Sunday 8 May 2022

நாம் மொடாக்குடியர்களா?


நமது நாட்டில் ஒரு கணக்கெடுப்பு எடுத்தால்  யார் பெரிய குடிகாரர்கள் என முன் நிறுத்துபப்டுவர்? 

சந்தேகமே வேண்டாம். நாம் தான் பெரிய குடிகாரர்கள் என்பதற்கான ஆதாரங்களைப் பலர் கொண்டு வருவார்கள்! 

ஆனால் உண்மை அதுவல்ல! மதுபானத் தொழில் நம்மை நம்பினால் அந்தத் தொழிலகங்கள்  சீக்கிரம்  இழுத்து மூடிவிட்டுப் போக வேண்டிய சூழல் தான் வரும்! நம்மைவிட மகாக் குடிகாரர்கள் எல்லாம் நாட்டில் இருக்கிறார்கள்! 

ஒரு வித்தியாசம் என்னவென்றால் குடித்துவிட்டு நடு ரோட்டில் கும்மாளம் அடிப்பது நம்மிடையே அதிகம்! சீனர்கள் குடித்தால் வெளியே தெரிவதில்லை. சீனன் ஒரு நாள் பூராவும் வேலை செய்கிறான். இரவில் குடிக்கிறான் போய் படுத்துவிடுகிறான். நம்ம ஆள் வேலைக்குப் போவதற்கு முன்பே குடிக்க ஆரம்பித்துவிடுகிறான்! இரவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறான்! சண்டை, சச்சரவு என்பதெல்லாம் தனது வாழ்க்கையில் ஒரு பகுதி என் நினைக்கிறான்.

இந்நாட்டில் நாம் வசதியாக வாழ முடியாததற்கு யார் காரணம்? யாரும் காரணம் அல்ல. நமது குடிப்பழக்கமே நம்மை மேலே முன்னேற விடாமல் தடுத்து விடுகிறது!

கொரொனா தொற்று பரவி இருந்த காலத்தில் கூட நமது குடிகார நண்பர்கள் குடிப்பதைக் குறைத்துக் கொள்ளவில்லை! அவர்களுக்கு வேலை இல்லை தான், அவர்கள் வீட்டில் சாப்பாடு இல்லை தான் ஆனாலும் அவர்கள் எந்த வகையிலும் குடியைக் குறைத்துக் கொள்ளவில்லை! 

நம் வீட்டுப் பெண்கள் தான் பல வகைகளில் சிறு சிறு தொழில்களில் ஈடுபட்டு, ஆங்காங்கே வேலை செய்து கொண்டு  குடும்பத்தின் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர்.  குடிகாரக் கணவர்கள் கொஞ்சம் கை கொடுத்திருந்தால்  அந்தக் குடும்பங்கள் நல்லதொரு நிலைக்கு வந்திருக்க முடியும்.

நமது சமுதாயம் சீரழிவதற்கு இந்தக் குடிப்பழக்கம் தான் தலையாய காரணம். குடிப்பழக்கத்தினால் கையில் பணம் இருப்பு இல்லை. நல்ல சாப்பாட்டுக்கு வழியில்லை. பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை.

நம் சமுதாயத்தில் குடிப்பழக்கம் என்பது கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை பரவி நிற்கின்றது. மேல்மட்டத்தில் உள்ளவனுக்குக் கையில் பணம் இருப்பதால் அவன் குடும்பம் தப்பித்து விடுகிறது. கீழ்மட்டத்தில் உள்ளவனது குடும்பம்  தடுமாறுகிறது.

கடைசியில் ஒரு புள்ளியில் தான் வந்து நிற்கிறோம். முதல் தேவை பணம்.  உன் குடும்பத்திற்கு அது தேவை. அந்த தேவையை முதலில் பூர்த்தி  செய். குடும்பம் வழக்கம் போல் இயங்கும். உன்னை யாரும் எதிர்ப்பார்க்கப் போவதில்லை. நீ குடி! செத்து மடி!

No comments:

Post a Comment