர்களுக்கு  அது தீராத பிரச்சனை. ஒவ்வொரு ஆண்டும்  'கிடைக்கும் ஆனா கிடைக்காது!' என்கிற பாணியிலேயே  இழுத்துக் கொண்டே போகிறது!

பிரதமர் அன்வார் எந்தவொரு இந்தியர் பிரச்சனையையும் கையாள முடியவில்லை என்பது தான் இந்நாள் வரை  அவர் மீதான குற்றச்சாட்டு. அதை பொய்யென்று சொல்லவும் முடியாது.

பிரதமர் இந்த ஆண்டாவது இந்தப் பிரச்சனையை  ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.  கல்வியில் கூட பாரபட்சம் பார்ப்போம் என்றால்   அப்படிப்பட்ட அராசங்கம் எங்களுக்குத் தேவையா என்று நாங்களும் சிந்திக்க ஆரம்பித்துவிட்டோம்.

கல்வி மிக வலிமையான ஆயுதம். அது எங்களுக்கும் சேர்த்துத் தான்!

Wednesday 20 March 2024

இது தான் உண்மை!

 

                                                        வெளிநாட்டு தொழிலாளர்கள்

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாட்டில் தேவைக்கு மேல்  குவிந்து கிடக்கின்றனர் என்பது ஒரு பக்கம்.  இன்னொரு பக்கம் 'அப்படியெல்லாம் இல்லை'   என்று ஒன்றும் தெரியாதது  போல  நடிப்பவர்கள் ஒரு பக்கம்.

இரண்டாவது நியாயவாதிகள்  வெளிநாட்டுத் தொழிலாளர்களை வைத்துத் தங்களின் வளத்தைப் பெருக்கிக் கொண்டவர்கள்! இவர்கள் தான் நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கும் குழப்பத்திற்குக் காரணம்.  ஆனால் அவர்களை யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை. அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்று பேசுபவர்கள்.

அரசாங்கத்தில் உள்ளவர்கள் தங்களின் பொறுப்பைத் தட்டிக்கழித்தால் இது தான் நடக்கும். 

நாட்டின் தேவைகளுக்கு வெளிநாட்டினரின் சேவை தேவை என்றால்  அதற்கு யாரும் எதிர்ப்பைத் தெரிவிக்கப் போவதில்லை. அளவுக்கு அதிகமானவர்களை நாட்டினுள் கொண்டுவந்து அவர்களின் கடப்பிதழ்களைப் பிடுங்கி வைத்துக் கொண்டு, அவர்களுக்கு வேலையும் கொடுக்காமல் அவர்களைப் பட்டினி போட்டுச்  சாகடிப்பதை  - யாருக்கும் அந்த  உரிமையை - அரசாங்கம் வழங்கவில்லை. 

ஆனால்  ஒருசிலர் அதனைத் தங்களின்  உரிமையாகக் கருதுகின்றனர்!  வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் பெரும்பாலும் ஏழைகள். தங்களது குடும்ப சொத்துகளை விற்றோ அடகு வைத்தோ இங்கு வருகின்றனர். இங்கு வந்த பிறகு அவர்கள் ஏமாற்றப்பட்டால்  அவர்களால் என்ன செய்ய முடியும்?  அறிமுகம் இல்லாத ஊரில்  அடங்கிப் போவதைத் தவிர  வேறு  என்ன தான் வழி?  

ஆனாலும்  அவர்களில் பலர் துணிச்சலோடு களத்தில் இறங்கினர். அதன் விளைவு தான் இன்று  அவர்கள் சிறு சிறு தொழில்களில் ஈடுபட்டு இன்று பெரும் தொழில்களில் வளர்ந்து இன்று மலேசியர்களுக்கு மிரட்டலாக விளங்குகின்றனர்!   

முதலில் வெளிநாட்டவர்களுக்கு வியாபாரம் செய்ய எந்த நாடும் உரிமம் கொடுப்பதில்லை. ஆனால் அவர்களுக்கு எல்லா சலுகைகளும்  இங்குக் கொடுக்கப்பாடுகின்றன.  உள்நாட்டவர்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.  எல்லாமே  இலஞ்சம் என்றால்  என்ன தான் செய்ய முடியும்?  

அரசாங்கம் இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு என்ன வழியைக் கையாளும் என்பது  நமக்குத் தெரியவில்லை.  அவர்களைப் போலவே நாமும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.  வெளிநாட்டவர் சிறு சிறு தொழில்களில் ஆழமுடன் வேரூன்றிவிட்டனர். இப்போது அவர்கள் உள்ளூர் வணிகர்களாகவும் வலம் வருகின்றனர்!

எல்லாம் நன்மைக்கே என்று சொல்லுவார்கள். இதுவும் நனமைக்குத்தான்!

Tuesday 19 March 2024

முடிவுக்கு கொண்டு வாருங்கள்!

 


பேரங்காடியான கே.கே. ,மார்ட்  இப்போது ஒரு  பெரும் சிக்கலில் மாட்டியுள்ளது.

அதனை அரசியல்வாதிகள் தங்களது சுயநலத்திற்கு நன்கு பயன்படுத்துகின்றனர்.  என்ன செய்வது?  ஒன்றுமில்லாததை ஊதி பெரிதாக்குவது  தானே அரசியலர்களின் வேலை!

யாருக்கும் நாம் வக்காளத்து வாங்கவில்லை.  தவறு நடந்துவிட்டது.  காலில் அணியும் காலுறையில் 'அல்லா' என்கிற சொல்லைப் பயன்படுத்தியது தவறு என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம்.  அதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவிட்டது.  அந்தப் பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.  அத்தோடு அந்தப் பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும்.  அரசாங்கத்தின் நடவடிக்கை எப்படி அமையும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

அதனை மீண்டும் மீண்டும் கிளறிக்கொண்டு இருப்பது, அந்தப் பேராங்காடியைப் புறக்கணியுங்கள் என்று மக்களைத் தூண்டிவிடுவது சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது. சமீபத்தில் தான் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தைப் புறக்கணியுங்கள் என்றார்கள். அதன் எதிரொலி? எண்பது விழுக்காடு முஸ்லிம்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தார்கள். இப்போதும் அதே கதை தான்.   எண்பது  விழுக்காடு முஸ்லிம்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை  இழக்கவிருக்கிறார்கள்.  புறக்கணியுங்கள் என்று சொல்லுபவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள்.  பாதிக்கப்பட்டவர்கள்  இந்த ரம்லான் மாதத்தையே ஏக்கத்தோடு பார்க்க  வேண்டிய சூழல்.  வருகின்ற பெருநாளை எப்படி அவர்களால் கொண்டாட முடியும்?  அரசியல்வாதிகள் கொடுத்து வைத்தவர்கள். பணத்திற்குப் பஞ்சமில்லை!

புறக்கணிப்பு  என்பது முட்டாள் தனம்.  பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டுமே தவிர அதனை வைத்து அரசியல் ஆட்டம் கூடாது  என்பது தான் நாம் சொல்ல வருவது. இந்த ஆண்டு இன்றைய தினம் வரை நான்  பேரீச்சம் பழத்தைக் கண்ணால் கூட  பார்க்கவில்லை. நான் வாங்குகிற இடத்தில் அது கிடைக்கவில்லை. என்ன காரணமாக இருக்கும்?  அந்தப் பழங்கள் இஸ்ரேல் நாட்டிலிருந்து வருவதால்   அது  கிடைக்கவில்லை.  அது இஸ்ரேல் நாட்டைப் புறக்கணிப்பது.

சரி இத்தனை ஆண்டுகள் அவர்கள் மண்ணில் விளைந்த பழங்களைத்  தானே  சாப்பிட்டு வந்தீர்கள். ஏன் அப்போது புறக்கணிக்கவில்லை?  இங்கு வருவித்தவர்கள்  முஸ்லிம்  நிறுவனங்கள்  என்பதால் அந்த நிறுவனங்களை  நீங்கள்  புறக்கணிக்கவில்லையே!  அது என்ன?  வர்த்தகத்தில் சீன நிறுவனங்கள், மலாய் நிறுவனங்கள், இந்திய நிறுவனங்கள்  என்கிற பாகுபாடு?  உடனே 'புறக்கணியுங்கள்' என்கிற கோஷம்!

உண்மையைச் சொன்னால் அம்னோ இளைஞர் பிரிவு,  சம்பந்தப்பட்டது ஒரு சீன நிறுவனம் என்பதாலேயே  இந்தப் புறக்கணிப்பு வேலையை மிகத் தீவிரமாகச் செய்கிறது என்று தான் சொல்ல வேண்டியுள்ளது.

இனி அரசாங்கம் தான் இதற்கு ஒரு முடிவு காண வேண்டும்.

Monday 18 March 2024

கொள்ளிக்கட்டை என்பது சரிதான்!

 

கைப்பேசியை ஒரு பேராசிரியை கொள்ளிக்கட்டை என்று வர்ணிப்பார்!  மிகச் சரியான ஒரு சொல் தான்!

அதனைச்  சரியாகப் பயன்படுத்தினால்  அதனால் நிறைய பயன் உண்டு. ஆனால் அவர்கள் ஒரு சிலர் தான். இங்கு நாம் பேசுவது கொள்ளிக்கட்டையால் சொறிந்து கொள்கிறார்களே அவர்களைப் பற்றி!  

