Saturday 14 May 2022

நான் ஏழையல்ல!

 

நீங்கள், இந்த நிமிடத்தில், எப்படியும் இருக்கலாம். நம்மில் பெரும்பாலோர் ஏழ்மை நிலையிலிருந்து தான் ஒரு படி மேலே வந்திருக்கிறோம். இதில் ஒன்றும் தப்பில்லை. இப்போது நமது பிரச்சனை எல்லாம் அந்த முதல் படியைவிட்டு அடுத்த படிக்குப் போகத் தயாராக இல்லை!

இன்று உலகில் உள்ள எந்தப் பணக்காரர்களை அல்லது இலட்சாதிபதிகளை அல்லது அதற்குமேலே கோடிஸ்வரர்களை அல்லது அதற்கு மேலே மேலே யாராக இருந்தாலும் அனைவருமே ஏழ்மை நிலையிலிருந்து வந்தவர்கள் தான். அந்தக் குடும்பங்களின் முதல் பணக்காரர் ஏழ்மை என்று கூட சொல்ல முடியாத மிக அடிமட்டத்திலிருந்து வந்தவராகத்தான் இருக்க முடியும். குப்பைத் தொட்டியிலிருந்து எடுத்து சாப்பிட்டவர்களும் உண்டு.

நாம் ஏன் ஒரு கட்டத்துக்கு மேல் வளராமல் அப்படியே நின்று விடுகிறோம்? இருப்பது போதும் என்கிற மனநிறைவு நமக்கு ஏற்பட்டுவிடுகிறது! எந்த வம்புதும்பும் வேண்டாம் என்கிற மனநிலைக்கு வந்துவிடுகிறோம்.

தீர்க்க முடியாத வியாதி. பணம் இல்லை. மக்களை நாட வேண்டியுள்ளது. பிள்ளைகளுக்கு உயர் கல்வி கொடுக்க முடியவில்லை. பணம் இல்லை. பிள்ளைகள் படித்தது போதும் என்கிற மனநிலைக்கு வந்து விடுகிறோம். அவர்களை ஏதாவது ஒரு வேலைக்கு அனுப்பிவிடுகிறோம்.

இந்த மனத் தடைகளிலிருந்து நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.  இன்னும் கொஞ்சம் அதிகம் பணம் சம்பாதித்து இன்னும் கொஞ்சம் அதிக வசதியாக வாழலாமே. யார் வேண்டாம் என்று சொன்னார்கள்?  யார் உங்களுக்குத் தடையாக இருக்கிறார்கள்?

முதலில் "நான் ஏழை!" என்கிற மனத்தடையை அகற்ற வேண்டும்.  தமிழர்களின் மிகப்பெரிய தடை  இந்த ஏழை என்கிற எண்ணம் தான். நம் மனதில் மிக ஆழமாக  வேருன்றிவிட்டது.  அதிலிருந்து  நாம் விடுபட வேண்டும். அது ஒன்றும் கம்பசூத்திரம் அல்ல!

.மிக எளிமையாக "நான் பணக்காரன்!" என்று சொல்லிவிட்டுப் போங்கள்! அவ்வளவு தான்! அந்த எண்ணத்தையே வளர்த்துக் கொள்ளுங்கள். இப்போது கையில் காசில்லை! அதனால் என்ன?  நான் பணக்காரன் தான்! ஏதோ இந்த நிமிடம் கையில் காசில்லையே தவிர அதற்காக காலாகாலமும் கையில் காசு இல்லாமலா போய்விடும்.? அடுத்த நிமிடமே வரலாம். அடுத்த மாதமே வரலாம்.எந்த நேரம் வேண்டுமானாலும் வரலாம்.

அதற்காக நம்மை நாமே ஏன் "ஏழை" என்று தாழ்த்திக்கொள்ள வேண்டும்? நாம் இரண்டு மூன்று தலைமுறையாக "நாம் ஏழைகள்" என்றே சொல்லி வளர்க்கப்பட்டிருக்கிறோம். அதை மாற்றுவது கொஞ்சம் கடினம் தான். ஆனால் மாற்றிக் கொள்ளலாம். நமது பிள்ளைகளுக்கும் அந்த மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். மனதில் மிக ஊறிப்போன அந்த ஏழையை மனதிலிருந்து அகற்றி பணக்காரன் என்பதை உள்ளே புகுத்த வேண்டும்.

நாம் பணக்காரன் என்பதால் உடனே பணக்காரன் ஆகிவிட முடியுமா? என்கிற கேள்வி எழத்தான் செய்யும். முடியாது என்பது உண்மை தான். ஆனால் ஏழை என்கிற வார்த்தை இரண்டு மூன்று தலைமுறையாக நம்மை ஏழையாகவே வைத்திருக்கிறதே! ஏழை என்பது முடியும் போது பணக்காரன்  என்பதும் முடியும் தானே! நாம் வெளியே சென்று "நான் பணக்காரன்!" என்று பறை அடித்தா சொல்லப் போகிறோம்? இல்லை! நம் மனத்தில் அதனை, அந்த எண்ணத்தை, வளர்த்துக்கொள்ளப் போகிறோம். அப்படி ஓர் எண்ணத்தை மனதில் விதைக்கும் போது நம் மனதிலும் மாற்றங்கள் ஏற்படும். நம் வெளி உலகத்திலும் மாற்றங்கள் ஏற்படும்.

மீண்டும் மீண்டும் சொல்லுகிறேன். நாம் ஏழை சமுதாயம் அல்ல. நான் ஏழையல்ல! உழைப்பில் பெருமைபடுகிற சமுதாயம். நம்மிடம் உழைப்பு இருக்கிறது. உழைக்கும் ஆற்றல் இருக்கிறது.  அப்புறம் ஏன் நாம் ஏழை சமுதாயம்? நான் ஏன் ஏழை?

நாம் வளமான சமுதாயமாக வாழ்வோம்!

No comments:

Post a Comment