Saturday 9 June 2018

இந்தியர் விவகாரம்.........(2)

இந்தியர் விவகாரம் பற்றி விவாதிக்கும் குழுவுக்கு அடுத்து நாம் முன் வைக்கும் விவகாரம்.

நீலநிற அடையாள அட்டை:   நமது இந்திய சமுதாயத்தின் மிகப்பெரிய பலவீனம்அடையாள அட்டை,  குடியுரிமை  நாடற்றவர் என்று  இப்படி  நீண்டு  கொண்டு  போகிறது. நாடற்றவர்களே  சில  இலட்சம் பேர்கள்  இருப்பதாகக்  கூறப்படுகின்றது. இதற்கெல்லாம் ஒரு  முடிவு  கட்ட  வேண்டியது இப்போது  ஆட்சியில் இருக்கும்  பக்கத்தான்  அரசின்  கடமை என்பது  உண்மை. இது  அவர்கள்  கொடுத்த  தேர்தல் வாக்குறுதிகள்.  "நூறு  நாள்கள் கொடுங்கள் முடித்துக் காட்டுவோம்" என்று  அவர்கள் சொல்லியிருந்தாலும், பரவாயில்லை,  இருநூறு நாள்கள் எடுத்துக் கொள்ளட்டும். முடித்துக் காட்டட்டும். நூறு நாள்களில் செய்ய முடிந்ததைச் செய்யட்டும். எப்படியும் ஓர் ஆண்டுக்குள் அனைத்தையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதையே நாங்கள்  விரும்புகிறோம்.

இந்த நேரத்தில் ஓர் ஆலோசனையையும் கொடுப்பது நமது கடமை என  நான் நினைக்கிறேன்.குழந்தைகளின் பிறப்புப் பத்திரம் எடுப்பதை எளிதாக்க  வேண்டும். பொதுவாகப்  பத்து, இருபது  ஆண்டுகள்  பின்னோக்கிப் பார்க்கும்  போது  பிறப்புப் பத்திரம் எடுப்பதில்  எந்தப் பிரச்சனையும்  எழவில்லை. காரணம்  குழந்தை பிறந்து மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது அப்போதே பிறப்புப் பத்திரம் பெற்றோர்களிடம்  கொடுக்கப்பட்டு விடும் ஒரு முறை இருந்தது. அந்த  நடைமுறை  நீண்ட  நாள் இருந்த ஒரு நடைமுறை  மட்டும் அல்ல மிகவும்  வெற்றிகரமான  நடைமுறையாகவும் இருந்து  வந்துள்ளது. அந்த  நடைமுறை மீண்டும்  கொண்டு வரப்பட  வேண்டும்.

இப்போது உள்ள நடைமுறை என்பது அரசாங்கத்தில் வேலை செய்பவர்களுக்கு ஏற்ற ஒரு நடைமுறை. அவர்களுக்கு விடுமுறை என்பது பிரச்சனை அல்ல. ஆனால் தோட்டப்புறங்களில் வேலை செய்பவர்களுக்கு விடுமுறை கிடைப்பது என்பது மிகவும் சிக்கலானது. ஏதோ ஒரு முறை இரண்டு முறை விடுமுறை எடுக்கலாம்.  அதற்கு மேல் அவர்கள் பல பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள். அப்படியே விடுமுறை எடுத்துக் கொண்டு போனாலும் அரசாங்கத் துறையில் உள்ளவர்களுக்கு தினசரி விடுமுறை தான்! அவர்கள் உழைக்கத் தயாராக இல்லை! அதனால் சாதாரணமாக தோட்டப்புறங்களிலிருந்து போகுபவர்கள் தங்களது வேலைகளைச் சரிவரச் செய்ய முடிவதில்லை. தொடர்ந்தாற் போல் அவர்கள் விடுமுறையும் எடுக்க முடிவதில்லை. இவர்கள் தான் பிற்காலத்தில் சரியான தகவல்கள் இல்லை என்று அடையாள அட்டைகள் இல்லாமல், குடியுரிமை இல்லாமல், நாடற்றவர்கள் என்று கேவலப்படுத்தப் படுகின்றார்கள். உண்மையில் நாம் கொஞ்சம்  சிந்தித்தால் இந்தியர்களை நாடற்றவர்களாக ஆக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு புதிய நடைமுறையை அரசாங்கம் கொண்டு வந்ததாகவே நமக்குத் தோன்றுகிறது. 

வழக்கம் போல அன்றைய நமது தலைவர்கள் இதனைக் கண்டு கொள்ளவில்லை! ஆனால் இன்று நாம் அப்படி இருக்க முடியாது. நாம் விழிப்புடன் இருந்தால் தான் நமது இன்றைய தலைவர்களும் சுறுசுறுப்பாகச் செயல் படுவார்கள்.

இறுதியாக நாம் சொல்லுவதெல்லாம்   இந்தியர்களிடையே நாடற்றவர்கள் என்னும் சொல்லே இருக்கக் கூடாது! நாம் அனைவருமே இந்நாட்டுக் குடி மக்கள்!


No comments:

Post a Comment