Thursday 21 September 2023

தப்புக்கணக்கு வேண்டாமே!

 


மித்ராவைப் பற்றி ஏகப்பட்ட கட்டுரைகள் எழுதினாலும் மக்களில் பலர் இன்னும் நம்புவதாக இல்லை!

ஏனெனில் கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை யாரும் மறப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் அதனை மறந்து மன்னிக்கத்  தான் வேண்டும்.  காரணம் யார் திருடினார் என்பதை யாராலும் கண்டுபிடிக்காதபடி அவர்கள் பலே திருடர்களாக இருக்கிறார்கள்! அதனால் அதைப்பற்றி பேசுவதை விட்டுவிட்டு இனி நடக்கப் போவதைப் பார்ப்போம். அவர்கள் வெளிப்படையாகவே சவால் விடுபவர்களாக இருக்கிறார்கள்.  'நிருபி!  எங்கள் மேல் நடவடிக்கை எடு!' என்கிறார்கள்.

நம்மால் எதுவும் செய்ய இயலாது.  அவர்களை நாம் மறக்கத்தான் வேண்டும்.  ம.இ.கா. பிரதிநிதி ஒருவர் இப்போது தான் மித்ரா உள்ளே காலடி எடுத்து வைத்திருக்கிறார். நல்லது நடக்க பிரார்த்திப்போம்!

ஒரு பெருந்தொகையைக்  கையாளும் போது நிச்சயமாக  சபலங்கள் வரத்தான் செய்யும். சபலத்திற்கு அடிமையாகதவர் யார்?  எப்படியோ இன்றைய நிர்வாகம் அந்த சபலத்தைக் கடந்து வந்து  இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட மானியத்தை வெற்றிகரமாக கொடுத்து முடித்திருக்கிறது. அதுவே இதுவரை மித்ரா செய்யாத பெரும் சாதனை!

முடித்து வைத்ததை ஒரு சாதனை என்று ஏற்றுக்கொள்ள முடியுமா என்றால் இல்லை தான்.  எப்படியோ  இந்தியர் ஒருவர் பயன்பெறுகிறார் என்றால் நமக்கும் உடன்பாடு தான்.  இதற்கு முன்னர் மானியத்தை திருப்பி அனுப்பிவிட்டனரே  அதனால் யாருக்குப் பயன்? 

இப்போது நாம் சொல்ல வருவது என்ன?  ஆமாம், தப்புக்கணக்குப் போட வேண்டாம். என்றோ நடந்த தவற்றினை மறந்துவிட்டு  இப்போது இனி என்ன செய்யலாம் என்று யோசிப்பதே  நல்லது.

புதிய  நிர்வாகம், புதிய மனிதர்கள், புதிய திட்டங்கள், புதிய யுக்திகள் - ஆகவே நாமும் நம்மை மாற்றிக் கொள்ளுவோம். இவர்களும் உளுத்துப்போன பழைய மனிதர்களாக இருப்பார்கள்  என்று நாம் தப்புக்கணக்குப் போட வேண்டாம்.  அவர்கள் தங்களது திறனைக் காண்பிக்க வாய்ப்பு வழங்க வேண்டும்.

நடைமுறையில் என்ன நடக்கிறது? இப்போதே அவர்களை வசை பாட ஆரம்பித்து விட்டோம்! அங்கே ஊழல், இங்கே ஊழல், அங்கே குற்றம், இங்கே குற்றம் - என்று பேசும் குரல்கள் ஒலிக்கின்றன! இப்போது உள்ள சூழலில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதாகவே தோன்றுகிறது!

ஆனால் மித்ரா இது போன்ற தாக்குதல்களையெல்லாம்  தாண்டித்தான் வரவேண்டும். காரணம் கடந்தகால அனுபவங்கள் அப்படி! அவர்களும் அதனைப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும்!

மித்ராவின் வருங்காலம் சிறப்பாகவே ஒளிரும் என நம்புவோம்!

No comments:

Post a Comment