Tuesday 16 January 2024

நாட்டிற்கு விசுவாசமாக இல்லை!

 


பொதுவாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர், இன்றைய நிலையில், ஒரு தேவையற்ற அரசியல்வாதி!

அவருடைய கருத்து என்ன என்பது பற்றி யாருக்கும் கவலையில்லை. ஒரு பெரிய மனிதர், குறைந்தபட்சம் வயதில் பெரியவர்,  என்பது பற்றிக் கூட யாருக்கும் கவலையில்லை. அவர் அந்தத் தகுதியை  எப்போதோ இழந்துவிட்டார்.  எதைப் பற்றி பேசவும் அவருக்குத் தகுதி இல்லை என்கிற நிலைக்கு வந்துவிட்டார்.  நாம் தான் அவரை ஒரேடியாக இன்னும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்!

நாட்டிற்கு விசுவாசம் என்றால் அவர் என்ன சொல்ல வருகிறார்?  நான்கு, ஐந்து பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் அவர்கள் ஒவ்வொருக்கும் நானூறு, ஐனூறு கோடி ஊழல் மூலம் சொத்துக்களைச் சேர்த்து வைத்துவிடுங்கள். அதுதான்  அவர் சொல்லும் விசுவாசம்! அவரது காலத்து  மலாய் அரசியல்வாதிகளின் பின்னணியைப் பாருங்கள். மிக மிகச் சாதாரண நிலையில் இருந்தவர்கள் அனைவரும் இன்று பெரும் பெரும் கோடிஸ்வரர்கள்! இன்றும் அது தொடரத்தான் செய்கிறது.

இப்படி நாட்டின் வளத்தைச் சுரண்டி அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் கோடிஸ்வரர்களாக்குவது தான் "நாட்டுப்பற்று" என்றால் அவரே அதை வைத்துக் கொள்ளட்டும்! நமக்கு அது தேவையில்லை. நாம் உழைக்கும் சமூகம்.  உழைப்பின் பெருமை நம்மிடம் உண்டு. உழைப்பில் உயர்வோம் என்கிற உயர்ந்த நோக்கம் நம்மிடம் உண்டு.

இலஞ்சம் ஊழல் மூலம் தன்னையும் தனது குடும்பத்தையும் கோடிஸ்வரராக்கிக் கொண்ட ஓர் ஊழல் அரசியல்வாதி  இந்திய சமூகத்தை விசுவாசமற்றவர்கள் என்று கூறுவதைப் பெரிதுபடுத்த வேண்டிய  காரணம் எதுவும் இல்லை.  நாட்டு நலனைப்பற்றி சிந்திக்காத  ஓரு முன்னாள்  ஊழல் அரசியல்வாதியான டாக்டர் மகாதிர் சொல்லுகின்ற கருத்துக்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.

ஒரு வயதானவர்  என்பதால் நாம் அவரை மதிக்கிறோம்.  அது நமது பண்பாடு.  அவர் நம்மை மிதிக்கிறார் என்றால் அவர் ஒரு பண்பாடு அற்ற மனிதர். அவ்வளவு தான்!

போட்டிக்குப் போட்டி என்று சொல்லி கடும் சொற்களைப் பயன்படுத்த வேண்டாம்.  இதுவும் கடந்து போகும்!

No comments:

Post a Comment