Thursday 23 May 2019

கேள்வி பதில் (99)

கேள்வி

இந்திய தேர்தல் முடிவுகள் எதனைக் காட்டுகின்றன?

பதில்

இந்திய அளவில் அது எந்த வகையில் நன்மை தரும் என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் தமிழக அளவில் அது எந்த அளவிலும் நன்மை தராது என்று மட்டுமே சொல்ல முடியும்.

தமிழ் நாட்டை, தொடர்ந்து பாலைவனம் ஆக்கும் முயற்சிகள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் நடைபெறும். மக்கள் எதிர்ப்புக்களைக்  காட்டலாம். அவர்களை அடக்கி வைக்க காவல்துறை போதும். அப்படியே அவர்களால் முடியாவிட்டாலும் பிரதர் மோடி  இராணுவத்தையே கொண்டு வந்து இறக்குவார்!

இன்றைய நிலையில் தமிழக அரசு தமிழக மக்களுக்குச் சாதகமாக இல்லை. அவர்களும்  மோடிக்குத் தான் ஆதரவுக் கரம் நீட்டுவார்கள் என நம்பலாம்.   ஒரே ஒரு காரணம் தான். நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற ஒரே நபர், துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஸின் மகன் மட்டும் தான்.  அவர் மத்திய மந்திரியாக மோடியின் அரசில் பங்கு பெற்றால் அது போதும் தமிழகம் மோடியின் காலில் விழுவதற்கு! அப்படி அவருக்கு மந்திரி பதவி இல்லை என்றால் தமிழகம் மத்திய அரசாங்கத்துடன் ஒத்துழைப்பது சிரமம். அதனை மோடி அறிவார். தமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுவதற்கு ஏதோ ஒரு மந்திரி பதவியை அவர் கொடுக்கலாம்!  இன்று தமிழகத்தை நாசமாக்குவதற்கு தமிழக அரசியல்வாதிகளின் துணை, மோடிக்குத் தேவைப்படுகிறது! 

தமிழ் நாட்டில்  நடைபெற்ற  சட்டமன்றத் தேர்தல் ஓர் இடைத் தேர்தல் தான்.  இப்போதைய நிலவரத்தை வைத்துப் பார்க்கும் போது இன்னும் இரண்டு ஆண்டுகளில் வருகின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தலை தூக்க முடியாது  என்று ஓரளவு  ஊகிக்கலாம். அதற்குள்ளாக,  இந்த  ஈராண்டுக்குள் அ.தி.மு.க. வினர் தமிழகத்தையே, மோடியுடன் சேர்ந்து,  சுடுகாடு  ஆக்கிவிட்டுத் தான் போவார்கள் என்று நம்பலாம்.  இதனால்அவர்களுக்கு என்ன பலன்?  பணம் தான்! தமிழக அரசியல்வாதிகளில் யார் பணக்காரர்கள் என்கின்ற போட்டி தான் காரணம்!  கருணாநிதி குடும்பமா? சசிகலா குடும்பமா? பழனிசாமி குடும்பமா? பன்னிர்செல்வம்  குடும்பமா?  என்கிற  போட்டி தான்!

மோடியும் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இன்னும் அதிகமான நெருக்குதல்கள் கொடுத்து  தமிழக  மக்களை  இன்னும்  துன்பத்தை  ஏற்படுத்தவார் என்பதில் சந்தேகமில்லை.  அவரைப் பொறுத்தவரை தமிழ் நாட்டிலிருந்து  தமிழர்கள்  விரட்டப்பட வேண்டும்  என்கிற எண்ணம் கொண்டவர்!

இந்த அபாயங்களிலிருந்து தமிழர்கள் தப்பிக்க  முடியுமா?   முடியும் என்பது நிச்சயம்.  காலங்காலமாக  தமிழர்களை வீழ்த்தலாம்  என்று நினைத்தவர்கள்  கடைசியில்  அவர்கள்  தான்  வீழ்த்தப்பட்டார்கள்! 

என்ன தான் தீமை என்று  நினைத்தாலும் அங்கும் ஒரு நன்மை ஒளிந்து கொண்டிருக்கும்! அதனால் தமிழர் வெல்வர்!

No comments:

Post a Comment