Sunday 11 December 2016
சீமானுக்கு தற்காலிக வெற்றி!
யார் என்ன தான் சொல்லட்டும், சீமானுக்கு இது ஒரு தற்காலிக வெற்றி என்று ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
அவர் தான் தமிழக மேடைகளில், தமிழ் நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்று முழக்கமிட்டவர். அவரே இதனை எதிர்பார்த்திருக்க மாட்டார்.
ஜெயலலிதா மறைவார் என்று யாரும் எதிர்பாபார்க்கவில்லை. இப்படி திடீரென்று பன்னிர்செல்வம் முதலைமச்சர் ஆவார் என்று நாம் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
ஒரு பக்கம், சசிகலா சீவி சிங்காரித்துக் கொண்டு ஜெயலலிதா எந்த மூலை முடுக்குகளில்லாம் அமர்ந்து ஆட்சி செய்தாரோ அங்கெல்லாம் உட்கார்ந்து கொண்டு முதலமைச்சர் பாணியில் செயல்பட ஆரம்பித்துவிட்டார்!
ஆக, சீமானுக்கு ஒரு தமிழர் அல்ல, இருவர் தமிழ் நாட்டுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றனர்!
சசிகலா எந்த அரசியல் பின்னணியும் இல்லாதவர்.ஆனாலும் இரும்புப் பெண்மணியோடு 33 அண்டுகாலம் பேர் போட்டவர். இரும்பு இல்லையென்றாலும் செம்பு அளவாவது கர்வம், ஆணவம், பழிவாங்கும் குணம் எல்லாம் இவருக்கு இருக்கும்! இவருடைய பலமே பண பலம் தான்! அடுத்த தேர்தல் வரை - அந்த இடைக்காலத்தில் - இவருடைய ஆட்டம் அதிகமாகவே இருக்கும்!
பன்னிர்செல்வம் இது நாள்வரை அம்மாவுக்கு மிக அடங்கிய மனிதராகத் தான் இருந்து வந்தார். இனி மேலும் அப்படித்தான் இருப்பாரா? இருக்க மாட்டார்! அப்படியே இருந்தாலும் அவருடைய சமுதாயத்தினர் அவரை சும்மா இருக்கவிட மாட்டார்கள்!
இந்த இருவரும் தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ் நாட்டுக்கும் எந்த அளவுக்குப் பயனாக இருப்பார்கள்? இருவருமே திராவிடப் பாரம்பரியத்தைச் சார்ந்தவர்கள். கர்னாடக அரசு, காவேரி நீர் தமிழகத்துக்கு வரக்கூகூடாது என்பதற்காகப் பாலம் கட்டிய போது அவர்களுக்கு லோரி லோரியாக தமிழக மணலை அவர்களுக்கு விற்று காசாக்கியவர்கள்! இது போதும் இவர்களைப் பற்றி! ஒரு வேளை இப்போது அவர்கள் மாறலாம்! மாறினால் நமக்கு மகிழ்ச்சியே!
எப்படிப் பார்த்தாலும் "நாம் தமிழர்" சீமானுக்கு இது வெற்றியே! அவர் மட்டும் தான் தமிழ் நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்று பட்டி, தொட்டி, தெருவெல்லாம் முழக்கமிட்டவர்.
எப்படியோ ஒரு மாற்றம் வந்திருக்கிறது. இனி எப்போதும் தமிழர் ஆட்சி தக்க வைக்கப்பட வேண்டும்.. இது தொடர வேண்டும். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழன் தான் தலைமை பீடத்தில் இருக்க வேண்டும். அதுவே நமது ஆசையும் கூட!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment