Friday 8 December 2017

அப்படி என்னா வயசாச்சு...?


உங்களுக்கு அப்படி என்ன தான் வயசாச்சு?  வயசானால் பரவாயில்லை. தேவை எல்லாம், இருக்கும் வரை நமக்குப் பிடித்ததைச் செய்ய வேண்டும். 

நமது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் அரசியலில் இன்னும் கலக்கிக் கொண்டிருக்கிறாரே! காரணம் அரசியல் என்பது அவரோடு கலந்து விட்டது. அவர் எதிரணியில் இப்போது இருந்தாலும் - அப்படியே இல்லாவிட்டாலும் - எதனையாவது எழுதி கலக்கிக் கொண்டு தான் இருப்பார்!  சும்மா ஓய்ந்து இருப்பது எல்லாம் அவரது இயல்பு அல்ல! 

இந்த வரிசையில் தமிழர்கள் என்று பார்த்தால் பெரியார் ஈ.வே.ரா, ராஜாஜி, கி.ஆ.பெ.விஸ்வநாதம், கலைஞர் கருணாநிதி போன்றவர்களை நம்மால் மறக்க முடியாது. பெரியார் ஈ.வே.ரா தள்ளாத வயதிலும் , ஒவ்வொரு நாளும், கூட்டங்களில் கலந்து கொண்டு தனது பிரச்சாரங்களைத் தொடர்ந்து கொண்டிருந்தார் அவருடைய பேச்சுக்கள் அனைத்தும் தமிழர்களின் மூட நம்பிக்கைகள், சாதிய வேறுபாடுகள்   சார்ந்தவை. அவர் இறக்கும் போது அவருடைய வயது 94.

நீண்ட காலம் வாழ்ந்த இன்னொரு பெரியவர் மூதறிஞர் ராஜாஜி.  கடைசிவரை அரசியலில் இருந்து கொண்டும் எழுதிக் கொண்டும். எல்லா அரசியல் தலைவர்களிடமும் கருத்து வேறுபாடுகளுடன் தொடர்ந்தே கொண்டே இருந்துவர். 1959-ல் சுதந்தராக் கட்சியைத்  தொடங்கியவர்.  அப்போது அவருக்கு வயது 81.  1967-ல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அவருடைய கட்சி 45 இடங்களைப் பிடித்து சட்டமன்றத்தில் முதன்மை எதிர்கட்சியாக விளங்கியது. அவருடைய உயிர்க்கொள்கை என்பது மதுவிலக்கு மட்டுமே. அவர் இறப்பதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னர்   அவரே நேரடியாகக் கோபாலபுரம் சென்று முதல்வர் கருணாநிதியிடம் "எக்காரணத்தைக் கொண்டும் சாராயக்கடைகளைத் திறந்து விடாதீர்கள்" என்று  அவரின் கைகளைப் பிடித்துக் கெஞ்சியவர்.   எந்தத் தேர்தலில் போட்டியிடாமல் இந்தியாவின் பெரிய பெரிய பதவிகளை வகித்தவர். அவர் இறக்கும் போது அவருக்கு வயது 95.

அடுத்து முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள். 95 வயது வரை வாழ்ந்தவர். தமிழறிஞர். இவர் எழுதிய புத்தகங்கள் மொத்தம் 23.  அனைத்தும் தமிழ் வளர்ச்சித்துறையால் நாட்டுடமை ஆக்கப்பட்டன.  ஆரம்பகாலங்களில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு காட்டியவர். பின்னர் பெரியார் திராவிடம், திராவிடர் என்னும் நிலை எடுத்த போது அவரோடு இவர் ஒத்துப் போக முடியவில்லை. தமிழ், தமிழர், தமிழ் நாடு, தமிழ்த் தேசியம் என்பதே இவரின் மூச்சாக இருந்தது. எல்லாக் காலங்களிலும் தமிழ், தமிழருக்காகவே வாழ்ந்தவர். அவர் இறப்பதற்கு இரு நாள்களுக்கு முன் "தமிழ் நாட்டில் தமிழைக்  கட்டாய மொழியாக்கினால் மன நிறைவோடும், மகிழ்ச்சியோடும் சாவேன்" என்றார்.

இப்பொது நம்மிடையே இருப்பவர் கலைஞர் மு. கருணாநிதி. வயது 93. திரைப்படங்களுக்கு  கதை-வசனம் எழுத ஆரம்பித்தவர். சமீபகாலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். முழு நேர அரசியல்வாதி. எழுத்தும், அரசியலும் அவருக்கு முழு நேரம். ஓய்வு ஒழிச்சலின்றி எழுதிக் கொண்டிருந்தவர். சமீபகாலமாக அனத்தும் செயல் இழந்துவிட்ட நிலையில் பிறரின் உதவியோடு நடமாடி வருகிறார். ஒன்றைக் கவனியுங்கள். மேலே குறிப்பிட்ட அனைவரையும் விட ஒரு வகையில் இவர் வித்தியாசப்படுகிறார்.   சாராயக்கடைகளைத் திறக்காமல் இருந்திருந்தால் ஒரு வேளை இவர் இன்னும் எழுதிகொண்டும் அரசியல் பண்ணிக்கொண்டும் இருந்திருப்பார் என் நம்பலாம்.

இவர்களெல்லாம் பிரபலங்கள். இதோ எனக்குத் தெரிந்த எழுத்தாள நண்பர் ஒருவர்.  வயது 82. கிறிஸ்துமஸ் சிறப்பு மலருக்காக ஒரு கதை எழுதி  கணிப்பொறியில் பதிவேற்றம் செய்து கொண்டிருந்தார். வருகின்ற 25-ம் தேதி நாளிதழில்  அவரது கதை   வரும் என எதிர்பார்க்கலாம். ஏதோ அவருக்குத் தெரிந்த ஒரு கலை. அதனைப் பயன்படுத்துகிறார். 

வயதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். உங்களால் என்ன  முடியுமோ, என்ன தெரியுமோ -  உங்களின் வயதைப்பற்றி கவலைப்படாமல் - அந்த தெரிந்த கலையைப் பயன் படுத்துங்கள். வயசைப்பற்றி என்ன கவலை? வரும்போது வரட்டும்! போகும் போது போகட்டும்! அட! சின்ன வயதில் தான் பிடித்ததைச் செய்ய முடியவில்லை! இப்போதாவது செய்வோமே!


No comments:

Post a Comment