என்ன தான் பெரிய பெரிய பதவிகளில் இருந்தாலும் உணவு விஷயத்தில் நமது அடையாளம் என்றால் அது இட்லி, தோசை தான்!
அந்த விஷயத்தில் அமெரிக்க துணையதிபர் கமலா ஹாரிஸ் கூட விதிவிலக்கல்ல! இட்லி, தோசையை மறக்க முடிவதில்லை!
அது என்னவோ தெரியவில்லை. தமிழனாக பிறந்துவிட்டால் இட்லி தோசை தான் நமது காலை நேரத்து முதல் உணவு. காலை நேரப் பசியாறல்.
நமது உணவகங்களில் போய் கொஞ்சம் உற்றுப் பாருங்கள் அதே இட்லி தான்! அதை தோசை தான்! தினமும் அதே இட்லி, தோசை தான்! கொஞ்சம் தாமதித்தால் இட்லி கிடைப்பதில்லை! முடிந்து போய் விடுகிறது. கைவிரித்து விடுகிறார்கள்!
இப்போது நமது "மாமாக்" கடைகளில் இட்லி, தோசை போடுகிறார்கள். அதுவும் முடிந்து தான் போகிறது. என்ன செய்வது? அவர்கள் செய்கின்ற இட்லியையும். தோசையையும் "சிவனே!" என்று சாப்பிட வேண்டியிருக்கிறது!
ஊர்சமையல்காரர்கள் என்றால் - அதே தொழிலில் இருந்தவர்கள் என்றால் - அவர்களுக்கு உண்மையாகவே இட்லி செய்யத் தெரியும். கேரளாக்காரர்களுக்கு என்னவோ அரைகுறையாக செய்து பழக்கப்பட்டவர்கள் - நாமும் தலைவிதி என்று அவர்கள் செய்வதையும் தலையெழுத்தே என்று சாப்பிட வேண்டியுள்ளது!
இங்கே நான் சொல்லுவது "மாமாக்" இட்லி, தோசைகள் தான்! நமது உள்ளூர் நாயர் கடைகளைப்பற்றி சொல்லவில்லை. இவர்கள் தொழில் தெரிந்தவர்கள். குறை சொல்ல ஒன்றுமில்லை!
ஒருமுறை - அதாவது முப்பத்தைந்து நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் குளுவாங்கில் நடந்த சம்பவம் இது. அப்போது தான் அந்த மலையாள நண்பர் அந்த உணவகத்தை ஆரம்பித்திருந்தார். இன்னும் வேலையாட்கள் கிடைக்கவில்லை. கணவன் மனைவி மட்டும் தான். இதில் வேறு என் பையன்கள் "இது வேண்டும்! அது வேண்டும்!" என்று வரிசையாக அடுக்கிக் கொண்டு போனார்கள்! பாவம்! அவர்களால் முடியவில்லை! உண்மையைச் சொன்னால் அவர்களிடம் எதுவும் தயார் நிலையில் இல்லை! என்ன தான் உடனடியாகக் கிடைக்கும் என்று கேட்டு அதனை மட்டும் கொடுக்கச் சொன்னேன்! ஆர்வத்தோடு உணவகம் ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று நினைப்பவன் நான். அதைத்தான் செய்தேன்.
இட்லி, தோசை கதை எங்கோ போய்விட்டது! எப்படியோ பாதை ஓரங்களில் பாதை ஓரக் கடைகளில், சிறிய, பெரிய உணவகங்களில் அமர்க்களப்படும் இட்லி தோசைகள் இப்போது வெள்ளை மாளிகை உயரத்திற்குப் போயிருப்பது நமக்கும் பெருமை தான்!
ஆமாம்! இது தான் நமது அடையாளம்!
No comments:
Post a Comment