சிறுபான்மையினரா? அதனால் என்ன?
ஆம்! நாம் சிறுபான்மையினர் தான்! அதனால் என்ன?
மலேசிய பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் நமது சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் இருக்கிறார். அதுவே நமக்குப் பெரும்பான்மையினரின் பெருமையைக் கொடுக்கிறதே! அதற்காக நம்மை நாமே பாராட்டிக் கொள்ளலாம்!
மேலே படத்தில் உள்ள ஏ.கே.நாதன் பெரும் தொழில் அதிபர்களில் ஒருவர். அவர் சார்ந்த தொழில் அதிகம் வெளி நாடுகளில்! இவரைப் போன்ற தொழில் அதிபர்கள் இன்னும் பலர் இருக்கின்றனர். பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்கள் ஞானலிங்கம், டோனி ஃபெர்னாண்டெஸ், மோகன் லூர்துநாதன் இப்படிப் பலர்.
நாம் சிறுபான்மையினர் என்று கவலைப்பட ஒன்றுமில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் படித்த ஒன்று ஞாபத்திற்கு வருகிறது. இந்தோனேசிய மக்கள் தொகையில் சீனர்களின் தொகை சுமார் 3% விழுக்காடு தான். இந்த மூன்று விழுக்காடு சீன மக்கள் தான் இந்தோனேசியாவின் 90% விழுக்காடு பொருளாதாரத்தைக் கையில் வைத்திருக்கின்றனர்!
நமது மலேசிய நாட்டில் நம் விழுக்காடு என்பது 8% விழுக்காடு என்பதும் கூட சிறிது என்று சொல்ல இடமில்லை. நம்மால் மலேசிய பணக்கரர் பட்டியலில் இடம் பிடிக்காவிட்டாலும் கூட வேறு வகையில் நமது பலத்தைக் காட்டலாம். சிறிய, நடுத்தர தொழில்களில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பது தான் நமது வேண்டுகோள்.
நம்மால் எந்த தொழில் - நமக்கு ஏற்றத் தொழில் எது, போன்றவைகளைத் தெரிந்து கொண்டு தொழிலில் இறங்க வேண்டும் என்பது நமது தலையாய்க் கடமை. இன்று நாம் அசட்டையாக இருந்து விட்டால் பாக்கிஸ்தானியரும், வங்காளதேசிகளும் நம்முடைய தொழில்களை அவர்கள் பிடித்துக் கொள்ளுவார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.
தொழில் செய்ய வாய்ப்புக்கள் அதிகம். தொழிலில் இறங்க நமக்குத் துணிச்சல் வேண்டும். ஆயிரத்தில் ஒருவனாக இருக்க வேண்டும். தொழில் செய்பவன் தனித்து நிற்பவன். தொழில் என்பது துணிச்சல் மட்டும் தான்.
சிறுபான்மை, பெரும்பான்மை என்பதெல்லாம் தேவை இல்லாத ஒன்று. தேவை துணிச்சல் ஒன்றே!
No comments:
Post a Comment