Saturday 23 October 2021

தூய்மைப்பணியாளர்


 தமிழ் நாடு திருவொற்றியூர் எனும் ஊரைச் சார்ந்த தூய்மைப் பணியாளர் மேரி என்பவரைப் பற்றியான செய்தி ஒன்று மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

குப்பையில் கிடந்த 100 கிராம் தங்கத்தை காவல்துறையினரிடம் கொண்டு போய் சேர்த்தார். அதன் பின்னர் அந்தத் தங்கம் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு எல்லாம் சுபமாக முடிவடைந்தன.

இதனை ஒட்டி இன்னொரு செய்தியும் அமர்க்களப்படுகிறது என்பது தான் கூடுதலான செய்தி.

ஆமாம், தமிழ் நாடு, தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ்.அந்தப் பெண்மணியை வாழ்த்தி கடிதம் ஒன்றினை எழுதியிருக்கிறார். அந்தக் கடிதம் தான் இப்போது பிரமாதப்படுத்தப்படுகிறது!  அவர் எழுதிய அந்தக் கடிதம் மிகவும் நேர்த்தியாக ஏதோ கணினியைப் பயன்படுத்தி எழுதப்பட்டது போல இருப்பது தான் எல்லாருடைய கவனத்தையும் அது ஈர்த்திருக்கிறது.

நம்முடைய கையெழுத்து எப்படி இருக்கிறது என்பதை நாம் அறிவோம்! உண்மையைச் சொன்னால் என்னுடைய கையெழுத்தை நானே படிக்க சிரமப்படுவேன்! அது தான் என் கையெழுத்து!

நான் வேலையில் இருந்த போது ஒரு வெள்ளைக்கார நிர்வாகியின் கடிதத்தை தட்டச்சு பண்ண வேண்டிய சூழல். உண்மையைச் சொன்னால் அந்தக் கடிதத்தை நான் மட்டும் அல்ல என்னைச் சுற்றி இருந்தவர்களில் யாராலும் படிக்க முடியவில்லை!  அந்த நிர்வாகி அவரின் கையெழுத்தைப் பற்று நன்கு அறிந்தவர்! அதனால் அவரே நேரடியாக வந்து அந்தக் கடிதத்தை அவரே படித்துக் காட்டினார்! பின்பு தான் புரிந்தது!

ஓரிராண்டுகளுக்கு முன்னர் நேப்பாளத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரின் கையெழுத்தைப் படிக்க நேர்ந்தது. சும்மா சொல்லக்கூடாது. அது தான் அவரின் கையெழுத்து என்றால்  நம்பவே முடியாது. ஏதோ ஒரு கிராமத்தைச் சேர்ந்த, ஆங்கிலத்தைத்  தாய்மொழியாக அல்லாத ஒரு மாணவி,  கணினியில் டைப் செய்யப்பட்டது போலவே இருந்தது அவரின் கையெழுத்து. அதாவது அந்தக் கையெழுத்துக்கு நூறுக்கு நூறு மார்க் போடலாம்!

சரி,  இவ்வளவு சொல்லியாகிவிட்டது. கையெழுத்துக்கும் தலையெழுத்துக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா?  உண்மை தெரியவில்லை.

தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்களின் கையெழுத்தைப் பார்க்கும் போது அப்படித்தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது!

No comments:

Post a Comment