அதிலும் பெரும்பாலும் தாய்மார்கள்! பொறுப்பற்ற தாய்மார்கள்!  குழந்தைகளைக் காரிலே வைத்து பூட்டிவிட்டுச் செல்கிறார்களே  அவர்களைப் பற்றி தான்.

சமீபகாலங்களில் எத்தனை குழுந்தைகள் இப்படி பூட்டப்பட்ட காரில்  இறந்து போயிருக்கின்றனர். ஒன்றா இரண்டா?    வேண்டுமென்றே செய்கின்றார்களா என்றால் அப்படி ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் நிறைய இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போது அப்படியும்  இருக்குமோ என்று  தோன்றத்தான் செய்கிறது.

அதுவும் இது போன்ற வெயிற் காலங்களில் பச்சிளங்குழந்தைகளைக் காரினில் வைத்து பூட்டிவிட்டுச் சென்றால் .....?  பல சம்பவங்கள் நடைபெற்றுவிட்டன.  எல்லாருமே  கைப்பேசிகளைக் கைகளில் பத்திரமாக வைத்திருக்கின்றனர்.  குழந்தைகளைத் தான் ஆளைக் காணோம்!

இந்தச் சம்பவம் பம்பாயில் நடந்தது.  ஆட்டோவை விட்டு இறங்கிய பெண்மணி  ஒருவர்  கைப்பேசியில் பேசிக்கொண்டே வேகமாக நடந்து போகிறார்!    ஆட்டோ ஓட்டுநர் குழந்தையைக் கையில் தூக்கிக் கொண்டு அவர் பின்னால் ஓடுகிறார்!  அம்மணி குழந்தை இருப்பதை மறந்தே போனார்!

நம் நாட்டில் குழந்தைகள் காரில் இறக்கும் சம்பவங்கள்  நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.  வெளியே ஷாப்பிங் போகிறவர்கள் குழந்தைகளைக் காரில் பூட்டிவிட்டுச் செல்கின்றனர்.  இதெல்லாம் அடுக்குமா என்றால்?   குழந்தைகளை வைத்துக் கொண்டு அவர்களால் ஷாப்பிங் செய்ய முடிவதில்லை.  அதில் உண்மை இருக்கலாம்.  ஆனால் அக்காலத்துப் பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தானே  ஷாப்பிங் செய்தார்கள்.  இன்றைய பெற்றோர்களுக்கு மட்டும் என்ன கேடு வந்தது?

கைப்பேசிகள் குழந்தைகளுக்கு எமனாக மாறிவிட்டன.   குழந்தைகளை மறந்துவிட்டுப் போவது ஆயிரத்தில ஒரு  சம்பவம் நடக்கலாம்.  ஆனால் நமது நாட்டில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால்  அதனையும் சந்தேகக்கண் கொண்டு தான் பார்க்க வேண்டியுள்ளது.

இதற்கு ஒரு விடிவுகாலம் உண்டா? தெரியவில்லையே!

Sunday 17 March 2024

இன்னொரு பெருந்திட்டமா?

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி!

மலேசிய இந்தியர் காங்கிரஸ் தான் முதன் முதலாக  - இந்தியர்களுக்கென -   இப்படி ஒரு பெருந்திட்டத்தை  தொகுத்தவர்கள்.  அதனைத் தொகுத்தவர் மறைந்த டத்தோ பத்மனாபன் அவர்கள்.  அதற்குப் பின்னர் பல மாற்றங்கள் அதே ம.இ.கா. விலிருந்தே வந்தன!  

ஆகக் கடைசியாக இன்றைய ஒற்றுமைத்துறை அமைச்சர், தன்னுடைய சரவாக் மாநிலைத்தைச் சேர்ந்த  பெமாண்டு என்கிற அமைப்பின் மூலம்  மீண்டும் ஒரு மாபெரும் பெருந்திட்டத்தை  வெளிக் கொணரவிருக்கிறார். சரவாக்கில் உள்ள ஒரு நிறுவனம் மேற்கு மலேசியாவில் உள்ள இந்தியர்களின் மேம்பாட்டுக்காக ஒரு திட்டத்தை வரைவது நமக்குப் புதிதாக இருக்கலாம்.

சரி இதனையே இங்கிலாந்தில் உள்ள ஒரு நிறுவனத்திடம்  இந்தத் திட்டத்தை ஒப்படைத்திருந்தால் ...?    நமது அரசியல்வாதிகள் வாய் திறந்திருப்பார்களா?   வெள்ளைக்காரன் என்றால் ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளியிருப்பார்கள்!  அந்த அளவு அவன் மேல் நம்பிக்கை.  இப்போது என்னன்னவோ கதைகளைக் கூறுகிறார்கள்!

இப்போது  நான் சொல்ல வருவது:  'இதையும் பார்த்து விடுவோமே!' என்று  நான் சொல்ல வரவில்லை.   இப்படி ஒரு திட்டத்திற்காக ஒற்றுமைதுறை அமைச்சர் தானே முன் நின்று  அந்த நிறுவனத்திடம் - பிரச்சனையைப் புரிந்து கொள்ள -   நடவடிக்கை எடுத்திருக்கிறாரே அதற்காக அவரைப் பாராட்டலாம்.   இங்குள்ளவர்களுக்கே நமது பிரச்சனை புரியவில்லை. அவர், சம்பந்தமில்லாத இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்.   பிரச்சனையைப் புரிந்து கொண்டால் தான்  அவரால் அதற்கான தீர்வைக் காண முடியும்.

ஓர் அமைச்சர் என்கிற முறையில் திட்டங்கள் கிடைத்த பின்னர் அவர் செயல்பட  வாய்ப்புகள் அதிகம்.  இன்றைய நிலையில் அவர் பிரச்சனைக்குப் புதியவர்.  இருக்கட்டும் அது ஒன்றும் பெரிய பிரச்சனை அல்ல.   அந்தப் பெருந்திட்டம் கைக்கு வந்தபின்னர் அதனை வைத்துக் கொண்டு   அவர் செயல்பட வாய்ப்புகள் அதிகம்.   அவர் செயல்பட மாட்டார் என்று யாராவது உத்தரவாதம் அளிக்க முடியுமா?

இந்திய சமுதாயத்தை அன்றே கைவிட்டவர்கள்  ம.இ.கா. வினர்.  இப்போது ஜனநாயக செயல் கட்சியினர்   இந்தியர்களைப் புறக்கணிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.   பி.கே.ஆர். இன்னும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.   ஆனால் இவர்களின் கைகளில் தான் நமது அரசியல்  எதிர்காலம். 

பெருந்திட்டத்தை நான் வரவேற்கிறேன். ஆனால் அதற்கான கெடு என்பது இரண்டு மாதங்கள் போதுமானது.  அதற்குப் பின்னர் மாண்புமிகு ஒற்றுமைத்துறை அமைச்சர் செயல்பட வேண்டும். இனி நமக்குக் காரணங்கள் வேண்டாம்.  செயல் தான் வேண்டும்.

Saturday 16 March 2024

கடுமையான தண்டனை தேவை!

 


நாம் அடிக்கடி பத்திரிக்கைகளில் பார்க்கும்  செய்திதான்.  விபச்சாரத்தில்  ஈடுபடும் பெண்களில் பலர் காவல்துறையினர் கைது செய்வதை   நாம் படிக்கிறோம். 

ஆனால் செய்திகளெல்லாம் பெரும்பாலும்  வெளிநாட்டுப் பெண்கள் என்று தான்  கூறுகின்றன. காவல்துறையினர் கைது செய்கின்றனர், தண்டனை  அளிக்கப்படுகிறது. இப்படித்தான் நாம் அடிக்கடி செய்திகளைப் பார்க்கிறோம்.

இந்த முறை கொஞ்சம் வித்தியாசமான  செய்தி.  இந்தியாவிலிருந்து நான்கு பெண்கள் கடத்தி வரப்பட்டு  விபச்சாரத் தொழிலில் கட்டாயப்படுத்தப் பட்டார்கள்.   ஏற்றுக்கொள்ள முடியாத செய்தி.  பிழைப்பதற்கு வழியில்லாமல் இங்கு வந்தால் பிழைக்கலாம்  என்று பெண்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாது போல் தோன்றுகிறது.

வேறு ஒரு நாட்டிலிருந்து கடத்தப்படுவது என்பது எத்துணை  கொடூரமானது என்பது நமக்குப் புரிகிறது.  இதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். அந்நாட்டுடன் பலமான உறவு இருக்க வேண்டும்.

இது போன்ற குற்றங்களை இழைப்போருக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.  உண்மையைச் சொன்னால் நம் நாட்டில் தண்டனைகள் கடுமையாக இல்லையோ என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.  அப்படியிருக்க நியாயமில்லை. வேண்டுமானால் பல குற்றச்சாட்டுகள் போக வேண்டிய இடத்திற்குப் போகாமல்  தடுக்கப்படுகிறது  என்று சொல்லலாம். வல்லவன்  வகுத்ததே வாய்க்கால் அவ்வளவு தான் வாய் திறக்க வழியில்லை!

எது எப்படியிருந்தாலும் இது போன்ற குற்றங்களுக்குத் தண்டனைக் கடுமையானதாக இருக்க வேண்டும்.  அவர்களின் ஆயுள் முழுவதும் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.  இப்போழுது சரியான தண்டனை சரியான குற்றவாளிக்குப்  போய்ச் சேரவில்லை.  எத்தனை பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதனை பிசுபிசுத்துப் போய்விட செய்துவிடுகின்றனர்.

