Monday 24 June 2024

தூக்கில் தொங்குவதா?

தற்கொலை பற்றிய பொதுவான கருத்து தற்கொலை கூடாது என்பது தான். 

கூடாது என்பதால் தற்கொலைகள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா? அதனை நிறுத்திவிட முடியுமா?   இதுநாள் வரை நிறுத்த முடியாத ஒன்றை இனிமேல் நிறுத்த வாய்ப்புண்டா என்றால்  அதற்கும் வாய்ப்பில்லை.  

தறகொலைகளை நிறுத்துவதற்கென்றே  பல அமைப்புகள் இயங்குகின்றன.  அந்த மனநிலையில் உள்ளவர்கள் அவர்களுடன் தொடர்பு  கொண்டால்  அதனைத் தவிர்க்க ஆலோசனைகளைக் கொடுப்பார்கள்.   இதுபோன்ற அமைப்புகள் உலகம் எங்கிலும் உள்ளன.

ஆனால் இந்த அமைப்புக்கள் எல்லாம் படித்தவர்களிடையே கூட  பரிச்சையமாக இல்லை.  தெரிந்தாலும் அதன் தொலைப்பேசி எண்கள் தெரிவதில்லை!  எனக்கு அது அவசியம் இல்லை என்கிற எண்ணம் தான்!

அதைவிட சிறந்த வழி மருத்துவ ஆலோசனை தான்.  ஒவ்வொரு மருத்துவமனையிலும் மனநல மருத்துவம் (Hospital Jiwa)  என்கிற பிரிவு இருக்கத்தான் செய்கிறது. மனநலம் பயின்ற மருத்துவர்கள் அவர்கள். அதுவே சிறந்த வழி.  நம்மிடைய ஒரு குறைபாடு உண்டு. அங்கு சிகிச்சை பெற்றாலே உடனே 'பைத்தியம்'  என்று சொல்லி கேவப்படுத்துகின்றோம்.

நம்முடைய பொதுபுத்தியில்  ஒன்றை நாம் ஏற்றிக் கொண்டிருக்கிறோம்.  தற்கொலை என்பது பலவீனமான பெண்களுக்கு உரியது  என்று தான் நாம் நினைக்கிறோம்.  ஆனால் உண்மை அதுவல்ல.   பெண்கள் வலிமையானவர்கள்.  உலகளவில் எடுத்துக் கொண்டாலும் ஆண்கள் தான் அதிகமாக தற்கொலைக்கு ஆளாகின்றனர்;  பெண்கள் அல்ல.  மலேசிய அளவில் எடுத்துக் கொண்டாலும் ஆண்களே தற்கொலை செய்து கொள்வதில்  முன்னணியில் இருக்கின்றனர்.  இது நமக்கு ஆச்சரியம் தான்.

நாம் எப்போதுமே ஆண்கள் வலிமையானவர்கள் என்று பெருமை பேசுகிறோம்.  தற்கொலைக்குப் பல காரணங்கள் உண்டு. வியாதி, வேலையில்லாமை,  பொருளாதார நெருக்கடி,  பணப்பிரச்சனை, குடும்ப சண்டைகள், பாசப்போராட்டம் - இப்படியான பல காரணங்கள்.

எப்படியோ தற்கொலை என்றாலே நம்மால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  அதைத் தடுக்கவும் நம்மால் முடியவில்லை.  இதனை நிறுத்துவதற்கு வழியுமில்லை.

வருங்காலங்களில் அதற்கான தீர்வு கிடைக்கும் என நம்புவோம். 

No comments:

Post a Comment