Wednesday 9 November 2022

எல்லாம் ஆண்டவன் செயல்!


"இது மழை காலம். மழை வரும். வெள்ளம் வரும். வாக்களிக்க சிக்கலாக இருக்கும். அதனால் 15-வது பொதுத் தேர்தலை அடுத்த ஆண்டு வையுங்கள்." என்று மக்கள் சொன்னார்கள். அரசியல்வாதிகள் சொன்னார்கள். எதிர்க்கட்சியினர் சொன்னார்கள்.

ஆனால் எதனையும் அப்போதைய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவரது கட்சியினர்  சொல்லுவதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு செயல்பட்டார்.  வானிலை நிலையமும் அம்னோ கட்சியினருக்கு வக்காளத்து வாங்கியது.  ஆளுங்கட்சி சொன்னால் அதற்கு  மறுபேச்சு என்பது இல்லையே!

இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது? நாடெங்கிலும் மழை, வெள்ளம்,  புயற்காற்று என்று மக்களைத் திணறடித்துக் கொண்டிருக்கிறது. இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவது  எப்போது என்பது  மக்களின் கேள்வி. இன்னும் மழை நின்றபாடில்லை. தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது!

வானிலை நிலையங்கள் போன்ற அரசாங்க அமைப்புகள், அம்னோ கட்சியினரின் ஆட்களாக இருந்தால், என்ன நடக்கும் என்பது இப்போது நமக்குத் தெரிந்திருக்கும். இப்படித்தான் பல அரசாங்க அமைப்புகள் அம்னோ கட்சியினரால் நிரப்பப்பட்டிருக்கின்றன. அம்னோ கட்சியின் ஆதரவாளர்கள்  என்றால் போதும்! அது தான் அவர்களின் தகுதி! அரசாங்க சார்பு  நிறுவனங்கள் பல இவர்களை வைத்துத்தான் நட்டத்தை அடைந்து கொண்டிருக்கின்றன! இலாபம் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கம் இவர்களிடம் இல்லை! எல்லாம் அரசியல்! அரசியல் முட்டாள்கள்!

இப்போது தான் பிரதமர் இஸ்மாயிலுக்கு கொஞ்சம் விழிப்பு ஏற்பட்டிருக்கிறது! வாக்களிப்பு தேதியை மாற்றலாமா என்னும் யோசனை வந்திருக்கிறது. அது யோசனை மட்டும் தான்! அதனை அம்னோ ஏற்றுக்கொள்ள வேண்டுமே! அவர்களுக்கோ மழை பெய்தால் நல்ல சகுனம் என்று நினைப்பவர்களாயிற்றே! மக்கள் வாக்களிக்க வரமாட்டார்கள். வெளியூர்களிலிருந்து இளைஞர்கள் வரமுடியாத நிலை. இது போன்ற நல்ல தருணம் தான் அம்னோவுக்கு வேண்டும். மற்றவர்கள் வர தயங்கும் போது இவர்களோ பணத்தை வாரி இறைப்பார்கள்! அவர்களுக்கு வேண்டியவர்களை  வாக்களிக்கும் மையங்களுக்குக்  கூட்டிக்கொண்டு வருவார்கள்.

எப்படிப் பார்த்தாலும் வாக்களிக்கும் தேதியை மாற்ற அம்னோ ஏற்றுக்கொள்ளாது என்பது நிச்சயம்! அதனால் நமக்கு வேண்டுமானால்  நாம் படகிலாவது சென்று வாக்களிக்க வேண்டும்! இல்லையென்றால் எப்படியோ பறந்து சென்றாவது வாக்களிக்க வேண்டும்! வேறு வழியில்லை!

பொறுத்திருந்து பார்ப்போம். வானிலை அறிவிப்பின்படி வாக்களிப்பு நடைபெறும் அன்று மழை பெய்யாது என்றார்கள். அப்படியே ஆகட்டும்! நமக்கும் அதில் மகிழ்ச்சி தான்!

எல்லாம் ஆண்டவன் செயல்!

No comments:

Post a Comment