Monday 18 December 2017

இந்திய அரசியல் தலைவர்கள்...!


நமது மலேசிய அரசியல் தலைவர்கள், குறிப்பாக இந்திய அரசியல்வாதிகளைப் பற்றி பேசும் போது , அதுவும் இன்றைய இந்திய அரசியல்வாதிகளைப்  பற்றி பேசும் போது - ஏனோ நமக்கு ஒரு விதத் தளர்ச்சியே ஏற்படுகிறது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளாகட்டும் அல்லது எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளாகட்டும் .....ம்ம்ம்ம்ம்...... ஒருவருமே சரியாக இல்லை! 

நாம் சொல்ல வருவதெல்லாம் இவர்களால் இந்த சமுதாயத்திற்கு என்ன பயன் என்பது மட்டும் தான். இவர்கள் அனைவருமே தங்கள் குடும்பத்திற்கு நல்லதைச் செய்யும் சேவையாளர்களாக இருக்கிறார்கள் என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை!

முன்பெல்லாம் படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டுமென்று அனைவரும் கூறி வந்தோம்.  இப்போது படித்தவர்கள் வந்துவிட்டார்கள் ஆனால் படிக்காதவர்கள் செய்த சேவையின் அளவுக்காவது  இவர்கள் செய்கிறார்களா என்றால் எல்லாமே தடுமாற்றமாக இருக்கிறது! அவனும் குடித்து விட்டுத் தடுமாறினான் இவனும் குடித்து விட்டுத் தடுமாறுகிறான்! மக்களுக்கான சேவையைப் பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை!

இவர்களால் என்ன தான் இந்திய சமுதாயத்திற்கு மாற்றத்தைக்    கொண்டு வர முடிந்தது? 

சமுதாயத்தின் பணத்தைத் திருடி வயிறு வளர்த்தவன் இந்த சமுதாயத்தைப் பார்த்து கேள்வி கேட்கிறான்: "மற்ற இனத்தவர்கள் எல்லாம் முன்னேரும் போது ஏன் உங்களால் மட்டும் முன்னேற முடியவில்லை?"  இப்படியெல்லாம் கேள்வி கேட்கும் போது நமக்கும் வயிறு எரியத்தான் செய்கிறது! இவனே மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து குபேரன் ஆனவன்!    சொந்த முயற்சியால் முன்னேறாதவன்!  கொள்ளையடித்தவன் முன்னேறி விட்டானாம்!  கொள்ளையடிக்காதவனைப் பார்த்து "ஏன் முன்னேறவில்லை?" என்று கேள்வி கேட்கிறான்!

எல்லாமே நமது குற்றம் தான்! நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதி அவன். ஆனால் அவனைப் பார்த்து நாம் ஆயிரம் வணக்கங்கள் போடுகிறோம்! குனிகிறோம்! வளைகிறோம்! கூனிக்குறுகிறோம்! இது தேவையா?

அரசியல்வாதி நமக்கு எஜமானன் அல்ல! அவன் நமது சேவகன்! அவனை வைக்க வேண்டிய இடத்தில் நாம் வைக்கவில்லை! அதனால் தான் இவ்வளவு குளறுபடிகள்! இந்த சமுதாயத்திற்குக் கொடுத்த வாக்குறுதிகள், உறுதி மொழிகள் எதுவுமே நிறைவேற வில்லை! அவன் பதவிக்காகப் பல்லை இளித்துக் கொண்டிருக்கிறான்!   நாம் நமது உரிமைகளை இழந்து கொண்டிருக்கிறோம்.

கொஞ்சம் யோசியுங்கள். மலாய்க்காரர்களோ, சீனர்களோ அவர்களது அரசியல்வாதிகளை என்ன நிலையில் வைத்திருக்கிண்றனர். நாம் எப்படி வைத்திருக்கிறோம்!

நாம் மாற வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் தான் நமது எஜமானர்கள்! நாம் கூலிகள்!


No comments:

Post a Comment