ஆனால் சமீபத்திய இந்த - கடத்தல் + விபச்சாரம் - குற்றம் சம்பந்தப்பட்டவர்களுக்கு  எளிதாக தப்பிக்க முடியாது  என்றே நமக்குத் தோன்றுகிறது.

இது போன்ற குற்றங்கள் கடுமையானவை. கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவை.

Friday 15 March 2024

சிவப்பு வர்ணம் ஒழிக்க முடியாததா?

 

வீடுகளில் சிவப்பு வர்ணத்தை அடித்து அசிங்கப்படுத்துவதும், கார்களில் சிவப்பு வர்ணத்தை தெறிக்க விடுவதும்  - இதெல்லாம் நாட்டில் பல ஆண்டுகளாக நடந்து கொண்டு தான்  வருகிறது. காவல்துறை இதற்கெல்லாம் ஒரு முடிவைக் காண முடியவில்லை.   முடிவு காணும் வரை  அது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும்.  நாமும் சகித்துக் கொள்ளத்தான் வேண்டியுள்ளது.

இதற்கான காரணகர்த்தாக்கள்  யார் என்பது நமக்குத் தெரியும்.  ஆலோங் அல்லது வட்டி முதலைகள்.   இவர்கள் யாவரும்  எட்ட  முடியாத இடத்தில் இருக்கிறார்கள். குற்றச்சாட்டுகளுக்கு  உள்ளாகுபவர்கள்  யாவரும் சில்லறைகள்.  அகப்படுபவர்கள்  இவர்கள் தான்.  இவர்களைக் கைது செய்வதன் மூலம்  இந்த சாயம் அடிக்கும் வேலை நின்றுவிடப் போவதில்லை.  முதலைகள்  தான் பின்னிருந்து இயக்குபவர்கள்.  அந்த இயக்கத்தை வேரறுக்கும் வரை குற்றங்கள் பெருகத்தான் செய்யும்.

ஆனால் இந்த ஆலோங் அடிவருடிகள் செய்கின்ற காரியங்கள்  மக்களுக்குப் பல  அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றன. பல சமயங்களில் கொஞ்சமும் சம்பந்தமே படாதவர்கள் கூட  பாதிக்கப்படுகின்றனர். இந்த அளவுக்குத் துணிச்சல் அவர்களுக்கு இருக்கிறதென்றால்  அவர்கள் பின்னணி பலமாக இருக்கிறது என்பது தான் பொருள்.

இவர்களிடம் உள்ள பெரிய பிரச்சனை ஒரு சிறிய தொகையைக் கடனாகப் பெற்றவர்கள் அந்தக் கடனை அடைக்க  வாழ்நாள் முழுவதும் கடனை கட்டிக்கொண்டிருக்கின்றனர்.  அதற்கு முடிவே இல்லை.  யாரும் அவர்களிடம் கேள்விகள் கேட்க ஆளில்லை.

நிச்சயமாக இது இப்படியே தொடர்ந்து கொண்டே இருக்க முடியாது. முற்றிலுமாக ஒரு  நாள் நிறுத்தப்படும்.  காவல்துறை அதன் பணியை நிறுத்திவிடாது.  எல்லா தீய செயல்களுக்கும்  ஒரு முடிவு உண்டு.  இதற்கும் ஒரு முடிவு வரும் என எதிர்பார்க்கலாம்.

இத்தனை ஆண்டுகளாக முடிவுக்கு வராதது இனி வந்துவிட முடியுமா?  முடிவுக்கு வரும் என்பது உறுதி.  ஆனால் நாம் நினைத்தபடி அது வர வாய்ப்பில்லை.  காரணம் அங்கும் பல சிக்கல்கள் உண்டு.

ஒழிக்க முடியும்! வெகுவிரைவில் நடக்கும்!

Thursday 14 March 2024

தமிழ் பள்ளிகளில் மாணவர் சரிவு


 தமிழ் பள்ளிகளில் மாணவர் சரிவு சென்ற ஆண்டை விட  சுமார்  இருநூறு மாணவர்கள் குறைவு என்று அறிகிறோம்.

எதுவும் சும்மா வந்துவிடாது என்பது போல பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது  சாதாரண விடயம் அல்ல.   விழிப்புணர்வை ஏற்படுத்த பலர் - மிகப்பலர் - உழைத்திருக்கின்றனர்.  யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது.  

அப்படி இருந்தும்  எண்ணிக்கையில் சரிவு  ஏற்பட்டிருப்பது சோர்வடையத்தான் செய்யும். இதற்குப் பல காரணங்கள் உண்டு.  தோட்டப்புறங்களில் நமது இனத்தவரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பது முதல் காரணம். இதனைத்தான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.  இருக்கலாம். ஏற்றுக்கொள்வோம்!

பட்டணப்புறங்களில் உள்ள படித்த தமிழர்கள் தங்கள் பிள்ளைகளைத் தமிழ் பள்ளிகளில் சேர்க்கிறார்கள் என்பது மிக நல்ல செய்தி.  இவர்களில் பெரும்பாலோர் ஏற்கனவே தமிழ் பள்ளிகளில் படித்தவர்கள்.   காலம் மாறிவிட்டது.  இப்போது கட்டடங்களும் மாறிவிட்டன. இப்போது தமிழ் பள்ளிகளைக் குறுகிய கண்ணோட்டத்தோடு  யாரும் பார்ப்பதில்லை. 

 தமிழ்ப்பள்ளிகளில்  மட்டும் தான் இன்னும் நமது கலாச்சாரங்கள் கற்பிக்கப்படுகின்றன; கடைப்பிடிக்கப்படுகின்றன..  ஆறாண்டு கல்வி அவர்களின் கண்களைத் திறக்கின்றன.  வேறு பள்ளிகளுக்கு அனுப்புவதால்  நமது கலாச்சாரங்கள் அனைத்தும் மறக்கடிக்கப்படுகின்றன!  புறக்கணிக்கப்படுகின்றன! என்ன செய்ய? அது அவர்களின் பணி அல்லவே!

சீன பள்ளிகளுக்குப் பிள்ளைகளை அனுப்புவதில்  கொஞ்சம் அதிகமாகவே யோசிக்க வேண்டும்.    உங்கள் பிள்ளைகளுக்கு டியூஷன் எடுக்க தனியாக ஓர் ஆசிரியரை நியமிக்க வேண்டும்!  உங்களுக்கு அந்த மொழி தெரியாவிட்டால் உங்கள் பிள்ளைகளின் பாடு திண்டாட்டம்  என்பதில் ஐயமில்லை.  தேசிய மொழி பள்ளிகளில் உங்கள் பிள்ளைகளைப் பற்றிய அக்கறையே இல்லை!

உங்கள் பிள்ளைகள் கல்வி கற்க ஏற்ற இடம் தமிழ் பள்ளிக்கூடங்கள் தான்.மொழி மட்டும் அல்ல  பண்பாடு, கலாச்சாரம்  குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகள் உங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்கப்படுகின்றன.  ஓரு நல்ல  குடிமகனாக வாழ தரமான கல்வியைக் கொடுக்கின்றன.

இந்த ஆண்டு ஒரு சிறிய சரிவு. அவ்வளவு தான். அடுத்த ஆண்டு  அதனைச் சரி செய்துவிடும் என நம்புவோம்.   வாழ்க தமிழ்!                                                                        

Wednesday 13 March 2024

கொஞ்சம் காதில் போடுங்களேன்!


 ரம்லான் மாதத்தில் ஏகப்பட்ட உணவுகள் குப்பைகளுக்குப் போகின்றன என்பதையறியும் போது வருத்தமாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய?  நோன்பிருப்போர்  சிலர் புரிந்து கொள்ள மறுக்கிறார்களே!

ஆனால் நம்மிடையே ஒரு கேள்வியும் உண்டு.  ரம்லான் அல்லாத மற்ற மாதங்களில் மலேசியர்கள் உணவுகளை வீணடிப்பது இல்லையா?  அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது.  வீணடிப்பு என்பது எப்போதுமே உண்டு. 

அதனால் தான்   அந்தப் பழக்கத்தை நம்மால் விட்டுவிட முடியவில்லை.  தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள்.  நம் தாய் எப்படி நம்மை வளர்த்தாரோ அதன்படி அனைத்தையும் சுடுகாடு மட்டும் கொண்டு தான் செல்லுவோம்!  நமது பழக்க வழக்கங்களைத் தாயிடமிருந்து தானே  கற்றுக் கொள்கிறோம்?  இடையிலே நம்மால் நிறுத்த முடிவதில்லை!

கடந்த பத்தாண்டுகளாக,  பினாங்கு பயனீட்டாளர் சங்கம்,  இந்த உணவு வீணடிப்பு சம்பந்தமாக பல பிராச்சாரங்களை  மேற்கொண்டு வந்தாலும் அது ஏனோ போய் சேர வேண்டிய இடத்தில் சேரவில்லை.  அதனால் தொடர் பிரச்சாரங்கள்  தொடர்கின்றன.   சென்ற ஆண்டு மட்டும் ரம்லான் மாதத்தில் சுமார் 90 ஆயிரம் டன் உணவுகள்  குப்பைத் தொட்டிகளுக்குள் தஞ்சமடைந்திருக்கின்றன.

