Friday 8 December 2017

கேள்வி - பதில் (68)


கேள்வி

கன்னியாகுமரி மீனவர்கள் தமிழக அரசுக்கு எதிராக வெகுண்டு எழுந்திருக்கிறார்களே!!

பதில்

உண்மை தான். அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் தான் "நாங்கள் கேரளாவுடன் இணைவோம்" என முழக்கமிடுகிறார்கள்! அதில் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை!

அரசு என்றால் அதற்கு    உயிர் இருக்க வேண்டும். அது இயங்க வேண்டும்.  ஏதோ, ஒன்றுமே நடவாதது போல ஒய்யார நடை போட்டுக் கொண்டிருந்தால் யாரால் பொறுத்துக் கொள்ள இயலும்? ஓர் இயங்காத அரசை வைத்துக் கொண்டு யார் என்ன செய்ய முடியும்? மக்களால் தெர்ந்தெடுக்கப்பட்ட  ஓர் அரசு மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வந்தால் அப்புறம் எதற்கு அந்த அரசு? 

மனிதர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும். மீனவர்கள் என்றால் அவ்ர்கள் தீண்டத்தகாதவர்கள் என்னும் எண்ணத்தை இவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பது புரிகிறது. பக்கத்து மாநிலத்து முதலமைச்சர் நேரிடையாகவே பாதிக்கப்பட்ட மீனவர்களை, பாதிக்கப்பட்ட இடங்களைச் சென்று பார்வை இடுகிறார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் அவர் சொல்லாமல் இவர்கள் தங்கள் கழுத்தைக் கூட திருப்பாமல் அவரின் உத்தரவுக்காகக் காத்துக் கொண்டிருந்தவர்கள்! இப்போது மோடியின் உத்தரவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது! 

இது போன்ற துயரச் சம்பவங்கள் ஏற்படுகின்ற போது உடனே மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி எத்தனை கோடி தங்களுக்கு வேண்டும்  என்று தான் கேட்கிறார்களே தவிர உடனடியாக எந்த நடவடிக்கையும் இவர்கள் எடுப்பதில்லை! எந்தத் துயர சம்பவங்கள் நடந்தாலும் சரி அதன் மூலம் எவ்வளவு பணம் கறக்கலாம் என்பதில் தான் இவர்கள் குறியாக இருக்கிறார்கள்!

இப்படியெல்லாம் ஓர் அரசு! வெட்கப்பட வேண்டிய ஒரு செயல். தமிழர்கள் தலைக்குனிய வேண்டிய ஒரு செயல். தமிழர்களைத் தலை குனிய வைத்திருக்கும் ஓர் அரசு. இவர்களை வைத்தே அம்மாவின் "புனிதத்தன்மையை" ஓரளவு புரிந்து கொள்ளலாம்!  

பிரதமருக்குக் கடிதம் எழுதி தான் பிரச்சனைகளைக் களைய வேண்டுமென்றால் அது என்ன அரசு?  முதலமைச்சர் மீனவர்களைப் போய் பார்ப்பதற்குக் கூட பிரதமரின் தயவு வேண்டுமென்றால் இவர்களைப் போன்றவர்கள் பதவியில் இன்னும் இருக்க வேண்டுமா? 

கன்னியாகுமரி மீனவர்கள் சொல்லுவது சரி தான்.தங்களது குடும்பங்களை, சொந்த பந்தங்களை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் அவர்களை ஏதோ நாதியற்ற சமூகமாகப் பார்க்கும் தமிழக அரசு தேவை இல்லை தான்! அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் போது வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசை மக்கள் தூக்கி எறிய வேண்டும்! வருகின்ற இடைத் தேர்தலிலும் அவர்களின் வைப்புத் தொகையை இழக்க வைக்க வேண்டும்!               




No comments:

Post a Comment