Tuesday 3 May 2022

இணைய மோசடி!


 இணைய மோசடி என்பது கடந்த சில வருடங்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது!  இப்போது அது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கட்டு மீறிக் கொணடே போகிறது என்பது மட்டும் உண்மை!

கடைசியாக வந்த செய்தியின்படி  சுகாதார அமைச்சின் அதிகாரி எனக் கூறிக்கொண்டு ஒரு நிறுவனத்தின் பெண் நிர்வாகி ஏமாற்றப்பட்டிருக்கிறார்!  சுமார் 1,32,900 ரிங்கிட்டை அந்தப் பெண் நிர்வாகி பறிகொடுத்திருக்கிறார்!

நாம் அதிர்ச்சி அடைவதெல்லாம் இது எப்படி நடக்கிறது என்பது  தான். படிக்காதவர்கள் ஏமாறுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு. விபரம் புரியாதவர்கள் ஏமாந்து போவதும் உண்டு.

ஆனால் சமீப காலங்களில் வருகின்ற செய்திகள் எல்லாம் அதிகம் பேர்  படித்தவர்களாக இருக்கிறார்கள்! இவர்களுமா ஏமாற வேண்டும்? தினசரி நாளிதழ்களில் படித்தாலே  போதும். வேறு எங்கும் போக வேண்டாம்.  இது போன்று செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்த செய்திகள் மூலம் நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டாமா? 

ஒன்று நமக்குப் புரிகிறது. இப்போது படித்தவர்கள் பத்திரிக்கைகள் படிப்பதில்லை.  படிக்கவில்லை என்றால் உங்களை முட்டாளுக்குவது மிக எளிது என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் கணினி பக்கம் அதிகம் நாட்டம் உள்ளவர்கள் என்றால் அங்கும் நிறைய இணைய இதழ்கள்  வருகின்றன. அதனையாவது படியுங்கள். படிப்பதில் நாட்டமில்லையென்றால் நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது!

உங்களை ஏமாற்ற நினைப்பவர்கள் என்ன வழியைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள்.  உங்கள் தொலைபேசி எண் அவர்களுக்கு எப்படியோ கிடைத்துவிட்டது. ஒரு முறை அவர்களூக்குக் கிடைத்துவிட்டால் அவர்கள் உங்களைப் பின்தொடர்ந்து கொண்டு தான் இருப்பார்கள். அதாவது அவர்கள் நோக்கம் நிறைவேறும் வரை. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, ஆண்டுக்கு ஒரு முறை என்று தொடர்ந்து கொண்டே இருப்பார்கள்! அது அவர்களது கடமை! அவர்களது முயற்சியைக் கைவிடமாட்டார்கள்! உங்கள் தொலைபேசியில் இன்று நீங்கள் பேசலாம் அடுத்தமுறை வேறு யாரும் பேசலாம். அது அவர்களுக்கு இலாபம். நீங்கள் ஏமாறமாட்டீர்கள் நாளை வயதானவர்கள் யாரும் பேசலாம். ஏமாறும் வாய்ப்புண்டு.

நீங்கள் முக்கியமாக ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அரசாங்க அலுவலகங்களிலிருந்து எந்தத் தொலைபேசி அழைப்புக்களும் வரவாய்ப்பில்லை. அறவே வாய்ப்பில்லை!காவல் துறையோ அல்லது வேறு அரசாங்கத் துறைகளோ நிச்சயமாக உங்களை அழைக்க மாட்டார்கள்.  வங்கிகளும்  அழைக்கமாட்டார்கள். வங்கிகள் அழைக்க காரணங்கள் உண்டு. ஆனால் அவர்கள் உங்கள்  வங்கிக்கணக்கு எண் போன்றவற்றைக் கேட்டால் "நான் வங்கிக்கு வருகிறேன்" என்று சொல்லிவிடுங்கள். அது நிச்சயமாக வங்கியாக இருக்க வழியில்லை!

பொதுவாக யாராக இருந்தாலும் சரி அந்த எண், இந்த எண், எந்த எண்ணாக இருந்தாலும் சரி எதையும் கொடுத்து விடாதீர்கள். ஒரு எண் அவர்களுக்குக் கிடைத்துவிட்டால் அதை வைத்தே மற்ற எண்களைக் கண்டுபிடித்து விடுவார்கள்! பலே கில்லாடி அவர்கள்!

இணைய மொசடி அதிகமாகிக் கொண்டே போகிறது! எச்சரிக்கை தேவை! ஏமாந்து விடாதீர்கள்!

No comments:

Post a Comment