Wednesday 24 August 2016

கல்வியாவது கொடுங்கள்!


கல்வி என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்தக் கல்விக்குக் கூட நாம் கெஞ்சும் நிலையில் உள்ளோம்.

நாம் இங்கு படித்தவர்களைப் பற்றி பேசப்போவதில்லை. அவர்களுக்குக் கல்வி என்பது பற்றி நாம் பாடம் எடுக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் பிள்ளைகளைத் தவறாமல் பள்ளிகளுக்கு அனுப்புவார்கள்.

ஏழைகள் தங்கள் குழைந்தகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களா? பலர் கொடுக்கத்தான் செய்கிறார்கள்.  இல்லை என்று அவர்களை நாம் ஒதுக்கிவிட முடியாது. ஒரு சிலர் வேண்டுமானால்  ஏழ்மையின் காரணமாக தவுறுகள் செய்யலாம்.

ஆனால்  அவர்களை விட இன்னும் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யார்? முழு நேர குடியும் குடித்தனமுமாக இருக்கும் தமிழ்ப் பெருங்குடி மக்கள் என்னும் அடையாளத்தோடு வலம் வரும் இவர்களைத்தான் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை! எதற்கும் கவலைப்படாதவர்கள்! நேற்று,  இன்று, நாளை என்று எதற்கும் அசைக்க முடியாதவர்கள்!  முடிந்த காலம், நிகழ்காலம்,  வருங்காலம் பற்றியெல்லாம் அவர்களுக்கு நாம் பாடம் எடுக்க முடியாது!

இவர்கள் தான் இப்படி வீணாகப் போகிறார்களே இவர்கள் பிள்ளைகளாவது நல்லபடியாக வளரட்டும் என்று பார்த்தால் அதற்கும் வழியில்லை. இங்கேயே பிறக்கிறார்கள்; இங்கேயே நாடற்றவராக சாகிறார்கள்! பிறந்த சான்றிதல் இல்லை. அடையாளக்கார்டு இல்லை. பள்ளியில் சேர்க்க முடிவதில்லை. எந்த ஒரு வேலையும் செய்ய முடிவதில்லை. இவர்களுடைய எதிர்காலம் எல்லாம் குண்டர் கும்பல்களில் அடைக்கலம்! வேறு என்ன தான் அவர்கள் செய்வார்கள்?  வாழ வழியில்லை! வழி காட்ட வேண்டியவர்கள் குடித்து கும்மாளம் அடிக்கிறார்கள்!

அரசாங்கம் எந்த வகையிலும் இவர்களுக்குச் சாதகமாக இல்லை. வங்காள தேசத்தவனுக்குக் கொடுக்கும் சலுகை கூட இங்குப் பிறந்த இவர்களின் பிள்ளைகளுக்குப் பள்ளி செல்லக் கூட அனுமதி இல்லை!கேட்க வேண்டியவர்கள் பட்டம், பதவிக்காக அடித்துக் கொண்டிருக்கிறார்கள்!

கல்வியைக் கொடுத்தால் அவன் எப்படியாவது பிழைத்துக் கொள்ளுவான். அரசாங்க அதிகாரிகள் அதற்குத் தடையாக இருக்கிறார்கள்.

ஆனாலும் இவர்களுக்கும் கல்வி கொடுக்க வேண்டும் என்னும் குரல் ஆங்காங்கே ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. சமுதாய அமைப்புக்கள் குரல் கொடுக்கின்றன.

அரசியவாதிகளைத் தவிர அரசு சாரா அமைப்புக்கள், செல்வாக்குள்ள சில மனிதர்கள் இந்த அடிமட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்கின்றனர்.

இவர்களின் வருங்காலம் சிறப்பாக இருக்கும் என நம்புவோம்!

No comments:

Post a Comment