Saturday 20 March 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி........! (7)

 ஏன் அனுபவம் தேவை


அனுபவங்கள் நமது தவறுகளைக் குறைக்கின்றன. தவறு செய்வதைக்  சுட்டிக்காட்டுகின்றன.

எனது அனுபவங்களைக் கூறுகிறேன்.  எனது குடும்பத்தில் முதல் தலைமுறை வணிகன் நான்.  எந்த அனுபவமும் இல்லை.  அதனால் இழந்தது ஏராளம். இழந்ததை சீர் செய்ய பல ஆண்டுகள்.  இப்போது எனது  இரண்டாம் தலைமுறை வணிகத்தில் இருக்கிறார்கள். என்னைப் போல அவர்களுக்கு எந்த பிரச்சனையும் எழவில்லை.

எனது தவறுகளை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.  அவர்கள் அந்த தவறுகளைச் செய்ய தயாராக இல்லை. என்னுடைய அனுபவத்திலிருந்து அவர்கள் பாடம் படித்துக் கொண்டார்கள். 

நமது குஜாராத்தி நண்பர்களைப் பார்ப்போம். ஒரு விஷயம் நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கும். அவர்கள் காலங்காலமாக வீட்டுத் தளவாடப் பொருட்கள் விற்கும் தொழிலில் தான் இருக்கிறார்கள். ஒரு தலைமுறை போனதும் அடுத்த தலைமுறை அந்தத் தொழிலுக்குத் தயாராகி விடுகிறது. அந்த தொடர்ச்சி எங்கும் நிற்பதில்லை. அடுத்த தலைமுறைக்கும் தொடர்கிறது. அவர்களின் குடும்பங்களில், ஆணோ பெண்ணோ, அவர்களின் தொழில் என்னவென்று அவர்களுக்குப் புரிகிறது. பணத்தின் அருமை அவர்களுக்குத் தெரிகிறது.

எனக்குத் தெரிந்த ஒரு குஜராத்தி குடும்பம்.  தொழிலைக் கவனித்த கொண்டிருந்த குடும்பத் தலைவர் திடீரென அகால மரணமடைந்தார். தாயார் கலங்கிப் போனார். மகன் படித்துக் கொண்டிருந்தான்.  தாயார் வரிந்து கட்டிக் கொண்டு தானே கோதாவில் இறங்கினார். மகன் காலையில் படிப்பு.  பள்ளி முடிந்ததும் கடையைப் பார்த்துக் கொண்டான். மிகவும் இக்கட்டான சூழல் தான். ஓரிரு வருடங்களில் பையன் தொழிலில் தேர்ந்தவனாகி விட்டான். அவன் திருமணம் செய்த பெண் அவளும்  குஜாராத்திக் குடும்பம்.  அந்த பெண் தொழில் அனுபவம் உள்ளவள்.  அதன் பின்னர் அவன் OPEN UNIVERSITY மூலம் கல்வியைத் தொடர்ந்தான். 

குஜாராத்திகள் மட்டும் அல்ல நமது தமிழ் முஸ்லிம் நண்பர்கள், செட்டியார்கள் இவர்களெல்லாம் தங்களது தொழில்களில் ஒரு தொடர்ச்சியைப் பின்பற்றுகிறார்கள்.ஒரு தலைமுறை போனால் அடுத்த தலைமுறை, அடுத்த தலைமுறை - இப்படி செய்வதன் மூலம் தொழிலை எல்லாக் காலங்களிலும் தங்களது குடும்பக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். தொடர்ச்சி அறுந்து போவதில்லை. 

ஆனால் இதனைத் தமிழர்களாகிய  நாம் செய்ய மறுக்கிறோம். நம்முடைய பல தொழில்கள் ஒரு தலைமுறையோடு  முடிவுக்கு வந்து விடுகின்றன. நாம் புதிய தலைமுறையை உருவாக்க மறுக்கிறோம். புதிய தலைமுறையினரிடம் செல்வத்தின் அருமை பெருமைகளைக் கொண்டு சேர்க்கவில்லை.  அவர்களுக்கு நாம் செய்கின்ற தொழிலின் அனுபவங்களைக் கற்றுக் கொடுப்பதில்லை.

நாம் செய்கின்ற தொழிலில் நமக்கு அனுபவம் தேவை. நமது பிள்ளைகளும் நம்மிடமிருந்து அனுபவங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். அது தான் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும்.

அனுபவம் நட்டத்தைக் குறைக்கும். செய்ய வேண்டியதை மட்டும் செய்ய வைக்கும்! அது தான் அனுபவம்!

No comments:

Post a Comment