Sunday 19 February 2023

என்ன காரணமாக இருக்கும்?

 

பள்ளிக்கூட விடுமுறை என்றால் நமக்குத் தெரியும். நமக்கும் அந்த அனுபவம் உண்டு.

சந்தோஷம், மகிழ்ச்சி, ஆட்டம், பாட்டம் - என்பது கடைசி நாளன்று எல்லாமே இருக்கும்.  ஆமாம்! நீண்ட விடுமுறை என்னும் போது மகிழ்ச்சிக்குச் சொல்லவா வேண்டும். அதுவும் டிசம்பர் மாத விடுமுறை என்றால் சாதாரணமா! புத்தகம், புத்தகப்பை எல்லாம் எங்கோ ஒரு மூலையில் கிடக்கும்! அது தான் எங்கள் பள்ளிக்கூட நாள்களில் நடந்த சந்தோஷங்கள்!

ஆனால் இப்போதைய நிலவரம் நமக்குத் தெரியவில்லை. பள்ளிக்குச் சென்று நீண்ட நாள்களாகி விட்டன. விடுமுறை என்றால் மகிழ்ச்சி தான். அப்போதும் சரி இப்போதும் சரி மாணவர்கள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள். இப்போது மட்டும் அப்படி என்ன வித்தியாசம் இருந்துவிடப் போகிறது?

என்ன செய்வது?  பெரிய வித்தியாசம்  தான் இன்றைய நிலை!  பினாங்கு, பட்டர்வொர்த், சிம்பாங் அம்பாட் இடைநிலைப்  பள்ளி ஒன்றில் தான் இந்த நாடகம் அரங்கேறியிருக்கிறது. எல்லாம் ஐந்தாம் படிவ இந்திய மாணவர்கள் என்று சொல்லப்படுகிறது. அது தான் நமக்கு அதிர்ச்சி செய்தி.

அது எங்கோ ஒரு மூலையில் நடந்திருக்கலாம்.  ஆனால் இந்தியர்கள் அனைவருக்குமே  மாபெரும் தலைகுனிவு என்பதில் சந்தேகமில்லை. இப்படி செய்யும் மாணவர்கள் ஒரு வேளை கஞ்சா அடிக்கும் மாணவர்களாகக் கூட இருக்கலாம். வேறு யாராலும் இப்படிச் செய்ய முடியாது.   இப்படியெல்லாம் மாணவர்கள் தறுதலைத்தனமாக நடந்து கொள்ளும் போது நாம் அவர்களின் பெற்றோர்களைத் தான் குறை சொல்லுகிறோம். அது இயல்பு தான். வேறு யாரைச் சொல்லுவது?

பொறுப்பற்றப்  பெற்றோர்கள் அல்லது குடிகாரப் பெற்றோர்கள் இவர்கள் வீட்டுப் பிள்ளைகள் தான் இப்படியெல்லாம் நடந்து கொள்வார்கள் என்கிற ஓர் அளவுகோள்  நாம் வைத்திருக்கிறோம்.  அதனை இல்லை என்றும்  நாம் மறுக்க முடியாது. 

இதனை நாம் ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது.  ஒரு சில பள்ளிகளில்  அனைத்து இந்திய மாணவர்களையும்  ஒரே வகுப்பில் போடுவது உண்டு. படிக்காத முட்டாள் மாணவர்களையும் படிக்கும் கெட்டிக்கார மாணவர்களையும் ஒரே வகுப்பில் போட்டு அடைப்பதால் நன்றாகப் படிக்கும் மாணவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். இதுவே நமக்கு ஒரு தலைவலி பிரச்சனை தான். 

முதலில் பெற்றோர்கள் திருந்த வேண்டும். வன்முறை வீட்டில் நடந்தால் அது பள்ளிகளுக்கும் பரவும் என்பது இந்த நிகழ்ச்சி மூலம் நமக்கு ஒரு பாடம் கற்பிக்கப்படுகிறது.

இது நமது சமுதாயத்திற்கு ஒரு மாபெரும் தலைகுனிவு. அதில் சந்தேகமில்லை. நமது பெற்றோர்கள் தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

No comments:

Post a Comment