Tuesday 2 August 2022

ஏன் ஏமாற்றப்படுகிறோம்?

 

மெட்ரிகுலேஷன் கல்வி என்றாலே நமக்குத் தெரிந்ததெல்லாம் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி அந்த கல்வியை நம் இந்திய மாணவர்கள்  கற்க முடியாதபடி தடை செய்வது தான். . தடையாக இருப்பது கல்வி அமைச்சு!

என்ன காரணமாக இருக்க முடியும்?  வெளிப்படையாக எந்த காரணமும் சொல்லப்படவில்லை. உள்ளுக்குள் ஏதோ காரணங்கள் இருக்கின்றன. அதனைக் கல்வி அமைச்சால் வெளிப்படுத்த முடியவில்லை! இரகசியக் காரணங்கள் இருக்கலாம்! இருக்கட்டும்!

கல்வி அமைச்சின் மௌனம் நமக்குப்  பல்வேறு வகையான சந்தேகங்களை எழுப்புகிறது! மெட் ரிகுலேஷன் கல்விக்குப் புறக்கணிக்கப்பட்ட இந்திய மாணவரகள் பெரும்பாலும் நல்ல மார்க் வாங்கி வெற்றி பெற்றிருக்கின்றனர். அவர்கள் அந்த கல்வியைப் பெற எல்லாத் தகுதிகளும் அவர்களுக்கு உண்டு.

இங்கு நாம் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். நல்ல மார்க் வாங்குபவர்கள் இந்திய மாணவர்கள் மட்டும் அல்ல. மலாய், சீன மாணவர்களும் நல்ல மார்க்குகளைப் பெற்று தகுதி பெற்றிருக்கின்றனர். அவர்கள் எல்லாம் புறக்கணிக்கப்படவில்லை. இதில் ஏன் இந்திய மாணவர்கள் மட்டும் புறக்கணிக்கப்படுகின்றனர் என்கிற கேள்வி இயற்கையாகவே எழுகிறது.

கல்வி இப்போது வியாபாரமயமாகி விட்டது என்பது பொதுவான கருத்து. அதனை மறுக்க முடியாது. இந்த வியாபாரமயமானதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இந்தியர்கள் தான்.

இந்திய மாணவர்கள் எல்லாத் துறைகளிலும் புறக்கணிக்கப்படுகின்றனர். அவர்கள் எந்த பாடங்களை எடுத்து படிக்க விரும்புகிறார்களோ அவர்களுக்கு அது  கிடைப்பதில்லை. விரும்பாத துறைகளில் அவர்கள் திணிக்கப்படுகின்றனர். இந்த புறக்கணிப்பினால் அவர்கள் பெரும்பாலும் தனியார் கல்லூரிகளை நாட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். அதனால் தான் மருத்துவம் படிக்க இந்திய மாணவர்கள் வெளி நாடுகளுக்கெல்லாம் போய் மருத்துவம் பயில்கின்றனர்.  உள்ளுரில் அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

வெளிநாடுகளில், உள்ளூர் தனியார் பல்கலைக்கழகங்களில் ஏராளமான இந்திய மாணவர்கள் கல்வி கற்பதற்குக் காரணம்  அவர்கள் தேர்ந்தெடுக்கும் கல்வி இங்குக் கிடைப்பதில்லை.  கல்வி அமைச்சு அவர்கள் விரும்பும்  கல்விக்கு எல்லா வகையிலும் தடையாக இருக்கிறது! அதனால் தான் அவர்கள் தனியார் நிறுவனங்களில் கல்வி கற்கின்றனர்.

இப்படிப் படிக்கும் மாணவர்கள் எல்லாம் பெரும் செல்வந்தர் குடும்பங்களிலிருந்து வருபவர்கள் இல்லை. எல்லாம் சராசரி குடும்பங்களிலிருந்து வருபவர்கள் தான். அவர்களுக்குக் கைகொடுப்பதெல்லாம் உபகாரச்சம்பளம், கல்விக்கடன்  போன்றவை.  அப்படித்தான் அவர்கள் பிழைப்பு நடந்து கொண்டிருக்கிறது!

இதனைத்தான் கல்வி அமைச்சு தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.  மெட்ரிகுலேஷன் கல்வி மறுக்கப்பட்டால் இந்திய மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் கல்வியைத் தொடர்வார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். சொத்துகளை விற்றாவது இந்தியர்கள் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்பார்கள் என்பதை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். 

ஆனால் கல்வி அமைச்சு இதனையே சாக்காக வைத்து காலத்தை தள்ளிக் கொண்டிருக்க முடியாது. நாம் சொல்ல வருவதெல்லாம் ஒன்று: திறமையின் அடிப்படையில் எடுங்கள் அல்லது  எண்ணிக்கை அடிப்படையில் எடுங்கள் என்பது தான்.

இதற்குச் சரியான ஒரு முடிவை அரசாங்கம் எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்!

No comments:

Post a Comment