Monday 22 April 2024

2500 இடங்களை ஒதுக்குங்கள்!

 

கோலகுபு பாரு இடைத்தேர்தல் நெருங்குகிறது.   இரண்டு கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.

முக்கியமாக  ஒரு செய்தியை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.   வெற்றிபெற  நமது வாக்குகள் முக்கிய பங்குகள் வகிக்கின்றன.  அதனால் தான் புதிதாக  பல தலைவர்கள் தோன்றி  நம்மிடம் கதை அளந்து கொண்டிருக்கின்றனர். நாமும் சிவனே என்று  அவர்கள் சொல்லுகின்றவைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

தேர்தல் என்றாலே ஏகப்பட்ட வாக்குறுதிகளை அள்ளி அள்ளி வீசுகின்றனர்.  சொன்ன சொல்லை எந்த ஒர் அரசியல்வாதியும்  காப்பாற்றுவதில்லை.   அதுவும் இந்தியர்களுக்குக் கொடுக்கப்படும்  வாக்குறுதிகள் அனைத்தும் காற்றிலேயே அடித்துக்கொண்டு போய்விடுகின்றன!

அதனால் நமது மக்களுக்கு ஒரு வேண்டுகோள்:  இனி அடுத்த மாதம், அடுத்த வருடம், அடுத்த ஐந்து ஆண்டுக்குள்,  ஆய்வு செய்வோம்,  ஆய் செய்வோம்   - இப்படியெல்லா அரசியல்வாதிகள்  பேசினால் அவர்களை விரட்டி அடியுங்கள்!  இனி நமக்கு அடுத்த, அடுத்த, அடுத்த, அடுத்த எதுவும் வேண்டாம்.   இப்போது உங்களால் என்ன முடியும்?  அதைச்  சொல்லுங்கள் என்று கேளுங்கள்.

அரசியல்வாதிகள்  பிரமாண்ட  வாழ்க்கை வாழ வேண்டுமானால் வாழட்டும்.  ஆனால் அவர்களின் பிரமாண்டத்துக்காக நாம் உழைக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.  நம்மிடையே  இத்தனை பிரச்சனைகள்.  சரி, இப்போது எந்தப் பிரச்சனையை உங்களால் தீர்க்க முடியும்?   என்று கொக்கி போடுங்கள்.

உணவு பொட்டலங்கள் கொடுத்தால் அதனை அவர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குக் கொடுக்கச் சொல்லுங்கள். அதனைக் கொண்டு போய் சீனர்களிடமும், மலாய்க்காரர்களிடம்  கொடுக்கலாமே.  ஏன் நம்மேல் மட்டும் இவ்வளவு அக்கறை?

இப்போது இதோ ஓர் இடைத்தேர்தல்.  இந்த ஆண்டு மெட் ரிகுலேஷன்  கல்வியில் நமது நிலை என்ன?  நமக்கு ஓர் உறுதியான இடஒதுக்கீடு தேவை.  எல்லாகாலங்களிலும் இதற்காக நாம் போராடிக் கொண்டிருக்க முடியாது.  பேச்சு வார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்க முடியாது. மகஜர் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. நமது கோரிக்கை 2500 மாணவர்கள். அதற்கான உறுதிமொழி தேவை. அதற்காக இந்த இடைத்தேர்தலை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதுதான் இன்றைய அவசரம்.

சரியான பதில் வரவில்லை என்றால்  யாருக்கு வாக்களிப்பது என்பது  உங்களின் தேர்வு.

No comments:

Post a Comment