இப்போதே, இந்த நேரத்தில், விலைவாசிகள் நம்மை மூச்சுமூட்ட வைக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்த நேரத்தில் எது முக்கியம் என்பது தான் கேள்வி. அரசியல் பேசிக் கொண்டு, இப்போது தேர்தல் அப்போது தேர்தல் என்று அரசியல்வாதிகள் அரசியலைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்!
விலைவாசி ஏற்றம் அரசியல்வாதிகளைப் பாதிக்காது! என்ன பொருள் என்ன விலை விற்றாலும் அவர்கள் வாங்கக் கூடிய சக்தி அவர்களுக்கு உண்டு! அது மட்டும் அல்ல இங்கு, இந்த நாட்டில், பொருட்கள் கிடைக்கவில்லை என்றால் அவர்களால் வெளிநாடு சென்று பொருட்களை வாங்க முடியும். அரசியல்வாதிகள் பணம் படைத்தவர்கள். நாம் அவர்களுக்கு எல்லா சலுகைகளைக் கொடுத்து உச்சத்தில் வைத்திருக்கிறோம்!
நடப்பது என்ன? அவர்கள் விலைவாசி ஏற்றத்தைப் பற்றி பேசுவதைவிட அடுத்த பொதுத் தேர்தலைப் பற்றி பேசுவதில் ஆர்வமாக இருக்கின்றனர்! துக்காடக்கள் பேசலாம்! அமைச்சர்கள் பேசலாமோ? அதுவும் நமது பிரதமர் தேர்தல் பற்றி வாய் திறக்காமல் இருப்பது நல்லது.
இன்றைய நிலையில் மக்களுக்குத் தேர்தல் தேவை இல்லை. இன்னும் ஓராண்டுக்கு மேல் தேர்தல் வரவிருக்கும் நிலையில் அதுபற்றி இப்போது பேசி நேரத்தை வீணடிப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது!
தேர்தல் இப்போது நமக்குத் தேவை இல்லை. நேரம் வரும் போது தேர்தலைத் தள்ளிப்போட வேண்டிய அவசியமுமில்லை. அதனால் தேர்தலைப் பற்றி பேசுவதை எதிர்கட்சியினர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பது தான் எதிர்கட்சிகளுக்கு நமது அறிவுரை.
விலைவாசி ஏற்றத்தினால் மக்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள். இப்படிக் கொதித்துப் போய் இருக்கும் மக்களின் மனநிலையைத்தான் அம்னோ கட்சியினர் அறுவடை செய்ய விரும்புகின்றனர். மக்கள் கொதிக்கும் மனநிலையில் இருந்தால் அவர்கள் வாக்களிக்க விரும்பமாட்டார்கள்.. வாக்குச்சாவடிகளுக்கு வரமாட்டார்கள். அது போதும் அம்னோ வெற்றிபெற! அம்னோ கட்சியினர் தனது வாக்காளர்களை வாக்களிக்க முழு ஈடுபாட்டோடு களம் இறங்கிவிடுவார்கள். அம்னோ கட்சியினர் அனைவரும் வாக்களிப்பார்கள் மற்ற கட்சியினர் குறைவான பேர்களே வாக்களிக்கச் செல்வார்கள்! இது அம்னோ வெற்றி பெற அல்லது பாரிசான் வெற்றி பெற வாய்ப்பாக அமையும்.
இவர்கள் வெற்றி பெறுவதோ வெற்றி பெறாததோ நமக்கு அது பற்றி கவலை இல்லை. இப்போது தேர்தலைப் பற்றி சிந்திப்பதைவிட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைப் பற்றி சிந்திப்பது தான் நாட்டிற்கும் நல்லது மக்களுக்கும் நல்லது.
எது தேவை? விலைவாசிகளின் ஏற்றத்தை நிறுத்த வேண்டும். குறிப்பாக உணவு பொருட்களின் விலைகள் குறைய வேண்டும். உணவு பொருட்களின் விலைகள் அசுரத்தனமாக ஏறிக் கொண்டிருக்கின்றன!
யார் பொறுப்பு? பிரதமரே பொறுப்பை ஏற்க வேண்டும்!
No comments:
Post a Comment