Monday 17 December 2018

தம்பி....! நீங்களுமா....?

அம்னோ கட்சியிலிருந்து அலை அலையாக பெர்சத்துக் கட்சியில் இணைந்து கொண்டிருக்கின்றனர்! அவர்களிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதாக பிரதமர் மகாதிர் கூறிய போது நாமும் அரை மனதோடு ஏற்றுக் கொண்டோம்.  

ஒரு சிலர் மிக நல்லவர்களாகக் கூட இருக்கலாம்! யார் மனதில் என்ன இருக்கிறது என்பது இறைவனுக்கே வெளிச்சம். 

ஆனால் சமீபத்தில் ஒருவர் பெர்சத்துவில் இணைய விண்ணப்பம் செய்திருந்ததைக் கேள்வி பட்டதும் யாராலும் நம்ப முடியவில்லை! ஒரு காலத்தில் அவர் மிகவும் பிரபலம்! பிரபலமானது நல்ல செயல்களுக்காக அல்ல!  கேடித்தனமான செயல்களுக்காக பிரபலமானவர்!

ஒரு கற்பழிப்பு வழக்கு! ஆஸ்திரேலேயாவுக்குப் பணம் கடத்தியவர்!  தனக்கு ஆங்கிலம் தெரியாது என்று வாக்குமூலம் அளித்தவர்! பதவியில் இருந்த போது ஊழல் வழக்குகளைச் சந்தித்தவர்! சென்ற ஆண்டு முன்னாள் பிரதமர் நஜிப்பை சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டவர்!

அவர் தான் மலாக்கா மாநிலத்தின் முன்னாள் முதல் அமைச்சர் அப்துல் ரகீம் தம்பி சிக்! ஊழல் பெருச்சாளி! ஊழலின் மறு வடிவம்! அவர் நல்ல மனிதர் என்று எந்தக் காலத்திலும் - அவர் பதவியில் இருந்த போது கூட -பெயர் வாங்கியவர் இல்லை!

இவருடைய விண்ணப்பம் ஏற்றுக்  கொள்ளப்படுமா என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் இணையத் தளத்தில் பகிரப்பட்டு வருகின்றன. நிச்சயம் ஜ.செ.க. அவரை எதிர்க்கும். ஏன் அன்வார் இப்ராகிம் கூட 
அவரை எதிர்ப்பார். 

எப்படியோ பக்கத்தான் தலைவர்களிடையே இவரின் விண்ணப்பம் ஒருமித்த கருத்துடன் ஏற்றுக் கொள்ளப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பெர்சத்துவின் தலைவர் டான்ஸ்ரீ மொகைதீன் யாசின் இன்னும் தடுமாற்றத்தில் தான் இருக்கிறார்!

நாம் இவர்களின் காதில் போட்டு வைப்பது: வெறும் அங்கத்தினராக  மட்டும் எடுங்கள்! அதற்கு மேல் வேண்டாம் என்பதே! ஒரு சிறிய பதவிக்குக் கூட இலாயக்கு இல்லாத மனிதர் இவர்!

தம்பி! வயசு போன காலத்தில் உங்களுக்கு ஏன் இந்த ஆசை! இப்போது தம்பிகளின் ஆட்சி!  அதுவே தொடரட்டுமே!

No comments:

Post a Comment