Thursday 14 June 2018

மீண்டும்....! மீண்டும்......!


மீண்டும் மீண்டும் இந்தப் பிரச்சனையை நான் ஞாபகப்படுத்த வேண்டியவனாக இருக்கிறேன்.  பதினான்காவது பொதுத் தேர்தலுக்கு எந்த அளவுக்கு முயற்சி எடுத்து பக்காத்தானை ஆட்சியில் அமர்த்தினோமோ அதே முயற்சியை இப்போது நாம் எடுக்க வேண்டும்.

இந்தியர்களின் பிரச்சனைகள் அதிகம். 

தேசிய அளவில் முக்கியமான பிரச்சனைகள் உள்ளன. அதே சமயத்தில் ஒவ்வொரு வட்டாரங்களிலும்,  மாவட்டங்களிலும் இருக்கின்ற பிரச்சனைகளும் அதிகம். காரணம் காலங்காலமாக நாம் ஆளுங்கட்சியான, நம்முடைய தலையாக விளங்கிய ம.இ.கா.  மூலம் ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறோம். திருடர்களைப் பதவியில் அமர்த்திவிட்டு திரும்பத் திரும்ப புலம்புகிற சமூகமாக நாம் இது நாள் வரை இருந்து வந்திருக்கிறோம்.

இது இனி நடக்கக் கூடாது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதனால் தான் நான் மீண்டும் மீண்டும் இந்தப் பிரச்சனைகளை எழுப்பிக் கொண்டிருக்கிறேன்.

இப்போது நமக்கு நல்ல நேரம்.  இந்த நல்ல நேரம் இருக்கும் போதே காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டும்.  எந்த அரசியல்வாதியும் எல்லாக் காலத்திலும் நீதியும் நேர்மையோடும் இருப்பான் என்று சொல்ல முடியாது. தலைமை நிலை தடுமாறினால் கீழே உள்ளவனும் தடுமாறி விடுவான்! அவனைத் தடுமாற வைக்க தீய சக்திகள் நிறையவே உண்டு.

இப்போது பக்காத்தான் அரசு நமக்குச் செய்ய வேண்டிய தேசிய அளவில் உள்ள பிரச்சனைகள் என்றால்: தமிழ்ப்பள்ளிகள் முழு நேர அரசாங்க பள்ளிகளாக மாற்றியமைக்கப்பட வேண்டும். தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் மொழியின் நிலையை இன்னும் உறுதியாக்கப்பட வேண்டும். அத்தோடு தேசிய மொழி, ஆங்கிலம். கல்வியாளர்களின் உதவியோடு அனைத்தும் அணுகப்பட வேண்டும்.

குடியுரிமை, அடையாள அட்டை, நாடற்றவர்கள் போன்ற பிரச்சனைகளில் உடனடி கவனம் செலுத்தி  இந்தப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதனை நீட்டிக் கொண்டே போகக் கூடாது.

மற்றபடி நிலப் பிரச்சனைகள், நிலப் பட்டாக்கள், வீடுகள் கட்டுவதற்கு முன்னரே வங்கிகளுக்குப் பணம் கட்டிக் கொண்டிருப்பது - இப்படிப் பல பிரச்சனைகளை இந்தியர்கள் எதிர் நோக்குகின்றனர். இவைகள் எல்லாம் திட்டம் போட்டே இந்தியர்களை ஏமாற்றும் வேலை.  இவை அனைத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளி தேவை. இவைகளில்  ஏமாறுபவர்கள் இந்தியர்கள் அதே சமயத்தில் ஏமாற்றுபவர்களும் இந்தியர்கள். இவர்கள் அனைவரும் நல்ல அரசியல் தொடர்புடையவர்கள். இனி இது போன்ற வேலைகள் தொடரக் கூடாது என்பது தான் நமது வேண்டு கோள்.

அதனால் மீண்டும் மீண்டும் சொல்லுகிறேன். தேசிய அளவில் உள்ள வேலைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாகக் கையில் எடுக்க வேண்டும். அதே சமயத்தில் நிலப்பட்டாக்கள், நிலப் பிரச்சனைகள் போன்றவைகளைச் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனடித் தீர்வுகளுக்கான வேலைகளைச் செய்ய வேண்டும். 

இதுவே எனது வேண்டு கோள்.  வெற்றி பெறுவோம்!

No comments:

Post a Comment