Thursday 21 October 2021

முதல்வர் பதவி நமக்கு வேண்டும்!

 

             An old image of Thaneermalai Murugan Temple,Penang, established 200 years ago.

இதுவரை நமது பினாங்கு மாநிலத்தில் இந்தியர் ஒருவர் மாநில முதல்வராக வந்ததாக சரித்திரம் இல்லை.

அதனாலென்ன? இனி மேல் சரித்திரம் படைக்கலாமே! அப்படி ஒரு சரித்திரம் படைப்பதற்கு மாநில ஜனநாயக செயல் கட்சி மனம் வைத்தால் அது நடக்கலாம். 

பெரும்பாலும் மாநில முதல்வராக இருந்தவர்கள் சீனர்கள் தான்.  ஆனால் இந்தியர்கள் வரமுடியும் என்கிற எண்ணமே இதுநாள் வரை நமக்கு ஏற்பட்டதில்லை.  நமது தாழ்வுமனப்பான்மையே அதற்குக் காரணம்! நாம் இப்படித்தான், இதற்கு மேலே நமக்கு இடமில்லை, இவைகளையெல்லாம் நம்மால் எட்ட முடியாது என்கிற எண்ணத்தோடையே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! அப்படி ஒரு எண்ணத்தை நமது தலைவர்கள் நமக்கு ஏற்படுத்திவிட்டார்கள்!

ஆனால் அவைகளில் எதுவும் உண்மையில்லை! ஒருவனின் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது என்பது தான் உண்மை. இன்று இல்லை என்றால் நாளை கிடைக்க வாய்ப்பு உண்டு. நாம் முயற்சியே செய்யாத போது அது எப்படி நமக்குக் கிடைக்கும் என்கிற கேள்வியில் உண்மை உண்டு.

பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி நம்மைச் சிந்திக்க வைத்திருக்கிறார்! ஒரு சிறிய கோடு போட்டிருக்கிறார். அதற்கு மேல் நாம் தான் அதற்கான வேலைகளைச்  செய்ய வேண்டும்.

பொதுவாக ஜ.செ.க. சீனர்களின் கட்சி என்பதாகவே சொல்லப்படுவதுண்டு. அதில் உண்மை இல்லை என்றாலும் அது தான் உண்மை என்று சம்பவங்கள் அடிப்படையில் கூறலாம். அவர்கள் இந்தியர்களைப் புறக்கணிப்பவர்கள் தான்! நேரத்திற்குத் தகுந்த மாதிரி நமது வாக்குகளுக்காக நம்மை மதிப்பவர்கள்! அதன் பின் நம்மை மிதிப்பவர்கள்! 

அவர்கள்,  நாங்கள் எல்லா மலேசியர்களுக்கும் பொதுவானவார்கள்  என்று அவர்கள் சொல்லுவதை நாம் நம்ப வேண்டுமானால் அவர்கள் அதனைச் செயலில் காட்ட வேண்டும். அதுவும் அடுத்த பினாங்கு மாநில முதல்வர் பொறுப்பு ஓர் இந்தியருக்குக் கிடைக்க வேண்டும்.

கட்சித் தேர்தலில் இந்தியர்கள் வெற்றி பெற சீனர்கள் விடமாட்டார்கள்.  எல்லாக் காலங்களிலும் அது தான் உண்மை. அதனால் இது போன்ற பதவிகள் வரும் போது தலைமை தான் முடிவெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தியரோ, மலாய்க்காரர்களோ ஜ.செ.க. வில் எந்தப் பதவியையும் வகிக்க முடியாது!

அடுத்த நமது இலக்கு மாநில முதல்வர் பதவி தான்! "நாங்கள் அனைத்து மலேசியர்களுக்கான கட்சி" என்பதை ஜ.செ.க. செயலில் காட்ட வேண்டும்!

No comments:

Post a Comment