Wednesday 3 April 2019

நேரடி ஒளிபரப்பு...!

நாட்டைக்  கொள்ளையடித்த குற்றத்திற்காக இன்று நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்!

பத்து ஆண்டுகளுக்கு முன்னர்  இதே தினத்தில் (3-4-2009)  அன்று பிரதமராக பதவியேற்ற நஜிப் இன்று அதே தினத்தில் குற்றவாளிக் கூண்டில் ஒர் ஊழல்வாதியாக கூண்டேற்றப் படுகிறார்! 

குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படும் முதல் மலேசியப் பிரதமர் என்கிற பெயரும் நஜிப்புக்குத் தான் கிடைத்திருக்கிறது!  ஊழலில் தந்தை என்றே அவரைக் குறிப்பிடலாம்!  அவர் மட்டும் ஊழல் செய்யவில்லை நாட்டில் உள்ள அரசாங்க வேலையாள்களையும்  ஊழல் செய்வதை அவர் அனுமதித்தார்! அதனால் தான் இன்று நாட்டில் எல்லா மட்டத்திலும் ஊழல் நீக்கமற நிறைந்துவிட்டது!   அவர் அரசாங்க  ஊழியர்களின் ஊழலை கண்டு கொள்ளாததற்கு அவர் செய்து வந்த ஊழல் தான் காரணம்!

இன்று அவர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகிறார். இந்த வழக்கை மக்கள் காணுமாறு தொலைக்காட்சியில் நேரடியாக  ஒளிபரப்புச்  செய்ய  வேண்டும்  என்பதாக  பலர் அபிப்பிராயப்படுகின்றனர். அதில் தவறில்லை என்றாலும் அது பற்றி நஜிப் என்ன சொல்லு,கிறார்? 


"தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்வதை நான் விரும்புகிறேன்" என்கிறார்  நஜிப்!  இதன் மூலம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப் பார்க்கிறார் அவர். எப்படி? நேரடி ஒளிபரப்பு என்பது நடக்காது என்பது நமக்கே தெரிந்திருக்கும் போது  நாட்டின் பிரதமராக பத்து ஆண்டுகள் பதவி வகித்த அவருக்குத் தெரியாதா? தெரியும்!  ஆனால் தான் குற்றமற்றவர் என்பதை இதன் மூலம் அவர் சொல்லிக் காட்ட விரும்புகிறார்!  எனக்கும் ஒன்றும் பயமில்லை! நான் ஒன்றும் குற்றம் செய்யவில்லை! நேரடியாக ஒளிபரப்புங்கள்! மக்கள் முடிவு செய்யட்டும்! இது தான் ஆரம்பத்திலிருந்தே அவர் சொல்லி வருகின்ற தாரகமந்திரம்!

நஜிப்பின் நிலைமையில் அவர் அப்படித் தான் பேசியாக வேண்டும்!  தலைக்கு மேலே வெள்ளம் வந்த பிறகு சாண் போனால் என்ன முழம் போனால் என்ன  என்னும் நிலைமையில், தான் அவர் இருக்கிறார்!  அவருடைய பேச்சில் ஒரு குற்றவாளியின் அம்சங்கள் அனைத்தும் இருக்கின்றன.  வெளியே வீரம் உள்ளே நடுக்கம். இது தான் அவரின் இன்றைய நிலை.

எது எப்படி இருப்பினும் மக்களின் ஆசை நிறைவேறாது. தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு என்பது நடக்காது. நமது ஆசையில் மண்!  நஜிப்புக்கு வெளியே வீரனாக காட்டிக் கொள்ள ஓர் அரிய சந்தப்பம்!

No comments:

Post a Comment