Friday 15 October 2021

மலிவு வீடுகள் என்ன ஆயிற்று?

 

சுமார் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் மலிவு வீடுகள் என்பது மிகவும் பேசப்பட்ட ஒரு விஷயமாக இருந்தது எனலாம்.

உழைக்கும் ஏழை  மக்களுக்கு மலிவான விலையில் கட்டப்பட்ட வீடுகள் அவை. ஆனால் பெரும்பாலான வீடுகள் ஏழை மக்களை விட ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் என்று பலர் பங்குப் போட்டுக் கொண்டனர்! இவர்களில் பலர் அவர்களது வீடுகளை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்தனர்! ஆனாலும் அது நடந்து கொண்டு தான் இருக்கும். அதற்காக இந்த வீடுகள் தேவையில்லை என்று ஒதுக்கிவிட முடியாது.

இன்றைய நிலையில் வீடு என்பது பணக்காரர்கள் அல்லது மேல்தர நடுத்தர குடும்பத்தினரின் தான் வாங்க முடியும் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. வருங்காலத்தில் வீடுகள் வாங்குபவர்கள் பணக்காரர்கள் அல்லது மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தினர். அப்படியென்றால் ஏழைகள் வீடு பற்றி கனவில் கூட நினைக்க முடியாத அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.

அதற்காக ஏழைகளுக்கு வீடு  வேண்டாம் என்று அவர்களை ஒதுக்கிவிட முடியாது.  மனிதன்  தங்குவதற்கு "தலைக்கு  மேல் ஒரு கூரை தேவை" என்பது நமது நம்பிக்கை. மனிதனின் முக்கியத் தேவைகளில் வீடும் ஒன்று.

நமக்குச் சொந்த நிலம் இருந்தால் அங்கே நம் வசதிக்கேற்ப எப்படியோ நாம் விரும்பியபடி ஒரு வீட்டைக்கட்டிக்  கொள்ளலாம். அதற்கும் நமக்குக் கொடுப்பனை இல்லை. ஒரு சிலருக்கு இருக்கலாம். இருந்தால் அவர்கள் வீட்டுக்காக அலைய வேண்டிய அவசியமில்லை. அவர்கள் வாழத் தெரிந்தவர்கள்.

மலிவு  விலை வீடுகளை அரசாங்கம் நிராகரிக்கக் கூடாது என்பது தான் நமது கோரிக்கை. ஏழைகளாக இருந்தாலும் எல்லாக் காலங்களிலும் அவர்கள் வாடகை வீட்டில் தான் வசிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.  குடும்பத்தைக் காப்பாற்ற வேலை வேண்டும் அதே போல அந்தக் குடும்பம் தங்கிக் கொள்ள ஒரு வீடு வேண்டும்.

அரசாங்கமோ அல்லது தனியார் நிறுவனங்களோ மலிவு விலை வீடுகள் கட்ட அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே வீடு என்றால் அந்த பணம் படைத்தவர்கள் வாழ உழைப்பவர்கள் ஏழைகள் தான். பணக்காரர்கள் வாழ்க்கையில் உயர ஏழைகள் தான் உழைக்கின்றனர். உழைக்கும் அந்த ஏழைகள் வாழ, தங்க அவர்களுக்கு வீடு என்பது தேவையான ஒன்று. 

மலிவு விலை வீடுகள் என்பது அரசாங்கத்தின் பொறுப்பு. அதனை அரசாங்கம் தட்டிக்கழிக்கக் கூடாது என்பதே அரசாங்கத்திற்கு நமது கோரிக்கை!

No comments:

Post a Comment