ஒன்று வியப்பைத் தருகிறது.  ஸ்டார் பக்ஸ் நிறுவனத்தைப் புறக்கணியுங்கள் என்று சொன்னதும் அதனை  வெற்றிகரமாக நிறைவேற்றியவர்கள்  மலேசியர்கள். இப்போது அந்நிறுவனமே நம்மை வருந்தி வருந்தி அழைக்கிறது!

இந்தப் பிரச்சனைக்கு ஒரே தீர்வு தான் உண்டு.  அம்னோ இளைஞர் பகுதி வாய் திறந்தால் அது நடக்கும் என்றே அவர்களே சொல்லிக் கொள்வார்கள்.  இதனை அவர்கள் ஏன் கையில் எடுக்கக் கூடாது?  மக்கள் அவர்களது குரலுக்குச் செவிசாய்ப்பார்கள் என நம்பலாம் தானே.  பாலஸ்தீன, காஸா பகுதியில் நிலவும் அசாதாரண நிலைமை அவர்களுக்குத் தெரியாமலா போகும்.  உணவு இல்லாமல் அவர்கள் படும் துயரம்  நாளுக்கு நாள் மோசமடைந்து போய்க்கொண்டிருக்கிறதை  நாம் அறியாமலா இருக்கிறோம்.  அறிகிறோம். அறிந்து என்ன செய்கிறோம்? 

நாம் எதனையும்  யார் மீதும் அழுத்தம் கொடுக்கவில்லை.  உணவு வாங்குவதைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று தான் சொல்லுகிறோம்.  நமது குடும்பத்திற்கான தேவைகள் என்ன  என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.  அதனை வைத்து நாம் உணவுகளை 'பட்ஜட்' போட்டு வாங்களாம்.  இந்திய முஸ்லிம் குடும்பங்களில் எதையும் வீணடிக்க மாட்டார்கள்.  அங்கே ஓர் ஒழுங்கு உண்டு. அதனையே மற்றவர்களும் பின்பற்ற வேண்டும்.

சொல்லிவிட்டோம். நெஞ்சம் பொறுக்கவில்லை. கொஞ்சம் இதனையும் காதில் போட்டுக் கொள்ளுங்கள்.  அவ்வளவு தான்.

Tuesday 12 March 2024

பள்ளி சிற்றுண்டிச்சாலை மூடப்பட வேண்டுமா?

 

புனித ரம்லான் மாதத்தில் பள்ளி வளாகங்களில் செயல்படும்  சிற்றுண்டிசாலைகளின்  நிலைமை என்ன?

இத்தனை ஆண்டுகளாக அது மூடப்பட்டு சீன, இந்திய மாணவர்கள் தங்களது உணவுகளை கழிவறைகளில் சாப்பிடுகின்ற நிலை ஏற்படுத்தப்பட்டது.

இந்த ஆண்டு கல்வி அமைச்சர்  புதிய அறிவிப்போடு  வந்திருக்கிறார்.  சிசா  திறந்திருக்கும். சீன, இந்திய மாணவர்கள்  சிசாக்களில்  தங்களது உணவுகளைச் சாப்பிடலாம் என்று அறிவித்திருக்கிறார். யார் கண்டார்? மாணவர்கள் கணிசமான அளவு இருந்தால்  சிசாக்களில் சிற்றுண்டிகளும்  விறகப்படலாம்.  தவறு ஒன்றுமில்லையே.

பள்ளிக்கு வெளியே உணவுகளோ, உணவகங்களோ திறக்கப்படாமலா இருக்கின்றன?  எல்லாமே திறக்கப்படுகின்றன.  சாப்பிடுபவர்கள் சாப்பிட்டுக்கொண்டு தான் இருக்கின்றனர். பள்ளியில் மட்டும் முற்றிலுமாக அடைத்துவிட வேண்டுமென்று சொல்லுவது ஏற்றுக்கொளவதாக இல்லை.

ரம்லான் மாதம் என்பது இஸ்லாமியர்களுக்குப்  புனிதமான மாதம்.  அதனை யாரும் மறுக்கவில்லை.  கிறித்துவர்களும் ஈஸ்டருக்கு முன் நாற்பது நாள்கள்  மாமிசம்  உண்ணுவதைத் தவிர்க்கிறார்கள். அதுவும் புனிதம் கருதி தான்.  இந்துக்கள்  வெள்ளிகிழமைகளில்  நோன்பு இருப்பவர்கள் இப்போதும் உண்டு.  மாமிசம்  உண்ணுவதையும் தவிர்க்கிறார்கள்.  எல்லாமே புனிதம் கருதி தான்.  எல்லா மதங்களுமே ஏதோ ஒரு வகையில் நோன்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.  ஆனால்  யாரும்   "நாங்கள் சாப்பிடவில்லை. நீங்கள் சாப்பிட வேண்டுமென்றால்  கழிவறை பக்கம் போங்கள்"  என்று  மாணவர்களிடம் சொன்னதில்லை.

எப்படியோ இன்றைய அரசாங்கம், பிரதமர் அன்வார் தலைமையில் உள்ள அரசாங்கம்,  இத்தனை ஆண்டுகள் புரிந்த தவற்றினைச் சரி செய்திருக்கிறது.  பல மதத்தினர் வாழ்கின்ற ஒரு நாடு இது. அரசியல்வாதிகள் முதலில் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.  ஏதோ அனைத்தையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்டோம்  என்பது போல செயல்படக் கூடாது என்பதுதான்  கற்க வேண்டிய பாடம்.

கல்வி அமைச்சரின் இந்த அறிவிப்பை மகிழ்ச்சியுடன்  அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நன்றி! நன்றி! நன்றி!

Monday 11 March 2024

என்னடா கலிகாலம்!

 

                                                                       School Boys

காலையில் இந்த செய்தியைப் படித்த போது மனம் கனத்துப்  போனது. என்னடா கலிகாலம் இது.  பள்ளி மாணவனுக்கு இப்படி ஒரு நிலைமையா?

 இப்போதெல்லாம் யாருக்கு வேண்டுமானாலும்  மாரடைப்பு வரலாம்.  இப்போதும் கூட நம்மிடம் ஒரு தவறான புரிதல் உண்டு.  மாரடைப்பு என்றால் நாற்பது, ஐம்பது வயதுக்கு மேல் தான் வரும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

அது என்னவோ இளஞ்சிறார்களுக்கும் வரும், குழந்தைகளுக்கும் வரும் என்றெல்லாம் செய்திகளில் படிக்கிறோம்.  ஆனாலும் அது என்னவோ மண்டையில் ஏறுவதில்லை.   இன்னும் வயதானவர்களுக்குத் தான் வரும் என்கிற எண்ணத்திலிருந்து விடுபட முடிவதில்லை.

ஒரு வேளை அது வயதானவர்களுக்கு அதிகம் வரும் என்பதில் உண்மை இருக்கலாம். அதிகம் பாதிக்கப்படுபவர்கள் அவர்கள் தான். அதனாலோ என்னவோ  மாரடைப்பு என்றாலே அது வயதானவர்களின் நோய் என்பது  மனதில் பட்டுவிட்டது.

ஆனாலும் ஓர் ஐந்தாம்  பாரம் படிக்கும் ஒரு மாணவன், வயது பதினேழு, என்று நினைக்கும் போது  இந்த இளம் வயதில் அவனுக்கு இப்படி ஒரு  மரணமா  என்று நினைக்கத் தோன்றுகிறது.   பையனைப் பற்றியான விபரங்கள் எதுவும் இல்லாததால்  ஒரு வேளை அளவுக்கு மீறிய உடல்வாகு  கொண்டவனாக இருக்கலாம்.  சாத்தியம் உண்டு. 

எது எப்படியிருந்தாலும் இன்னும் பள்ளிக்கல்வியைக் கூட முடிக்காத ஒரு மாணவன்  எத்தனையோ  கனவுகளைச் சுமந்து கொண்டிருந்திருப்பான். அனைத்தும் வீணாகிப்   போனது தான் மிச்சம்.

இளம் பருவத்தினருக்கு நம்முடைய ஆலோசனையெல்லாம் ஒன்று தான். உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள். ஓட்டப்பந்தயம், காற்பந்து, பூப்பந்து  போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுங்கள். உடல் ஆரோக்கியமாக இருக்க விளையாட்டுகள் அவசியம். கைப்பேசிகளை வைத்துக் கொண்டு தான் 'கேம்' விளையாடுவேன் என்றால் அற்ப ஆயுசோடு அனைத்தும் நாசமாகிவிடும்!

இளம் பருவம் ஓடி ஆடி விளையாட்டுகளில் ஆர்வத்தைக்காட்ட  வேண்டும்.  அசையாமல்  கைப்பேசிகளுக்கு அடிமையாகிப் போனால்  வாழ்க்கையே அஸ்தமனமாகி விடும்.

ஓ! இறைவா! இளசுகளுக்கு வழிகாட்டும்!

Sunday 10 March 2024

நன்றாகவே ஆடுகிறார்கள்!

 

ஆட்டம் சிறப்பாகவே இருக்கிறது!  மற்ற இனத்தவர் கைதட்டி சிரிக்கும் அளவுக்கு  ம.இ.கா. தனது ஆட்டத்தைச் சிறப்பாகவே  ஆடிக் கொண்டிருக்கிறது!

