Friday 22 December 2017

இராணுவம் ஒதுக்குகிறதா?




மலாய்க்காரர் அல்லாதார் இராணுவத்தில் பணி புரிய ஆர்வம் காட்டுவதில்லை என்னும் குற்றச்சாட்டு நீண்ட காலமாக மலாய்க்காரர் அல்லதார் மீது அமைச்சர்களும் அதிகாரத்தில் உள்ளவர்களும் வைக்கின்ற ஒரு குற்றச்சாட்டு. 

ஆனால் இது தவறு என்றும் உண்மையைச் சொன்னால் மலாய்க்காரர் அல்லாதார் இராணுவச் சேவையிலிலிருந்து ஒதுக்கப்படுகின்றனர் அல்லது வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்றன என்பதாகக் கூறுகிறார்  தேசிய நாட்டுப் பற்று சங்கத்தின் தலைவர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஜெனரல் முகமது அர்ஷாத். 

சங்கம் வெளியிட்டிருக்கும் ஆய்வுகளிலிருந்து:

 1960 ஆண்டுகளிலிருந்து 1970 ஆண்டு வரை மலேசிய ஆயுதப்படையில் மலாய்க்காரர் அல்லதார் 30 விழுக்காடு இடம் பெற்றிருந்தனர். விமானப்படையிலும் கப்பற்படையிலும் இவர்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றிருந்தனர். இப்போது படிப்படியாகக் குறைந்து 5 விழுக்காட்டில் வந்து நிற்கிறது! இதற்குக் காரணம் இப்போது ஆயுதப்படை இன ரீதியில் செயல் படுகிறது!

1980 களில் அரசாங்கத்தின் கொள்கைகள் இராணுவ நிர்வாகத்திற்குள் ஊடுருவத் தொடங்கின. இராணுவத் தளபதிகள் மலாய்க்காரர் அல்லாதாரை "இவர்கள் நம்ம ஆள் இல்லை" என்பதாகப்  பார்க்கத் தொடங்கினர்.  ஒரு சில இராணுவத் தளபதிகள் தங்களது கடமைகளைச் சரியாக செய்த போதிலும் தற்காப்பு அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகள் இன ரீதியில் செயல்பட்டு கோட்ட முறைகளை உருவாக்கி பிரிவினைகள ஏற்படுத்தினர். பதவி உயர்வுகள் அனைத்தும் அரசியல் ரீதியாக அணுகப்பட்டன. இந்தக் காலக்கட்டத்தில் பதவி ஓய்வு பெற்ற மலாய்க்காரர் அல்லாதார் இராணுவத்தை பற்றிப் பெருமையாகப் பேசவுதற்கு ஏதுமில்லை என்னும் நிலை உருவாகியது.

தகுதியான மலாய்க்காரர்கள் பதவி உயர்வு பெறும் போது மலாய்க்காரர் அல்லதார் அதனை ஏற்றுக் கொண்டனர். ஆனால் தகுதியற்ற மலாய்க்காரர்கள் பதவி உயர்வு பெறும் போது அது அவர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது. தங்களுக்குக் கீழ் இருந்த ஒரு மலாய்க்காரர் பதவி உயர்வு பெற்றதும் அவரை "சார்!" என்று அழைத்து சல்யூட் அடிப்பது அவர்களின் மனநிலையைப் பாதித்தது.

சராசரியாக இருந்த அதிகாரிகள் பதவி உயர்வு பெற்று அவர்களின் கீழ் தகுதி குறைந்த  அதிகாரிகள் உருவாக்கப்பட்டனர். தகுதி குறையும் போது இயற்கையாகவே இராணுவம் சமயத்தை உள் கொண்டு வந்தது! 1980 களில் இராணுவம் சமய மயமாகியது. மலாய்க்காரர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் சமய மயமாக மாற்றப்பட்டது!  இஸ்லாமியர் அல்லாதார் அந்நியராகப் பார்க்கப்பட்டனர்! நாம் மலேசியர் என்னும் உணர்வு குறைந்து அனைத்தும் சமய அடிப்படையில் பார்க்கப்பட்டது.

இதுவே காலப்போக்கில் இராணுவம், காவல் துறை, பொதுச் சேவைத் துறை அனைத்திலும் பரவி விட்டது என்பதாக தேசிய நாட்டுப்பற்றாளர் சங்கத்தின் தலைவர்,  ஒய்வுபெற்ற பிரிகேடியர் ஜெனரல் முகமது அர்ஷாத் தங்களது ஆய்வின் மூலம் கண்டறிந்தாகக் கூறியுள்ளார்.

இன்றைய இராணுவத் தளபதி ஜெனரல் ராஜா முகமது அஃபாண்டி சமீபத்தில் மலாய்க்காரர் அல்லாதார் ஒவ்வொரு ஆண்டும் 10 விழுக்காடு இராணுவத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை விடுத்திருக்கிறார். ஏற்கனவே இது போன்ற கோரிக்கைகள் அரசாங்கத் தரப்பிலிருந்து வந்திருக்கின்றன. ஆனாலும் எதுவும் எட்ட வேண்டிய இடத்திற்கு எட்டவில்லை! ஆமாம்! தற்காப்பு அமைச்சு 'மௌனமாக' இருக்கும் வரை 10 விழுக்காடு என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்! மேலும் ஒரு காலக்கட்டத்தில்  கம்யூனிஸ்ட் பயங்கரவாதிகளால் நாட்டில் அமைதியின்மை  என்பது தொடர்ந்து கொண்டிருந்தது. அப்போது அனைத்து இனத்தவரும் சேர்ந்து பயங்கரவாதிகளை எதிர்க்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இப்போது எந்த ஒரு பயங்கரவாதமும்  நாட்டில் நிலவவில்லை! அதனால் இஸ்லாமிய இராணுவமே போதும் என்கிற நிலைமை தற்காப்பு அமைச்சின் நிலைப்பாடாக உள்ளது.  அதனை நாமும் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்!

இராணுவத்தை நாம் ஒதுக்கவில்லை! அதுவாகவே நம்மை ஒதுக்குகிறது!



No comments:

Post a Comment