Monday 1 November 2021

இது தான் சரியான வழி!

மித்ரா பற்றியான செய்திகளைப் படிக்கப்  படிக்க நெஞ்சம் கொதிக்கிறது.  சராசரி மனிதர்களால் வேறு என்ன செய்ய முடியும்?

ஆனால் திருடியவன், கொள்ளையடித்தவன் எல்லாம் நிம்மதியாக கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் அவன் இன்னும் சமுதாயத்தில் பெரிய மனிதனாகவே தன்னைக் காட்டிக் கொள்கிறான்! அதிலும் சவால் வேறு! 

செடிக் என்று பெயர் வைத்தாலும் திருடுகிறான்! மித்ரா என்று வைத்தாலும் திருடுகிறான்! திருடுவதே எங்கள் குலத்தொழில் என்பது போல நடந்து கொள்கிறான்!

செடிக், மித்ரா அமைப்பே தவறாகிப் போனது. அது அரசியல்வாதிகளின் கைகளுக்குப் போனது இன்னும் அதிக ஆபத்தை ஏற்படுத்தி விட்டது! ஒன்றை நாம் தெரிந்து கொண்டோம். பட்டுக்கோட்டையார் சொன்னது போல "திருடனாய் பார்த்து திருந்தால் விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!" என்பது தான் எல்லாக் காலத்திலும் நடந்து கொண்டிருக்கிறது.

இப்போது சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர், மாண்புமிகு கணபதிராவ் நல்லதொரு கருத்தைச் சொல்லியிருக்கிறார்.  மித்ரா நேரடியாக பிரதமர் துறையின் தலைமைச் செயலாளரின் கீழ் அதன் நிர்வாகம் வைக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கை வைத்திருக்கிறார். அதன் நோக்கம் பிரதமர் துறையிடம் அதற்கான நிர்வாகத்திறன்,  நிபுணத்துவம் அனைத்தும் அவர்களிடம் உண்டு என்பதுதான்.

இப்போது மித்ரா நிர்வாகம் என்பது அரசாங்கத்தின் பெயரைச் சொல்லி ம.இ.கா. வின் நிர்வாகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது! செடிக் என்கிற பெயரில் இருந்த போதும் ம.இ.கா.வின் நிர்வாகம் தான். மித்ரா என்று மாற்றம் பெற்ற பின்னரும் அது ம.இ.கா. நிர்வாகம் தான்! இடைப்பட்ட இரண்டு ஆண்டுகள் அவரகள் கைகள் அரித்துக் கொண்டே இருந்தன!  வாய்ப்புக் கிடைத்ததும் லாரி கணக்கில் வாரி விட்டனர்!

மித்ரா என்பது நிச்சயம் நமக்குத் தேவை. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. முறையாகப் பயன்படுத்தப்பட்டால் அந்த நிதி பெருமளவு இந்தியர்களை உயர்த்தும். இப்போது அந்த பணம் ஏதோ ஒருசிலருக்குக் கிடைக்கிறது. அதை அவர்கள் தொழிலில் போடுகிறார்களா அல்லது  வங்கியில் போட்டு முடக்குகிறார்களா அல்லது வெளிநாடுகளில் சொத்துகள் வாங்குகிறார்களா என்பது தெரியவில்லை!

மித்ரா அல்லது செடிக் இவைகள் நமது முன்னேற்றத்திற்குத் தேவை. கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 50 கோடி பணத்தை நாம் பெற்றிருக்கிறோம். ஆனால் அதன் பலன் வளரும் தொழில் முனைவோர்களுக்குப் போய்ச் சேரவில்லை என்பது தான் நமது குற்றச்சாட்டு.

மாண்புமிகு கணபதி ராவ் சொன்னது சரியான வழிமுறை. இதுவே சரியான வழி.

No comments:

Post a Comment