அவர்களது கொள்கை நமக்குப் புரிகிறது. "நாங்களே, எங்களுக்குள்ளே  ஆடிக்கொண்டோம்!  உங்களை  இந்த சமுதாயத்திற்காக ஆடவிடுவோமா?"  என்று மார்தட்டிக் கொண்டிருக்கிறார்கள்!

நம்மைப் பொறுத்தவரை  மித்ராவில் யார் பொறுப்பில்  இருக்கிறார்கள் என்பது  நமது பிரச்சனையல்ல.  அது பிரதமரின் பிரச்சனை.  நம்முடைய தேவை எல்லாம் உதவி யாருக்குத் தேவைப்படுகிறதோ அவர்களுக்கு மித்ரா உதவ வேண்டும். அதுவே நமது எதிர்பார்ப்பு.

ஆனால்  எங்களைத்தவிர வேறு யார் பொறுப்புக்கு வந்தாலும் நாங்கள் சும்மா இருக்கப் போவதில்லை என்பது ம.இ.கா.வினரின் ஆட்டமாக இருக்கிறது!  இந்த நிலையில் மித்ராவால் யாருக்கும் எந்தப் பயனுமில்லை என்கிற நிலைமை தான் மீண்டும் ஏற்படுகிறது. மித்ராவால் யாருக்கும்  எத்தகைய பயனும் ஏற்பட்டுவிடக் கூடாது  என்பது தான் ம.இ.கா.வின் பிரார்த்தனை. 

உண்மையைச் சொன்னால் இது ம.இ.கா.விற்கும் பி.கே.ஆர். க்கும்  ஏற்பட்டிருக்கும் போட்டி என்றே சொல்லலாம். ஒன்றை ம.இ.கா.வினர் புரிந்து கொள்ள வேண்டும்.  நீங்கள் இனி இந்தியர்களின் ஆதரவைப் பெற வாய்ப்பில்லை என்பது  உங்களுக்கே  தெரியும். நீங்கள் அந்தக் கட்சியோடு ஒட்டுவதும் உறவாடுவதும் எதற்காக என்பது தெரிந்ததுதான்.

உங்களுக்கு இனி வாய்ப்பில்லை என்று தெரிந்தும் உங்கள் தலைவர் என்ன செய்தாரோ அதையே நீங்களும் செய்கிறீர்களே  அது வருத்தத்தை அளிக்கத்தான் செய்கிறது.  நம்மால் ஒன்றைத்தான் சொல்ல முடியும். நீங்கள் செய்கின்ற பாவங்களை உங்கள் வாரிசுகளிடம் ஒப்படைத்துவிட்டுப் போகாதீர்கள். நல்லது செய்தால் நல்லது நடக்கும். கெட்டது செய்தால் கெட்டதே நடக்கும்.

இப்போது நாம் என்ன தான் சொல்ல வருகிறோம்?  மித்ரா இப்போது ஒற்றுமைத் துறையின் கீழ் இயங்குகிறது.  பிரதமர்,  அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்துள்ளார். இனி அவர்களின் பாடு அவ்வளவு தான்.  இத்தனை ஆண்டுகள் மித்ராவின் மூலம் யாரும் பெரிதாக எதனையும் சாதித்துவிடவில்லை.  இவர்கள் என்ன சாதிக்கப்போகிறார்கள்  என்பதையும் பார்த்து விடுவோமே.  இதற்கு ஏன் ம.இ.கா. தடையாக இருக்க வேண்டும்? அது தான் நமது கேள்வி.

சமுதாயத்தைக்கூறு போடும் வேலையை யார் செய்தாலும் குற்றம் குற்றமே!  கூறுபோட்டுவிட்டு நீங்கள் இங்கிருந்து தப்பிவிட முடியாது! ஆட்டத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்பது தான் நமது ஆலோசனை.

 

Saturday 9 March 2024

'மாமாக் 'உணவகங்களில் என்ன நடக்கிறது?

பொதுவாக  'மாமாக்' உணவகங்களுக்கு என்னதான் ஆயிற்று என்று கேட்கின்ற  அளவுக்கு  அந்த உணவகங்களின் நிலைமை  வரவர மோசமடைந்து வருவதாகவே நமக்குத் தோன்றுகிறது.

என்ன  தான் காரணமாக இருக்க முடியும்?  நான் வழக்கமான ஒரு வாடிக்கையாளன்.  எனது பள்ளி காலத்திலிருந்தே நான் வாடிக்கையாளன் தான். அப்போது எல்லாம் பரோட்டா ரொட்டி  (ரொட்டி சானாய்)  அவர்களின் கடையில் தான் கிடைக்கும். பள்ளி காலங்களில் அதனைச் சாப்பிட்டே வளர்ந்தவன். இப்போதும் கூட அவர்களின் மீ கோரிங் எனக்குப் பிடிக்கும்.

சமீபகாலங்களில் அவர்களின் உணவகங்களைப் பற்றியான புகார்கள் அதிகமாகவே வருகின்றன.  மாமாக் உணவகங்கள் பெரும்பாலும் அதிகமான மலாய்  வாடிக்கையாளர்களைக் கொண்டவை.  

இந்திய வாடிக்கையாளர்களை அவர்கள் குறை சொல்ல முடியாது.  இந்தியர்கள் தான் எதற்கெடுத்தாலும் குறை சொல்லுபவர்கள் என்கிற குற்றச்சாட்டில் நியாயமில்லை.  சமீபத்தில் வந்த குற்றச்சாட்டு  ஒரு மலாய்க்கார வாடிக்கையாளரால் கொண்டுவரப்பட்டது. சரி அது யாராக இருக்கட்டும்  அதுவல்ல  பிரச்சனை.  குடிக்கும் மைலோவில்  கண்ணாடித் துண்டுகள்  இருப்பது  ஒன்றும் சாதாரண விஷயமல்ல.  எந்த வாடிக்கையாளாராக  இருந்தால் என்ன?   அறியாமல் குடித்திருந்தால்? குழந்தைகள் குடித்திருந்தால்?  அவர்கள் நிலை என்னாவது?

இது போன்ற குற்றச்சாட்டுகள் வரும்போது 'கடை சுத்தமில்லை'  என்று கூறி இரண்டு வாரங்களுக்குக் கடையை அடைப்பதும்  அதன் பின்னர் 'எல்லாம் சரியாகிவிட்டது'  என்று கடையைத் திறப்பதும் சும்மா கண்துடைப்பு வேலையாகவே தோன்றுகிறது.  சுகாதார அமைச்சு தனது பணியைச் சரியாக  ஆற்றவில்லை என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.

சும்மா இரண்டு வாரம், மூன்று வாரம் தண்டனை என்பதெல்லாம்  அது எத்தகைய குற்றச்சாட்டு என்பதைப் பொறுத்தது.  எல்லா குற்றங்களுக்கும் பொருந்தாது. இந்தக் குற்றச்சாட்டு மிகக் கடுமையானது.  அவர்கள் உரிமம் பறிபோயிருக்க வேண்டும்.  அவர்களுக்கு அதனால் பெரிய பாதிப்பு எதுவுமில்லை.   வேறு ஒரு இடத்தில் புதிய பெயரில் புதிய உணவகத்தை ஆரம்பித்து விடுவார்கள்!    மாமாக்களுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்?

மாமாக் உணவகங்களுக்கு இப்படி ஒரு அவப்பெயர்  வருவது நமக்கு வருத்தமளிக்கிறது.   நம்முடைய ஆலோசனை எல்லாம்  உங்களுடைய ஊழியர்களை நல்லபடியாக நடத்துங்கள்.  அவர்களை அலைய விடாதீர்கள். அவர்களைத் துன்புறுத்தினால் அதற்கான பலனை நீங்கள் அனுபவித்துத் தான் ஆக வேண்டும்.

கடை முதலாளிகள்  தங்களை மாற்றிக் கொள்ளவில்லை என்றால்  இது போன்ற சம்பவங்கள் தொடரவே செய்யும்.

Friday 8 March 2024

கேவலப்படுத்தாதீர்கள்!

 

பெண்கள்  வேலைக்குப் போவது என்பது புதிதல்ல. அது எல்லாகாலங்களிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

ஆனால் பெண்கள் வியாபாரங்களில் ஈடுபடுவது என்பது குறைவு தான். அதனையும் சீனப் பெண்கள்  என்றோ கைப்பற்றி விட்டனர். மலாய்ப் பெண்கள் அர்சாங்கம் கொடுக்கும் ஊக்குவிப்பால், பண உதவியால்  வளர்ந்து வருகின்றனர்.  இதில் நமது பெண்கள் மட்டும் தான்  பின் தங்கி இருப்பதாக நமக்குத் தோன்றுகிறது.

நமது பெண்களுக்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை.  பெரும்பாலும் அவர்கள் தங்களது கையிருப்பை வைத்துக் கொண்டு தான் சிறு தொழில்களில் ஈடுபடுகின்றனர்.  பணம் இருந்தால் அவர்களது சாமர்த்தியமே தனி.

சீன, மலாய் பெண்கள் எதிர்நோக்காத  சில பிரச்சனைகளை நமது இந்தியப் பெண்கள்  எதிர்நோக்குகின்றனர். நமது இந்திய இளைஞர்களைத் தான் நாம் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது. அவர்களது வீட்டில் குடிகார அப்பன் செய்கின்ற அனைத்தையும்  இந்திய இளைஞர்கள் வெளியே செய்கின்றனர்!

வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களைக் கேலி, கிண்டல் செய்வது, அவர்களின் மனதை  நோகடிப்பது  - இப்படித்தான் இவர்கச்ளின் வாழ்க்கை முறையே அமைந்திருக்கிறது!  நமது பெண்கள் இவைகளை எல்லாம் கடந்து தான் செல்ல வேண்டும். வேறு வழியில்லை.

ஒரு சிலர் 'டிக் டாக்'  கில் விளம்பரம் செய்கிறார்கள்.  தவறு ஒன்றுமில்லை. 'கமென்'  வரத்தான் செய்யும். நல்லது வரும்போது  பாராட்டாக எடுத்துக் கொள்ளுங்கள்.   தவறாக வரும்போது அதனைப் பொருட்படுத்தாதீர்கள். உண்மையான  தவறுகளைச் சுட்டிக்காட்டும் போது  திருத்திக் கொள்ளுங்கள்.  கேலி கிண்டல் என்றால்  அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்கிற அவசியமில்லை.  புறந்தள்ளுங்கள்! அவ்வளவு தான்!

நமது பெண்கள் எதனைச் செய்தாலும் அதனைக் குறை சொல்ல ஒரு கூட்டம் வரத்தான் செய்யும். அது அவர்களுக்கு விளையாட்டு!  அதனைப் பெரிது படுத்தாமல் நாம் கடமையே கண்ணாயிருந்தால்  அவர்கள் காணாமல் போய்விடுவார்கள்!

பெண்களைக் கேவலப்படுத்தும் ஒரு சிலருக்கு நாம் சொல்லுவதெல்லாம் நீங்களும் அதே கேவலத்திற்கு உள்ளாவீர்கள்.  மறந்து விடாதீர்கள். ஒவ்வொரு செயலுக்கும்  சமமான எதிர்வினை உண்டு. எதிர்வினை வரும்போது தான் உங்கள் புத்திக்கு அது எட்டும்.

யாரையும் கேவலப்படுத்த வேண்டாம். அதுவும் வியாபாரம் செய்பவர்களுக்கு உங்களது ஆதரவு தான் தேவை.
 

Thursday 7 March 2024

இன்னும் மூடுகிற நிலைமைதானா?

 



கோரானா காலத்திற்குப் பிறகு எத்தனையோ நிறுவனங்கள் மூடப்பட்டன. ஒன்றும் அதிசயமல்ல.  எல்லாம்  வழக்கம் போல கடந்து போய்விட்டன.  பல நிறுவனங்கள்  வேறு நாடுகளுக்கு மாறிவிட்டன.

ஆனால் "Goodyear"  நிறுவனம்  ஷா ஆலமிலுள்ள  தனது தொழிற்சாலை  வருகிற  ஜூன் மாதத்தில்   மூடுவிழா காணும்  என்று அறிவித்திருப்பது  அதிர்ச்சியமான செய்தி என்பதில் சந்தேகமில்லை. 

கூட் இயர்  நிறுவனம் என்பது மிகவும் பெயர் பெற்ற ஒரு நிறுவனம்.  ஏறக்குறைய மலேசியாவில் நூறு ஆண்டுகளை எட்டவிருக்கும் ஒரு நிறுவனம். கார் டயர்கள் என்றாலே  அந்நிறுவனத்தின் டயர்கள்  தான் கண்முன்னே வரும்.  எனது சிறு வயது முதலே அந்நிறுவனத்தின்  விளம்பரங்களை நான் பார்த்து வருகிறேன். அதாவது பள்ளி காலத்திலிருந்தே!

மிகவும் புகழ் பெற்ற ஒரு நிறுவனம்  இப்படி ஒரு முடிவை எடுப்பதற்கு என்ன காரணம்  என்று தெரியவில்லை. அரசாங்கம் அதற்கான காரணத்தை தெரிந்திருக்கலாம்.  பெருந்தொற்று காலத்தில் பல தொழிற்சாலைகள்  மூடப்பட்டதற்கான காரணம் நமக்குத் தெரியும்.   ஆனால் இப்போது எந்தக் காரணமும் இல்லையென்றாலும்  முடிந்தவரை அரசாங்கம்  அதனைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டதா  என்பது தெரியவில்லை. 

இன்று நம்மிடையே வேலையில்லாதவர்கள் நிறையவே இருக்கின்றனர். இந்த நிலையில் இருக்கின்ற தொழிற்சாலைகளும்  மூடப்படுகிறது என்றால்  நாம் சரியான பாதையில் தான் செல்லுகின்றோமா என்பது புரியாத புதிராக இருக்கிறது.

வெளிநாடுகளிலிருந்து புதிய முதலீடுகள் நாட்டுக்குள் வருவது  நல்ல செய்திகள் தான். ஆனால் அந்த முதலீடுகள் இன்றோ நாளையோ வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திவிட முடியாது. அது ஒரு சில ஆண்டுகள் பிடிக்கலாம்.  இப்போது மலேசியர்களுக்கும் வெளிநாட்டினருக்கும் வேலை வாய்ப்புகளைக் கொடுக்கும்  தொழிற்சாலைகளைத் தக்கவைத்துக்கொள்ள   அரசாங்கம் தீவிர முயற்சிகளை  மேற்கொள்ள வேண்டும்.

புதிய முதலீடுகள் வருவதற்குள் இருப்பவை  'தொடைத்துக்' கொண்டு போனால்  நாட்டில் வாழ்வதற்கே இடமில்லாமல் போய்விடும்.  மக்கள் வாழ்வாதாரத்திற்கே  வழியில்லை என்றால்  என்ன செய்வார்கள்? வெளிநாட்டவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கொடுக்கவும் கடமைப்பட்டுள்ளோம். அவர்கள் என்ன செய்வார்கள்?

ஏற்கனவே நாட்டில் இயங்கும் தொழிற்சாலைகள்  தொடர்ந்து இயங்க வேண்டும்.  அதுவே நமது வேண்டுகோள்.


Wednesday 6 March 2024

மீ கோரிங் சாப்பிடலாமா?

நம் நாட்டில் மீ கோரிங் சாப்பிடுகின்ற விஷயங்கள் எல்லாம்  ஒரு பிரச்சனையே அல்ல.  எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம் எங்கு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

பொதுவாக எல்லா இன உணவகங்களிலும்  மீ  சாப்பிடலாம்.  வெவ்வேறு  மீ வகைகள் என்றால்  அது சீன உணவகங்கள் மட்டும் தான். நான் பெரும்பாலும் இந்திய உணவகங்களில் மீ சாப்பிடுவேன்.  சீன உணவகம் என்றால் அது 'லக்சா' மட்டுமே. 'லக்சா' எனக்குப் பிடிக்கும்.

சமீபகாலங்களில்  சீன உணவகங்கள் 'ஆளைப்பார்த்து'  செயல்படுகிறார்கள் என்று சிலர் சொல்லுகிறார்கள்.  சீனர்களை ஏமாற்ற வழியில்லை. மலாய்க்காரர் அங்குப் போவதில்லை. இந்தியர்கள் என்றால் ஏமாற்றுவது எளிது என்று நினைக்கிறார்கள். சமீபகாலங்களில் இந்தியர்களில் சிலர் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.  கெட்டுப்போன மீயைய் பயன்படுத்துவது,  புழு வைத்த மீயைய் பயன்படுத்துவது  இதெல்லாம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

இப்போது வியாபாரம் என்பது எதிர்பார்த்தபடி இல்லை என்றாலும்  அது எல்லா வியாபாரிகளுக்கும் பொதுவானது தான்.  உணவகம் மட்டும் தான் என்று சொல்லுவதற்கில்லை.  அதற்காக 'நான் போடுகிற உணவை நீ சாப்பிடு!  என்று  அதிகாரம் பண்ணுகிற அளவுக்குச் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.  எல்லா இந்தியரிடமும்  அது செல்லுபடியாகாது என்பது அவர்களுக்கே தெரியும்.  இளிச்சவாயர் யாராவது அகப்படுவார்களா என்று  காத்திருப்பர்  போல தோன்றுகிறது.

எது எப்படியோ இது கண்டிக்கத்தக்க விஷயம்.  ஆனாலும் இப்படிச் செய்து பழக்கப்பட்டவர்களைத்  திருத்த முடியாது.  நம்மால் முடிந்த ஒரே விஷயம்.  நாம் பழக்கப்பட்ட, அனுபவப்பட்ட சீன உணவகங்களுக்குப் போவது  கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கும்.   புதிய உணவகங்களுக்குப்  போவதை நாம்  தவிர்ப்பது நல்லது.   சீன உணவகங்கள் இந்திய வாடிக்கையாளர்களை நம்பி இல்லை  என்பது நமக்குத் தெரியும்.  அதனால் நாம் போகவில்லை என்றாலும் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும்  வரப்போவதில்லை.

அல்லது கொஞ்சம் நேர்மறையாக சிந்திப்போம்.  அவர்கள் செய்கின்ற  அடாவடியினால்  நாம் நமது உணவகங்களை ஆதரிப்போமே.  என்ன வந்துவிட்டது!   நமது வியாபாரங்களை நாம் ஆதரிப்பது ஒன்றும் தவறில்லையே.  இனி வருங்காலங்களில்  இப்படித்தான் நாம் யோசிக்க வேண்டியுள்ளது.  

யோசித்துச் செயல்படுங்கள்!

Tuesday 5 March 2024

இது என்னா கணக்கு?

