Wednesday 25 May 2022

சம்பளம் அனைவருக்கும் வேண்டும்!

 

எந்த நிறுவனங்களில் வேலை செய்தாலும் வேலை செய்பவர்களுக்குச் சம்பளம் கொடுக்க வேண்டும் என்பது சட்டம்.  அதனை எந்த ஒரு முதலாளியாலும் தவிர்க்க முடியாது. ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்கள் அது பற்றி நாம் பேசவில்லை.

ஆனால் கோரொனா தொற்று சமீபத்தில் வந்த நேரத்தில் நம்மால் என்ன செய்ய முடிந்தது? வேலை இல்லை. நிறுவனங்கள் இயங்கவில்லை. வீட்டிலேயே அடைப்பட்டுக்  கிடந்த நேரம். சாப்பாட்டுக்கு வழியில்லை. அந்த நேரத்தில் உதவிகள் கிடைத்தன. பலர் மனமுவந்து பல வழிகளில் மக்களின் பசி தீர்த்தனர்.

அதிலும் குறிப்பாக நமது இளைஞர்கள் பலர் பலருடைய பசி தீர்த்தனர். அதன் பின்னர் தான் அரசாங்கம் விழிப்படைந்தது. உதவி என்று வரும்போது நமது இளைஞர்கள் தான் முன்னணியில் நிற்கின்றனர். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

அரசாஙத்தில் வேலை செய்பவர்கள் பெரிய பிரச்சனைகளை எதிநோக்கவில்லை. அவர்களுக்கு எப்படியோ மாதம் முடிந்ததும் முழு சம்பளமும் கிடைத்துவிடுகிறது. அதுவே பெரிய பாக்கியம். கையில் பணம் இருந்தால் எப்படியோ சாப்பாட்டுக்கு ஒரு வழி பண்ணிவிடலாம். பணம் இல்லாதவர்கள்...?

இதற்கு அரசாங்கம் தான் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு ஒரு வழியைக் காட்ட வேண்டும். அவர்களுக்கு முழு சம்பளம் இல்லையென்றாலும் பாதி சம்பளமாவது கிடைக்க வழிவகைகளைச் செய்ய வேண்டும். நிறுவனங்களில் வேலை செய்ய ஆளில்லை என்றால்  அங்கு எந்த உற்பத்தியும் இல்லை.  பல நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. அங்கு வேலை செய்தவர்களின் கதி என்ன? அதனை பின்னர் பார்ப்போம்.

தொற்று நோய் காலத்தில் நிறுவனங்களில் வேலை செய்தவர்களின் வாழ்வாதாரத்திற்கு அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும். அவர்களின் குடும்பங்கள் வாழ குறைந்தபட்சம் அவர்களுக்கு பாதி சம்பளமாவது கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பாதி சம்பளம் என்றாலே ஏதோ ஒரு பாதி வயிறாவது நிறையுமே! அதைத்தான் நாம் வலியுறுத்துகிறோம். அரசாங்க பணியாளர்களுக்கு முழு சம்பளம் என்பதில் மகிழ்ச்சியே! தனியார் பணியாளர்களுக்கும் குறைந்தபட்சம் பாதி சம்பளமாவது கிடைத்தால் அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும்.

இந்தப் பிரச்சனையை இப்போது ஏன் நாம் கொண்டு வருகின்றோம் என்றால் வரும் மாதங்களில் உலகளவிலும்  நமது நாட்டிலும் கூட பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். விலைவாசி ஒரு பக்கம் என்றாலும் பொருள்கள் தட்டுப்பாடு என்பது இன்னொரு  பக்கம்.  இவைகளை எல்லாம் களைய அரசாங்கம் முன்னேற்பாடுகளைச் செய்யும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். முக்கியமான உணவு பொருள்கள், மருந்து பொருள்கள் இவைகளின் விலையை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும். கடைசி நிமிட ஏற்பாடுகள் எதுவும் பயன் தராது.

அதே சமயத்தில் மக்களின் வாங்கும் சக்தியையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களின் சம்பாத்தியத்தையும் உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா தொற்றை சமாளிக்கத் தெரிந்த நமக்கு இதனையும் சமாளிக்க  முடியும் என்பதை நாம்  நம்புவோம். இதுவும் கடந்து போகும்! கடந்து போகும் போது கற்களும் முட்களும் இருக்கத்தான் செய்யும். தடைகள் இருக்கத்தான் செய்யும்! 

முன்னேற்றம் என்பது அனைத்தையும் உடைத்துக் கொண்டு வெளியே வருவது தான்!

No comments:

Post a Comment