Tuesday 12 June 2018

இந்தியர் விவகாரம்.........(5)


இந்திய விவகாரக் குழுவிற்கு கடைசியாக நாம் கொடுக்கும் ஆலோசனைகளில் இவைகளும் அடங்கும்.

பொது:  சில பொதுவான பிரச்சனைகள். ஆனாலும் முக்கியம் வாய்ந்த பிரச்சனைகள். அலட்சியம் காட்ட முடியாத  பிரச்சனைகள்.

பினாங்கு, சிலாங்கூர் மாநிலங்களில் தேர்தலுக்கு முன்னர் ஏற்படுத்திய மாற்றம்  இது என்று சொல்லப்படுகிறது. இந்த இரு மாநிலங்களிலும் சாலை அறிவிப்புப் பலகைகளில் மலாய், சீன மொழிகளோடு தமிழும் எழுதப்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர். அதனை இப்போது பக்காத்தான் ஆட்சியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொண்டு வர வேண்டும்.

வங்கிகளின் ATM இயந்திரங்களில் தமிழ் மொழி பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். இனியும் சாக்குப்போக்குகள் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அல்லது வங்கிகள் இந்தியர்கள் பணம் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்ல வேண்டும். இதற்கு இப்போதே ஒரு முடிவு கட்ட வேண்டும். இனி மேலும் இது ஒரு பிரச்சனையாக இருக்கக் கூடாது.

தீபாவளி பெருநாளுக்கு இரண்டு நாள்கள் விடுமுறை கொடுக்க வேண்டும். தைப்பூசத்திற்கு அனைத்து மாநிலங்களுக்கும் விடுமுறை கொடுக்க வேண்டும்.

தமிழ்ப்பள்ளிகள் இனி "அரசாங்க பகுதி உதவி பெற்ற பள்ளிகள்"  என்று இனிமேல் எந்த முத்திரையும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுவது இந்தக் குழுவின் கடமை. அத்தோடு தமிழ்ப்பள்ளிகள் இனி தனியார் நிலங்களில் இருப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

இவைகள் பொதுவான பிரச்சனைகள். ஆனால் மாநிலந்தோரும், மாவட்டம் தோரும் ஆங்காங்கே பல பிரச்சனைகள் உள்ளன. அதுவும் குறிப்பாக இந்தியர்கள் வாழும் சிறு சிறு கிராமங்களில் உள்ள வீடுகளுக்குப் பட்டா இல்லை என்கிற பிரச்சனை நீண்ட நாள் பிரச்சனை.  அந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க ம.இ.கா.வும் சரி, பாரிசான் அரசாங்கமும் சரி அது தேவை இல்லாதப் பிரச்சனை என்பதாகத்தான் இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். இவைகளுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இன்னும் சில கிராமங்களில் தண்ணிர், மின்சாரம்  இவைகளெல்லாம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை.

எனக்குத் தெரிந்தவைகளைப் பற்றி மட்டும் இந்தியர் விவகாரக் குழுவினருக்கு முக்கியமான, அவசரமான  செய்திகளாக வெளியிட்டிருக்கிறேன். தீர்த்து வைப்பது உங்களின் கடமை.

நல்லதே நடக்கட்டும்!

No comments:

Post a Comment