Sunday 15 May 2022

ஏழ்மை என்பது சாபமல்ல!


 ஏழ்மை என்பது சாபமல்ல. அது மாற்றக்கூடியது தான்.

ஏழ்மையை யார் ஒழிப்பது?  அரசாங்கத்தால் மட்டும் தான் முடியும் என்கிறார்கள். ஆனால் அரசாங்கம், தனது வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டுமானால், பெரும்பான்மையினரின் ஏழ்மையைத்தான் ஒழிக்க நினைக்கும். நாம் அதைத்தான் பார்க்கிறோம். நமது தலைவர்களால் அரசாங்க உதவியுடன்,  அதனைச் செய்ய முடியும் என்றால் தலைவர்கள் அவர்களின் வறுமையைப் போக்கத்தான் முதலிடம் கொடுக்கிறார்கள் என்பதையும் பார்த்துவிட்டோம், இப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இவர்களும் கீழ்மட்டத்திலிருந்து அங்கே  போனவர்கள் தான். அவர்களை நொந்து கொள்வதில் புண்ணியமில்லை.  அவர்கள் வயிற்றுக்குத் தான் அவர்கள்  முதல் இடம் கொடுப்பார்கள்! அவர்கள் பின்னணியைப் பாருங்கள். எல்லாம் சோற்றுக்கு லாட்டரி அடித்தவர்கள் தான்! நல்ல கல்வியையும் பெற்றவர்கள் இல்லை!

ஆக யாரும் நமக்கு உதவும் நிலையில் இல்லை என்பது தான் நமது முதல் புரிதலாக இருக்க வேண்டும்.

இனி அடுத்து யார்? வேறு யாரும் இல்லை!  நம்மைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? ஆமாம், நமது முன்னேற்றத்தில் நம்மைத்தவிர வேறு யாருக்கு அக்கறை? நமது ஏழ்மையைப் போக்க நாம் தான் அந்தப் பொறுப்பை  ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நம்மைச் சுற்றிப் பாருங்கள்  முன்னேறியவர்கள், பணம் படைத்தவர்கள் எல்லாரையும் பாருங்கள். அவர்கள் என்ன வானத்திலிருந்து குதித்துவர்களா? ஒன்றுமில்லை! அவர்களும் ஏழ்மையிலிருந்து அடித்துப்பிடித்து தங்களை முன்னேற்றிக் கொண்டவர்கள் தான்.

ஆனால் நம்முடைய பிரச்சனை என்பது சிக்கலானது. யாரோ வந்து நமது கைகளைப் பிடித்து நம்மைத் தூக்கி விடுவார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். அப்படியெல்லாம் யாரும் வரப்போவதில்லை! அந்த அதிசயம் எல்லாம் தேர்தல் காலங்களில் வாய்ச்சவடாலாக வரும்! அதை நம்ப வேண்டிய அவசியம் இல்லை.

நம் கையே நமக்கு உதவி.  அது வெறுங்கை அல்ல.  முருங்கை போல முந்நூறு வேலைகளை அது செய்யும். முனைப்புக் காட்டினால்  நம்மை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்லும். அத்துணை ஆற்றல் வாய்ந்தது நமது கைகளும் நமது கால்களும்.

ஆனாலும் யாரோ வருவார், யாரோ வருவார், யாரோ வந்து நம்மாக் காப்பாற்றுவார் என்று யாரையோ எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்! இது நாள் வரை வரவில்லை! இனி மேலும் வரப்போவதில்லை!

யாரும் நமக்கு வேண்டாம்.  நாம் தின்றுவிட்டு ஏப்பம் விடும் இனம் அல்ல. மற்றவர்களிடம் இல்லாத உழைப்பு நம்மிடம் உள்ளது. இல்லாமலா இந்த நாட்டை வளமான நாடாக உருவாக்கினோம்?  உழைப்பில் போட்டிப் போட நம்மை அடித்துக் கொள்ள ஆளில்லை.

தேவை எல்லாம் நமது உழைப்பின் ஒரு பகுதியை நமது குடும்ப வளர்ச்சிக்காக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் ஏழை என்று சொல்வதை வெறுக்க வேண்டும். நாம் தன்மானமிக்கவர்கள்.  உழைப்பதில் யாருக்கும் நாம்  சளைத்தவர்கள் அல்ல. உழைக்கும் சமுதாயம் என்றுமே தோற்றதில்லை!

ஏழ்மை சாபமல்ல! சாதிக்க வைப்பது!

No comments:

Post a Comment