Saturday 30 October 2021

அரசு ஊழியர்கள் மட்டும் தானா?

 வெள்ளைக்கொடி  ஏற்றும்  பெரியவர்.  எல்லாம் கோவிட்-19 தொற்றின் பாதிப்பு. "வேலை இல்லை. அதனால் சம்பாத்தியம் இல்லை. சோற்றுக்கு வழியில்லை, எங்களுக்கு உதவி தேவை"  என்பதைக் காட்டத்தான் இந்த வெள்ளைக்கொடி இயக்கத்தின் நோக்கம்.

அரசு சார்பற்ற நிறுவனங்கள், உணவகங்கள்,  தனிப்பட்ட மனிதர்கள் இன்னும் யார் யாரெல்லாம் உதவக் கூடிய நிலையில் இருக்கிறார்களோ  - இவர்கள் எல்லாம் சேர்ந்து தான் இந்த வெள்ளைக்கொடி ஏற்றும்  வீட்டினருக்கு உணவுகளைக் கொண்டு போய் சேர்க்கின்றனர். அந்த வகையில் நாம் மலேசியர்களைப் பாராட்ட வேண்டும். "பசித்தவனுக்கு புசிக்க உணவு கொடு" என்பதை நாம் மறக்கவில்லை.

அரசாங்கம் எத்தனையோ விஷயங்களை மறப்பது போல இதனையும் மறந்து விட்டதனால் மக்கள் தான் இதற்கான தீர்வைக் காண வேண்டும்!

அரசாங்கம் வேறு வகைகளில் தனது பணிகளைச் செய்து வருகிறது. அரசு வேலையில் இருப்போருக்கு அவர்களுக்கான உதவிகளைச் செய்து வருகிறது!  அரசு வேலைகளில் இருப்போருக்கு சம்பளம் கிடைக்கிறது. அவர்கள் நிதி சுமைகளைச் சுமக்கவில்லை. எப்போதும் போன்ற வாழ்க்கை முறை. கவலைப்பட ஒன்றுமில்லை.

அது தான் அரசாங்கத்திற்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது! அவர்கள் பட்டினி கிடப்பதை அரசாங்கம் விரும்பவில்லை. அதனால் தான் அவர்களுக்கு மேலும் மேலும் உதவிகள் கிடைக்கின்றன! கிடைக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் கொள்கை!

அரசாங்க ஊழியர்களுக்காக வரிந்து கட்டிக்கொண்டு வேலை பார்க்கும் அரசாங்கத்திற்கு பின்னணியில் ஒரு நோக்கம் உண்டு. அடுத்த பொதுத் தேர்தலில் அரசு ஊழியர்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் ஆளும் கட்சியினருக்குப் போய் சேரவேண்டும் என்கிற நோக்கம் அவர்களுக்கு உண்டு. காரணம் அவர்கள் இப்போது பெரும்பாலும் எதிர்வினை ஆற்றிக் கொண்டிருக்கின்றனர்!

அப்படி என்றால் மக்கள்  படுகின்ற கஷ்டத்தைப் பற்றியெல்லாம்  அவர்கள் கவலைப்படுவதாகத்  தெரியவில்லை. அவர்கள் ஒவ்வொரு நொடியும் அரசியல்வாதிகளாகவே சிந்திக்கிறார்கள்! செயல்படுகிறார்கள்! செயலாற்றுகிறார்கள்! பதவிக்காகப் போராடுகிறார்கள்! பணத்திற்காக பல்லிளிக்கிறார்கள்! மக்களைப் பற்றி மட்டும் அவர்களுக்கு ஞாபகம் வருவதில்லை!

அரசு ஊழியர்களுக்கு உதவ வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை. ஆனால் வேலையில்லாமல், சம்பாத்தியம் இல்லாமல் குடும்பத்தோடு பட்டினி கிடக்கிறார்களே அவர்களைக் கொஞ்சம் கவனியுங்கள் என்று தான் சொல்லுகிறோம். B40 மக்கள் மேல் வெறும் இரக்கம் மட்டும் போதாது. அவர்கள் படும் துன்பத்தில் நமது பங்கு என்ன என்பதையும் சிந்திக்க வேண்டும்.

B40 மக்களே நாட்டில் அதிகம். வாக்களர்களும் அதிகம். அவர்களைப் பகைத்துக் கொண்டு சரியானதொரு அரசாங்கத்தை அமைக்க முடியாது. அடுத்த பொதுத் தேர்தலில் அரசாங்கம் இன்னும் அடி வாங்க நேரிடம்  என்பதை மறந்துவிடக் கூடாது!

மிகவும் ஏழ்மையில் உள்ள மக்களை மறந்துவிட்டு அரசு ஊழியர்களை மட்டும் கவனிப்பது சரியாகாது! அரசு இதனைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்!

No comments:

Post a Comment