Thursday 25 January 2024

நிறைகளைப் பார்க்கலாமே!

 எப்படியோ தைப்பூசம் ஒரு நிறைவுக்கு வந்தது.

மலேசியாவில் எத்தனையோ ஊர்களில்  தைப்பூசம் நடந்து முடிந்தது. எத்தனை ஊர்களில்  நடந்தாலும் மக்களின் கவனம் என்னவோ பத்துமலையில் நடைபெறும் தைப்பூசம் தான்.

முடிந்தவரை என்ன என்ன குறைபாடுகள் உள்ளனவோ அததனையையும் கொட்டித் தீர்த்து விட்டார்கள்! அங்கு நல்லதும் நடந்திருக்கும் கெட்டதும் நடந்திருக்கும்.  நல்லது பற்றி பேசுவதற்கு நம்மில் பலருக்கு மனசு வராது.  நாம் அப்படியே பழகிவிட்டோம்.   நமக்குப் பாராட்டுகிற பழக்கமே இல்லை. குறைகள் மட்டும் தான் நம் கண்களுக்குப் பளிச் எனத் தெரியும்.   நம் கண்கள் அப்படியே பழகிவிட்டன!

இனி ஒர் உறுதிமொழி எடுப்போம். பெரும்பாலோர் ஊடகங்கள். டிக்டாக் என்று எதனையும் விட்டு வைப்பதில்லை. அனைத்திலும் குறைபாடுகளைத் தான் கொட்டுகின்றனர்.  

என்ன தான் குறைபாடுகள் இருந்தாலும்  ஏதாவது, கொஞ்சமாவது  நல்ல காரியங்களும் இருக்கத்தான் செய்யும்.  இத்தனை ஆண்டுகளாக தலைவராக இருக்கும் டான்ஸ்ரீ நடராஜாவுக்குத்  தெரியாமலா இருக்கும்?  நல்லதும் இருக்கத்தான் செய்யும். அவைகளையும் நோண்டி எடுங்களேன்.

குறைகளைக் கண்டுபிடித்தது போதும்.  எத்தனையோ நல்ல காரியங்கள் உண்டு.  அவைகளையும் பட்டியலிட்டு  மக்களுக்குத் தெரியும்படி, மக்களின் கவனத்திற்குக் கொண்டு வாருங்கள். குறைகளைக் கண்டுபிடிக்க நிறைய வாய்ப்புகள்  உண்டு.  அது போல, அதைவிட நிறைகளையும் கண்டுபிடித்து சொல்லுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. 

நம் மக்கள் மீது  தீராத குற்றச்சாட்டு ஒன்று  நாம் குறை சொல்லுவதற்கும் குற்றச்சாட்டுக்களை அடுக்குவதற்கும்  எல்லையே கிடையாது.  நல்லதைச் செய்தாலும்  அதிலும் குற்றம் கண்டுபிடிக்கின்றனர். ஒரு சிலர் உண்மையில் நொந்து போகின்றனர்.  "என்னடா! எதனைச் செய்தாலும் குற்றம்  சொல்லுகின்றனரே!  இப்படி ஒரு சமூகமா?" என்று தலையில் அடித்துக் கொள்கின்றனர்.

ஆமாம் குற்றங்களையே கண்டுபிடித்தது போதும்.  நாட்டில்  எவ்வளவோ  நல்ல காரியங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.  நல்லது நடக்கும் போது பாராட்டுங்கள்.  குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.

பத்துமலை திருத்தலத்திலும் குறைபாடுகள் இருக்கலாம். அதனை அவர்களிடமே சுட்டிக் காட்டுங்கள். நல்லது நடக்கும் போது அதனைப் பொதுவெளியில் சுட்டிக் காட்டுங்கள்.

நிறைகளையும் பார்க்க கற்றுக் கொள்ளுங்கள்!

No comments:

Post a Comment