Monday 11 June 2018

இந்தியர் விவகாரம்...(4)


அடுத்து நாம் இந்திய விவகாரக் குழுவின் கவனத்திற்குக் கொணடு  வருவது:

பொருளாதாரம் -  கடந்த காலங்களில் இந்தியர்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக கோடிக்கணக்கில் செலவிடப்பட்டாதாகச் சொல்லப் படுகின்றது.  இந்திய அரசியல்வாதிகளுக்கெல்லாம் செலவு செய்தவைகளை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.  அது பாரிசான் அரசாங்கத்தின் கொள்கை என்பதால் இப்போது அது பற்றி பேசுவதில் பயனில்லை.

இப்போது உண்மையாகவே தொழில் செய்பவர்களுக்குக்  கடன் உதவி செய்ய பக்காத்தான் அரசாங்கம் முன் வரவேண்டும். அதுவும் சிறு தொழில் செய்பவர்கள் பெரிய அளவில் தங்களது தொழில்களைக் கொண்டு செல்ல  முடியவில்லை. முந்தைய அரசாங்கத்தில் பெருந்தொழில் செய்பவர்களே எல்லாப் பணத்தையும் கபளீகரம் செய்ததால்  சிறு தொழில்கள் செய்பவர்களுக்கு எந்த நிதியும் பயனிக்கவில்லை. இனி இது ஏட்டளவில் இருக்கக் கூடாது.  செயல் அளவில் கொண்டு செல்லுவது அரசின் கடமை.

நம்மிடையே சிறு சிறு வியாபாரிகள் நிறையவே இருக்கின்றனர். அவர்களுக்குப் போதுமான நிதி உதவிகள் கிடைக்காததால் அவர்கள் தொடர்ந்து தங்களது தொழில்களை மேம்படுத்த முடியவில்லை. வங்கிகளும் இந்தியர்கள் என்றால் கடன் உதவி செய்வதில்லை.  வங்கிகள் எல்லாக் காலங்களிலும் இந்தியர்களுக்கு  எதிரான போக்கையே கடைப்பிடிக்கின்றன என்பது ஒன்றும் புதிதல்ல.

எப்படி இருப்பினும் இன்றைய பக்காத்தான் அரசாங்கம் இந்த விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பது தான் நமது கோரிக்கை.

நாம் எல்லாக் காலங்களிலும் நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு விழுக்காடு அளவிலேயே இருந்து கொண்டு வருகிறோம். முந்தைய அரசாங்கம் எவ்வளவோ முயற்சி செய்தும் (அப்படித்தான் சொன்னார்கள் நாங்களும் நம்பினோம்!) எந்த வித முன்னேற்றமும் இல்லை. அந்த ஒரு விழுக்காடும் கூட வட இந்தியர்கள் கையில் இருப்பாதாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் மீது நமக்கு எந்தப் பொறாமையும் வேண்டாம்.  நம்முடைய தேவைகள் எல்லாம் சிறு தொழில் செய்யும் நம்மவர்கள் தங்களின் தொழிலின் விரிவாக்கத்திற்கு அரசாங்கம் உதவ வேண்டும் என்னும் கோரிக்கை மட்டும் தான்.   

அடுத்த பொதுத் தேர்தல் வரும் போது நம் நாட்டில் நம்முடைய பொருளாதார விழுக்காடு குறைந்த பட்சம் மூன்று விழுக்காடாக உயர வேண்டும் என்கிற இலக்கோடு அரசாங்கம் களத்தில் இறங்க வேண்டும். தொழில் செய்யும் தகுதியானவர்களுக்கு இது நாள் வரை எந்த உதவியும் கிடைக்கவில்லை. இனி மேலாவது அது கிடைக்கும் என நன்புவோம்.

பொருளாதாரம் மட்டுமே நமக்கு மரியாதை தரும்! உழப்போம்! வெற்றி பெறுவோம்!

                                                                                                                     

No comments:

Post a Comment