Monday 23 May 2022

கோழி என்ன அவ்வளவு முக்கியமா?

 

கோழி விலை ஏறிவிட்டது என்று சொல்லும் போது அது பல்வேறு சிக்கல்களையும் ஏற்படுத்திவிடுகிறது.

நாம் வீட்டுக்கு வாங்கும் போது நாமே எதிர்ப்பார்க்காத அளவுக்கு அதன் விலை ஏற்றம் கண்டிருப்பதைப் பார்க்கிறோம். பொதுவாக ஒரு முழுக் கோழியை வாங்கினால் கூட சுமார் பத்து வெள்ளி இருந்தால் போதும். வாங்கிவிடலாம். அது அப்போது! இப்போது பத்து வெள்ளியெல்லாம்  எடுபடவில்லை! அது இருபது வெள்ளிக்கு எகிறிவிட்டது!

இந்த நிலையில் பார்த்தால் உணவகங்களை நடுத்துபவர்கள் என்ன செய்வார்கள்? கோழி இல்லாத உணவகங்களே கிடையாது. உணவகங்களுக்கு கோழி தான் முக்கிய உணவு. அதுவும் நமது நாட்டில் நேரங்காலம் இல்லாமல் சாப்பிடப்படுகின்ற  உணவு கோழி தான்.எப்படிப் பார்த்தாலும் உணவகங்களுக்கு சரியான அடி என்றே சொல்ல வேண்டும். அதனால் தான் இத்தனை கூப்பாடு, கூச்சல்!

யாரைக் குறை சொல்லுவது?  இப்போது நடப்பது ஒரு தற்காலிக அரசாங்கம். யாரும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஒருவருக்கொருவர் குற்றஞ்சாட்டிக் கொள்ள வேண்டியது தான்!

ஆனால் இந்த கோழி பிரச்சனையை விட வேறொரு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது  என்பதை நாம் மறந்துவிட்டோம்.

குழந்தைகளுக்கான பால்மாவு விலை ஏற்றம் என்ன நிலையில் இருக்கிறது  என்பதை யோசிக்க வேண்டும். குழந்தைகளுக்கு மட்டும் அல்ல பெரியவர்களும் பால்மாவுகளை பயன்படுத்துகின்றனர்.  ஆனால் குழந்தைகளின் பால்மாவு விலையேறினால் பெற்றோர்களின் நிலை என்ன? எத்தனை ஏழை  பெற்றோர்களால் அதன் விலையேற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியும் என்பது கேள்விக்குறியே.

பால்மாவு என்பது மிகவும் அத்தியாவசியமான குழந்தைகளின் உணவு. அதன் விலையேற்றம் என்பது கொடுமையிலும் கொடுமை. அதன் விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். நாங்கள் வாடிக்கையாக வாங்கும் பால்மாவு விலை பதினாறு வெள்ளி. அது இப்போது இருபது வெள்ளிக்கு எகிறிவிட்டது! இன்னும் வரும் மாதங்களில் என்ன ஆகும் என்பதை நினைத்தால் தலை சுற்றுகிறது!

அரசாங்கம் பால்மாவு விலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இது தான் சரியான நேரம் என்று நினைத்து வியாபாரிகள் விலைகளை ஏற்றக் கூடாது என்பதே நமது வேண்டுகோள்.

இன்று உலகத்திற்கே ஒரு சிக்கலான நேரம்.  நமது நாட்டுக்கும் சிக்கல் தான். எல்லாம் ஒன்று கூடி தான் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும். எந்தப் பிரச்சனையும் எழாமல் அரசாங்கம்  கவனம் செலுத்த வேண்டும்.

கோழியை விட பால்மாவு இன்னும் அத்தியாவசியம் என்பதை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்!

No comments:

Post a Comment