Saturday 4 May 2019

இல்லை! நான் அவமதிக்கவில்லை!

இந்து மதத்தின் மேல் தாக்குதலை மேற் கொண்டு வரும் புதிய வரவான ஸம்ரி வினோத் காளிமுத்து  தான் அப்படியொரு குற்றம் ஏதும் செய்யவில்லை என்று மறுக்கிறார்.  

இந்து தெய்வ வழிபாட்டையும், உருவ வழிபாட்டையும் அவர் ஏற்கவில்லை அதனால் அவர் மதம் மாறியதாகக் கூறியிருக்கிறார். 

நன்றி! வாழ்த்துகிறோம்!  நாமும் கூட -  வேறு காரணங்களுக்காக இலாபம் கருதி - மதம் மாறியிருக்கிறார் என்று அவரைப் பற்றி தவறாகக் கூறவில்லை. அதனையும் அவர் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆனாலும் ஒன்றை ஸம்ரி கவனத்தில் கொள்ள வேண்டும். மதம் மாறுவது ஒருவரது சுயவிருப்பம். மலேசியாவில் மட்டும் அல்ல.  உலகெங்கும் இது நடந்து கொண்டு தான் இருக்கிறது.  காரணங்கள்  பல. குறிப்பாக திருமணங்கள் என்று கூறலாம். இன்று மலேசியாவில் திருமணங்கள் மூலம் தான் அதிக மத மாற்றங்கள் நடக்கின்றன.  ஆச்சரியப்பட  ஒன்றுமில்லை!  மதத்தின் மேன்மை  கருதி  யாரும்  மதம் மாறுவதில்லை!  அப்படிப்பட்ட அறிவு ஜீவிகள் யாரும்  இங்கு இல்லை!

ஆனால்  ஒரு வித்தியாசம்.  திருமணத்தோடு சரி. அவர்கள் அதன் பின்னர் வாய்த் திறப்பதில்லை. 

மதப் பிரச்சாரம் என்பது  வேறு.  பொது வெளிக்கு வருகிறீர்கள்.  முன்பு இருந்த உங்கள் மதத்தையே தாக்கிப்  பேசுகிறீர்கள்.  அங்கு தான் பிரச்சனையே வருகிறது. நீங்கள் தழுவிய புதிய மதம் உங்களுக்குச் சில பயிற்சிகளைக் கொடுக்கின்றன.  அந்தப் பயிற்சியின் மூலம் எல்லாம்  அறிந்தவர்  ஆகி விடுகிறீர்கள்!   அங்கு தான் தவறு  ஏற்படுகிறது. 

இதற்கு   முன் இருந்த உங்கள்  மதத்தைப் பற்றி  என்ன படித்தீர்கள்?  என்ன தெரிந்து கொண்டீர்கள்?  ஏதும் பயிற்சிகளுக்குப்  போயிருக்கிறீர்களா?  குறைந்த பட்சம்  கோயில் பூசாரியாகவாவது  இருந்திருக்கிறீர்களா?  ஒன்றுமே இல்லை!  நீங்கள் சார்ந்து வளர்ந்த, வாழ்ந்த  மதத்தைப் பற்றி  ஒன்றுமே அறியாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசினால் எப்படி! 

இந்து மதத்தின் தெய்வ வழிபாட்டையும், உருவ வழிபாட்டையும்  ஏற்கவில்லை என்கிறீர்கள்.  சரி தான்.   அது பற்றி  இந்து சமயப் பெரியவர்களிடம் பேசியிருக்கிறீர்களா? நம் நாட்டில் பல பெரியவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் சென்று தெளிவு  பெற்றிருக்கலாம்.  அதனை நீங்கள் செய்திருந்தால் உங்களைப்  பாரட்டலாம்.

ஒன்றை நீங்கள்  புரிந்து  கொள்ள வேண்டும்.  ஜாகிர் நாயக் என்பவர் ஓர் இஸ்லாமிய  அறிஞர்  மட்டும் தான்.   இந்து சமய அறிஞர் அல்ல.  அதனால் அவர் இந்து சமயத்தைப் பற்றி பேச  தகுதி இல்லாதவர்.  தகுதி இல்லாத ஒருவரிடம் போய் பாடம் கற்றுக் கொண்டு ஒரு மதத்தைத் தாக்கிப் பேசுபவரை என்ன வென்று சொல்லலாம்? நீங்களே  முடிவு செய்து கொள்ளுங்கள்.

மேலும் ஜாகிர் நாயக் உலகளவில் தேடப்படும் ஒரு குற்றவாளி. அவர் தீவிரவாதம் பேசிக் கொண்டே வெளி நாடுகளில் சொத்துக்களை வாங்கிக் குவிக்கிறார்! ஓரு குற்ற்வாளியைக் குருவாக ஏற்றுக் கொண்டால்  குற்றம் தான் பெருகும்!  நீங்கள் தான் அவமதிக்கப்படுவீர்கள்.

"நான் இந்து மதத்தை அவமதிக்கவில்லை" என்று நீங்கள் எப்படி சொன்னீர்களோ அதனையே தொடருங்கள்.  நாம் என்ன செய்கிறோமோ அது மீண்டும் நம்மிடமே வரும்!

No comments:

Post a Comment