Saturday 16 October 2021

மாதா பிதா குரு தெய்வம்

 

மாதா பிதா குரு தெய்வம் - இது ஆன்றோர்களின் வாக்கு.

ஆனால் குரு என்று வரும்போது தான் சமயங்களில் தடுமாற்றம் ஏற்படுகிறது! அந்த வரிசையே சரிதானா என்று யோசிக்க வைக்கிறது!

மேலே காணும்  காட்சி தமிழ் நாடு, கடலூர் மாவட்டம், சிதம்பரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் ஒருவனை அடிக்கிறார், தாக்குகிறார், உதைக்கிறார் - தன் சக்திகேற்ப அனைத்தையும் செய்கிறார்!

அந்த மாணவன் செய்த தவறு ஒரு சில பாடத்தின் போது வகுப்புகளைப் புறக்கணித்து வெளியே சுற்றுவது, அவரது பாடம் உட்பட!  பாடம் போதிக்கும் ஆசிரியரின் திறமையைப் பொறுத்து அமைவது அது! தனது வகுப்பை மாணவர்கள் புறக்கணிக்கின்றார்கள் என்கிற கோபம் வேறு அவரை மிருகமாகி விட்டது!

ஆசிரியருக்கே நாம் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் சரியாக பாடம் நடத்தினால் மாணவர்கள் வகுப்பை புறக்கணிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எப்படியோ மாணவன் ஒருவன் இந்த 'வன்முறை' காட்சிகளைப் படம் எடுத்து சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கிவிட்டான்! ஆசிரியர் மாட்டிக் கொண்டார். கைதாகி இப்போது சிறை அவருக்குப் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறது!

குரு என்றாலே  நாம் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் சமூகம்.  குருவை மதிக்கும் சமூகம். அவரை நாம் ஒரு வழிகாட்டியாக நினைக்கிறோம். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பது தான் நமது முன்னோர்கள் நமக்குச் சொன்னது. அதில் தவறு ஏதும் இல்லை.

ஆசிரியர்கள் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்குப் பாடம் எடுத்த ஆசிரியர்கள் நல்லாசிரியர்களாக இருந்ததால் தான் இன்று அவர்கள் அந்த புனித பணியைச் செய்கிறார்கள்.

மாதா பிதா குரு தெய்வம். அது சரி தான்!

No comments:

Post a Comment