மக்கள் தொகைக்  கணக்கெடுப்பில்  குளறுபடிகள் இருபதாகக் காதில் விழுகிறது!

ஆனாலும் நம்மால் என்ன செய்ய முடியும்? நமக்கு என்ன  அதிகாரம் உண்டு கேள்விகள் கேட்க?

கணக்கெடுப்பை எடுத்தவர் யார்? எப்படியோ  எடுத்தவர்களில் இந்தியர் யாரும் இருக்க நியாயமில்லை.   கணக்கு எடுக்கும் போதே இந்தியர்களைக் குறைத்து எடுக்க வேண்டும் என்று உத்தரவு கொடுத்திருப்பார்களோ,  அதுவும் தெரியவில்லை. 

இந்தியர்களைப் பொறுத்தவரை யாரும் எதுவும் செய்யலாம், எந்த மாற்றத்தையும் கொண்டு வரலாம், யாரும் எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது - இதற்கு என்று  வாய் திறக்காத சில தலைவர்கள் - இது தான் இன்றைய நமது நிலவரம்.  தலைவர்கள் அவர்கள் வேலையைத்   தவறாமல்  செய்கிறார்கள்!

நமது மக்கள் தொகை கணக்கெடுப்பில் நாம் 6.6 விழுக்காடு என்கிறார்கள்.  அந்த செய்தி மட்டும் மிகத் துல்லியமாக இருக்கிறது.  எத்தனை இலட்சம் என்று வரும்போது  கணக்கு வித்தியாசப்படுகிறது.  எப்படியோ சுமார் 23 அல்லது 24 இலட்சமாக இருக்கக்கூடும்.

இங்கே நமக்குள்ள கேள்வி:  கடந்த பத்துமலை திருவிழாவின் போது  கூடிய பக்தர்கள் சுமார் இருபது இலட்சம் என்கின்றனர். அது கோலாலம்பூர் பத்துமலையில் மட்டும்.   இன்னும் பற்ற மாநிலங்களில் கோவில்கள் உள்ளன. இவர்களையெல்லாம் கணக்கெடுத்தால் இன்னும் சில இலட்சங்களுக்கு மேல போகும்!   அதாவது நமது மக்கள் தொகையை விட பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது எப்படி?  என்பது  கேள்விக்குறியே!   சுற்றுப்பயணிகள் எண்ணிக்கையாக இருக்குமோ!

எப்படியோ நமக்கு ஒன்று புரிகிறது.   கணக்கெடுப்பு கண்துடைப்போ என்று  சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.  நம்முடைய ஆதங்கம்  எல்லாம் குறைவான எண்ணிக்கையை வைத்து நமக்குக் கிடைக்கும் சில  உரிமைகள்  பறிபோகும்  என்று சொல்லப்படுகிறது.

ஒரு சமுதாயம் பலவீனப்பட்டுப் போனால்   என்ன நடக்கும் என்பதற்கு  இது ஒரு சான்று. பலவகைகளில் நாம் புறக்கணிக்கப்படுவோம்.  இப்போதே பலர் அதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.  புறக்கணிக்கவும் செய்கின்றனர்!

நாம் பலவீனமான  சமுதாயமாக இருக்கலாம். ஒன்றை மறந்து விடாதீர்கள். பொருளாதார ரீதியில் பலமான சமுதாயமாக நம்மால் மாறமுடியும்.  அது நமது கையில் இருக்கிறது.  பொருள் உள்ளவராக நாம் மாறிவிட்டால் அனைத்தும் நம்மைத் தேடி வரும்!

கணக்குச் சரியில்லை என்றாலும்  அடுத்த கணக்கெடுப்பு வரை காத்திருக்கத்தான் வேண்டும்! 

 

Monday 4 March 2024

யார் பணக்காரர்?

              Malaysia's Richest,  Robert Kuok and Former Finance Minister Tun Daim  Zainuddin

 ஒவ்வொரு நாட்டிலும் பணக்காரர்கள் என்றால் அவர்கள் யாராக இருக்க முடியும்?

நமக்குத் தெரிந்தவரை தொழில் செய்பவர்கள் மட்டுமே பணக்காரர் பட்டியலில் வரக்கூடியவர்கள்.  ஆனால் அதையெல்லாம் மீறி அரசியல்வாதிகளும் பெரும் பணக்காரர் ஆகலாம்  என்று போட்டியில் இறங்கியிருக்கிறார்கள்!   பலநாடுகளில் இது நடந்து கொண்டிருக்கிறது. இங்கும் இந்தப் போட்டி டாக்டர் மகாதிர் காலத்தில் கோலாகலமாக  ஆரம்பிக்கப்பட்டது!

மலேசியாவில்  அரசியல்வாதிகள் பலர் பெரும் செல்வந்தர்களாக இருக்கின்றனர்.  இது எப்படி நடக்கிறது?  அந்த அளவுக்கு அவர்கள் தங்களது உழைப்பைப் போட்டிருக்கிறார்களோ? அரசியலில் என்ன தான் உழைப்பைக் கொட்டினாலும் அது செல்வத்தைக் கொடுக்காது!  செல்வாக்கை வேண்டுமானால் கொடுக்கும்!  பணத்தைக் கொடுக்காது! பதவியை வேண்டுமானால் கொடுக்கும்!

என்னதான் ஒர் அரசியல்வாதி  அமைச்சர் ஆனாலும், பிரதமர் ஆனாலும்  அவருடைய சம்பாத்தியம் என்பது ஒரு வியாபாரியுடன் ஒப்பிடமுடியாது. ஏன் ஒரு காப்புறுதி முகவர் இந்த அரசியல்வாதிகளை விட  அதிகமாகவே சம்பாதிக்கிறார்!  ஒரு விற்பனையாளர்  அரசியல்வாதிகளைவிட எத்தனையோ மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார்.  அதற்குக் காரணம் அவர்களது உழைப்பு.  ஆனாலும் ஓர்  அரசியல்வாதி எந்த உழைப்பையுமே போடாமல்  ஐம்பத்தெட்டு மாடி கட்டடத்திற்கு உரிமையாளராக முடிகிறது என்றால் அதனை ஓர் அசாதாரண சாதனை என்று தானே சொல்ல வேண்டும்!  அது எப்படி முடிகிறது என்பது தான் நம் முன்னே உள்ள கேள்வி?

போகிற போக்கை பார்க்கின்றபோது இன்றைய அரசியல்வாதிகள் எல்லாம்  பெரும் தொழில் அதிபர்களையே மிஞ்சி விடுவார்கள் என்றே தோன்றுகிறது!   இன்றைய நிலையில்  நம்மிடையே ஏகப்பட்ட கட்சிகள். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அத்தோடு பிரச்சனை முடியவில்லை ஆளுங்கட்சியை ஆதரிக்கும் கட்சிகள் எதிர்க்கட்சியை  ஆதரிக்கும் கட்சிகள்  என்று பல கட்சிகள் இந்தியர்களுக்கு மட்டும்!  எதற்காக என்று புரிகிறதா?  ஏதாவது ஜாக்போட் அடிக்காதா என்னும் ஆசை தான், என்ன செய்ய?

ஆனால் ஒன்று மட்டும் உண்மை.  அரசியல்வாதி தனது காலத்தில் ஏகப்பட்ட சொத்துகளைச் சேர்க்கலாம்.  அது அவனோடு போய்விடும்! அல்லது  அடுத்த தலைமுறையோடு போய்விடும் சாத்தியம் உண்டு. சும்மா வந்தது சும்மாவே போகும்!! அதற்கெல்லாம் பிள்ளைகள் தயாராகத்தான் இருப்பார்கள்!  அவர்களுக்கு என்ன கேடு சாபங்களை ஏன்  சுமக்க வேண்டும்?

ஒரு தொழில் அதிபரை அப்படியெல்லாம் சொல்ல முடியாது. சமீபத்தில் 'ஜயன்' பேரங்காடியின்  நிறுவனர் காலமானார்.  அவர் தொழிலில் எந்த பாதிப்பும் வர வாய்ப்பில்லை. தொழிலைத் தொடர வாரிசுகள் இருப்பார்கள். அது இன்னும் பல தலைமுறைகள் தொடரத்தான் செய்யும். அது தான் தொழிலின் மேன்மை.

ஒருவர் பணக்காரர் என்றால் அவரது தொழிலை வைத்துத்தான் சொல்ல வேண்டும். அரசியலை வைத்து அல்ல!

Sunday 3 March 2024

இதற்கெல்லாம் காரணம் யார்?

 

வங்காளதேசத்தவரை வேலைக்காக வரவழைத்து  கடைசியில் அவர்களை அம்போ என்று நடுத்தெருவில் தவிக்கவிட்டு ஓடிப்போன அந்த  'மர்ம' நபர்கள் யார்?

எத்தனை பேர் தான் தேவை என்று ஒரு நிறுவனத்துக்குத் தெரியாதா? தேவைக்கு அதிகமாக வெளிநாட்டவர்களை  நாட்டிற்குள் அனுமதித்து கடைசியில் அவர்களுக்கு வேலை இல்லை என்று சொன்னால்?  அவர்கள் சும்மா வரவில்லை. ஒவ்வொரும் இருபதினாயிரம், முப்பதினாயிரம் என்று பணம் செலவழித்து இங்கு வந்திருக்கின்றனர்.

