Friday 1 December 2017

ம.இ.கா.விற்குப் போட்டியா..?


ம.இ.கா.விற்குப் போட்டியாக இன்னொரு கட்சி - வெற்றி முன்னணி - உருவாகிக் கொண்டு இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன! 

தேர்தல் காலங்களில் நிறைய இயக்கங்கள், மன்றங்கள், சங்கங்கள் ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டு, இந்தியர்களுக்கு இது நாள் வரை செய்யாத  உதவிகள் எல்லாம் செய்யத் தயாராகி வருகின்றன!  இந்த சமூகத்தின் மீது எந்த அக்கறையும் இல்லாதவர்கள் எல்லாம் இப்போது தான் அக்கறைக் காட்ட ஆரம்பித்திருக்கின்றனர்! நாம் அவர்கள் மீது அக்கறைக் காட்டுவதில்லை! காரணம் ஏதோ அவர்கள் வீட்டுப் பிள்ளைக்குட்டிகளாவது , இந்த சமுதாயத்தின் பெயரை வைத்து,  நன்றாக இருந்து விட்டுப் போகட்டுமே என்கிற பெருந்தன்மை தான்! அரசாங்கத்தின் நோக்கம் எல்லாம் இந்தியர்களின் வாக்குகள் அவர்களுக்குப் போய்ச் சேர வேண்டும். அவ்வளவு தான்! அது மட்டுமே அவர்களது குறிக்கோள்! அதனால் தான் இந்த இயக்கங்கள், மன்றங்கள், சங்கங்கள் -  இந்தத் தேர்தல் காலங்களில் - தீடீர் தீடீரென, புதிது புதிதாக முளைத்துக் கொண்டிருக்கின்றன! இந்தியர்களின் வாக்குகளை நாங்கள் பெற்றுத் தருகின்றோம் என்று தலைவர்களுக்கு உறுதிமொழி கொடுக்கின்றன! 

இந்த நேரத்தில் தான்  ஒரு புதிய கட்சி! அதுவும் அரசியல் கட்சி! அதுவும் ம.இ.கா. வுக்கு எதிராக - இந்தியர்களைப் பிரதிநிதிக்க - ஒரு அரசியல் கட்சி. இது ஒன்றும் 'யாரோவால்' ஆரம்பிக்கப் படுகின்ற ஒரு கட்சி அல்ல. மேலே பெருந்தலைகளின் ஆதரவோடு ஆரம்பிக்கப் படுகின்ற ஒரு அரசியல் கட்சி. 

ம.இ.கா.வின் இன்றைய நிலை என்ன என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். அவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் மிக மிகக் குறைவு என்பது தான் அவர்களின் இன்றைய நிலை. மலாய்க்காரர்களும் அவர்களுக்கு ஆதரவாக இல்லை என்பதும் இன்றைய யதார்த்தம்.  ஆனாலும், அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல், இந்தியர்களின் நலன் சார்ந்த விஷயங்களில் எந்த அக்கறையும் காட்டாமல், என்னமோ சொர்க்கலோகத்தில் இருப்பது போல கனவில் மிதந்து கொண்டிருக்கிறார்கள்! அவர்களை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. தேர்தலில் தோற்றாலும் அவர்கள் செனட்டராகலாம்! அதன் மூலம் அமைச்சராகலாம்! அமைச்சருக்கு உதவியாளராக இருக்கலாம்! அரசாங்க அமைப்புக்களில் பதவிகளில் அமரலாம்! இப்படித் தேர்தலில் தோற்றுப்போனாலும் அவர்களுக்கு வாய்ப்புக்கள் என்னவோ பிரகாசமாகத் தான் இருக்கிறது!  இப்படியெல்லாம் வாய்ப்புக்கள் வரும் போது மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்று அவர்களுக்கு என்ன தலை எழுத்தா? அவர்களுக்கு அரசியலில் ஆர்வமில்லை.  ஏதோ வந்தோமா, சொத்து சேர்த்தோமா, பிள்ளைகளை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பினோமா என்னும் மனப்போக்குக்  கொண்டவர்களாகத்தான்  இருக்கிறார்கள்!

இந்த  நிலையில் தான் ஒரு  புதிய  அரசியல்  கட்சி  உதயமாகிறது. அனேகமாக  இந்த  மாதக் கடைசியில் - டிசம்பரில் - அதிர்காரபூர்வமாக  செய்திகள்  வெளியாகும்  என  எதிர்பார்க்கலாம்.  ம.இ.கா.வின் பலவீனம் இவர்களின் பலம்!  

ஆனாலும் ஓர் அரசியல் கட்சி புதிதாகத் தொடங்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. ம.இ.கா.விற்கு நீண்ட கால சரித்திரம் உண்டு. கட்சியினால் எந்தப் பிரச்சனையும் இல்லை. அக்கட்சியின் தலைவர்களால் அது தோற்கடிக்கப்பட்ட ஒரு கட்சி! அவ்வளவு தான்! 

புதிய கட்சி எந்தத் திசையை நோக்கிப் பயணிக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதற்கென்ன? சீக்கிரமே தெரிந்து விடும்!

No comments:

Post a Comment