Saturday 30 December 2017

எப்படி சாத்தியம்?




இது எப்படி சாத்தியமானது? உலகமே வியக்கும் ஓர் அதிசயம்! 

ஊட்டி, மேட்டுப்பாளையம் வனவிலங்கு முகாமில்    பணிபுரிபவர் சரத்குமார் பழனிச்சாமி. வயது 28. உயரம் 6 அடி. 80 கிலோ  எடையுடையவர்.

அவர் ஆபத்தில் இருந்த - நடக்க முடியாத நிலையில் இருந்த - சுமார் 100 கிலோவுக்கு மேலே எடையுடைய - ஒரு யானைக் குட்டியை தோளில் சுமந்து கொண்டு 50 மீட்டர் தூரம் அதனுடைய தாய் யானையிடம் சேர்ப்பிக்க நடந்திருக்கிறார்! கூடவே அந்தக் குட்டி யானை விழாமல் இருக்க அவருடைய  நண்பர்களும் உதவியாக இருந்திருக்கிறார்கள்.

இது எப்படி சரத்குமாருக்குச் சாத்தியம் ஆனது என்று நாம் அனைவருமே வியக்கிறோம். இப்போது அதே செயலை நீங்கள் செய்து காட்டுங்கள் என்றால் அவரால் செய்து காட்ட முடியுமா? நிச்சயமாக முடியாது!  

இது போன்ற செயல்கள் சாதாரண நிலையில் யாராலும் செய்ய இயலாது. அந்தக் குட்டி யானையின் மீது அவருக்கிருந்த அக்கறை - அந்தக் குட்டியானை அதன் தாயிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டுமே என்னும் வெறி - இது தான் இது போன்ற அதிரடியான செயல்களுக்கு முக்கிய காரணம்.  இந்தக் குட்டியானையை அதன் தாயிடம் சேர்க்கப்படா விட்டால் அதனால் ஏற்படப்போகும் அபாயம் - அந்தத் தாய் யானை ஊரையே கலங்கடிக்கும் என்னும் பயம் - இவைகளெல்லாம் சேர்ந்து தான் இப்படி ஒரு சாதனையை அவரால் செய்ய முடிந்திருக்கிறது!

சாதாரண காலங்களில் செய்ய இயலாத சில காரியங்கள் யாரும் எதிபாராத நேரத்தில், ஆபத்து அவசர காலத்தில், ஒரு சில நேரங்களில் மனிதர்கள் செய்யத்தான் செய்கிறார்கள். இல்லை என்று சொல்ல முடியாது. அதனைத்தான் நாம் அதிசயங்கள், வியக்கத்தக்க, இயற்கைக்கு மீறிய, அமானுஷ்யம்   என்று சொல்லுகிறோம்! மனிதனுக்கு வாழ்வா, சாவா என்னும் நிலையில் இருக்கும் போது அவன் வாழ வேண்டும் என்று நினைத்தால் அவனால் இதுபோன்ற ஆச்சரியங்களைச் செய்ய முடியும். 

ஆமாம், இந்தச் சாதனையைப் புரிந்த சரத்குமார் என்ன சொல்லுகிறார்? அவர் சொல்லுகின்றார்:  "அந்த நேரத்தில் என்ன நடந்தது என்று எனக்கே தெரியவில்லை! அந்தக் குட்டியானயை அதன் தாயிடம் சேர்ப்பிக்க வேண்டும். அது மட்டும் தான்! வேறு ஒன்றும் நினைவில் இல்லை! உடனே தூக்கி விட்டேன்!  முடியுமா, முடியாதா என்றெல்லாம் நினைக்க நேரமில்லை!    செம கணம்! மூச்சே திணறிவிட்டது" என்கிறார் சரத்!

ஓர் உயிருக்கு உயிர் கொடுத்தவர். வாழ்க பல்லாண்டு என நாமும் வாழ்த்துவோம்!

No comments:

Post a Comment