ஒரு தொழிற்சாலை கணக்கு வழக்கில்லாமல் ஆள்களை நாட்டிற்குள் கொண்டு வந்தால்  அதற்கு அனுமதி கொடுத்தது யார்? அதற்குப் பொறுப்பு மனிதவள அமைச்சு தானே?

இப்போது அவர்களை, வங்காளதேசிகளை,  என்ன செய்யலாம்?  அவர்கள் எவ்வளவு செலவழித்து நாட்டிற்குள் வந்தார்களோ அந்தப் பணத்தை அவர்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிட  வேண்டும்.  பாவம்! ஏழை இளைஞர்கள் அவர்களால் என்ன செய்ய முடியும்?

தொழிற்சாலைகளைக் குற்றம் சொல்லுவதில் பயனில்லை. நிச்சயமாக இடையே தரகர் ஒருவர் இருக்க வேண்டும். கோடிக்கணக்கில் இவர்களை வைத்துப் பணம் சம்பாதித்தவர் அவர்.  யாராக இருக்க முடியும்? அரசியல் பெரும் புள்ளியாகத்தான் இருக்க முடியும்!  அவர்களால் தான் இது போன்ற குறுக்கு வழிகளில் பணத்தைப் பார்க்க முடியும்!

நம்மைப் பொறுத்தவரை அவர்கள் ஏமாற்றப்பட்டவர்கள். பல இலட்சங்களை இழந்தவர்கள். அவர்களின் பணத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதில் தயவு தாட்சண்யம் பார்க்கவே கூடாது. எத்தனையோ ஆண்டுகள் இந்த அப்பாவிகளை வைத்து  பணம் சம்பாதித்தவர்கள்.  அவர்களுக்குப் போதுமான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.  இது போன்ற செயல்கள் நிறுத்தப்பட வேண்டுமானால்  தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.

இந்தப் பெரும் புள்ளிகள் மாட்டினால் வருங்காலங்களில் புதிய வரவுகளைக் குறைக்கலாம்.   தேவை இல்லையென்றால் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம். இதெல்லாம் அரசாங்கத்திற்குச் சுமை தானே?

என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து  தான் பார்க்க வேண்டும்.

Saturday 2 March 2024

நிறுத்துங்கள் அரசியல் ஆட்டத்தை!

 

"நிறுத்துங்கள் உங்கள் அரசியல் ஆட்டத்தை!"  என்று பலர் சொல்லிவிட்டார்கள்.

அதில் பலருக்கு சுயுநல நோக்கம் இருக்கலாம்.  அதனால்  "நீ என்ன சொல்வது? நான் என்ன கேட்பது!"  என்று  எதிர்கட்சி அரசியல்வாதிகள் நினைக்கத்தான் செய்வார்கள்.  அப்படி நினைப்பதில் தவறு ஒன்றுமில்லை.

பொது மக்களும் அதைத்தான் சொல்லுகிறார்கள்.  காரணம் நாம் தானே அரசியல்வாதிகளுக்கு எஜமானர்கள்!  ஆனால் அந்த எஜமானர்கள் என்பது   தேர்தல் காலம் வரை தான்! அதற்குப் பின்னர் அவர்கள் எஜமானர்கள் நாம் எச்சில் பொறுக்கிகள்!  நிலைமை அப்படித்தானே!  நாம் தானே அவர்கள் காலில் விழுகிறோம்?

சரி நம்மை விடுவோம். நமது மாமன்னரே அந்தக் கருத்தை வலியுறுத்தி இருக்கிறார். மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார். "உங்கள் அரசியல் ஆட்டத்தை நிறுத்திவிட்டு  ஒன்று சேர்ந்து நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுங்கள்" என்பதாக அவர் அனைத்து  நாடாளுமன்றத்திற்கும்  நினைவுருத்தியிருக்கிறார்.  இது  போதுமே! நாட்டின் தலைவர் அவர் வேறு யார் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்?

விலைவாசிகள் குறைய வேண்டும்.  வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வேண்டும்.  வெளி நாட்டு முதலீடுகள் உள்ளே வரவேண்டும்,  தண்ணீர் பற்றாக்குறை -  இப்படி பல பிரச்சனைகளை நாடு எதிர்நோக்குகின்ற இந்த நேரத்தில்  எதிர்கட்சியினரின் உலகமே வேறு என்பது போல பேசுகின்றனர்.   இவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாதது போல நடந்து கொள்கின்றனர்,.   ஆமாம் இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் முதலாம் தேதி  சம்பளம் கிடைத்துவிடுகிறது அல்லவா!

இதனையும் பிரதமர் தனது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.  ஓர் ஆண்டுக்கு இவர்களது சம்பளத்தை நிறுத்தி வைத்தால் என்ன? செத்தா போய்விடுவார்கள்? அவர்களுக்கு எதுவும் ஆகாது! எந்நேரமும் அரசாங்கத்தைக் கவிழ்ப்பது பற்றி பேசுவதைத் தவிர  வேறு எதுவும் இவர்களது  நிரலில் இல்லை.  மக்களின் பிரச்சனைகளென்ன, எப்படி தவிர்ப்பது, என்ன செய்ய முடியும்  போன்ற விஷயங்களுக்கெல்லாம் எந்த ஒரு பதிலும்  இல்லாமல் சும்மா கவிழ்ப்போம்! கவிழ்ப்போம்! என்றால் நிச்சயமாக மக்களுக்குக் கோபம் வரத்தான் செய்யும்.

கடவுள் ஏன்  இப்படி ஒரு  ஜென்மங்களைப் படைத்தார் என்று நினைக்கும் போது  கஷ்டமாகத்தான் இருக்கிறது! என்ன செய்ய!

Friday 1 March 2024

இது எனது நாடு!

 

"இது எனது நாடு" என்று யாரால் தைரியத்தோடு சொல்ல முடியும்?

நிச்சயமாக எந்த ஓர் ஆளும் அரசியல்வாதியால் சொல்ல முடியாது.  ஆளும் அரசியல்வாதி என்றால் முன்னாள் தேசிய முண்ணனியே தான்.   இன்றும் நாட்டை அவர்கள் கட்டுப்பாட்டில் தானே வைத்திருக்கிறார்கள்.  அது மட்டும் அன்றி இன்றைய எதிர்கட்சியினரும் அவர்கள் தான்.  அதனால் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்.  இங்கு நாம் சொல்ல வருவது முன்னாள் தேசிய முண்ணனியினர் தான்.

என்று டாக்டர் மகாதிர் போன்ற துரோகிகள் நாட்டை ஆள வந்தார்களோ அன்றே நாட்டுக்குப் பிடித்தது ஏழரை சனியன். அவர்களிடம் நாட்டுப்பற்றோ, இனப்பற்றோ, நாட்டின் மீது விசுவாசாமோ எதுவுமே இல்லாத  ஒரு கொள்ளைக்கூட்டம்! அவரது சொத்து மதிப்பு, பிள்ளைகளின் சொத்து மதிப்பு இதற்கெல்லாம் எல்லையே இல்லை!  ஓர் அரசியல்வாதியால் இவ்வளவு சம்பாதிக்க முடியுமா?  அவரது மகன்களால் - எனன தான் தொழிலசெபவர்களாக இருந்தாலும்  - இந்த அளவு கோடிக்கணக்கில் பணம், சொத்துகள் வைத்திருக்க முடியுமா?

அவருக்குப் பின்னால் வந்தார்களே முகைதீன், சப்ரி போன்ற பிரதமர்கள் - இவர்களுக்கு மட்டும் நாட்டுப்பற்று ஊற்றுத்தண்ணீராய் ஓடுகிறதோ? இவர்களும் கொள்ளையர்கள் பட்டியலில் தானே வருகிறார்கள்! கொள்ளையடிப்பதற்கு ஓர் எல்லையே இல்லையா?   இவர்களுடைய சொந்தங்கள், அமைச்சர்கள்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்  பதவிகளில் உள்ள அதிகாரிகள் - இப்படி யாரை எடுத்தாலும்  யாரையாவது கைநீட்டி இவர் 'புனிதன்' என்று சொல்லுகிற அளவுக்கு யாரேனும் இருக்கிறார்களா?  அப்படி சொல்லத்தான் முடியுமா?  

அரசியல்வாதி என்றாலே  புறங்கையால் தேனை நக்கத்தான் செய்வான். இது  ஒன்றும் அதிசயமல்ல!  ஆனால் தேன் கூடே எனக்குத்தான் என்று செயல்பட்டால்   அதுவே அவனுக்கு எமனாகிவிடும்!  அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இலஞ்ச ஊழல் ஆணையம் சும்மாவா இருக்கும்?  அதன் வேலையை அது செய்யத்தான் செய்யும்.  எல்லாகாலமும் தனக்குச் சாதகமாக  இருக்கும் என்று  அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள்.  அது தப்பு என்று இப்போது நிருபணமாகி வருகிறது.

கொள்ளையடிக்கும் கூட்டம் எல்லாம் 'நாட்டிற்கு விசுவாசம்,  இனப்பற்று, மொழிப்பற்று, சமயப்பற்று'  என்று பேசாமல் இருந்தால் போதும்.  உங்களைப் பற்றி மக்களுக்கே தெரியும்

'இது எனது நாடு' என்று வாய் திறக்கும் முன்னர் கொஞ்ச மேலே சொன்னவைகளை நினைத்துப் பாருங்கள்!