Tuesday 19 December 2017

பூப்புனித நீராட்டு விழா


பூப்புனித நீராட்டு விழா போன்ற சில சடங்குகள் நம்மிடையே இருக்கத்தான் செய்தன. ஆனால் காலப்போக்கில் இது போன்ற சடங்குகள் எல்லாம் வழக்கொழிந்து போயின.

இப்போதெல்லாம் யாரும் இது போன்ற நீராட்டு விழாவினைப் பெரும்பாலும் நடத்துவதில்லை. அதாவது நமது நாட்டைப் பொறுத்த வரை. தமிழகத்தின் நிலை நமக்குத் தெரியவில்லை. ஒரு வேளை கிராமப்புறங்களில் இது தொடரலாம். 

நமது நாட்டைப் பொறுத்தவரை எந்தப் பெற்றோரும் தனது மகள் வயதுக்கு வந்து விட்டாள் என்று தண்டோரா போட யாரும்  தயாராக இல்லை. காரணம் தமிழகத்தைப் போல ஒரே சமூகத்தினர் வாழும் நிலை இங்கு இல்லை. இங்குப் பல சமூகத்தினர் வாழுகின்றனர். அத்தோடு மட்டும் அல்லாமல் மற்ற இனத்தவரும் வாழ்கின்றனர். மற்ற இனத்தவர்களுக்கு - சீனர், மலாய்க்காரர்களுக்கு -   இது போன்ற சடங்குகள் இருப்பதாக நாம் கேள்விப்படுவதில்லை.   

ஒரு காலத்தில் இந்தச் சடங்கில் புனிதம் இருந்திருக்கலாம். இப்போது நிலைமை வேறு.  இப்போது பெண்களைக் கேலி பண்ணுகின்ற நிலைமைக்கு இந்தச் சடங்குகள் கொண்டு செல்லும். அதனாலேயே பெற்றோர்கள் 'கப்சிப்' என்று அடக்கமாக இருக்கின்றனர். 

இப்போது ஏன் இந்தப் பிரச்சனைக்கு அவசியம் வந்தது? சமீபத்தில் ஒரு நண்பர் தனது மகளின் "பூப்புனித நீராட்டு விழா" வுக்கு அழைப்பினைக் கொண்டு வந்தார். எனக்கு அது கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்தது! காரணம் இப்படி ஒரு அழைப்பிதழை இதற்கு முன் யாரும் எனக்குக்  கொண்டு வந்து கொடுத்ததில்லை!  இதெல்லாம் உறவுமுறைகளுக்குக் கொடுத்தால் ஏற்றுக் கொள்ளலாம். நான் அவர்களின் உறவுமுறை அல்ல.  அத்தோடு இது போன்ற சடங்குகளை நான் வரவேற்பதில்லை. ஏதோ ஒரு காலத்தில் நடந்தது.  அது விடுப்பட்டுப் போன பின்னரும் ஏன் அதனைத் தொடர வேண்டும்?  அவசியம் என்றால் உற்றார் உறவினரை அழைத்து நான்கு சுவர்களுக்குள் முடித்துக் கொள்ளலாம்.  ஒரு வேளை அது  நடக்கலாம்.  பழைய சாங்கியங்களைத் தொடர்பவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்! செய்யட்டும். ஆனால் அதற்கு விளம்பரங்கள் தேவை இல்லை! விளம்பரங்கள் ஆபத்தை விளைவிக்கும் என்பதைப் புரிந்து கொண்டால் சரி.

எது எப்படி இருந்தாலும் தேவை இல்லாதவற்றை ஒதுக்கி விடலாம்!  அப்படித் தேவை இல்லாத ஒன்று தான் இந்தப் பூப்புனித நீராட்டு விழா! அதுவும் பல இனங்கள் வாழ்கின்ற நாட்டில் தவிர்க்கப்பட வேண்டும்!


No comments:

Post a Comment