Monday 30 May 2022

தாதியர் பற்றாக்குறையா?

 

சில விஷயங்கள் நம்மால் நம்பத்தான் முடியவில்லை. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.

மருத்துவமனைகளுக்குப் போனால் தாதியர்கள் நிரம்பி வழிகின்றனர். அது தான் நமது அனுபவம். வெளியே இருந்து பார்க்கும் போது நிரம்பி வழிகின்றனர்.. உள்ளே புகுந்து பார்த்தால் வறட்சி நிலவுவதாக மருத்துவ உலகம் சொல்லுகிறது!

தனியார் மருத்துமனைகள் குறிப்பிட்ட சில துறைகளில் பயிற்சி பெற்ற தாதியர்கள் இல்லை என்பதாகவும் அவர்களை வெளி நாடுகளிலிருந்து தருவிக்க வேண்டுமென்றும்  கூறி வருகின்றன. அரசாங்கம் வங்காளதேசிகளுக்கு முதன்மை இடம் கொடுப்பதால்  அந்த நாட்டிலிருந்து கூட தாதியர்களை வரவழைப்பதில்  எந்தத் தவறுமில்லை. தேவை எல்லாம் தகுதியான தாதியர்கள். அவ்வளவு தான்! வங்காளதேசிகளைச் சோறு போட்டு வளர்ப்பவர்களே நமது நாடு தானே! அதனால் இதனையும் செய்யலாம்!

ஆனால் அதிர்ச்சி செய்தி என்னவெனில்  ஜொகூர் மாநிலத்திற்கு மட்டும் சுமார் 18,000 தாதியர்கள் தேவைப்படுவதாக  அம்மாநில சுகாதாரத் துறை  கூறுகிறது!   காரணத்தை ஆராயும் போது  சிங்கப்பூர் மருத்துவமனைகள் ஜொகூர் மாநில தாதியர்களைக் கபளீகரம் செய்துவிடுவதாகத் தெரிய வருகிறது!  ஒரே காரணம் தான். சிங்கப்பூரில் தாதியர்களுக்கான சம்பளம் என்பது மலேசியாவை விட அதிகம்!  அதனால் நமது தாதியர்கள் அங்கு வேலை செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். தாதியர்கள் மட்டும் அல்ல. பொதுவாகவே எல்லாத் துறைகளிலும் சிங்கப்பூரில் சம்பளம் அதிகமாகவே மலேசியர்கள்  பெறுகின்றனர்.

சிங்கப்பூர் மட்டும் அல்ல. அதனைத் தவிர்த்து மற்ற வெளிநாடுகளிலும்  நமது நாட்டைச் சேர்ந்த தாதியர்களுக்கு நல்ல வாய்ப்புக்களும், சம்பளமும் அதிகம் கிடைப்பதால் பலர் வெளிநாடுகளுக்குப் பறந்து விடுகின்றனர்! அதில் ஒன்றும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை!  எப்படிப் பார்த்தாலும் எல்லாவற்றுக்கும் வருமானம் தான் அடிப்படை. குறைவான சம்பளத்தில் நாய்படாதபாடு படுவதைவிட  வெளிநாடுகளுக்குப் போய் அதிகம் சம்பாதித்து தங்களது பணப்பிரச்சனையைத் தீர்க்க நினைப்பது சரியான முடிவு தான். 

இது எல்லா நாடுகளிலும் நடப்பது தான்.  அதிசயம் ஒன்றுமில்லை. நமது தாதியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வேலைப் பார்ப்பது  என்பது சம்பளம் மட்டும் தான் முக்கிய காரணம்.   பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஒரே வழி தான் உண்டு. சம்பளத்தை அதிகரிக்க வேண்டும். தகுதியானவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்க வேண்டும். உழைப்பவர்கள் பதவி உயர்வை எதிர்பார்க்கத்தான் செய்வார்கள். அது ஒன்றும் குற்றமில்லை. பதவி உயர்வு வரும் போது தகுதி அடிப்படையில் கொடுத்தால் பிரச்சனைகள் எழ வாய்ப்பில்லை.

மேலே நான் சொன்னது ஜொகூர் மாநிலம்  மட்டும் தான். மலேசிய அளவில் தாதியர் பற்றாக்குறை  நிலவரம்  தெரியவில்லை!  சிங்கப்பூர் அருகிலேயே ஜொகூர் இருப்பதால் பல வழிகளில் ஜொகூர் தனது திறமையான ஆள்பலத்தை இழக்கிறது என்பது கண்கூடு.

தாதியராக இருந்தாலும் சரி வேறு துறை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, ஜொகூர் தங்களது மாநிலத்தில் உள்ளவர்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் சம்பள விஷயத்தில் அவர்கள் சிங்கப்பூரைத் தான் பின்பற்ற வேண்டும். அதுவே சரியான வழி!

No comments:

Post a Comment